அல்-மஸ்ஜிதுன்னபவி (தீர்க்க தரிசியின் மசூதி)
மதீனா நகரிலுள்ள பிருமாண்டமான பள்ளி இது.இதனுள்ளேதான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றாரகள்.மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் (அடக்கஸ்தலத்தை தரிசித்தல்)ஹஜ் கடமைகளில் உள்ளதல்ல என்றாலும் “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவது சிறப்புக்குறியது.
இவைகளை நிறைவேற்ற எந்நேரமும், எவ்வித உடையிலும் செல்லலாம். இஹ்ராம் (உம்ரா .ஹஜ்ஜை நிறைவேற்ற மனதில் உறுதி எடுத்து,அதற்குண்டான ஆடைகளை அணிதல்
தல்பியா (லப்பைக் அல்லாஹும்ம லப்பை ஓதுதல்)போன்றவை இல்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இவைகளை செய்து வருவது சிறப்புக்குறியது மட்டுமேயன்றி கடமை அல்ல.
நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் (நபித்தோழர்கள்) பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.
பரந்து விரிந்த பல ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளியை மிக பிருமாண்டமாகவும் கலை நயத்துடனும்,அழகியமுறையில் உருவாக்கி உள்ளனர்.தரைப்பளப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மசூதி இதுதான்.மேலடுக்குகள் இல்லாமலேயே தரைத்தளத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் தொழக்கூடிய அளவு விஸ்தீரனமான மசூதி இது.
மேற்கண்ட படம் மசூதில் அழகு மிக்க கலை நயத்துடன் கூடிய பல நுழைவு வாயில்களில் ஒன்று
ரவ்லா ஷரீப்
பச்சை நிற டூமுக்கு கீழ்தான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பக்கத்திலேயே அபூபக்கர் சித்தீக்(ரலி)உமர் (ரலி)
(நாற்பெரும் கலீபாக்களுள் இருவர்)இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு பெயர் ரவ்லா ஷரீப்.மஜிதுன்னபவிபள்ளிக்குள் போய் இந்த ரவ்லா ஷரிப்புகுள் போனாலும் நபிகளார் அடக்கம் செய்த இடத்தினை கண்ணால் பார்க்க இயலாது.
இந்த ரவ்லா ஷரீபுக்கு ஆண் பெண்களை தனித்தனியாக அனுப்புகின்றனர்.ஒவ்வோரு நாட்டவரையும் பிரித்து பிரித்து அனுப்புகின்றனர்.
முதலிலேயே எங்கள் இமாம் (குழுத்தலைவர்)ரவ்லா ஷரீஃபுக்குள் பய பக்தியுடன் மட்டிலுமே நுழையுங்கள்.அல்லாஹ்வின் தூதரை சந்திக்கிறோம் என்ற பய உணர்வு மேலோங்கி இருக்க வேண்டுமே தவிர கட்டிடக்கலையில் அழகையும்,கலை நுணுக்கங்களையும் ரசிக்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.இருப்பினும் அதன் கலை நயத்தையும்,நுணுக்கத்தையும்,பேரழகையும்,பார்த்து பரவசப்படாமல் அதிசயிக்க முடியாமல் ,ஆனந்தப்படமுடியாமல் இருக்க இயலவிலை.
சுப்ஹானல்லாஹ்!!!!இவ்வித பெரும் அழகும் இப்பூவுலகில் உள்ளதோ என்று மனம் ஆச்சரியப்படுகின்றது.எங்கு பார்த்திட்டாலும் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
(இறைவன் ஒரருவனே.அவனது தூதர் நபி (ஸல்)அவர்கள் ஆவார்கள்)என்ற திரு நாமம் .
நபிகளாருக்கும்.உடன் அடக்கப்பட்டு இருக்கும் கலீபாக்களுக்கும் ஸலாத்தை எத்தி வைத்து விட்டு வெள்ளைதூணருகே பச்சை நிற கம்பளத்தின் மீது கூட்ட நெரிச்சலில் இரண்டு ரக் அத் தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு விட்டு கிளம்பினோம்.ஆற அமர அவ்விடத்தில் இருந்து தொழ இயலாதவாறு கூட்டம்,கண்காணிப்பாளர்கள் சீக்கிரம் நம்மை வெளியேற்றுவதில் கவனமாக இருக்கின்றனர்.ஏனெனில் காத்துக்கிடக்கும் கூட்டத்தினர் அத்தனை பேர்.
