February 24, 2013

சென்னை நாமகாரணம்




குளம் , மலை , ஆறு , பட்டி, பேட்டை, வலசு, பாளையம், பட்டினம், புரம், நகர், ஊர் போன்றவை பொதுவான இடப்பெயர்களாகும்.
சென்னையின் பல ஏரியாக்களின் பெயர்கள் பாக்கம்,பேட்டை,ஊர்,புரம் நகர்,சாவடி,மேடு என்று முடிகின்றன.

பாக்கம்,வாக்கம் என்று முடியும் அரும்பாக்கம் ,ஆதம்பாக்கம் ,கோடம்பாக்கம் ,நுங்கம்பாக்கம் ,கீழ்ப்பாக்கம் ,பாலவாக்கம் ,காட்டுப்பாக்கம் ,
பட்டிணம்பாக்கம் ,மடிப்பாக்கம் ,வில்லிவாக்கம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் ,புரசைவாக்கம் ,கொட்டிவாக்கம் ,அச்சரப்பாக்கம் ராஜாகீழ்ப்பாக்கம் ,மாதம்பாக்கம் ,பெரும்பாக்கம் ,ஊரப்பாக்கம் ,புதுப்பாக்கம் ,மாம்பாக்கம் ,சித்லப்பாக்கம் ,கோலப்பாக்கம் ,தொரைப்பாக்கம் ,ஈஞ்சம்பாக்கம் ,மவுலிவாக்கம் ,ஆலப்பாக்கம் ,கேளம்பாக்கம் ,புழுதிவாக்கம் ,நெசப்பாக்கம் ,சேப்பாக்கம் ,ஊரப்பாக்கம் , பட்டினப்பாக்கம்  ,செம்பரம்பாக்கம் ,மீனம்பாக்கம் ,நந்தம்பாக்கம் ,முகலிவாக்கம் என்றும்

பேட்டை என்று முடியும் கொருக்குப்பேட்டை ,வண்ணாரப்பேட்டை  ,முத்தியால்பேட்டை ,சைதாபேட்டை ,சௌகார்பேட்டை  ,தண்டையார்பேட்டை ,தேனாம்பேட்டை ,ஜாபர்கான்பேட்டை ,ராயப்பேட்டை ,குரோம்பேட்டை ,ஆழ்வார்ப்பேட்டை ,நசரத்பேட்டை ,புதுப்பேட்டை ,சூரப்பேட்டை என்றும்

ஊர் என்று முடியும்  கொரட்டூர் ,கொளத்தூர் ,போரூர் ,ஸ்ரீபெரும்புதூர் ,திருப்போரூர் ,பொழிச்சலூர் ,நாவலூர் ,வண்டலூர் ,நொளம்பூர் ,ஆலந்தூர் ,கொரட்டூர் ,பெருங்களத்தூர் ,சோழிங்கநல்லூர் ,மைலாப்பூர் ,திருவான்மியூர் ,முடிச்சூர் ,நங்கநல்லூர் ,கானாத்தூர் ,பையனூர் ,பெரம்பூர் ,குன்றத்தூர் ,சேலையூர் ,அனங்காபுதூர் ,எழும்பூர் ,கொடுங்கையூர் ,திருவொற்றியூர் ,பெரவள்ளூர்  ,அம்பத்தூர் ,எண்ணூர் என்றும்,

முன்னர் ஏரி இருந்த இடங்களை இப்பொழுது நிலத்தடியாக்கிய குடி இருப்பு பகுதிகளை கடைசியில் ஏரி என்று முடியும் படியாக ரெட்டேரி ,பொத்தேரி ,வெப்பேரி ,ஒட்டேரி என்றும்,

புரம் என்று முடியும் ராயபுரம் ,ராமாபுரம் ,ராஜஅண்ணாமலைபுரம் ,மகாலிங்கபுரம் ,தசரதபுரம் ,கோட்டூர்புரம் ,பல்லாவரம் ,மாதாவரம் ,அயனாவரம்,கோபாலபுரம் ,ரங்கராஜபுரம் ,டிரஸ்ட்புரம் ,சோழாவரம் என்றும்,

நகர் என்று முடியும் எம்ஜிஆர் நகர் ,கே கே நகர் ,அசோக்நகர் ,தியாகராயநகர் ,அழகிரிநகர் ,அண்ணாநகர் ,ஆழ்வார் திருநகர் ,செனாய் நகர் ,வள்ளலார் நகர் ,பெசண்ட் நகர்  ,மறைமலை நகர் என்றும்,

சாவடி என்று முடியும் கொத்தவால்சாவடி ,சுங்கன்சாவடி ,வேலப்பன்சாவடி ,கந்தன்சாவடி ,குமணன்சாவடி  ,

பஜார் என்று முடியும் சைனாபஜார் ,பர்மாபஜா ,பாண்டிபஜார் ,ஜாம்பஜார் என்றும் நமகரணங்கள் சென்னை ஏரியாக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இனி  பெயர் சூட்டிய காரணக்களைப்பார்ப்போம்.
இஸ்லாமியர்கள் இங்கு பள்ளிவாசல்களை கட்டி தொழுகை நடத்தி வந்தனர்.ஆகவே  மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.முற்காலத்தில் சென்னபசவ நாயக்கன் என்ற மன்னர் தான் ஆண்ட பகுதியான இப்போதைய சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு விற்று விட்டார்.அவர் ஆண்ட பகுதியின் ஞாபகார்த்தமாக சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது சென்னை என்றும் சொல்கின்றனர்.

அந்தக்காலத்தில் திருட்டு பொருட்களின் விற்பனையகமாக இருந்த பர்மா பஜார் பகுதியையை ஆங்கிலேயர்கள் தீவ்ஸ் பஜார் என்று அழைத்து வந்தனர்.பின்னர்.பர்மியர்களின் குடியிருப்பு பெருக அதுவே பர்மாபஜார் ஆகி விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நரிமேடு என்ற மணற்குன்றில் இருந்து கொண்டுவந்து பள்ளமாக இருந்த இப்போது இருக்கும் மண்ணடி பகுதியை நிரப்பியதால் மண்ணடி என்ற பெயர் வந்தது.

