December 31, 2009

அறிவான சந்ததிகள்.




எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.பாடலின் வரிகளை மேலோட்டமாக பார்த்தால் அபத்தமாகத்தான் தெரியும்.ஒரு தாய்க்கு தன் பிள்ளை கெட்டவன்(ள்)ஆவதற்கு பிடிக்குமா?நல்லவனாவதற்காகத்தானே பாடு படுவாள்.அதையே குறிகோளாக கொண்டுதானே வளர்ப்பாள்.அதற்காகத்தானே பிராயசித்தப்படுவாள்?இப்படித்தான் தோன்றும்.ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தோமானால் உண்மை புலப்படும்.

நம் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளுக்கும் பெற்றோர்கள் தம்மை தொடர்பு படுத்தி சிந்தித்து பாருங்கள்.உண்மை புரிபடும்.உதாரணமாக ஒரு இல்லத்தரசி ஒரு நூறே ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குகிறாள்.கணவருக்கு தெரிந்தால் 'தேவையா'என்று கடிந்து கொள்ளுவார் என்று அவள் கணவரிடம் மறைத்து விடுகிறாள்.இது சாதாரண விஷயமாயினும் இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையும் நாளைக்கு அந்த 'மறைத்தல்' என்ற விஷயத்தை பின் பற்றும்.சின்ன தவறுகளை செய்து விட்டு பெற்றோர் திட்டுவார்களே என்று மறைக்க ஆரம்பிக்கும்.இதுவே வளர்ந்து பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஸ்நேகிதர்களுடன் ஊர் சுற்றி பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்களே என்று தப்புக்கு மேல் தப்பு செய்தால் நம்மால் ஜீரணிக்க இயலுமா?

குழந்தை வயிற்றில் ஜனனம் ஆனதுமே பெற்றோர்களுக்கு கடமையும் பொறுப்புணர்வும் ஆரம்பித்து விடுகிறது.பெண்ணின் வயிற்றில் கரு தோன்றி விட்டது என்று உறுதி ஆனதுமே தாய் நல்ல மனநிலையிலும்,அமைதியான குடும்ப சூழ்நிலையிலும் உயரிய எண்ணங்களுடனும் ,பொய்,பொறாமை,காழ்ப்புணர்வு,வெறுப்பு,கோபம்,எரிச்சல்,சச்சரவு,அகம்பாவம்,ஆணவம் போன்றவற்றை விட்டொழித்து மனதினை நேரிய வழியில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் கூறுகிறது.

தனிமையில் இருக்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளது கர்ப்பகாலத்தில் இதற்கெனவே நேரம் ஒதுக்கி அறையை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்.மற்றொருவரோ தன் மதம் சார்ந்த உரையாடல்களை செல்போன் மூலம் ஒலிக்க விட்டு வயிற்றின் மேல் வைத்துக்கொள்வார்.

இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும்,சிறப்பையும்,பாக்கியத்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.ஒருவனின் திறமை,ஆளுமை அவனது புத்திக்கூர்மையை வைத்துத்தான் கணிக்கிறோம் அவன் வல்லவனா என்று.மனிதனின் புத்திகூர்மை,நினைவாற்றல்,விசாலமாக சிந்திக்கும் திறன்,செய்யும் ஒவ்வொன்றையும் பகுத்து,அலசி,ஆராய்ந்து,திட்டமிட்டு,ஆலோசனை செய்து செயலாக்கம் செய்தால் அவன் அறிஞனாக வெளிப்படுகின்றான்.

மனித மூளையின் அளவும்,திறனும் கரு உருவான உடனே ஆரம்பமாகி விடுகிறது.ஆரம்பத்தில்தான் அதன் அபரிதமான வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.

தன்னம்பிக்கை,ஆற்றல்,கம்பீரம்,சுயமாக தீர முடிவெடுத்தல்,விடா முயற்சி,அறிவு,நல்லொழுக்கம்,கல்வி போன்றவற்றில் உயர்ந்து,சிறந்து நம் சந்ததிகள் விளங்குமாயின் அது நமக்கும்,சமுதாயத்திற்கும் கிடைக்கும் பெரும் பேறல்லவா?

மற்றொரு பதிவில் குழந்தைவயிற்றில் ஜனித்ததில் இருந்து அதன் பதின் பருவம் வரை நாம் நம் சந்ததியருக்கு ஆற்றக்கூடிய கடமைகளையும்,பொறுப்புகளையும்,கட்டாயங்களையும் பார்ப்போம்.

இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்கவும்,.


December 21, 2009

குழந்தைகளின் டாம்பீகம்.


இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன் சம்பாத்தியத்தில் இருந்து ஐந்தில் ஒரு பங்கை பிள்ளைகளின் படிப்புக்காக செலவு செய்கின்றான் என்றால் அது மிகை ஆகாது.மெட்ரிகுலேஷன்,செண்ட்ரல் போர்ட்,காண்வெண்ட் இண்டர்நேஷனல் பள்ளி என்று எங்கோ போய் மனிதனின் சேமிப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு இருக்கின்றது.எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டிலேயே வருடத்திற்கு பத்துலட்சம் செலவு ஆகும் பள்ளிகள் கூட(விடுதிவசதியுடன் அல்ல)உள்ளது.

கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளின் படிப்பை நல்லதொரு,பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ,மிகமிக கஷ்டப்பட்டு சேர்த்து விட்டு (சேர்த்தபொழுது அவர்கள் அனுபவத்தை கதையாக எழுதலாம்)'அப்பாடா..இனிமேல் பிள்ளையைப்பற்றிய கவலையே இல்லை'என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.


ஓரளவு செல்லமாக் வளர்க்கப்பட்ட பிஞ்சுகள் தம் வயதைசேர்ந்த சக மாணாக்கர்களுடன் பழகும்,ஸ்நேகிதம் கொள்ளும் தருணமும் ஏற்படுகின்றது.பிள்ளைகளுக்கு பெற்றோர் கஷ்ட நஷ்டங்களை தெரியாமல் சொகுசாக வளர்த்து படிப்புக்காக ஆயிரக்கணக்கிலும்,லட்சக்கணக்கிலும் செலவு செய்யும் பொழுது குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பும் ,அருமையும் தெரிவதில்லை.நமக்காக நம் பெற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் முளை விட்டுவிடுகின்றது.

இதனால் ஆடம்பரத்தையும்,ஏகோபோகத்தினையும்.உச்சகட்ட நாகரீகத்தையும் மிக சுலபமாக கற்றுக்கொண்டு அதுவே வாழ்க்கையில் இயல்பாகி போய் விடுகின்றது.இதுதான் சதம் என்று தீர்மானமும் பிஞ்சுகளின் எண்ணத்தில் விதைக்கப்பட்டுவிடுகின்றது.

கூட படிக்கும் மாணவன் ஆடி காரில் வரும் பொழுது மாருதி 800 வரும் மாணவனுக்கு ஒரு இன்பியாரிட்டி காம்ப்ளக்ஸ்.ஸ்கூட்டியில் வரும் மாண்விக்கு ஆல்டோவில் வரும் மாணவியைக்கண்டால் ஏக்கம்.இப்படி பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப்பட்டு விடுகின்றது.

"மம்மி ,டேடியை சின்ன வண்டியில் போக சொல்லிட்டு ஸ்கூலுக்கு பெரிய வண்டி அனுப்புங்கள்."
"என் பிரண்ட் இந்த சம்மர் வெகேஷனுக்கு ஹாங்காங் போறான் நாம் எங்கே போகலாம்?"
"எப்ப பார்த்தாலும் இட்லி,சட்னியா?சுனில் பர்கர்,பிஸ்ஸா,பாஸ்தா தான் கொண்டு வர்ரான்"
"எல்லாபசங்களும் காரில் வர்ராங்க.நாமும் ஒரு கார் வாங்குவோம்.அப்பா கிட்டே சொல்லு"
ஸ்வேதா பாக்கட் மணியாக ஹண்ட்ரட் ருபீஸ் கொண்டு வர்ரா,எனக்கு நீ பத்து ரூபாய் தர்ரது அசிங்கமா இருக்கு"
"நாளைக்கு ஆதிலுக்கு காபூலில் பர்த் டே பார்ட்டி.நீயெல்லாம் என் பர்த் டேயை அப்படி செலிபரேட் பண்ண விட்டு இருக்கியா"
"என் பிரண்டோட அப்பா வீக் எண்ட்டில் அவர் மெம்பராக இருக்கும் கிளப்புக்கு டின்னருக்கு அழைத்துட்டு போவார்.நம்ம டாடியையும் ஒரு கிளப் மெம்பராக சொல்லுங்கள்"
இப்படி வசனங்கள் எல்லாம் பல வீடுகளில் சர்வசாதாரணமாக ஒலிக்கும்.அந்தஸ்த்தில் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு சமமாக இருக்க வேண்டும் என்ற உணர்வும் கல்வியுடன் சேர்ந்தே வளர்ந்து விடுகின்றது.
விளைவு..

ஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப், பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுய டிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும் முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள் நியாமானதுதானா?நல்ல வழியில் கொண்டு செல்லுமா?பெற்றோர்களுக்கு கட்டுப்படியாகுமா?நம் குடும்பபொருளாதாரத்திற்கு தகுமா?என்று எண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகி விடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்.

பிள்ளைகளின் ஆணவ்ம்,டாம்பீகம் இவற்றை தடுத்து நிறுத்தும் செங்கோல் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.அது நமது காட்டாயக்கடமையும் கூட.

.ஆரம்பத்திலேயே பைசாவின் அருமையையும் உணர்த்துங்கள்.ஒவ்வொரு பைசாவயும் ஈட்டுவதற்கு உள்ளாகும் கஷ்ட்டத்தையும் தெளிவு படுத்துங்கள்.பண விஷ்யத்தில் கறார் ஆக இருங்கள்.

. செல்ல பிள்ளை விரும்புகின்றானே என்று ஆசைப்பட்டதை எல்லாம் உடனே வாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.தேவையானதா?இல்லையா?என்று பிள்ளகளை விட்டே தீர்மானம் செய்யச்சொல்லுங்கள்.அத்தியாவசியமான பொருட்களைக்கூட உடனே வாங்கிக்கொடுக்காதீர்கள்.

. ஆரம்பத்திலேயே சிக்கனம்,கறார்,கண்டிப்பைக் காட்டினோமானால் குழந்தைகளுக்கு அதிகபடியான ஆசைகளும்,டாம்பீக எண்ணங்களும்,பணத்தின் அருமையை புரியாமல் இருப்பதும்,படாடோப நோக்கமும் உண்டாவது தானகவே வள்ர்வதை தடுக்கும்.

." உன் ஸ்நேகிதன் வீட்டில் என்ன கார் உள்ளது?எத்தனைக்கார் உள்ளது?டூ வீலர் மட்டும்தான் உள்ளதா?அவங்க வீட்டில் ஹாலில் ஏஸி பண்ணி இருக்கிறார்களா?அந்தப்பையன் பஸ்சிலா வருகின்றான்?அவனுக்கு பர்த்டே paartt உண்டா? அவள்வீடு தனி வீடா?பிளாட்டா?சொந்தவீடா?வாடகைவீடா?"இப்படிக்கேள்விகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.

.அவன் எப்படிப்படிப்பான்?எந்த சப்ஜக்ட்டில் நல்ல மார்க் வாங்குவான்?கிளாசில் யார் பர்ஸ்ட்?அனுவல் டேயில் அவனது டிராமா எப்படி?இவளது டான்ஸ் எப்படி?சம் யார் நன்றாக போடுவார்கள்?டிராயிங் யார் சூப்பராக போடுவார்கள்? ரீதியில் மட்டுமே கேள்விகள் எழுப்ப கற்றுக்கொள்ளுங்கள்.

. ஸ்நேகிதர்களுக்கு தன்னைஅந்தஸ்த்திலும்,ஆடம்பரத்திலும் சமமாக காட்டிக்கொள்ளும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

. வாழ்க்கையின் மேடு பள்ளங்களின் எதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள்.அந்தஸ்து பேதமற்ற நட்பை உள்ளத்தில் விதையுங்கள்.

.எல்லாவித சந்தோஷங்களையும் ஒருமித்தே அனுபவிக்கவேண்டும் என்ற அவாவின் விபரீதத்தை செவ்வன் சொல்லிக்காட்டுங்கள்.

.நம்மை விட வசதி குறைந்த சக மாணவ, மாணவிகளுடனும் ஒரே மாதிரி பழக வேண்டும் என்ற எதார்த்ததை எடுத்து இயம்புங்கள்.

. இவை எல்லா வற்றுக்கும் மேலாக இறை பயத்தை,அச்சத்தை பயிற்றுவியுங்கள்இறை பயம் தவறான வழிகேட்டில் இருந்து தவிர்த்து விடும்.இறை அச்சத்துடன் கூடிய உலககல்விதான் நல்ல பிள்ளைகளாக,நேர்வழியில் செல்லும் குழந்தையாக,பிள்ளைகளின் பதின் பருவத்தில் பெற்றோர்களுக்கு தொந்தரவு கொடுக்காத குழந்தைகளாக ,சமூகம் மெச்சும் பிள்ளைகளாக,உதாரணப்பிள்ளைகளாக,சுற்றமும்,நட்பும்கொண்டாடடப்படும் பிள்ளைகளாக ,மொத்தத்தில் நல்ல பிரஜையாக உருவெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.