****************
கஞ்சி போட்டு மொடமொடப்பான காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டி,நெற்றியில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டும்,வகிட்டில் செந்தூரமும் மங்கலரமாக ஜொலிக்க தளர பின்னிய ஜடையில் துளி பூவும்,பளிச்சென்ற தோற்றமும்,எப்பொழுதும் மோனலிஷாவை நினைவுபடுத்தும் முகமும்,தோளில் கனமான ஹோல்ட் ஆலும்..போதும்..போதும் சீதாவை அறிமுகப்படுத்தியது.
சீட்டு பிடிக்கும் சீதா என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஏலச்சீட்டு,குலுக்கல் சீட்டு மட்டுமில்லாமல்,தன் அப்பாவின் போஸ்ட் மேன் பதவியைபயன் படுத்தி,தபால் துறையில் சிறுசேமிப்பு திட்டத்தில் முகவராகவும் இருக்கிறாள்.
கல்யாணம்,கண்காட்சி,திருவிழா,கோவில்,வங்கி,கடற்கரை,கடைகளில் போடும் தள்ளுபடி,ஹாஸ்பிடல்களின் விஸிட்டர் அவர்ஸ்..இப்படி எங்கே வேண்டுமானாலும் சீதாவின் முகம் தெரியும் தன் டிரேட் மார்க் ஹோல்டால் பிளஸ் புன்னகையுடன்.
கோவிலில் அக்ரஹாரத்தெரு மாமியைப்பார்த்தால்
"மாமி..எப்படி இருக்கேள்..?ஆத்திலே சவுக்கியமா?50000 ஆயிரம் ரூபாய் சீட்டு அடுத்த மாசம் முடியறதே.அடுத்தாக்கலே 1 லட்சரூபாய் சீட்டு பிடிக்கபோறேன்.ரெண்டா போட்டுடுவோமா?"
"பெருமாளே ரெண்டாவா" மாமி அதிர,
"ஏம்மாமி பெருமாளை அழைக்கிறேள்..பெருமாள் அனுக்ரஹம்நோக்கு எப்பவும் உண்டும்.கவலையே படாதேள்.நல்ல படியா சீட்டு போடுங்கோ.ஐம்பதாயிரம் சீட்டு போட்டு உங்கள் இளைய மகன் வேலைக்கு டெபாஸிட் கட்டினேளே.இப்ப பாருங்கோ ஜாம்,ஜாம் என்று முள்ளங்கி பத்தையாட்டம் சம்பாதித்துண்டு வந்து கொடுக்கறாளோ இல்லியோ."
இப்படி நைச்சியமாக பேசிப் பேசியே மாமியை மட்டுமல்ல,அவரது மகனை,சின்ன மருமகளை என்று மாமியின் குடும்பத்தில் குறைந்தது மூன்று சீட்டுகளாவது போடச்செய்து விடுவாள்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சந்தோஷில் இருந்து,வங்கியை சுத்தம் செய்யும் காத்தாயி வரை அனைத்துதரப்பினரும் இவளது கஸ்டமர்கள்.தன் குலோப்ஜாமூன் பேச்சாலும்,சிரித்த முகத்தாலும்,சாதுர்யத்தாலும் சீட்டு போடவே கூடாது என்று தீர்மானமாக இருப்பவர்களைக்கூட நொடியில் மாற்றிவிடும் வல்லமை இவளுக்குண்டு.
வேலைக்காரி சின்க் முன் நின்று கொண்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கையில்,இவள் ஸ்டவ் முன் நின்று தோசை வார்த்துக்கொண்டே
"ஏண்டி..முனிம்மா..உன் வூட்டுக்காரன் இப்பல்லாம் குடிக்காமல் ஒழுங்கா சம்பளத்தைக்கொண்டு வந்து தர்ரானா?" கேட்டதுதான் தாமதம் பத்து நிமிஷம் வாய் மூடாமல் முனியம்மா புருஷனை திட்டி தீர்ப்பதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்து விட்டு இவள் ஒரு கால் அவர் அட்வைஸ் மூட்டையை அவிழ்த்து விட்டு முனியம்மாவை கூல் படுத்தி விட்டு
"முனிம்மா..மாசம் 300 ரூபாய் ஆர் டி போடுறியே இந்த மாசத்துடன் முடியறதே:என்று ஆரம்பித்து விடுவாள்.
"ஆமாங்கம்மா..கழுத்து வெறுமனே மூளியா இருக்கும்மா. ஒரு செயின் வாங்கலாம் என்று இருக்கேன்.நாளைக்கு பொண்ணுக்கும் ஆவுமே"
"அட பைத்தியகாரி..அதை வாங்கி வச்சி உன் குடிகார புருஷன் கிட்டே இருந்து எப்படி காபந்து பண்ணப்போறே?பேசாமே மொத்த காசையும் அப்படியே இந்திர விகாஷ் பத்திரமா வாங்கித்தர்ரேன்.ஏழே வருஷத்திலே பணம் அப்படியே டபுளா போய்டும்"
"டபுளாவா.."