கொத்தவால் என்பதற்கு அர்த்தம் வரி வசூலிப்பவன்.இந்தப்பகுதி அந்தக்காலத்தில் வரிவசூலிப்பு எல்லையாக இருந்ததால் கொத்தவால்சாவடியாகநிலை பெற்றுவிட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தங்கசாலையில் வெள்ளிக்காசு அச்சடிக்கும் ஒருவர் இருந்தார்.அதுவே தங்கசாலையாகி விட்டது.

ஊர் செய்திகளை தண்டோரா போடும் ஆட்கள் இருக்கும் இடமே இப்போதைய தண்டையார் பேட்டை.

பல்லவர் ஆட்சிக்காலத்தில் மன்னரின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ராயர்புரமாகி இன்று ராயபுரம் ஆகி விட்டது.

அக்காலத்தி புரசை மரங்கள் புதர் போன்று மண்டி காடு போல் காட்சி அளித்தது.அதுவே இன்றைய புரசைவாக்கம்.

போரில் லவகுசர்களால் தோல்வி அடைந்து அமர்ந்த இடம் அமர்ந்தகரை அமைந்தக்கரையாகி இப்போது அமிஞ்சகரையாகி விட்டது.

பெரிய குளங்கள் நிறைந்த பகுதியாதலால் அதுவே பெருங்குளமாகி அதுவே மருவி பெருங்குளத்தூர் ஆகிவிட்டது.

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் ஆகும்.

அன்றைய மா அம்பலம் இன்றைய மாம்பலத்தின் சிவாலயத்தின் நந்தவனம் இருந்த பகுதியே இன்றைய நந்தனம்.இங்கு பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிலை பிரசித்தம்.

நூல் நெய்யும் தறியாளர்கள் வசிக்கும் பகுதியாக சிந்தாதிரிபேட்டை ஒரு காலத்தில் இருந்தது.அகவே இது சின்னத்தறிபேட்டையாக இருந்து காலப்போக்கில் சிந்தாதிரிபேட்டையாக மாறிவிட்டது.

சென்னையில் வசிக்க வேண்டுமானால் வரிகட்டவேண்டும் என்ற திட்டத்தை கொண்டுவரப்பார்த்தவர் ஆங்கிலேயர் பேப்பமன்ஸ் பிராட்வே .வரிகட்டவேண்டுமென்பதற்காக சென்னையை காலி செய்து விட்டு செல்ல திட்டமிட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.அந்த யோசனையைக்கூறிய பேப்பமன்ஸ் பிராட்வே பெயரே இப்போதைய பிராட்வேக்கு சூட்டப்பட்டுள்ளது.

செட்டியார்கள் நிறைந்து வசித்த பகுதி செட்டிப்பட்டி இப்போதைய சேத்துப்பட்டு.

மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்து வந்த  இடம் இன்று மாம்பலம் ஆகி விட்டது.

கோடா-பாக் என்றால் குதிரைகள் நிறுத்தும் இடம் என்ற அர்த்தம் உண்டாம்.ஆற்காடு நவாபுடைய குதிரைப்படைக்கான இடமே கோடாபாக் இப்போதிய கோடாம்பாக்கம் ஆகி விட்டது.

பரங்கிமலை .பரங்கியர் என்றால் தமிழில் வெள்ளையர் என்றொரு அர்த்தமும் உண்டு.வெள்ளையரின் நினைவாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் தமிழில் பரங்கி மலையாகி விட்டது.

சென்னை நகரை பொருத்த மட்டில் முதலில் சூர்யோதயம் விழுவது எழும்பூர் பகுதியிலாம்.முதலில் விடிவதால் அதனை எழுமூர் என்றனர் காலப்போக்கில் மருவி எழும்பூர் ஆகிவிட்டது.

ஆதிகாலத்தில் வசித்த முனிவர் ஒருவர் தான் தவம் செய்த பொழுது பூஜைக்கான கிண்டியை இவ்விடத்தில் பொருத்தியதால் கிண்டியாகி விட்டது.

அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் திருவல்லிக்கேணி இப்பெயரைப் பெற்றது.

பண்டைய காலத்தில் குரோம் லெதர் தொழிற்சாலை இங்கு அமையப்பெற்று இருந்ததால் குரோம் பேட்டை ஜனித்தது.

நட்புகள் பதிவில் வராத ஏரியாக்களின் பெயர்காரணங்களை பின்னூட்டலாம்..



February 18, 2013

பாண்டிபஜார்




சென்னையில் வசிப்பவர்கள்,சென்னைக்கு வந்து செல்பவர்களின் காலடி அநேகமாக பாண்டிபஜாரில் பதியாமல் இருக்காது.ஷாப்பிங் செய்வதற்கு சென்னையிலேயே புகழ் பெற்ற ஸ்தலம் இதுவாகத்தான் இருக்கும்.

தந்தை பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் மிகவும் முக்கியமாகத்திகழ்ந்தவர்  தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் பிறந்த சவுந்தரபாண்டியன் ஆவார். 1929 ல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்து வரலாற்றில் இடம் பிடித்தவர்.இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு காலப்போக்கில் சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகி பின்னர் பாண்டி பஜார் ஆனது.இதுவே பாண்டிபாஜாரின் பெயர்க்காரணம். 

புரசைவாக்கம்,வண்ணாரப்பேட்டை என்று ஷாப்பிங் செய்வதற்கான இடங்கள் விரிவடைந்து கொண்டு சென்றாலும் பாண்டி பஜார்தான் முதலிடத்தில் இருக்கும்.

நகரின் மையத்தில் தினமும் லட்சகணக்கான மனிதர்கள் வந்து செல்லும் மிக முக்கியமான வியாபாரஸ்தலமாக இருப்பினும் வீதியெங்கு மரங்கள் வளர்க்கப்பட்டு சாலை முழுதும் பசுமையுடன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு நிழல் தந்து பரவசமூட்டுகின்றது.

