August 22, 2011

தங்கமே தங்கம்




ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.

தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு!

பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்!

மீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே போவதால் நாளைக்கு இன்னும் குறையும்,நாளன்னிக்கு மேலும் குறையும் இந்த கண்ணோட்டத்தில் மக்கள் நகைகளை வாங்கத்தயங்கினாலும் சில தைரியசாலிகள் இதுதான் சான்ஸ் என்று வாங்கவும் செய்தனர்.அதனாலேயே நகைக்கடையில் கூட்டம் களைக்கட்டியது.

தங்கம்மாவின் கணவர் வைரமணி நகைக்கடைக்கு சென்று பத்து தங்க காயின் வாங்கி வந்து மனைவின் கையில் வாயெல்லாம் பல்லாக தந்த பொழுது தங்கம்மாவுக்கு மனம் நிறைய வில்லை.”காயினா வாங்கினதுக்கு பதிலாக காசுமாலை வாங்கித்தந்தால் என்ன”என்ற ஆதங்கம்.

“அதுக்கென்ன இப்போ..என் செல்லத்துக்கு அடுத்த வாரமே வாங்கித்தந்துடுறேன்”கணவனின் வார்த்தைகளில் மெழுகாய் உருக்கிப்போனாள் தங்கம்.

வங்கியில் போட்டு இருந்த ஒரு லட்சரூபாய் பிக்சட் டெபாஸிட் முதிர்வு அடையாமலே தங்கம் வாங்கும் நிமித்தமாக பணத்தை எடுக்க சென்றால் வங்கியில் எள் போட இடமில்லாமல் கூட்டம் களைக்கட்டியது.கூட்டத்தில் நின்ற பாதி பேருக்கும் மேலே வைப்புநிதிகளை க்ளோஸ் செய்யும் நிமித்தமாக வந்து இருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஒரு ஸ்டாஃப் வந்து நாளைக்குத்தான் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்ததும் முணு முணுப்புடன் கலைந்து சென்றனர்.

கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த வைரமணியும் அவரது சகதர்மினி தங்கமும் என்ன ஏது என்று விசாரிக்கையில் வங்கியில் பணம் காலியாகிவிட்டது என்ற தகவல் கிடைத்தது.

‘நாளைக்காலை சீக்கிரமே வங்கிக்கு வந்து பணத்தை எடுத்து விடவேண்டும்’முணு முணுத்தபடி இருவரும் வங்கியை விட்டு வெளியே வந்தனர்.

வீட்டை அடைந்த பொழுது வேலைக்கார தாயம்மா வாசல் அருகே நின்றிருந்தாள்.

”என்ன தாயம்மா இந்த நேரத்திலே..”

“ஒரு மூவாயிரம் ரூபாய் கடனா கொடும்மா”

“என்ன இப்படி திடும் என்று மூவாயிரம் கேட்டால் எங்கே போறது?போன மாசம் வாங்கிய கடனையே இன்னும் முடிச்ச பாடில்லையே?”

“என் ஊட்டுக்காரக்கடங்காரன் குடிச்சுட்டு பக்கத்து வீட்டு ஆளைப்போட்டு விளாசித்தள்ளிட்டானுங்கம்மா.அந்த பொறம் போக்கு நேரா போய் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் கொடுத்துட்டான்.இப்ப மூவாயிரம் கட்டினால்தான் வெளியே விடுவாங்க...த்தூத்தேறி..”

”தாயம்மா இப்ப சுத்தமா என் கிட்டே பணம் இல்லே”

“இல்லே தங்கம்மாக்கா..நீ தான் எனக்கு கொடுத்து உதவணும். அப்பாலே சம்பளத்திலே கழிச்சுக்கறேன்.” பிடிவாதமாக நின்றாள் தாயம்மா.

விரலில் கிடந்த இரண்டு மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்து “இதைப்போய் சேட்டுக்கடையிலே வச்சி காசை வாங்கிக்க .வேற என்ன பண்ணுவது?”வேண்டா வெறுப்பாக கழற்றிகொடுத்த மோதிரங்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக கிளம்பினாள்.

சேட்டுக்கடை.
“இந்தா சேட்டு..இதை வச்சிட்டு ஒரு மூவாயிரம் கொடு.அவசரமா வோணும்.”

சேட்டு மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு மோதிரத்தை திருப்பி திருப்பிப்பார்த்தான்.

“என்னா சேட்டு பாக்கிறே..அது சுத்த தங்கம்தான்..”

