December 9, 2013

அஞ்சறைப்பெட்டி - 9





1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே?

2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.

3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.

4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்!

5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.




December 4, 2013

இரவல் புத்தகம்



சென்ட்ரல் ஸ்டேஷன்..

வழக்கம் போல் அதே ஆர்ப்பாட்டத்துடன்,ஜனத்திரளாக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.தூரத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் போர்டை டஜன் கணக்கு தலைகள் மறைக்க எம்பி எம்பி பார்த்து பெங்களூர் செல்லும் சதாப்தி நான்காவது பிளாட் பாரத்தில் நிற்பதை அறிந்து கொண்டுஅவசரமாக தோளில் மாட்டி இருந்த  பேகை சுமந்து கொண்டு ,டிராலியை இழுத்துக்கொண்டு எதிர் பட்ட கடையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் பொழுதை போக்க வேண்டுமே என்பதற்காக வாராந்திரபத்திரிகை ஒன்றினையும் வாங்கிக்கொண்டேன்.பத்திரிகையுடன் இலவசமாக ஒரு பவுச் மூட்டு வலித்தைலத்தையும் மறக்காமல் வாங்கிக்கொண்டு ரயில் ஏறினேன்.

வண்டி கிளம்புவதற்கு தயாராக இருந்தது.ஏஸி சில்லிப்புடன் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.எனக்குறிய இருக்கை எண்ணை கண்டு பிடித்து அருகே சென்ற பொழுது ஜன்னலோர சீட்டில் என் வயதை ஒத்த ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

கைப்பையையும்,டிராலி பேக்கையும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்து விட்டு இருக்கை மீது வைத்து விட்டுப்போன வார இதழை பிரித்தேன்.

பிரித்ததுதான் தாமதம் அருகில் இருந்தவர் என் தோளுடன் ஒட்டி உரசிக்கொண்டு என் கையில் இருந்த பத்திரிகையை பார்வையால் மேய ஆரம்பித்தார்.

எனக்கு யாரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஒட்டி உரசிக்கொண்டு இருப்பது பிடிக்காத விஷயம்.மிகவும் நெருங்கிய நண்பர்களாயினும் அரை அடி  தள்ளியே அமருவேன்.நண்பர் பட்டாளம் என்னை சூனா மானா என்று நக்கலாக பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாகப்பட்டது சுத்த மகாராஜா.அப்படி பட்ட எனக்கு முன் பின் தெரியாத ஒரு நபர் இப்படி நெருக்கமாக அமர்ந்து கொண்டு இம்சை கொடுத்தால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்?

என் தோளில்  இப்படி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருப்பவரை இப்படி படுத்துகிறோமே என்ற கூச்ச நாச்சமின்றி ஓசிப்பத்திரிகையை வாசிக்கும் பக்கத்துசீட்டுக்காரரை பார்த்த நொடி மனம் பூராகவும் எரிச்சல் மேலோங்கியது.

வில்ஸ் டீ ஷர்ட்டும் லிவிஸ் ஜீனும் போட்டுக்கொண்டு கையில் பிளாக்பெரியுடன் இருப்பவனுக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு பத்திரிகை வாங்கிப்படிக்க துப்பில்லையே தூ..”மனதிற்குள் வெறுப்பு  மண்டியது.

தொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.

நீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.

“சார்..அடுத்த பக்கத்தைப்புரட்டுங்க சார்”

கோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.

பக்கத்து சீட் மகா மனுஷன் அசருவதாக இல்லை.விளம்பரங்களைப்படித்தாலும்,துணுக்குகளை படித்தாலும் கூடவே என்னை ஒட்டிக்கொண்டு  அமர்ந்து எனக்கு எரிச்சலை அதிகமாக்கினார்.

ஒரு கட்டத்தில் சற்று முணு முணுப்பாகவே வாசிக்கும் பொழுது எரிச்சலின் உச்சகட்டத்துக்கே போய் விட்டேன்.

“சார்..பக்கத்தில் இருப்பவரும் புத்தகத்தை படிக்கிறார் என்பது ஞாபகம் இருக்கு இல்லை..:

“சாரி சார்”

மீண்டும் கண்ணால் மேய ஆரம்பித்தார்.இந்த ஆள் விடவே மாட்டான் போலும்.வந்த ஆத்திரத்தில் புத்தகத்தை மடித்து பையில் வைப்பதற்காக எழுந்தேன்.

“என்ன சார் புத்தகத்தை போய் பையில் வைக்கப்போறீங்க”

“யோவ் ..பையில் வைக்காமல் உங்க கையிலா கொடுப்பாங்க”

“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்?”

“உங்க புக்கா”

“பின்னே..நானும் நாகரீகம் கருதி என் புக்கை கொடுங்கன்னு கேட்காமல் உங்க கூடவே சேர்ந்து புக்கை படித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவஸ்தையை சகித்துக்கொண்டு பொறுமையாக  இருந்தேன் சார்.”

நான் அவசர அவசரமாக பையை எடுத்து பார்த்த பொழுது நான் வாங்கிய வார இதழ் இலவச இணைப்புடன் என்னைப்பார்த்து சிரித்தது.

December 3, 2013

மின்சாரம்




தீபாவளிக்கு ரயில் பட்டாசு விட 
கயிறு தேவை இல்லை

களைக்கூத்தாடிகள் ஏறி நடந்து
வித்தை காட்ட கம்பி கட்ட தேவை இல்லை

தோரணம் கட்ட கட்சிக்காரர்களுக்கு
சணல் செலவு ரொம்பவே மிச்சம்

சிறார்கள் மரத்தை தேடுவதில்லை 
ஊஞ்சல் கட்டி விளையாட

நேற்றுவரை காகங்களும் சிட்டுகளும் 
ஏறி விளையாடிய மின் கம்பிகள்

இன்று மின்சாரம் இல்லாமல் தோரணமாக 
வசதியாக  தொங்குகிறதே வீதிகளில்