November 27, 2013

காலத்தின் கோலம்.



எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் சமீபத்தில் எழுதிய இடுகையின் முதல் வரியை படித்த இன்ஸ்பிரேஷன் தான் இந்த பதிவெழுதக்காரணம்

1967
மகன்:ப்பா..பா....பா

அப்பா:என்னடா செல்லம் வேண்டும்?

மகன்:பா..பா..பா

அப்பா:அட..என் தங்கத்துக்கு பலூனா வேண்டும்?ஐயோ..பாக்கெட்டில் சில்லரை இல்லையே..இந்தப்பா பலூன்காரா.சித்த நேரம் பொறு..நாலே எட்டில் வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

அம்மா:ஏங்க,வீட்டை பூட்டிட்டு கோயிலுக்கு கிளம்பியாச்சு.இப்ப எதுக்கு பலூன்?

அப்பா:குழந்தை ஆசைப்படுறாண்டி..அவனுக்கு இல்லாததா?கோவில் எங்கே ஓடிப்போகப்போறது.இதோ..ரெண்டே நிமிஷத்திலே வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

1974
மகன்:எப்ப பாரு தயிர் சாதமும் ஊறுகாயும்தானா?சந்துரு,கோவிந்தன் எல்லோரும் வகை வகையாக சாப்பாடு எடுத்துட்டு வர்ராங்க..

அப்பா:அடியே..வழக்கம் போல் நமக்கு தயிர்சாதம் இருக்கட்டும்..பையனுக்கு பிரிஞ்சி சாதம்,தேங்காய் சாதம் சப்பாத்தி இப்படி இனி நீ வித விதமாக செய்து கொடுத்தாகணும்.வளருகிறபிள்ளை நல்லா சாப்பிடட்டும்.

1982
அம்மா:என்னங்க,அவனவன் ஸ்கூலுக்கு சைக்கிளில் போகிறான்.நம்ம பிள்ளை புஸ்தக மூட்டையை சுமந்துகொண்டு மூச்சிரைக்க நடந்து போவதை பார்க்க மனசு ஆறலே.ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்துடுங்க.

அப்பா:இப்ப சைக்கிள் வாங்குறதுக்கு பணம் ஏது?பொங்கல் வேற வருது?

அம்மா:பொங்கலுக்கு பசங்களுக்கு மட்டும் புதுசு எடுத்துடுவோம்.தீபாவளிக்கு கட்டியதை இஸ்த்ரி பண்ணி நாம கட்டிக்கலாம்.

அப்பா:இதுவும் நல்ல ஐடியாகவாகத்தான் இருக்கு.நமக்கு என்னத்தை புது துணி வாங்கறது?பிள்ளைங்க சந்தோஷம்தான் நமக்கு சந்தோஷம்.அதுக மனசு நிறைய சிரித்தால் நமக்கு புதுசு கட்டிய மாதிரித்தான்.

1986
மகன்:அப்பா,காலேஜுக்கு போக வர ஒரு பைக் வேண்டும்.

அப்பா:இப்ப தானே கடனை உடனை வாங்கி பற்றும் பற்றாததுக்கு உங்க அம்மாவுடைய செயினை விற்று காலேஜ் சீட் வாங்கினோம்.இப்ப எப்படிப்பா?

மகன்:லோன் வாங்கிக்கலாம் அப்பா.மாசா மாசம் உங்கள் சம்பளத்தில் கட்டிக்கலாம்

அம்மா:யோசிக்காதீங்க..இந்த மாசத்தோட நாம போடும் சீட்டு முடியுது.மறு சீட்டு போடாமல் அதை லோனாக கட்டிடலாம்.

அப்பா:முதல்லே 20 % கட்டியாகணுமே?

அம்மா:கவலையே வேண்டாம்தீபாவளி சமயத்திலே நாம போட்ட எப் டி மெச்சூரிட்டி ஆகுது இல்லே.அந்த பைசாவை எடுத்துக்கலாம்.நமக்கு எதுக்கு இப்ப சேமிப்பு?நம்ம பிள்ளை பெரிய ஆளாக போய் நமக்கு தராமல் யாருக்கு தரப்போறான்..இல்லடா செல்லம்..