“அதுலே சந்தேகம் இல்லை.ஆனால்...”இழுத்தான்.

“என்னா சேட்டு இழுக்கறே,,முள்ளங்கிப்பத்தையாட்டம் ரெண்டு மோதிரத்தை கொண்டாந்துட்டு மூவாயிரம் கேட்கறேன்.இந்த யோசிப்பு யோசிக்கறியே..”

அவசரப்பட்டாள் தாயம்மா.

’இந்நேரம் லாக்கப்பில் இருக்கும் அவள் புருஷனை லத்தியால் எத்தனை அடி அடித்திருப்பார்களோ..’

முகத்தை சுளித்து உதட்டைப்பிதுக்கி”சவரன் போற போக்கை பார்த்தால் நான் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பலே.பேசாமல் வூட்டுலே இருக்கற பண்டம் பாத்திரத்தை எடுத்துட்டு வா.பைசா தர்ரேன்.”

மோதிரங்களை திருப்பித்தந்தவனை “அடப்பாவி”என்றபடி திகைத்து நின்றாள் தாயம்மா.

“இந்த வருஷ தீபாவளிக்கு நம்ம பொண்ணுக்கு டிஷ்யூ பட்டு எடுத்துக்கொடுத்துடணும்”

“டிஷ்யு பட்டு எதுக்கு?ஆறு சவரனில் நெக்லஸ் வாங்கிப்போட்டுடலாம்.”

“அதுவும் நல்ல யோசனைதான்.அப்படியே சின்னப்பொண்ணுக்கு ஒரு ஒட்டியாணம் எப்படியாவது வாங்கிடணும்.ஒட்டியாணம் என் ரொம்ப நாள் கனவுங்க”

“உன் கனவு நிறைவேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை தங்கம்மா..டோண்ட் வர்ரி”சந்தோஷமாக சிரித்தான் வைரமணி.

“ஆங்..தங்கத்துக்கு உடம்பு பூரா தங்கம்..”முணங்கியவாறு புரண்டு படுத்த தங்கத்தை வைரமணி விநோதமாக பார்த்தான்.

“தங்கம்..அடி தங்கம்..என்னடி ஆச்சு உனக்கு?தூக்கத்தில் சிரித்துட்டே ஏதோதோ உளறுகிறே?ஏதாவது கனா கினா கண்டியா?”

August 18, 2011

காலம் - நூல் விமர்சனம்





பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து காலம் என்ற பெயரில் கவிதாயினி மதுமிதா புனைந்த அறிவு செறிந்த கட்டுரைகளின் தொகுப்பு.அறிவியலையும்,இலக்கியத்தையும்,அனுபவத்தினையும் வெகு சுவாரஸ்யமாக இணைத்து எழுதி இருபத்தியாறு கட்டுரைகளையும் வாசித்து முடித்து புத்தகத்தை செல்ஃபில் வைக்க மனமில்லாமல் நூலின் ஆரம்பவரிகளை மீண்டும் விழிகள் மேய விழைந்தது நூலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

கட்டுரை வடிவில் விருப்பம்,கட்டுரை வடிவபடைப்பில் இனம் புரியாத வசீகரம்,கட்டுரை எப்போதும் ஈர்ப்பது,கட்டுரை மீதான பிடிப்பு நூலாசிரியரின் பள்ளி கட்டுரை நோட்டில் எழுத ஆரம்பிக்கும் பொழுதே ருசித்து விட்ட நூலாசிரியரின் திறமை கட்டுரைகளின் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கின்றது.

பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்களின் பிறப்பு விகிதத்தை விட பெருமளவில் குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்களுடன் கூறி பெண் குழந்தைகள் அழிக்கப்படாது பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென்பதை இவர் வலியுறுத்தி இருப்பதில் சமூக அக்கறை மேலோங்கி நிற்கின்றது.

கப் கப்பல் காப்பி என்ற தலைப்பிட்ட கட்டுரை நல்லதொரு குழந்தை மனயியல்.அனைத்து இளம் பெற்றோராலும் வாசிக்கப்படவேண்டியதொரு அவசியமானதொரு கட்டுரை.