அருகே இருக்கும் உஸ்மான் சாலை,ரங்கநாதன் தெருக்களில் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும்.அங்குள்ள கூட்ட நெரிச்சலுக்குஅஞ்சுபவர்கள் தேர்ந்தெடுத்து செல்லும் இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

அம்மா அப்பாவைத்தவிர அனைத்தும் இங்கே கிடைக்கும் என்று சொல்வார்கள்.மிக பிரபலமான வணிகஸ்தலங்கள்,பிராண்டட் ஷாப்கள்.உணவகங்கள் என்று அனைத்தும் இங்கேதான் உண்டு.சென்னையில் உள்ள பிரபல பதிப்பகங்கள் அநேகமாக பாண்டிபஜாரைத்தான் ஆக்ரமித்துக்கொண்டுள்ளன.

சென்னையில் மால்கள் பிரபலமில்லாத காலகட்டத்தில் இங்குதான் செல்லாமால்,மாயாபிளாசா என்ற மால்கள் தொடங்கப்பட்டு,பிரபலமாகி,கால ஓட்டத்தில் பிரபல மால்களின் வருகைக்கு பிற்பாடு இதன் மவுசு குறைந்து போனாலும் இன்னும் பழைய வாடிக்கையாளர்களால் கன ஜோராக இயங்கி வருகின்றன.

பழைய ராஜகுமாரி தியேட்டர் இடிக்கப்பட்டு, விஸ்தாராமான ஏழடுக்கு கட்டிடமாக ரூபினி சில்க்ஸ் இப்பொழுது பிக் பஜாராக பரிமாணித்து விட்டது.

கே.எப்.சி,மேரிபிரவுன்,பெலிட்டா,ஸீ செல்,அஞ்சப்பர்,சரவணபவன்,பஸ்கின் அண்ட் ரபின்ஸ்,ஹாட்சிப்ஸ், என்று பன்னாடுகளில் பவனி வரும் உணவகங்கள் மட்டுமல்ல ,பாலாஜி பவன் கீதாகஃபே,பஞ்சாபிதாபா,பனானா லீப் அடையார் ஆனந்தபவன்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று எண்ணற்ற உணவகங்கள் குவிந்து இருந்தாலும்,ரோட்டோரகடைகளுக்கும் பஞ்சம் இருக்காது.சென்னையில் மிக பிரபலமான சாலையோர உணவகங்கள் இங்குதான் உண்டு.

பெரிய கடைகள் மட்டுமின்றி ரோட்டோர கடைகளுக்கு(பிளாட்பார்ம் கடை)புகழ்பெற்றது இந்த இடம்.இங்கு பிளாட்பார்ம் கடைகள் வைத்திருப்போர் நகரின் மைய இடங்களில் பங்களாவாசிகளாக இருக்கின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.

வெளிநாட்டுப்பொருட்கள் எங்கு வாங்கலாம் என்றால் இங்கே தான் கையைக்காட்டுவார்கள்.ஏ டு இஸட் வெளிநாட்டுப்பொருட்கள் இங்கு கிடைக்கும்.

இளம்பெண்களின் கூட்டமே பிளாட்பார்ம் கடைகளில் ஈ மொய்த்தாற்போல் இருக்கும்.மலிவு விலைகளில் ரெடிமேட் ஆடைகள்,உள்ளாடைகள்,பர்னிஷிங்,வீட்டு உபயோகப்பொருட்கள்,பெண்களுக்கான அக்ஸஸரீஸ்,கிளிப்புகள்,நவநாகரீகமான காலணிவகைகள்,கைப்பைகள்,சால்கள்,பொட்டு,வளையல் பிரேஸ்லெட் இப்படி இங்கு இல்லாத பொருட்களே இல்லை.

Marks & Spencer,Lovable,Jockey,Victorias,sonari போன்ற உள் நாட்டு பன்னாட்டு பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அணிவகுத்து  பிரபலமாக இருந்தாலும் பல்லாண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கான உள்ளாடைகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட நாயுடுஹால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் இங்கேதான்.

செயற்கைப்பூக்களை அடுக்கி விற்பனைக்காக வைத்து இருப்பது பார்க்க ரசிக்கும் படி இருக்கும்.இன்னொரு பக்கம் பூ மார்கெட்டே உண்டு.தூரத்தில் சென்றாலே கதம்ப பூக்களின் வாசனை வகை வகையான மாலைகள்,பொக்கேகள்,சரம் சரமான பூங்கொத்துக்கள் என்று நாசியையும் ,கண்களையும்,மனதையும் பரவசப்படுத்தும்.

புதிய புத்தகங்கள் மட்டுமல்ல,பழைய புத்தகங்கள்,சிடிக்கள் விற்பனையும் அமோகமாக இருக்கும்.படம் வெளிவரும் முன்னரே சிடி விற்பனைக்கு வந்துவிடும்.

பர் பொம்மைகளை விற்பனை செய்வோர் சாலை ஒரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களுக்கு பின்னால் பொம்மைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்வது வேடிக்கையாக இருக்கும்.காருக்கு சொந்தக்காரர் வந்துவிட்டால் வியாபாரியின் ஜாகை இன்னொரு காருக்கு மின்னல் வேகத்தில் மாறிவிடும்.

இங்கு நடுநிசிஉணவகங்களும் உண்டு.நடுநிசியில் சென்றாலும் ஐந்தே ரூபாயில் சூடாக சுவையான டீயை அருந்தலாம் இந்த பாண்டிபஜாரில்.அங்கிருக்கும் ஷாஃப்ட்வேர் கம்பெனி,கால்செண்டர்களில் வேலைப்பார்ப்பவர்களின் கூட்டம் நடுநிசிஆனாலும் அந்த சாலையோர டீ விற்பவரை சுற்றி நின்று டீயைகுடித்து ரெஃப்ரெஷ் செய்து கொள்வது வாடிக்கை.