1990
மகன்:அப்பா,நான் பர்ஸ்டு கிளாஸில் பாஸ் செய்துட்டேன்.பி.ஜி பண்ண வேண்டும்?

அப்பா:இப்பவே கடன் மூச்சை முட்டுதுப்பா..இதுக்கு வேற எப்படி..

மகன்:ஏம்ப்பா..நான் மேலே மேலே படித்தால் சம்பளமும் ஜாஸ்தியாகுமேப்பா.நான் சம்பாதிக்கும் வரை கொஞ்சம் பல்லை கடித்துட்டு சிரமம் பார்க்காமல் செலவு பண்ணிட்டோம்ன்னா என் காலில் நான் நின்னதுக்கப்புறம் பிரச்சினை இல்லைப்பா.நிம்மதியா காலத்தை ஓட்டலாம்.

அப்பா:எனக்கு ஒரு ஐடியாகவும் தோன்ற மாட்டேன்கிறதே..

மகன்:யோசிக்காதீங்கப்பா..நேற்று கூட நீங்களும் அம்மாவும் நம்ம கிராமத்திலே உள்ள நாலு செண்ட் நிலத்தை பற்றி பேசிட்டு இருந்தீங்களே.பேசாமல் அதை விற்றோம்ன்னா இருக்கற கடனை அடைக்கவும் ஆச்சு என் படிப்பு செலவுக்கும் ஆச்சு.அம்மாவின் மொட்டை கழுத்துக்கு மெல்லிசா ரெண்டு சவரனில் செயின் கூட வாங்கிக்கலாம்.

அப்பா:......

மகன் :யோசிக்கறதுக்கு என்னப்பா இருக்கு?நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டால் இதே போல் எத்தனை இடம் வாங்கப்போறோனோ.

1994
மகன்:அப்பா,நான் கார் வாங்கலாம்ன்னு இருக்கேன்.அதனாலே கொஞ்ச நாளைக்கு என்னிடம் இருந்து என் சம்பளத்தை எதிர் பார்க்காதீங்க..

அப்பா:........

மகன்:ஏம்ப்பா..மவுனமாகிட்டீங்க.நாளைக்கு நான் கார் வாங்கினால் உங்களுக்கு கவுரவம் இல்லையா?என் கூட முன் சீட்டில் ஏஸியை போட்டுட்டு ஜம் என்று உட்கார்ந்துட்டு ஊரையே சுற்றிப்பார்க்கலாம்.அம்மா உனக்கு பின் சீட் தான் ஒகேவா..

1998:
அம்மா:தம்பி அப்பாவுக்கு ரெண்டு நாளா ஜுரம்.சித்த காரில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயேன்..

மகன்:சாரிம்மா..ஆட்டோ பிடித்து போய்க்குங்க...நானும் மீனாவும் சேர்ந்து அவங்கம்மா வீட்டுக்கு போகப்போறோம்.

2000
அப்பா:....தம்பி..உன் அக்கா புருஷனுக்கு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணி இருக்கு. உன்னால்தான் போக முடியலே.நாங்களாவது போய் பார்த்துட்டு வந்துடுறோம்.போகாவிட்டால் குறையாகப்போய்டும்அனுப்பி வையப்பா..

மகன்:அச்சச்சோ..அம்மா உனக்குத்தான் தெரியுமே நானும் மீனாவும் குழந்தையும் பங்களூர் மைசூர் டூர் போக பிளான் போட்டு இருக்கோம்.இந்நேரம் பார்த்து அக்காவை பார்க்கணும் ,அத்திம் பேரை பார்க்கணுன்னா எப்படி?போன் போட்டு பேசிட்டே இல்லே.அது போதும்.

2002
அம்மா:ரெண்டு நாளா இருமல் வாட்டி எடுக்குது.உங்கப்பாவை தூங்கவே விடலே.ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே இருமல் டானிக் வாங்கிட்டு வாப்பா.