பொருளாதாரச் சிந்தனை என்ற தலைப்பிட்ட கட்டுரையில் உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒவ்வொரு துறையைச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டைச்சேர்ந்த மனிதர்களின் பொருளாதாரப்பார்வையில் பொருளாதார வல்லுநர்களின் சிந்தனை எப்படி எல்லாம் வரலாம் என்றதொரு பட்டியலை படிக்கும் பொழுது நகைச்சுவையாக மட்டுமின்றி,சிந்திக்கக்கூடியதாகவும்,நடைமுறையில் உள்ளதக்கதாகவும்.நவீனமாகவும் இருந்தது.

நிலை பெயராதமனிதர்கள் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் மரங்களைப்பற்றிய விழிப்புணர்ச்சி மிளிர எழுதப்பட்டது.அனைவரும் படித்து அனுசரிக்கவேண்டிய அறிவுரைகள்.

குர் ஆன் ஷரிபில் இருந்து மேற்கோள் காட்டி தேவையான விஷயத்தில் கவனமும்,சிரத்தையும் இருந்து இருக்கவேண்டும்.தெளிவாக செல்லும் பாதையிலென்றாலும் நாம் அடி யெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கண்ணுக்கு தெரிந்த ,தெரியாத வலைகள் பின்னப்பட்டுப்பட்டு இருக்க ஜாக்கிரதை உணர்வுடன் செல்லவேண்டிய வாழ்வியலை அழகாய் எடுத்து இயம்பி இருப்பது அபாரம்.

ஆசிரியர்: மதுமிதா ராஜா
பக்கம்: 144
விலை: 80
புதுமைப்பித்தன் பதிப்பகம்
57. 53ஆவது தெரு,
9வது அவென்யூ
அசோக் நகர்,
சென்னை - 83



August 11, 2011

அஞ்சறைப்பெட்டி - 6

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.என் மகனுடைய நண்பனொருவன் ஃபிரண்ட் ஷிப் டே கொண்டாடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கூட்டத்துடன் கார்களிலும் பைக்குகளிலும் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்று இருந்தனர்.மகன் நோன்பு வைத்ததால் செல்ல மறுத்து விட்டான்.கடற்கரை ஓரமாகத்தான் நின்று விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர்.சென்னைக்கடல் மிகவும் ஆபத்தானது என்பது அறிந்தும் இந்த இளையவர்கள் இப்படி அடிக்கடி கடற்கரைக்கு சென்று பெரிய விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

அலை இழுத்து சென்றதில் மூன்று பேர் அடித்து சென்று இருவரை காப்பாற்ற முடிந்தது.இந்த மாணவன் மட்டும் இறந்து விட்டான்.எல்லாம் ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது.நடந்ததைக்கேட்டு கதிகலங்கி விட்டேன்.என் மகனோ மூன்று நாட்கள் பித்துப்பிடித்தவன் போல் சிவந்த விழிகளுடன் இருந்தான்.

வாரம் ஒரு முறையாவது கடற்கரையில் மாணவர் பலி என்ற செய்தி வந்து கொண்டுதான் உள்ளது.இருப்பினும் விபரீதத்தை தடுக்க இயலவில்லை.பெற்றோர்கள் தான் நயம் பட எடுத்து சொல்லி இப்படிப்பட்ட ஆபத்தான பொழுதுபோக்குகளை விட்டும் விலக செய்யவேண்டும்.வார இறுதி நாட்களில்,விடுமுறைதினங்களில் கடற்கரையில் காவலர்கள் நிற்பதை அதிகப்படுத்தி விபரீதங்களை தடுப்பார்களா?

மாணவன் அபிநயசெல்வன் ஆத்மா சாந்தி அடையவும்,அபியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியையும்,பொறுமையையும் தரவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

மாணவன் அபியின் இறப்பினால பாதிக்கப்பட்டு,இப்பொழுது சற்று மனம் தெளிந்த என் முகன் தன் முகப்புத்தகத்தில் விடுத்திருக்கும் மெசேஜை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருக்கின்றேன்.

PLS AVOID TAKING BATH IN BEACH(U GUYS KNOW WHAT HAS HAPPENED).IF U GO ALSO PLS SIT AND COME BACK.
THIS S A SOCIAL AWARENESS CREATED ON BE HALF OF THE ALPHIANS 2010-2011
this is really a very serious thing... which happened in our frnd's life..... plz make it as ur status frnds... plz.... :'( :'( :'

சென்னையில் டிராஃபிக் ஜாம் என்பது சென்னையின் அடையாளமாகவே ஆகிவிட்டது.இந்த லட்சணத்தில் சிக்னலில் வண்டிகள் காத்திருக்கும் பொழுது கார்க்கண்ணாடியை லொட் லொட் என்று தட்டி விடாப்பிடியாக பிச்சை எடுப்பவர்கள்,கார் கண்ணாடியை நம் அனுமதி இல்லாமல் டஸ்டரால் துடைத்து விட்டு பணப் பறிக்கப்பார்க்கின்றவர்கள்,சிறு குழந்தைகள் இருந்தால் பொம்மைகள்,பலூன்களைக்காட்டி விற்பனை செய்பவர்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வது இன்னும் சிக்கல் ஆக்குகின்றது.டிராஃபிக் போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுக்கத்தயங்கவது ஏன்?