"பின்னே..உன் பொண்ணு கல்யாணம் பண்ணும் சமயம் வரவும்,இது மெச்சூர்ட் ஆகவும் சரியா இருக்கும்"இப்படி நைச்சியமாக பேசி பேசி சாதித்து விடுவாள்.தவிர அடுத்த மாதத்தில் இருந்து புதிதாக முனியம்மாவை மாதம் ஐநூறு ரூபாய் ஆர்டி போடவும் வைத்து விடுவாள்.
வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த பூக்காரியிடம் ஒரு முழப்பூ வாங்கிக்கொண்டு அதை அழகாக வாழை இலையில் சுருட்டி வாங்கி தன் ஹோல்ட் ஆலில் வைத்துக்கொண்டு சரசர வென்று நடந்து பஜனைக்கோவில்தெரு பத்மா வீட்டிற்கு ஆஜர் ஆகி விடுவாள்.உள்ளே நுழைந்ததுமே பூவை எடுத்து பவ்யமாக நீட்டி"வெள்ளிக்கிழமை அதுவுமா சும்மா எப்படி வர்ரது?பிடியுங்கோ மதுரை மல்லி"இப்படி பேசி காரியத்தை சாதித்துக்கொண்டு விடுவாள்.
"ஆர்த்தி..உனக்கு இந்த வருஷம் இன்கிரிமெண்ட் உண்டோ?பையனை பல்கா டொனேஷன் கொடுத்து எல் கே ஜி யில் சேர்த்து விட்டியே?குழந்தை சமர்த்தா போறானா?உன் பையனாச்சே.குழந்தைக்கு சமர்த்துக்கு குறைச்சல் இருக்குமா என்ன?இப்ப பையன் எங்கே..?"
அனுசரனையாக விசாரித்து குழந்தை அந்த பக்கம் வரும் நேரம் பார்த்து
"கண்ணா..ஸ்கூலுக்கு சமர்த்தா போறியா.நல்லா படிக்கணும்.அம்மாவுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கணும் சரியாடா ராஜா"
வாய் பேசிக்கொண்டே கை ஹோல்ட் ஆல் ஜிப்பை திறக்கும்.ஒரு மஞ்ச் பாரை எடுத்து குழந்தையிடம் நீட்டி
"சாப்பிடுடா செல்லம்"என்று சொல்லி விட்டு அவள் வெளியேறும் பொழுது அந்த மாசம் குலுக்கல் ,ஏல சீட்டு,ஆர் டி க்கு உரிய பணம் அனைத்தையும் வாங்கி ஹோல்ட் ஆலில் பத்திரபடுத்திக்கொண்டதுமில்லாமல் புதிதாக இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு இந்திர விகாஷ் பத்திரம் வாங்க செக் ஒன்றும் வாங்கி இருப்பாள்.
இப்பொழுது ஊரில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரி வாசலில் பழக்கடைக்காரனிடம் பேரம் பேசி நாலு ஆப்பிளும்,ஆறு சாத்துகுடியும் வாங்கி கொண்டு லிப்ட் ஏறி 307 ஆம் வார்ட் முன் நின்று கதவை டொக் டொக் என்று தட்டுவாள்.
"ரஹீம் பாய் சலாம் அலைக்கும்.இப்ப உடம்பு எப்படி இருக்கு.உங்களுக்கு உடம்புக்கு முடியலேன்னு கேட்டுட்டு ஷாக் ஆகிட்டேன.அல்லா புண்ணியத்தில் நாளைக்கு டிஸ்சார்ஜா?அப்பா..ரொம்ப சந்தோஷம்.."
இப்படி அனுசரனையாக விசாரித்து அடுத்த முறை வீட்டுக்கு போய் இருக்கும் பொழுது ரஹீம் பாயின் சம்சாரம் புதிதாக ஆரம்பிக்கப்போகும் சீட்டுக்கு பணத்தை தயாராக எடுத்து வைத்து இருப்பாள்.
"யப்பா..வீட்டை பளிச்ன்னு வச்சிக்கறதில் உனக்கு நிகர் வேறு யாரும் இல்லை .அட..உன் கைங்காரியத்தில் தரை எல்லாம் பளிங்கு மாதிரி மின்னுது. வீட்டுக்கு சாமான் வாங்கிப்போடனும் என்றுதானே என் கிட்டே சீட்டு போட்டே.இந்த முறை விழுந்துடுச்சின்னா நல்லதா ஒரு லெதர் சோபா வாங்கி போட்டுடு.அழகா இருக்கும்.அடுத்த மாசம் ஏலசீட்டு புதுசா ஆரம்பிக்காப்போறேன்.."கண்டிப்பாக ஆர்டர் பிடித்து இருப்பாள்.