விநாயகசதுர்த்தி வருகின்றதா கலர் கலராக பிள்ளையார் சிலைகள் வீதி முழுக்க நிறைந்து காணப்படும்.நவராத்திரியா மரப்பாச்சி பொம்மைகளும்,மண்பொம்மைகளும் குவிந்து கிடக்கும் விற்பனைக்காக.பொங்கலா கரும்பு கட்டுகளும் வாழைப்பழம்,மஞ்சள்கொத்து என்று பாண்டிபஜாரே கரும்பு தோட்டமாகி விடும்.தீபாவளியா சாதாரணமாக நடைபாதைகளை ஆக்ரமித்து இருக்கும் வளையல் கடையும் துணிக்கடையும்,புத்தகக்கடையும் பட்டாசு விற்பனையகமாக மாறிவிடும்.கிருஸ்துமஸ் காலத்தில் எரியும்பல்புகள் உடன் கூடியகிரிஸ்மஸ் ஸ்டார் விற்பனை கனஜோராக நடப்பது இங்குதான்.கிருஸ்துமஸ் முடிந்த மறுநாளே புத்தாண்டுக்கான வாழ்த்தட்டைகள் விற்கும் கடை முளைத்து விடுவது வாடிக்கை.இப்படி சீஸசனுக்கு ஏற்றவாறு கடைகள் மாற்றம் பெற்று பாண்டி பஜாரை தலை சிறந்த அங்காடித்தெரு என்ற  சிறப்பினை பெற்று விட்டது.


கீழுள்ள படங்கள் கூகிளாரின் உதவிதான்.பாண்டிபஜார் சென்று நாமே புகைப்படம் எடுத்து பிளாகில் எழுத வேண்டும் என்று ஆசைதான்.வழக்கம் போல் சோம்பேறித்தனம்.அதுதான் உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டே பாண்டி பஜாரை போட்டோ பிடித்து பகிர்ந்து விட்டேன்.



அம்மணி துணி வகைகளை எத்தனை ஆர்வத்துடனும்,கவனத்துடனும் பார்வையிலேயே ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார் பாருங்கள்.


 ஏஸி தேவை இல்லை,கரண்ட் தேவை இல்லை,வாடகை தேவை இல்லை,டாக்ஸ் கட்டத்தேவை இல்லை இந்த பர் பொம்மைகள் விற்பவருக்கு.

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது 
குளு குளு தென்றல் காற்றும் வீசுது 




என்னப்பா இது தலை இல்லாத பொம்மைகள் மீது கலர் கலராக சுடிதார்கள் அணிவித்து கண்காட்சி நடத்துறாங்க.


செருப்புகளின் அணிவகுப்பு.மகாராஜா மகாராணி இளவரசன் இளவரசி மன்னாதி மன்னன் என்று பெரிய பெரிய ஷோ ரூம்கள் குளிரூட்டப்பட்டு கண்ணை கட்டினாலும் இப்படி பிளாட் பார கடைகளில் ஒன்றுக்கு நான்காக வாங்கி விதம் விதமாக செருப்பு அணிந்து மகிழ்வது என்றால் இப்போதைய யூத்துகளுக்கு கொண்டாட்டம்.பெற்றவர்களுக்கு திண்டாட்டம்.கடைக்கரார்களுக்கோ பந்தாட்டம்.

மலர் மாலைத்தோரணங்கள் கண்களையும் நாசியையும் கவர்ந்து பரவசப்படுத்துகிறன.

மஞ்சல்,குங்குமம்,கயிறு விபூதி என்று அநேகப்பொருட்களும் விற்பனை செய்யும் இடம்.

விதவிதமான பொம்மைகள்,சிலைகள்,சாவிகொத்துக்கள் என்று விற்பனை செய்யும் ஆல் இன் ஆல் அட்டகாசக்கடை.


February 10, 2013

என் பொக்கிஷம்





இந்த மோதிரத்துக்கு வயது நூறுக்கும் மேல் என்றால் நம்பமுடிகின்றதா?அதற்குள் “அக்கா..உங்களுக்கு நூறுவயதுக்கும் மேல் ஆச்சா?பாட்டி,நிஜமாலுமே உங்களுக்கு நூறு வயதுக்கு மேலாச்சா?சொல்லவே இல்லையே?”என்று முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு கேள்விகள் கேட்ககூடாது:)பொறுமையாக மேலே படியுங்கள்.

சுமார் ஒரு பவுன் எடையுடன் கூடிய மோதிரத்தின் நடுவில் அடர் சாம்பல் நிறத்தில் பெரிய சுண்டைக்காய் அளவில்  சற்று தட்டை வடிவில் கண்களைப்பறிக்கும் இந்த மோதிரம் நான் மட்டுமல்ல வழி வழியாக என் முன்னோர்கள் பத்திரமாக பாதுகாத்து உபயோகித்து வரும் பொக்கிஷம்இது.

இதனை பற்றி எழுத வாய்ப்பளித்த தோழி ஆசியாவுக்கு என் அன்பின் நன்றிகள்.//தமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வும்..!// என்ற முன்னூட்டத்துடன் ஆசியாவின் வரிகள் இத்தொடர்ப்பதிவை ஆர்வத்துடன் எழுதத்தூண்டியது.மேலும் தங்கை வானதியும் அழைத்து இருக்கின்றார்.அவருக்கும் நன்றி.

இம்மோதிரத்தின் மதிப்பு எல்லாம் எனக்குத்தெரியாது.எங்கள் குடும்பத்தில் பாரம்பர்யமாக வழிவழியாக எம்குடும்ப மாந்தர்கள் விரல்களை அலங்கரித்து வந்த மோதிரம் இப்பொழுது என் விரலை அலங்கரித்து வருகின்றது.

என் பாட்டியின் அம்மா தன் கணவரை கரம் பிடித்த தருணத்தில் அணியப்பட்ட இம்மோதிரம்,என் தாத்தாவை பாட்டி கரம் பிடித்த தருணத்திலும் அணியப்பட்டது.பிறகு என் பெற்றோர்களின் திருமணத்திலும் என் தாயார் அணிந்து இருந்தார்கள்.பின்பு என் திருமணத்தில் நான் அணிந்து  அன்றில் இருந்து நான் உபயோகித்து வருகின்றேன்.என் மகள் திருமணத்திலும் இந்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.என் மகளோ மிக மெலிதான மோதிரம் அணியும் பழக்கம் உள்ளவளாக இருப்பதால் இன்றுவரை என்னிடமே உள்ளது.