தி நகரில் ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் மிட்நைட் பஃபட் வார இறுதிநாட்களில் நடக்கின்றது.இரவு
12 மணி முதல் மூன்று மணி வரை.நைட் ஷோ முடிந்து வருபவர்களுக்கு வரப்பிரசாதம்.இப்பொழுது நோன்புகாலத்திலும் இஸ்லாமியர்களுக்கு சஹர் செய்வதற்கு வசதியாக உள்ளது.பாக்கெட்டையும் அதிகம் கடிக்காத அளவுக்கு விலை நிர்ணயித்து இருக்கின்றனர்.

அரசினர் மருத்துவமனை அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.எளியவர்கள் சிகிச்சைக்கு போவது அங்குள்ள மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும் மிகவும் இளப்பமாக உள்ளது போலும்.லேபர் வார்டில் எவ்வளவு அழைத்தும் வர சுணக்கம் காட்டிய மருத்துவர்,செவிலியர் துணையின்றி,தானே பிரசவித்து,பிரசவம் நடக்கும் டேபிளில் இருந்து பிறந்த குழந்தை தவறி விழுந்து இறந்த அவலம் மறைவதற்குள் இப்பொழுது கடலூர் மருத்துவமனை குழந்தையை மாற்றிக்கொடுத்து பெற்றோர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி மரபணு சோதனை செய்ய வேண்டி நிர்பந்தித்துள்ளனர்.என்ன கொடுமை?கடுமையான உடனடி நடவடிக்கை மூலம் இது போன்ற நெஞ்சைப்பதறச்செய்யும் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.


படங்கள் உதவி:கூகுள்






August 5, 2011

கிரேண்ட் பேரண்ட்ஸ் டே

டிஸ்கி:காமெடி பதிவிட்டு நாளாச்சு என்பதால் இந்த பதிவில் காமெடி சற்றுஅதிகமாகத்தான் இருக்கும்.”என்ன இது காமெடி தூக்கலாக இருக்கு” என்று புருவம் தூக்குபவர்கள் தயவு கூர்ந்து கோச்சுக்க மாட்டீர்கள் என்று அபார நம்பிக்கை வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.

நேற்று பேரன் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு சர்குலர்.வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி ஆடிட்டோரியத்தில் வைத்து கிரேண்ட் பேரண்ட்ஸ் டே கொண்டாட்டம் நடத்தப்படுவதாக.பேரண்ட்ஸ் டே சரி..கிரேண்ட் பேரண்ட்ஸ் டே என்பது இந்த பள்ளியை பொறுத்த வரை புதியதாக உள்ளதே!என் பிள்ளைகளுக்கான பள்ளி அழைப்புகள் அனைத்துக்கும் தவறாது ஆஜர் ஆகி விடும் நான்,மாதம் ஒரு முறை சப்ஜெக்ட் வாரியாக ஒவ்வொரு ஆசிரியர்களையும் போய் சந்தித்து பிள்ளைகளின் பெர்பார்மன்ஸ் பற்றி அறிய விழையும் நான் இதற்கு போகாமல் இருப்பேனா?காலையிலே ரெடியாகி விட்டேன்.

சென்ற மே மாதம் வரை தாயாக அந்த பள்ளி வளாகத்தினுள் நுழைந்து வந்த நான் இன்று ஒரு பாட்டியாக உள்ளே நுழையும் பொழுதே...

எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்டாஃப் ஒருவர்,கிட்டத்தட்ட என் வயதுக்காரர்,சாதரணமாக ஒருவருக்கொருவர் மேடம்,ஸிஸ்டர் என்று அழைத்துக்கொள்ளும் நாங்கள் இன்று அவரது அழைப்பை கேட்டு அதிர்ந்து விட்டேன்.