மகன்:அம்மா..மாசக்கடைசி.அப்பாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச்சொல்லு.

மருமகள்:ரெண்டு துண்டு சுக்கைத்தட்டிப்போட்டு வெந்நீரை குடித்தால் இருமல் தானா போய்டப்போறது.இதுக்கு போய் எதுக்கு சிரப்புக்கு தண்டமா செலவு செய்யணும்?

மகன்:அதுவும் சரிதான்.


November 26, 2013

மருத்துவர் மகாத்மியம்



வெளி நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும் ஒரு உறவினர் வழக்கம் போல் ரெகுலர் செக் அப் சென்றுள்ளார்.பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் என்று எதுவும் இல்லாதவர்.ஸ்டெத்தை வைத்து மட்டும் பரிசோதித்து விட்டு ஆஞ்சியோ கிராம் உடனே பண்ணி ஆக வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார்.குழந்தைகளுக்கு பேய்,பூச்சாண்டி என்று பயம் காட்டுவது போல் வாய்க்குள் நுழைய முடியாத பெயர்களைகூறி கதிகலங்க வைத்து விட்டார்.வழமையான செக் அப் சென்றவருக்கோ அதிர்ச்சி.எந்த பிரச்சினையும் இல்லாமல் எந்த வித பரிசோதனையும் முறைப்படி செய்யாமல் எடுத்த எடுப்பில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றால் அதிர்ச்சி வராமல் என்ன செய்யும்.

ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு  இருதயத்தில் உள்ள தசைகளின் பாதிப்பைப் பொருத்து, மீண்டும் நெஞ்சுவலி வந்தாலும், பாதிக்கப்பட்டவரின் வயதைப்பொருத்தும் ,உடல் நிலையைப்பொருத்தும் ஆஞ்சியோகிராம் செய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள். இ சி ஜி ,டிரட்மில் ,எக்கோ என்று பல்வேறு பரிசோதனைகளுக்கே பின்னரே ஆஞ்சியோ செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்.

மருத்துவரிடம் இதனை கேட்டபொழுது “நீங்கள் பாரினுக்கு செல்கின்றீர்கள்.இதெல்லாம் தற்காப்புக்குத்தான்.மற்ற ஹாஸ்பிடலை விட 30%குறைவாகவே கட்டணம் பெறுகிறோம்.இந்த சலுகை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே.ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.நாளையே அட்மிட் ஆகி விடுங்கள்.” என்று வார்த்தை ஜாலம் செய்துள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோ என்பவர் அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty),பைபாஸ் (CABG) லெவலுக்கு இழுத்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ”வீட்டில் கன்சல்ட் பண்ணி விட்டு வருகிறேன்”என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று என்று ஓடி வந்து விட்டார்.

அதன் பிறகு எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல இயலும்.வேறொரு மருத்துவரை பார்த்து முறையாக பரிசோதனை செய்து பார்த்த பொழுது அந்த மருத்துவர் முதலாம் மருத்துவர் ஆஞ்சியோ பண்ண சொன்னதை கூறி சிரித்தாராம்.

பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.

இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.வருத்தமூட்டும் இப்படி நிகழ்வுகளுக்குகிடையில் இப்படியும்  ஒரு மருத்துவர்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் காய்ச்சல் ஏதும் இல்லாமலேயே குளிர் திடுமென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.குளிர் என்றால் தாங்க இயலாத குளிர்.உடனே ஒரு மருத்துவரிடம் சென்றோம்.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.உடனே இ சி ஜி எடுத்துப்பார்த்ததில் அது நார்மலாகவே இருந்தது.உடனடியாக ஒரு இஞ்செக்‌ஷன் போட்டு ஒரு அரைமணி நேரம் தூங்க வைத்து மீண்டும் பிரசர் செக் செய்த பொழுது சற்றே குறைந்து இருந்தது.