வருடங்கள் பல ஆனாலும் இன்னும் மெருகு மாறாமல்,அந்தக்காலத்து மாடல் என்ற சுவடில்லாமல் ஏதோ நேற்றுத்தான் நகைக்கடையில் இருந்து வாங்கி வந்தது போல எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அபூர்வ டிஸைன்,அழகிய வேலைப்பாடுடன் கூடிய அருமையானதொரு கண்களை பறிக்கும்,பார்ப்பவர்களை வசீகரிக்கும் விலைமதிப்புள்ள கல் ஒன்றினை பதித்து ஜொலி ஜொலிக்கும்.

இதில் இருக்கும் கல்லை சிக்ஸ் திரட் ஸ்டோன் (six thread stone) என்கின்றனர்.தமிழில் ஆறுநூல் கல்,ஆறிழைக்கல் என்கின்றனர்.கல்லின் மத்தியில் இருந்து ரேகை போன்று ஆறு இழைகள் ஓடுவது நுண்ணியமாக தெரியும்.ஆனால் இக்கல்லை நான் அறிந்ததில்லை.ஒரு தடவை அணிந்து இருந்த பொழுது ஒருவர் மோதிரத்தை உற்று நோக்கி இதில் ஆறு நூற்கள் ஓடுகின்றது.இது அபூர்வக்கல்.பொதுவாக இப்படி ரககற்களில் நான்கு இழை தான் ஓடும் இதில் வித்தியாசமாக ஆறு இழை ஓடுகின்றது என்று சொன்னார்.

இது நடந்து ஆண்டுகள் பலவாயினும் நான் நவரத்தினக்கல் மதிப்பீட்டாளரிடம் காட்டி இதன் மதிப்பை அறிந்து கொள்ள விழைய வில்லை.ஏனென்றால் விலை மதிப்புள்ளதோ,இல்லாததோ இந்த அரிய பொக்கிஷத்தை,என் குடும்ப சொத்தை,அதற்கொரு விலையை மதிப்பீடு செய்து அறிந்து கொள்ள பிடிக்கவில்லை.

அணிந்திருக்கும் விரலுக்கு ராஜகம்பீரம் கிடைக்கும் அழகிய மோதிரம் .அணிந்தைருக்கையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும்,பரவசத்தையும்,நிறைவையும் அளவிட முடியாது..மிக முக்கியமான விஷேசங்களில் மட்டும் அணிந்து விட்டு பத்திரமாக அதற்குறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து விடுவேன்.வலது கை விரலில் அணிந்து இருந்தால் சாப்பிடும் பொழுது ஜாக்கிரதையாக இடது விரலுக்கு மாற்றி விடுவேன்.நீர் படாமல் பாதுகாப்பேன்.பத்திரமாக டிஷ்யூவில் துடைத்து சுத்தம் செய்வேன்.

யாருக்கும் அணியக்கொடுத்ததில்லை.பல ஆண்டுகளுக்கு முன் தூரத்து உறவினர் இல்லத்திருமணத்திற்கு சென்று இருந்த பொழுது பெண்ணுக்கு அலங்கரித்து நகை அணிவிக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.புதுப்பெண்ணுக்கு பத்து விரல்களிலும் மோதிரம் அணிவிப்பார்கள்.பெண்ணிடம் பத்து மோதிரம் இருந்திருக்கவில்லை.சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் தாங்கள் அணிந்திருந்த மோதிரங்களைக்கழற்றிக்கொடுத்தனர்.என்னிடமும் கேட்ட பொழுது நான் அணிந்திருந்த இன்னொரு மோதிரத்தை கழற்றிக்கொடுத்த பொழுது வலது கை விரலில் இருந்த இந்த மோதிரம் நன்றாக உள்ளது இதனைக்கொடுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு கணம் திணறிவிட்டேன்.வேறு வழி இல்லாமல் கழற்றிக்கொடுத்து விட்டு வீடு திரும்பியும் என்னால் நிம்மதியாக இருக்க இயலவில்லை.

மோதிரம் திரும்பக்கிடைக்க இன்னும் பல நாள் ஆகலாம்.மோதிரத்தை மணப்பெண் விரலில் அணிவித்த பொழுது பெண்ணின் நெருங்கிய உறவினர் யாரும் அருகில் இருந்திருக்கவில்லை.பெண்ணுக்கோ யார் யார் மோதிரம் என்றும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.காலம் காலமாக பாதுகாத்து வந்த மோதிரம் நம்மை விட்டு நழுவி விடுமோ என்ற பயத்தில் இன்னொரு உறவினரிடம் விஷயத்தை சொன்னேன்.அவர் மறுநாளே பத்திரமாக மோதிரத்தை வாங்கி தந்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது.

அரிய பொக்கிஷமான இந்த மோதிரம் இனி எனக்கு வருங்காலத்தில் பேத்தி பிறந்து அவளுக்கு திருமணம் ஆகும் பொழுது அணியப்படவேண்டும் வழி வழியாக இது பின்பற்றப்படவேண்டும் என்பதே என் ஆசை.

February 6, 2013

தயிரின் கதை!






“ஹ்ம்ம்ம்ம்..உருப்படியாக இன்னும் தயிர் செய்யத்தெரியவில்லை”திருமணம் ஆனதில் இருந்து இதுவரை ரங்கமணி இந்த வார்த்தையை ஒரு லட்சத்து ஒன்பதினாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது முறையாவது சொல்லி சொல்லி அதை கேட்டு கேட்டு என் காதும் நான்கு நாளைக்கு முன் வைத்த தயிரைப்போல் புளித்து விட்டது.

“ஆஃப்டர் ஆல் ஒரு தயிர் கூட வைக்கத்தெரிய வில்லை.ஷேம் ஷேம்..என்ன பிளாக்கர் நீங்கள்..?”ஆ ஊ என்றால் என் வலைப்பூவை வம்பிழுக்காமல் இருப்பது மஹா தவறு என்ற குறிகோளுடன் இருக்கும் என் பெரியவர்.

“மா..சப்பை மேட்டர்.இதற்குப்போய் இப்படி டென்ஷன் ஆகறீங்க.பேசாமல் தயிர் செய்யும் விஷப்பரிட்சையில் இறங்காமல் அமுல் தயிர் வாங்கிடுங்க”கூலாக சொல்லும் இளையவர்.