ரவ்லா ஷரீஃபுக்குள் கேமரா அனுமதி இல்லை.ஏன் மதினா பள்ளிக்குள்ளும் கேமராவை அனுமதிக்க மறுக்கின்றனர்.பெண்களின் கைப்பையை தரோவாக செக் செய்து அனுப்புகின்றனர்.இருப்பினும் சிலர் ஆர்வக்கோளாரினால் கேமராவை கொண்டுவந்து படம் எடுத்துக்கொள்கின்றனர்.எனது ஹேண்ட் பேகில் பேனா இருந்ததற்கே அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டுத்தான் உள்ளே அனுப்பினாரகள்.ஆதாலால் நான் ரிஸ்க் எடுகவில்லை.ஆண்கள் பகுதியில் இவ்வளவு கறார் கிடையாது.ஆகையால் கணவர் உள்ளே இருந்த படியே நகரும் டூமை மட்டும் படம் எடுத்து வந்தார்கள்.
மஸ்ஜிதுந்நபவியில் இருந்து தெரியும் உஹது மலை
மக்கா மதினாவை சுற்றியுள்ள ஒவ்வொரு மலைகளும் ஒவ்வொரு வரலாறு படைத்தது.அதில் உஹத் மலையானது மிகவும் உகப்பான மலை.நபி (ஸல்)அவர்கள் உவந்து சிலாகித்த மலையாகும்.
"
உஹத் மலை நம்மை நேசிக்கிறது நாமும் அதை நேசிக்க வேண்டும்."என்பது நபிமொழியாகும்.மஸ்ஜிதுந்நபவியில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பொழுதெல்லாம் பள்ளிவளாகத்தினுள் இருநத படி தூரத்தே தெரியும் உஹத் மலையை ஆசையுடன் பார்த்து சிலாகிப்பார்கள் நாயகமவர்கள்.
மஸ்ஜிதுன்னபவில் இருந்த படி தூரத்தில் தெரியும் உஹத் மலையின் படம் இது.இரு கட்டிடங்களுக்கு இடையே கொஞ்சமே தெரிகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisH4x-yVq_dBBVSEpq6tqiRhqoL9ae2b4wOFkIk2z1pvPTSg88vBoUYi3pW3S11mQXdBQecn4bny9a_11aafMbX8WLnzETbpa22ocYX2Wig9vtNSfkEZVa_9Z4jyqmbT19FpehHIbHOE4/s640/moving+doom.JPG)
மதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில்
நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.மிக மெதுவாக அது நகர்வதைப்பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.இப்பள்ளியில் மொத்தம் 27 நகரும் டூம்கள் உள்ளன.ஒரு டூம் நிர்மாணிக்க ஆன செலவு இந்திய ரூபாயில் பத்துகோடி
விரிந்து சுருங்கும் நிழற்குடைகள்
வானத்தை மறைத்திடும் அழகுக்குடைகள் விரிந்து வரவேற்கும் மஸ்ஜிதுன் நபவி
மின் தூபிகள் உயர்ந்து நின்று, துதி செய்யும் மக்களுக்குச் சோபனம் கூறுவது போல் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
ஆம்.பரந்து விரிந்த அழகுப்பள்ளியை சுற்றிலும் வெயிலுக்காக மின் குடைகள் அமைத்து இருக்கின்றனர்.நெடுகிலும் நூற்றுக்கணக்கில் குடைகள் உள்ளன.வெயில் வந்ததும் அழகாக மெதுவாக விரியும் குடை வெயில் மறைந்ததும் அதே போல் மெதுவாக மூடிக்கொள்ளும் .நூற்றுக்கணக்காக குடைகளும் ஒரு சேர ஒரே அளவில் சுருங்கி விரியும் பொழுது காணும்அழகு இருக்கின்றதே அதனை வார்த்தைகளால் சொல்ல இயலாது.படத்தில் காண்பது விரிந்த குடைகள்.
விரிந்து கொண்டிருக்கும் குடைகள்
இந்த படம் குடை விரிந்து கொண்டு இருக்கும் பொழுது எடுத்தது.நான் அங்கு இருக்கும் பொழுது இரண்டு நாட்களாக விரிந்த குடை மடங்கவே இல்லை.குடை மடங்கும் நேரத்திற்காக அங்கு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம்.அதிக பனியின் காரணமாக குடையை இரண்டு நாட்களும் மூடாமல் வைத்து இருந்தார்களோ என்னவோ.
ஒரு வழியாக குடை விரிவதையும்,சுருங்குவதையும் பார்த்து படமும் எடுத்து விட்டேன்.
மடங்கிய குடைகள்
அழகான மினாரா போல் காட்சி தருவது குடை மூடியதும் உள்ள தோற்றம்.அத்தனை பெரிய குடை இத்தனை சிறிதாக அடங்கிவிட்டது பாருங்கள்.