வீட்டில் போய் நன்கு ரெஸ்ட் எடுக்கும் படி கூறி விட்டு என் கணவரை தனியாக அழைத்து இரவு முழுதும் சற்று கண்காணியுங்கள்.ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே இசபெல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றிருக்கிறாராம்.

மறுநாள் காலையில் மீண்டும் பிரஷர் செக் செய்ததில் நார்மல்.இதனையே ஒரு உறவினரான இன்னொரு மருத்துவரிடன் பிரிதொரு நாள் சொல்லிக்காட்டிய பொழுது “இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் என்று கூறி சிரிக்கின்றார்.

November 23, 2013

பேப்பூர்.

 கோழிக்கோடில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்  பேப்பூர் (BEYPORE) என்ற அருமையான சுற்றுலா தளம் உள்ளது.அழகிய கடற்கரை,அதனை ஒட்டி பேப்பூர் துறைமுகம்,அருகிலேயே கப்பல் கட்டும் தளம் ,கடலுக்குள் பயணிக்கும் கல் பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்று செல்ல வேண்டிய இடங்கள் எராளமாக உள்ளன.

மாபெரும் இலக்கிய மேதை ,சுதந்திர போராட்ட வீரர் வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்ந்து மறைந்த ஊர் என்ற பெருமையும் இந்த பேப்பூர் நகருக்கு உணடு.


பேப்பூர் பீச் மிக அழகாக காட்சி அளிக்கிறது.நாங்கள் சென்றது வீக் எண்ட் தினத்தில்.ஆகையால் கூட்டம் மெரினா பீச்சை நினைவூட்டியது.கடல்காற்று வாங்கிய படி குடும்பத்துடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக  பீச் நெடுக கிரானைட் தளம் போட்ட உட்காரும் மேடை பீச் ஓரம் நீளமாக போடப்பட்டுள்ளது.பீச்சுக்கு செல்லும் பொழுது பெட்ஷீட்டோ,ஜமக்காளமோ சுமந்து செல்லும் வேலை மிச்சம்.வழி நெடுகிலும் அழகான விளக்கலரங்காரக்கம்பங்கள் கலை நயத்துடன் கண்களை கவர்ந்தாலும் பாராமரிப்பின்றி இருந்ததுதான் சோகம்.


கட்டணம் செலுத்தி துறைமுகத்துக்குள் நுழைந்தால் ஆங்காங்கே பெரிய பெரிய படகுகள் காணப்பட்டன.பல அடி ஆழமுள்ள கடலுக்கு அருகிலேயே தரைத்தளம் எந்த வித கைப்பிடி சுவரும் இல்லாமல் இருந்தது கிலியை கொடுத்தது.எங்கள் வீட்டு குட்டியின் கையை இறுக பற்றிக்கொண்டேன்..அருகில் போய் கடலை குனிந்து பார்த்தால் பயத்தில் விழி பிதுங்கிப்போனது.கொச்சிக்கு அடுத்த பெரிய துறை முகம் என்ற பெயரை பேப்பூர் துறைமுகம் பெற்றுள்ளது.



பேப்பூர் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்ற ஒரு கட்டுத்தளமாகும்.பண்டைய காலத்தில் உருசு என்ற மரக்கலன்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக இத்தளத்தை குறிப்பிடுகின்றனர்.சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் தொழில் நுணுக்கத்துடன் கப்பல் கட்டும் பணியில் ஈடு பட்டு இருந்தனராம்

 வெயில் மழை படாமல் நேர்த்தியாக மறைக்கப்பாட்ட பின்னர்தான் கப்பல் தயாராகின்றன.

உருவாகிக்கொண்டு இருக்கும் கப்பல்.


கப்பலின் அடிப்பாகம்.


கத்தார் மன்னருக்காக தயாராகிக்கொண்டுள்ள சொகுசுக்கப்பல்.இது அங்கிருந்த காவலாளி சொன்ன தகவல்.