“என்னடி,இன்னிக்காவது உருப்படியா வந்துச்சா?”எதை மறந்தாலும் இதை மறவாது கேட்கும் நட்பு.

”ஐந்து கிலோ பிரியாணி ஆகட்டும்,ரெண்டு கிலோ மாவில் பரோட்டாவாகட்டும் சடுதியில் செய்து விடுவேனாக்கும்.இந்த தயிர்தான் நமக்கு வசப்பட மாட்டேன் என்கின்றது”இப்படி சொல்லி சிறுமூச்சு மற்றும் பெருமூச்சு விட்டு பீற்றிக்கொள்வதோடு சரி.

தயிர் வைப்பதற்கென்றே சைனா மேக் எனாமல் கோப்பை அழகாக இருந்தும் தயிர்தான் அழகில்லாமல் போய் விடுகின்றது என்று எனக்கு மூக்கு முட்ட குறை.

மிகவும் கரிசனத்துடன்,ஜாக்கிரதையுடன் பாலைக்காய்ச்சி தயிருக்கு உரை ஊற்றி வைத்து விட்டு எடுத்துப்பார்த்தால் திப்பி திப்பியாக திரட்டுபால் போன்ற தயிர் என்னைப்பார்த்து பரிதாபமாக விழிக்கும்.

உடனே செல்லை தூக்க வேண்டியது.நட்பிடம் சொல்லி ஆலோசனை கேட்டால் “பாலில் நீர் விட்டாயா?என்ன பால்?கொழுப்பு நீக்கிய பாலா?இன்னிக்கு வந்த பாலா,பால் காய்சும் பாத்திரத்தை வெந்நீர் விட்டு அலம்பினாயா?”கேள்வி கேட்பதில் மருத்துவ நிபுணர் தோற்றார் போங்கள். மறு பக்கத்தில் கேட்காதவண்ணம் மிக ஜாக்கிரதையாக நான் பல்லை கடிப்பது கேட்காமல் இருக்க பிரயத்தனப்பட்டு அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன்.

”அதானே பார்த்தேன்..கஞ்சப்பிசுனாரி.பால் கவரை கழுக தண்ணீர் விட்டாயா.அதான் தயிர் இப்படி திரண்டு வருது”பெரியதாக ஆராய்ந்து விடையை கண்டு பிடித்து விட்ட கர்வம் மறுமுனை நட்பின் குரலில் தெரிந்தது.

“இனி துளி தண்ணீர் சேர்க்காமல் பாலைக்காய்ச்சு”உத்தரவு போட்டுவிட்டாள்.

நட்பு சொன்னதை அப்படியே பின் பற்றி தயிர் தோய்த்தால் இந்த முறை தயிருக்கு மேலே ஒரு  இன்ச் அளவுக்கு தண்ணீர் நின்றது.மறுபடி அதே இலவச ஆலோசனைக்கு போனேன்.”ஏகப்பட்ட கேள்விகளுக்கு பிறகு பால் நல்ல சூடாக இருக்கும் பொழுதே உரை ஊற்றி விட்டாய்.இனி பக்குவமாக பதமாக உரை ஊற்று”என்ற அட்வைஸை ஏற்று மறுதடவை நட்பு சொன்ன பிரகாரம் கை பொறுக்கும் சூட்டில் பால் இருக்கும் பொழுது உரை விட்டேன்.

ம்ம்ஹும்...இப்பொழுதும் திருப்தி இல்லை”மா..நெஸ்லே தயிருக்கு அடிக்காதும்மா”மகனின் திருப்தி இன்மை.

“பாலில் சூட்டின் அளவு பார்க்க கை விட்டாயா”என்ற கேள்விக்கு என் பதில் ஆமாவாக இருக்க “அதான்.தயிர் இப்படி உனக்கு டிமிக்கி கொடுக்கிறது”என்ற பதில் கிடைத்தது.

தயிர் செய்ய வேண்டி செல்போனுக்கு இவ்வளவு தண்டம் அழத்தேவை இல்லை என்று தோன்றியது.யூ டியூபில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்து அதன் பிரகாரம் செய்தும் பலனில்லை.

இந்த தயிரை மறந்து நிம்மதியாக ஒரு மத்தியானப்பொழுதில் குட்டியாக தூக்கம் போட்டதை செல் போன் அழைத்து தூக்கத்துக்கு பங்கம் வைத்தது.

“இப்பதான் ஞாபகம் வந்தது.ஆமா தயிருக்கும் பாலில் உரை ஊற்றி விட்டு என்ன செய்வாய்?”

தூக்ககலக்கத்தில் எரிச்சலுடன் பதில் சொன்னேன்.”மூடி வைத்து விடுவேன்”

“கலக்க மாட்டாயா?”

“கலக்கவா”

“ஆமாம்.உரை ஊற்றிய பின் ஒரு ஸ்பூனால் நன்றாக கலக்க வேண்டும்.இதை ஃபாலோ பண்ணாததால் தான் உனக்கு தயிர் சரியாக வரவில்லைபோலும்”

அன்றே அந்த தயிர்த்தோழி..ஓஓ..ஸாரி உயிர்த்தோழி சொன்ன படி ஸ்பூனால் நன்கு கலக்கினேன்.அதென்னவோ தெரியவில்லை.எனக்கும் தயிருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

திப்பி திப்பியான தயிர்,தண்ணீர் நிற்கும் தயிர்,புளிப்பில்லாத தயிர்,புளித்துப்போன தயிர் இப்படி விதம் விதமாக தயிர் செய்து வந்தேனே தவிர உருப்படியாக தயிர் செய்ய துப்பில்லாமல் போனது.

ஓரளவுக்கு பெரியவரும்,சின்னவரும் கிண்டல்களை குறைத்துக்கொண்டு அந்த தயிரை உபயோகிக்க பழகிக்கொண்டார்கள்.ஞாபகம் வரும் பொழுதெல்லாம் ரங்கமணியும் தயிரை பற்றிய வினா எழுப்பி என் ரோஷத்தை கிளறி வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம்.ஒரு வழியாக ஏதோ சுமாராக தயிர் தோய்க்க கற்றுக்கொண்டு இப்பொழுதெல்லாம் நக்கல் நையாண்டி இல்லாமல் தயிரை சாதத்தில் விட்டும்,லஸ்ஸியாகவும்,உப்பு சேர்த்தும்,இல்லை அப்படியேவும் சாப்பிட பழகி விட்டனர்.