குடையை சுத்தம் செய்யும் ஊழியர்
மக்காவில் உள்ள ஹரத்தைப்போலவே மதினா ஹரமும் (இதனையும் ஹரம் என்றே சொல்வார்கள்)சுத்தம் செய்வதில் மிகவும் கவனமுடன் இருக்கினறனர்.ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே உள்ளனர்.பள்ளி வளாகத்திலும் சரி,பள்ளியினுள்ளும் சரி கலை நுணுக்கமான வேலைபாடுகள் எக்கசக்கமாக இருந்தும் எதிலும் ஒரு சிறு தூசியைக்கூட பார்க்க இயலாது,மிக நுண்ணிய இண்டு இடுக்குகளைக்கூட மிக சிரத்தை எடுத்து சுத்தம் செய்து பளிச் என்று வைத்துள்ளனர்.மசூதிக்கு வெளியே உள்ள குடைகளை கிரேனில் ஏறி சுத்தம் செய்யும் படத்தைப்பாருங்கள்.அழகான வேலைப்பாடுகள் அடங்கிய ஸ்டாண்டில் ஓதுவதற்காக குர் ஆன்கள் அடுக்கப்பட்டு இருக்கும்.ஓதிவிட்டு சரியாக அடுக்காமல் யாராவது வைத்து விட்டால பாய்ந்து கொண்டு வந்து சரியாக அடுக்கி விட்டு செல்லும் வேகத்தை பார்த்து அதிசயித்தேன்.அனைத்து விஷயத்திலும் அத்தனை நேர்த்தி.அத்தனை வேகம்.
ஷரீ அத் கோர்ட்
ஷரீ அத் கோர்ட்.இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இங்கிருந்துதான் அமுலுக்கு வருகின்றது.இது புனித ரவ்லா ஷரிஃபுக்கு நேரெதிரில் அமையப்பட்டுள்ளது.நபி(ஸல்)அவர்கள் அடக்கஸ்த்தலத்திற்கு சரியாக நேரெதிரே மாஜிஸ்திரேட் அமர்ந்திருக்கும் இருக்கை போடப்பட்டு இருக்குமாம்.
ஜன்னத்துல் பகீ
மிகப்பெரிய ,பலஏக்கர்களைக்கொண்ட அடக்கஸ்தலம் .மஸ்ஜிதுனபவியின் கிழக்குப்பகுதியில் உள்ளது ஜன்னத்துல் பகீ.நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,மற்றும் உறவினர் அடங்கப்பட்ட இமைகளை நனைக்கச்செய்யும் பூமி பரந்து விரிந்துள்ளது.இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.
மதினா பள்ளிக்கு வரும் ஜனாஸாக்களையும் (இறந்த உடல்களையும்)இங்குதான் அடக்கம் செய்கின்றனர்.ஒரு முறை என் கணவர் அங்கு சென்று ஒரு ஜனாஸா அடக்கத்தில் கலந்து கொண்டுவந்தார்கள்.நூற்றுக்கணக்கில் அடக்கம் செய்வதற்கு தயாராக குழிகள் தோண்டி தயாராக இருக்குமாம்.
உஹத் மலை
என்னதான் முயன்றும் உஹத் மலையின் முழுத்தோற்றத்தையும் கண்களால் அள்ள முடிந்ததே தவிர கேமராவால் இயலவில்லை.
உஹத் போரில் வீர மரணம் எய்தியவர்களின் அடக்கஸ்தலம்
ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி ) - நபிகளாரின் சித்தப்பா உட்படஉஹது போரில் வீர மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்த அடக்கஸ்தலம்.எவ்வளவோ ரத்தம் சிந்தி,இன்னுயிர்களை இழக்கச்செய்த வீரம் நிறைந்த பூமியப்பார்க்கும் பொழுது மனம் நெகிழ்ந்தது.
குபா மசூதி
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட முதல் பள்ளி.மிகவும் அழகிய,பள்ளி அது.
குர் ஆன் பிரிண்டிங் பிரஸ்
உலகிலேயே மிக பெரிய
குர் ஆன் பிரிண்டிங் பிரஸ் .வருடத்திற்கு 4 லட்சம் மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றது.இதனுள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.கணவர் எடுத்த படம் இது.பாலகனி போன்ற
நீளமான உயரமான வராண்டாவில் நின்று கீழே இருக்கும் பிரஸை பார்ப்பதற்கு வசதி அமைத்துள்ளார்கள்.
காந்த மலை
மதினா நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலை இது.சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை.
சாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல்,ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியம்.இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது.10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவதண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடு வென்று ஓடுகிறது.