கப்பலின் பக்கவாட்டுப்பகுதி..கப்பல் நிர்மாணிக்கப்பட்டு மலேஷியாவுக்கு எடுத்துச்சென்று எஞ்சினும் ஏனைய அலங்காரமும் மேற்கொள்ளப்படுமாம்.


கப்பலின் உயரத்தைப்பார்த்து அங்கிருந்த மர ஏணியில் ஏற நான் தயங்கினாலும் என்னவரும் எங்கள் வீட்டு குட்டி ஆமிரும்  சரசர வென்று அங்கிருந்த மர ஏணியில் ஏறி கப்பலின் உச்சிக்கு சென்று எடுத்து வந்த படங்கள்.

கப்பலின் உள் அலங்காரம்.சொகுசுக்கப்பல் ஆகையால் கப்பலினுள் ஒவ்வொரு மில்லி மீட்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

November 15, 2013

மூடாத பொக்கிஷம்




“வாப்பா..இந்த சம்மை எப்படிப்போடணும்” சமீரின் 10 வயது மகள் திரும்பத்திரும்ப கேட்டும் சமீரின் காதில் வார்த்தைகள் விழுந்தாலும் மூளையில் பதியாமல் போனது.

“வாப்ப்ப்ப்ப்பா”மகள் அழுத்தி சப்தமாக கேட்டதும் சுதாரித்துக்கொண்டான்.

மகளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.காலையில்  வங்கியில் போட்ட செக் பவுன்ஸ் ஆனதில் இருந்து சமீரின் மனது நிலை கொள்ளாமல் துடித்தது.கடந்த ஆறு மாதம் முன்பு வரை நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரம் எதிரே பிருமாண்டமான ரெடிமேட் ஷாப் திறந்ததும் சமீரின் கடையில் நடக்கும் வியாபாரம் படிப்படியாக குறைந்து போனது.வியாபாரம் ஓஹோ என்றுஇருந்தவனுக்கு இப்போது கஷ்டமான சூழ்நிலை.நன்றாக இருந்த சூழ்நிலையில் வருடா வருடம் முப்பது நாள் நோன்பில் ஒரு நாள் சஹருக்கு பள்ளிவாசலில் இவனது செலவில் சாப்பாடு நடக்கும்.வரும் வெள்ளியன்று சமீரின் செலவில் சாப்பாடு.

சாப்பாட்டுக்குழுவினர் நோன்பு ஆரம்பத்திலேயே “இந்த வருடமும் வழக்கம் போல் ஒருநாள் உங்கள் செலவில் சஹர் உணவு உண்டுதானே லிஸ்டில் சேர்த்துக்கொள்ளட்டுமா உங்கள் பெயரை?”என்று கேட்டபோது மனதார பெயர் கொடுத்து விட்டான்.இப்போது போய் முடியாது என்று எப்படி சொல்ல இயலும் .யா அல்லாஹ் நான் என்ன செய்வேன்?”மனம் கலங்கிப்போனது.

200 பொட்டலம் சாப்பாடு ஆர்டர் செய்வதாக இருந்தால் குறைந்தது 10000 தேவைப்படும்.அந்த பத்தாயிரத்தை புரட்டத்தான் இரண்டு நாட்களாக அலைச்சல்.கஸ்டமர் கொடுத்த  செக்கை நம்பி இருந்தவனுக்கு செக் பவுன்ஸ் ஆனதில் திகைத்துப்போய் விட்டான்.கைமாற்று வாங்கலாம் என்று பார்த்தால் உதவுபவர் யாரும் இல்லை.

“தப்பா நினைச்சுக்காதீங்க பாய்.பெருநாள் நெருங்குது பாருங்க நமக்கு கொஞ்சம் டைட்”

“அல்லாஹ்வே..நேற்றே கேட்டு இருக்கக்கூடாது.”

“மன்னிச்சுக்குங்க பாய்.என்னாலே உதவ முடியாததற்கு”

இப்படியான பதில்களில் நொந்து போனான் சமீர்.

உணவக உரிமையாளர் மதார் போன் செய்துவிட்டார்,”சமீம் பாய்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தானே நான் பொருட்கள் வாங்க முடியும்,இன்னும் ஒரே நாள்தானே உள்ளது?”