இப்படியாக தயிர் கதை பிரச்சினை இன்றி ஓடிகொண்டிருக்க எனக்கும் பெருத்த நிம்மதி.அன்று தயிர் பாத்திரத்தை திறந்த சின்னவர்”என்னம்மா,தயிர் ஜவ்வு மிட்டாய் போல் இழுக்குது”பெரிய குண்டை தூக்கி போட நான் அலறி அடித்துக்கொண்டு போய் ஸ்பூனால் தயிரை தூக்கி பிடித்தால் ஆம் ஜவ்வு மிட்டாயேதான்.

அலசி ஆராய்ந்து அலட்டிக்கொண்டிருக்காமல் உருப்படியாக கொஞ்சம் உரை ஊற்ற மட்டும் தயிரை வைத்துக்கொண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாயை அரைத்து கலந்து மசாலா மோர்  செய்து தயிரை வீணாக்காமல் காபந்து பண்ணி திருப்தி பட்டுக்கொண்டேன்.

அடுத்த நாள் இரவு தயிருக்கு உரை ஊற்றி மூடி வைத்து விட்டு முதல் வேளையாக காலையில் எழுந்ததுமே தயிர் பாத்திரத்தை திறந்து பார்த்தால் வெள்ளைவெளேரென்ற தயிர் என்னைப்பார்த்து சிரித்தது.அப்பாடா என்று திருப்தி பட்டுக்கொண்டேன்.மத்தியானம் சின்னவரும்,பெரியவரும் சாப்பிட வரும் பொழுது இந்த மஹா கனம் பொருந்திய இந்த தயிர் என்னை பார்த்து இளிக்கப்போவதை அறியாமல்.

பொரியல் குழம்பு ரசம் என்று வரிசைபடுத்தாமல் சாதத்தை தட்டில் போட்டதுமே தயிரை விடும் பழக்கம் என் வாரிசுகளுக்கு.தயிரை ஸ்பூனால் எடுத்தால்..அவ்வ்வ்வ்வ்வ்...நேற்றைப்போலவே தயிர் ஜவ்வு மிட்டாய்தான்.கலரைப்பார்த்து நம்பிய இந்த  தயிர் இப்படி காலை வாரி விட்டதே..எரிச்சலுடன் மகன்களின் கிண்டல் தொனிகள் காதில் விழுந்தாலும் பொருட்படுத்தாது பிரட் முட்டையை பகலுணவாக சாப்பிட வைத்துவிட்டேன்.

சுண்டக்காய்ச்சிய பால்,அதனை பதமாக ஆற விட்டு ஈரம் இல்லாத கரண்டியை விட்டு நன்கு கலக்கி “தயிரப்பா!இந்த முறையாவது மானத்தை வாங்காதேப்பா”என்று முணுமுணுத்தவாறு தயிர்பாத்திரத்தை மூடி வைத்து விட்டு,காலையில் அதீத ஆரவத்துடன் முன் ஜாக்கிரதையுடன் ஸ்பூனை கழுகி எடுத்துக்கொண்டு பய உணர்வுடன் தயிரினுள் விட்டுப்பார்த்தால் ஈவு இரக்கம் இல்லாமல் மீண்டும்  அதே ஜவ்வு மிட்டாய் தயிர் என்னை திகைக்க வைத்தது.

“என்னம்மா தொடர்ந்து மூன்று நாட்களாக ஜவ்வு மிட்டாய் தயிராகவே வருகிறது”மகனின் முணுமுணுப்பு.

“இப்படி சதி பண்ணுதே இந்த தயிர்.நான் எங்கே போய் முட்டிக்கொள்ள”என் குரலில் உலகமகா வேதனை பிளஸ் வெறுப்பு.

“வாவ்..நான் இந்த ஜவ்வு மிட்டாய் தயிருக்கான காரணத்தை கண்டு பிடித்துவிட்டேன்”மகனின் உற்சாகக் குரல்

“மா...முதல் நாள் உள்ள தயிரையே உரைக்கு ஊற்றினீர்களா?”

“ஆமாம்.”

“அதானே பார்த்தேன்.அவரைப்போட்டால் துவரையா முளைக்கும்.”

“அட சின்ன குட்டிக்கு சூப்பராக பழமொழியெல்லாம் எல்லாம் வருது..”

“ஜவ்வு மிட்டாய் தயிரை உரைக்கு விட்டால் கெட்டித்தயிரா கிடைக்கும்? ஜவ்வு மிட்டாய் தயிர்தானே கிடைக்கும்.எப்ப தயிர் நல்லா வரலியோ அப்பவே புதுசா வேறு தயிர் வாங்கி உரை ஊற்ற வேண்டும்.இது கூட தெரியலே..ஹாஹ்ஹாஆஆஆஆஆ..”சின்னவர் சிரிப்பில் பெரியவர் மட்டுமல்ல என்னவரும் சேர்ந்து கொண்டார்.

அட..இப்படியும் இருக்கா?இது நமக்கு தோணாமல் போச்சே.ம்ம்ம்ம்...எல்லாம் சரிதான்.சின்னவர் சொன்ன பழமொழிதான் என்னை இன்னும் யோசிக்க வைத்துக்கொண்டுள்ளது.



February 3, 2013

வண்டலூர் பூங்கா


சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும்.

வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.லயன் சபாரி,மான் சபாரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பரவசப்படுத்தி வருகிறது.

இப்பூங்காவுக்கு இன்னும் சிறப்பு செய்யும் விதத்தில் .3 கோடியே 25 லட்சம் செலவில் இப்பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.