“வெல்கம் ஆண்டி..வெல்கம் ஆண்டி..”வாயாற நமுட்டு சிரிப்போடு வரவேற்று அழைகின்றார்.அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.......

“இரும்மா..இரு..அப்புறம் வச்சிக்கறேன் ஆப்பு”முணு முணுத்தபடி ஆடிட்டோரியத்தினுள் நுழையும் பொழுது கும்பலாக பலர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

“என்னடா இது .பத்துமணி அழைப்புக்கு பத்தரை மணிக்கு ஆஜர் ஆனதால் பங்சன் முடிந்து திரும்புகின்றார்களா இல்லை இடம் இல்லாமல் வெளியேறுகின்றனரா”புரியாமல் உள்ளே எட்டிப்பார்த்த பொழுது ஆரம்பிக்கவே இல்லை என்று புரிந்தது.கிரேண்ட் பேரண்ட் அல்லாதவர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

உள்ளே நுழைந்து முதல் வரிசையில் அமர எத்தனிக்கும் பொழுது பக்கத்தில் இருந்த பாட்டி “இங்கே கிராண்ட் பேரண்ட்ஸை மட்டும்தான் அலோவ் பண்ணுவார்கள் “என்றவரை உற்றுப்பார்த்தேன்.

“ஏன் என்னைப்பார்க்க கிரேண்ட் மதரா தெரியலியா”கேட்ட படி அமர்ந்த பொழுது அந்த பாட்டி அசடு வழிய நெளிந்தார்.

அட்றா சக்கை..அந்த பரிச்சயமான டீச்சர் ஆண்டி என்று அழைத்து டஞ்சர் பண்ணியதற்கு இந்த பாட்டி டிஞ்சர் தடவி விட்டது எனக்கு முழு ஜாங்கிரியையும் அப்படியே சாப்பிட்டது போல் தித்திப்பு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சுற்றும் முற்றும் பார்த்தேன்.மண்டையில் கொண்டை,குற்றால அருவியோடும் தலை,சோடா புட்டிகண்ணாடி,கலர்ஃபுல் கல்யாணி சாரி,ஆங்காங்கே அசத்தலான மடிசார் சேலை,ரெட்டை வட சங்கிலி,வெற்றிலைபோடும் வாய் இப்படி இமேஜின் பண்ணி வைத்து பாட்டிகளை உற்றுப்பார்த்தால் எனக்கு நிறைய ஏமாற்றம்.

அநேகர் ஹைடெக் பாட்டிகளாக இருந்தனர்.அனார்கலி ,பாட்டியாலா சுடிதாரும்,பேரலல் பாட்டமும்,சைட் ஸ்லிட்,பேக் ஸ்லிட் டாப்புகளுமாக பாட்டிகளே பட்டாம்பூச்சிகளாக தெரிந்தனர்.இன்னொரு பாட்டி என்னை மட்டுமல்ல வந்திருந்தவர்கள் அனைவரையும் அசத்தி விட்டார்.கால்களை இறுக்கி பிடிக்கும் லெக்கின்ஸ்,அதற்கு மேட்சாக டாப்.சில பழைய பாட்டிகள் ”கஷ்ட காலம்..கலி முத்திப்போச்சு” என்பார்கள்.சில ஃபிரெஷ் பாட்டிகள் ”அட செம அட்வான்சா இருக்காங்க”என்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்

’தேமே’ என்று அமர்ந்திருந்த (ரங்க மணிகள் மன்னிக்க) தாத்தாக்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் பேரக்குழந்தைகளுடன் பாட்டிகள் அடிக்கும் லூட்டிகளைப்பார்த்து எட்டிப்பார்க்கும் பொக்கை வாய் திறக்க பார்த்துக்கொண்டிருந்தனர்.
பஞ்சு பொட்டி தலை,தலையில் வாங்கிய அரை முக்கால் கிரவுண்ட் என்று இருந்த தாத்தாக்களை பார்க்கும் பொழுது ஏன் பாட்டிகளுக்குறிய பியூட்டி கான்சியஸ் தாத்தாக்களுக்கு இல்லவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தனர்.(மீண்டும் ரங்க மணிகள் மன்னிக்க)
இந்த சமயம் இந்த மாத இவள் புதியவள் இதழில் “இன்றைய ஹீரோக்கள் மிகவும் சுமார் ரகமாக இருக்க,ஹீரோயின்கள் மட்டும் மிக அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்கின்றனரே.இது என்ன நியாயம்”என்று நடிகை சுஹாஷினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ”அது என்ன சினிமாவில் மட்டுமா?உங்கள் பேட்டையிலேயே பாருங்கள்.கணவர்கள் எல்லோரும் தொப்பை,வழுக்கையுடன் திடகாத்திரமாக இருப்பார்கள்.மனைவிமார்கள் பளிச் என்று இளமையாக இருப்பார்கள்.சினிமாவிலும் கேட்கவேண்டுமா?அந்தப்பிரச்சினை வேண்டாம்.வசீகரமான ஹீரோக்களை எண்ணிப்பார்க்கலாமா?எம்ஜியாருக்கு பிறகு கமல்,கார்த்திக்,அரவிந்த்சாமி,அஜித்,சூர்யா அவ்வளவுதான்...முற்றுப்புள்ளி.இவர்கள் மனைவிகளும் இளமைதான்,அழகுதான்”என்று நடிகை சுஹாஷினி கூறிய பதில் நினைவுக்கு வருகின்றது.