இஃப்தாருக்கு தயார் செய்து கொண்டிருந்த சமீரின் மனைவி நிஷா கணவரின் சோகமுகம் கண்டு ”ஏங்க..ஹபீப் காக்காவிடம் கேட்கலாம் என்று போனீர்களே என்ன ஆச்சு “என்றாள்.

“அவர் ஊருக்கு போய்விட்டார்.அவர் இருந்தால் இத்தனை திண்டாட்டம் இல்லை.தாத்தா,வாப்பா காலத்தில் இருந்து வருடாவருடம் தொடர்ந்து செய்து வந்த காரியம்.இந்த வருடம் முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது”

”கவலைப்படாதீங்க.அல்லாஹ் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டான்.இஃப்தாருக்கு நேரம் ஆகுது.கைகால் அலம்பிட்டு வாங்க”

“மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளதும்மா.என்ன பண்ணுறது என்று புரியவே இல்லை”புலம்பியபடி எழுந்தான்.

மறுநாள்...

வழக்கம் போல் கடையை திறந்து விட்டு கல்லாவில் அமர்ந்த மறு நிமிடமே கேட்டரிங் மதாரிடம் இருந்து போன்.

“பாய்..என்ன சப்தத்தையே காணோம்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தான் நான் சாமான்கள் எல்லாம் வாங்க முடியும்.”

“பாய்..நான் மதியம் போன் செய்கிறேன்.கொஞ்சம் பொறுங்க”இப்படி சொல்லி விட்டானே தவிர மதியம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி சமீரை சுற்றி வளைத்தது.

மதியமும் போய் மாலையும் வந்தது.எந்நேரமும் மீண்டும் கேட்டரிங் மதாரிடம் இருந்து போன் வந்து விடுமோ என்ற நினைவு சமீரை சங்கடப்படுத்தியது.

“நிஷா...பேசாமல் மதார் பாயிடம் இந்த வருடம் பண்ணவில்லை என்று சொல்லி விட்டு பள்ளிவாசல் ஆட்களிடமும் சொல்லி விடலாமா?”

“எப்படிங்க..கடைசி நேரத்தில் சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள்”

“யா அல்லாஹ் இப்ப நான் என்ன செய்யப்போகிறேன்”அவர் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே காலிங் பெல் சப்தம்.

“நிசா,யாரென்று போய் பாரு”

வாசலில் காதர் பாய்.”அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்கும்சலாம் .உள்ளே வாங்கண்ணா”

“சமீர் பாய் இல்லையா”கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே சமீர் வந்து விட்டார்.”வாங்கண்ணா..என்ன அதிசயமாக வீட்டு பக்கம்..”

“உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”

”சொல்லுங்கண்ணா”

“வழக்கம் போல் எங்கள் வீட்டில்  நண்பர்கள்,உறவினர்கள்,தொழில் நட்புக்கள், என்று 200 பேருக்கு சஹர் சாப்பாடு போடுவோம்.நாளைக்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கும் பொழுது ஊரில் இருக்கும் என் பாட்டிக்கு சீரியஸ் என்று போன் வந்தது.நாங்கள் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறோம்.ஏற்பாடெல்லாம் நடந்து விட்டது.நீங்கள்தான் பள்ளி வாசலில் நாளைய சஹருக்கு அரேஞ்ச் பண்ணுவீர்களே.இதனை நீங்கள் எடுத்து செய்யுங்கள் பணவிபரம் எல்லாவற்றையும் மெதுவா செட்டில் பண்ணிக்கலாம்.நான் அவசரமாக கிளம்பணும்.வரட்டுமா”

சமீர் திகைத்துப்போய் நின்று இருந்தான்.வீட்டில் எங்கேயோ “பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”என்ற பாடல் வரிகள் காற்றில் மெதுவே தவழ்ந்து செவியில் விழுந்து இதயத்தை நிறைத்தது.