பூங்காவின் முக்கியமான நோக்கங்களுள் ஒன்றான வன விலங்கு பாதுகாப்பு குறித்த கல்வியை பொது மக்களும், பள்ளி மாணவ,மாணவியரும் பெறும் வகையில் பூங்கா நிர்வாகத்தினர் கற்பித்து வருகின்றனர்.பார்வையாளர்களுக்கு வனவிலங்குகளின் முக்கியத்துவம்,வனவிலங்குகளின் பாதுகாப்பு பற்றி வகுப்புகள் நடத்துகின்றனர்.மாணவ மாணவிகளுக்கு வனவிலங்குகளைப்பற்றிய விழிப்புணர்வு அதிகம் வேண்டும் என்ற கொள்கையினால் சாதாரணமாக 30 ரூபாய் நுழைவு கட்டணத்தை 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர்.செவ்வாய் அன்று இப்பூங்காவுக்கு விடுமுறை தினமாகும்.

வனவிலங்கு பூங்காவுக்கு சென்று இருந்த பொழுது கேமராவில் சிறைபிடித்த சில விலங்குகளும் பறவைகளும்.






நீருக்குள் நிற்கும் நீர்யானை.அது நடந்தாலே நீருக்குள் ஒரு பிரளயமே நடந்தது போல் நீர் தளும்புவதைப்பார்க்க பிரமிப்பாக இருக்கும்.




நீருக்கு வெளியில் நீர் யானை.கம்பீர நடை போட்டு உலா வரும் காட்சி.




குட்டி யானைகள் இரண்டு கும்மி கூத்தாடுகின்றன.அதன் விளையாட்டை படிப்படியாக காட்சிகளாக பதிவு செய்து வைத்துள்ளேன்.


சிங்கவால் குரங்குக்கு என்ன கோபமோ?முகத்தை காட்ட மாட்டேன் என்று போயே போய் விட்டது.


நீள வால் கருங்குரங்குகள் மரத்தின் மேல் கும்பலாக ஏறி குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டுள்ளன.நீண்ட வாலைப்பார்க்கும் பொழுது  சிறு வயதில் படித்த சித்திரக்கதையில் வரும் சுட்டிக்குரங்கு கபீஷின் நினைவு வந்தது

 வங்கபுலி எனும் வெள்ளைப்புலிகள் இந்தியாவில் சுமார் 100 என்ற அளவிலேயே உள்ளன.இவற்றில் இப்பூங்காவில் மட்டும் ஒன்பது புலிகள் உள்ளன.2006 ஆம் ஆண்டில் டில்லியில் உள்ள தேசியப்பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற முறையில் இப்பூங்காவுக்கு இவ்வெள்ளைப்புலிகள்  கொண்டு வரப்பட்டன.

மேலே உள்ள படத்தில் கம்பீர நடை போடும்  புலியார்.ஆக்ரோஷமாக சீறிக்கொண்டே உலா வருகின்றார்

.வீரா சிங்கத்தை பவ்யமாக படம் பிடித்து வந்தேன் .அந்த படத்தை என் கேமராவில் இருந்து காக்கா தூக்கிகொண்டு போய்விட்டது போலும் .காணவே காணோம்.

அப்படி என்னதான் உள்ளதோ.கீழ் படத்தில் உள்ள மான் கூட்டம் பாரவையாளர்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் கும்பலாக என்னதான் செய்கின்றதோ??


ஒட்டகை சிவிங்கி தன் ஜோடியுடன் குஷாலாக  வாக்கிங் போவதைப்பாருங்கள்.




இந்த குரங்குக்குட்டி என்ன சமர்த்தாக செயற்கை குகையினுள் உட்கார்ந்து கொண்டுள்ளது பாருங்கள்.பார்வையாளர்கள் வாழைப்பழத்தினை  காண்பித்தும் அது வெளியில் வரவே இல்லை.
வாரே வாஹ்..கோபித்துக்கொண்டு சிங்கவால் குரங்கு முதுகைக்காட்டிக்கொண்டு போனது இப்பொழுது கோபம் தணிந்து என்னைப்பார்,என் அழகைப்பார் என்று தள்ளாட்டம் போட்டு நடந்து வருகிறது.

அம்மா குருவியும் அப்பா குருவியும் தன் வாரிசின் வரவுக்காக என்னஒரு எதிபார்ப்புடன் இருக்கிறதை பாருங்கள்.அப்பாக்குருவி ஒற்றைக்காலில் தவம் இருக்க,அம்மா குருவி, குஞ்சுக்குருவியின் சப்தம் முட்டைக்குள் கேட்கின்றதா என்ரு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டுள்ளது போலும்.



இது ஒரு நாரைவகை.என் மகன் படிக்கும் கல்லூரி இந்தப்பூங்காவின் அருகில் உள்ளதால் பிளான் பண்ணாமலேயே அவ்வப்பொழுது சென்று வருவேன்.ஆதலால் குறிப்புகள் எடுக்கவில்லை.



இது ஒரு கோழி இனம் பார்க்க நெருப்புக்கோழி போன்ற பயமுறுத்தும்  தோற்றம்.



இதுவும் ஒரு வகை கொக்கினம்தான் என்னவோ சோகம் கவ்விக்கொண்டது போல் உள்ளதே இந்த கொக்கு!கொக்கம்மா அப்படி என்னதான் உன் சோகம்?



பயணத்தின் போது வழியில் முட்டை இடுமாம் ஆமை.இதோ அவசர கதியில் செல்கின்ற வணடலூர் ஆமையார் வழியில் முட்டை இடுவாரா?முட்டைக்கு காத்திருந்து முட்டை(பூஜ்ஜியம் )தான்  ரிஸல்ட்.


முதலைக்கண்ணீர் என்று சொல்லுவார்கள்.முதலை சிரிப்பைப்பார்த்து இருக்கின்றீர்களா?இந்த முதலை சிரிக்கின்றதுதானே?(மெட்ராஸ் முதலைகள் எல்லாம் நை நை என்று அழுது கண்ணீர் விடாது போலும்.)




ஆகாசத்தில் பறக்கும் ஒற்றைப்பறவையைப்பாருங்கள்.பூங்காவுக்கு சொந்தமான பறவை பத்திரமாக பூங்காவுக்கு திரும்பி விடுமா என்று கவலையுடன் மேங்கோ ஐஸை சுவைத்து கொண்டே ஏக்கமாக பார்த்துக்கொண்டே  இருந்தேன்.