சீதாவின் பொண்ணுக்கு அரையாண்டு பரிட்சை முடிந்து ஸ்கூலில் ஓப்பன் டே .கையில் எக்ஸாம் பேப்பர்,புரோகிரஸ்கார்ட் சகிதமாக கிளாஸ் மிஸ்ஸிடம் அக்கறையாக மகளின் படிப்பைப்பற்றி பேசி விட்டு
"மிஸ் .."இந்த மாதம் புதுசா சீட்டு ஆரம்பிக்கப்போறேன்."என்று ஆரம்பித்து விடுவாள்.எதிரே வரும் புது மிஸ்ஸைப்பார்த்து"யாரு இது?புது அப்பாயிண்ட் மெண்டா?என்ன சப்ஜெக்ட்..சரண்யா..செவண்த் பி செக்ஷன் அவள் அம்மாதான் நான்"
தன்னை சுருக்கமாக அறிமுகபடுத்திக்கொண்டு
"அப்படியே நயன் தாரா மாதிரி இருக்கீங்க மிஸ்.முகத்திற்கு பேஷியல் பண்றீங்களா?"இப்படி பேசியே ஒரு ஸ்நேகிதத்தை உண்டாக்கி விடுவாள்.அப்புறம் என்ன?பெண்ணின் கிளாஸ் மிஸ் மூலம் ரெகமண்ட் செய்யப்பட்டு இந்த நயன் தாரா மிஸ்ஸும் ரொம்ப சீக்கிரத்தில் இவளின் கஸ்டமர் ஆகி விடுவார். ஸ்கூலை விட்டு வெளியேறும் பொழுதும் சும்மா இருந்ததில்லை.
வாசலில் உட்கார்ந்திருக்கும் வாட்ச்மேனிடம்
"என்னப்பா..ஏழுமலை.உன் பையன் எப்படி படிக்கறான்?நல்லா படிக்கசொல்லு.இந்த வருஷம் பப்ளிக் எக்ஷாம் ஆச்சே. ஒரே வருஷத்தில்; முடியும் குலுக்கல் சீட்டு ஆரம்பிக்கப்போறேன்.அவசியம் போட்டுடு.பையன் காலேஜ் போறச்சே கண்டிப்பா உதவும்.செலவுக்கப்புறம் சேமிப்புன்னு இருக்காமல் சேமிப்புக்கப்புறம் செலவு என்ற பாலிஷியை கடைபிடி.அதான் லைஃபுக்கு ஷேஃப்."குட்டியாக அட்வைஸ் பண்ணி விட்டு போனால் பலன் அடுத்த முறை சீதா ஸ்கூல் கேட்டை கிராஸ் செய்யும் பொழுது ஏழுமலை ஜேப்பியில் கை விட்டவாறு "மேடம்..மேடம்.."என்று குரல் கொடுப்பான்.
தெருவில் விசுக்,விசுக் என்று நடந்து போகும் பேங்க் காஷியர் சியாமளாவை வேக நடையில் நெருங்கி"சியாமு..உன் அம்மா உடம்பு இப்ப எப்படி இருக்காங்க?நேற்று மாங்காடு போனேன்.இந்தா பிரசாதம்.அம்மாவுக்கு கொண்டு போய் கொடு.அவசியம் ஒரு நாள் அம்மாவைப்பார்க்க வர்ரேன் .நான் ரொம்ப கேட்டதாக சொல்லு என்ன?"தன் டிரேட் மார்க் ஹோல்ட் ஆலில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டுவாள்.ஏதும் பேசுவதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் சியமளாவே
"அக்கா வீட்டு பக்கம் வந்தீங்கன்னா புதுசா ஆரம்பிக்கப்போற சீட்டுக்கு பணத்தை வாங்கிட்டு போங்க"என்று விடுவாள்.சியமாளா வின் கன்னத்தை செல்லமாக தட்டி
"இதை விட எனக்கு வேறு என்ன வேலை.சாயங்காலம் அவசியம் வர்ரேன்" என்பாள்
இப்படியாக தன் ஹோல்ட் ஆல் குலுங்க,மோனலிஷா புன்னகையுடன் ஊரை வலம் வந்து கொண்டு நடையால் தனது ஹெல்த்துக்கும்,அனுசரனையான பேச்சால் நூற்றுக்கணக்கான கஸ்டமர்களும்,ஸ்நேககிதங்களும்,மனிதர்களும் ,அதனால் ஏகபட்ட லாபமும் தனக்கு கிடைப்பது மட்டுமால்லாமல் தன் கஸ்டமர் அனைவருக்கும் சேமிப்பாலான பலனையும் தரும் சீதா பாராட்டப்படவேண்டடியவள்தானே?