பெண்களுக்குத்தனியாக ஆண்களுக்குதனியாக விளையாட்டுப்போட்டிகள் நடந்தேறின.சுமார் 50,60 பேர் கலந்து கொண்ட லக்கிகார்னரில் வென்ற கடைசி ஆறு பேரில் நானும் ஒருத்தி.கடைசியாக வென்ற ஆறு பேருக்கும் தனியாக மற்றுமொரு போட்டி (குச்சியில் கலர் பேப்பர் சுற்றுதல்) வைத்ததில் வெற்றிகரமாக தோல்வியைதழுவினேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

“அச்சச்சோ..என்ன மேடம் கடைசி நேரத்தில் இப்படி ஆச்சே”பரிதாபப்பட்ட மிஸ்ஸிடம் “என்ன செய்வது வயசாச்சி இல்லே கையெல்லாம் நடுங்குது”சிரித்து சமாளித்து வைத்தேன்.
ஐயோ..இதென்ன அநியாயமாக இருக்கு?தாத்தா,பாட்டின்னா தும்பைப்பூ தலையும்,காந்திதாத்தா கண்ணாடியும்,தள்ளாடும் நடையும்,நடு நடு நடுங்கும் குரலும் என்று இலக்கணமே வகுத்து விட்டனர்.பார்த்தீர்களா?தாத்தா,பாட்டி வேஷம் போட்ட வாண்டுகளின் கெட்அப்பை?
மேடையில் போட்டிகளில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும் கிரேண்ட் மா&கிரேண்ட்பாக்களின் ஒவ்வொரு அசைவுக்கும் குழந்தைகள் கத்தி,கைதட்டி,குதித்து,ஆர்ப்பாட்டம் பண்ணுவதைப்பார்த்து மலைத்தே விட்டேன்.காவலுக்கு நின்ற ஆயாக்களைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.கேஜி யில் இப்படின்னா நாளைக்கு யுஜி,பிஜி யில் என்ன ஆட்டம் போடப்போகின்றார்களோ இந்த நாளைய மன்னர்கள்.
அத்தனை குட்டீஸுக்கும் நடுவில் எழுந்து போஸ் கொடுக்கும் எங்கள் வீட்டு செல்லக்குட்டி.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆடிட்டோரியத்தை விட்டு குட்டீஸை வரிசையில் கிளாஸ் ரூமுக்கு போகச்செய்கையில் எங்கள் வீட்டு செல்லக்குட்டி என்னை விட்டு பிரிய மனதில்லாமல் கடைசி வரை என்னுடனே இருந்து கியூவின் கடைசி ஆளாக கண்களை கசக்கிக்கொண்டே ,விம்மியபடி செல்லும் காட்சி.




August 4, 2011

அதிர்ஷ்டக்காரி


இவள் புதியவளில் எனது அதிர்ஷ்டக்காரி என்ற சிறுகதை ஆகஸ்ட் இதழில் வந்துள்ளது.படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.



அதிர்ஷ்டக்காரி

கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.

ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.

உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.

”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”

“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”

“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”

“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”

“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”

“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”

“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”

அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.

முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.

“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”

“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”

“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”

”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”

“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”

“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.

ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.

பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”

“எதுக்கு அத்தே திருஷ்டி..”

“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”

“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”

“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.

ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”

“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”

“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”

“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”

அலமேலு வாயடைத்து நின்றாள்.

இவள் புதியவள் இதழுக்கு இனிய நன்றிகள்