July 21, 2013

மாடித்தோட்டம்.

மொட்டை மாடியில் எத்தனையோ வித தோட்டங்களைப்பார்த்து இருக்கிறோம்.ராயபுரம் பாயிஜா சிராஜின் வீட்டு தோட்டமோ முற்றிலும் வித்தியாசமானது.

மூவாயிரம் சதுர அடி மொட்டை மாடியில் முன்னூறுக்கும் மேற்பட்ட மண்ஜாடிகளில் விதவிதமான செடிகள்,மற்றும் ஐநூறுக்கும் மேலான அலங்கார பொருட்களினால் அலங்கரித்து வித்தியாசம் காட்டி அசத்துகின்றார் பாயிஜா சிராஜ்.

இவர் வெளி நாடுகளுக்கோ,வெளியூர்களுக்கோ சென்றால் தனக்கென்று வாங்கும் பொருட்கள் ஏதுவுமே இருக்காது,தன் தோட்டத்திற்கான பொருட்களை வாங்கி தோட்டத்தை இன்னும் விரிவு,அழகுபடுத்தவே விரும்புவார்.

எண்ணிக்கைக்கு அடங்காத வித விதமான அலங்காரபொருட்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடத்தில் வைத்து இருக்கிறோம் என்பது இவருக்கு அத்துப்படி.யாராவது மாற்றி வைத்து விட்டால் உடனே கண்டு பிடித்து விடுவார்.தினமும் காலையிலும் மாலையிலும் தோட்டத்தைப்பராமாரிக்க நேரத்தை செலவிடுவாராம்.

கலைரசனையில் அசாத்திய ஆவல் கொண்டு இருக்கும் பாயிஜாவுக்கு சவால் மழை.அதைவிட பெரும்சவால் புயல்.மழை,புயல் காரணமாக எத்தனையோ பொருட்கள் சேதமாகி இருக்கின்றனவாம்.

மழை பொழிந்து ஓய்ந்ததும் இவருக்கு வேலை அதிகமாகவே இருக்கும்.நாள் முழுக்க தோட்டத்தில் அமர்ந்து சீர் படுத்துவாராம்.உடைந்து போன பொருட்களை அப்புறப்படுத்தி,சாய்ந்து போன,மழைத்தண்ணீரில் இழுத்துக்கொண்டு போன பொருட்களை ஒழுங்கு படுத்துவதுதான் இவருக்கு முதல் வேலை.மழை பெய்ய ஆரம்பித்ததும் எனக்கு அடிவயிறு கலங்கி விடும்.இந்த முறை அதிக சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுவிடுவேன் என்கிறார்.பொழிவிழந்த ஜாடிகளுக்கு சாயம் பூசுவது,பழசாகிப்போன பொருட்களை அப்புறப்படுதுவது என்று தோட்டவேலை கனக்கச்சிதமாக செய்கின்றார்.

தோட்டத்தில் உதிரும் ஒரு இலையைக்கூட வீணடிப்பதில்லை.அத்தனையும் சேகரித்து உரமாக்கி விடுவேன் என்கிறார்.

பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டத்தின் காட்சிகளைப்பாருங்கள்.



பளிங்கு கற்களுக்குள் லைட்டிங் அமைத்து ஒரு மூலையில் வைத்து அலங்கரித்து இருப்பது கண்களை பறிக்கிறது.
தோட்டத்தின் ஒருகோணம்
சுவரையும் விட்டு வைக்கவில்லை.மண்,களிமண்,பிளாஸ்டிக் சைனா கிளே போன்ற வற்றில் தயாரித்த அலங்காரபொருட்கள் மனதை கொள்ளை கொள்கிறது.
சுற்றிலும் ஜாடிகளில் பூச்செடிகளும்,விதவிதமான க்ரோட்டன்ஸ்களும் இருக்க நடுவே இருக்கும் இடங்கள் முழுக்க இப்படி அலங்கார பொருட்களும்,சிறிய பூச்சாடிகளுமாக பிரமிக்க வைக்கிறது.
 வேறொன்றுமில்லை.தூரத்தில் இருந்து பார்த்தால் பறவைகள் வந்து இந்த சட்டியில் முட்டை இட்டு  நிரப்பி விட்டு சென்று விட்டனவோ என்று நினைக்கத்தோன்றும் ஒரு தோற்றம்.
 தோட்டத்தின் இன்னொரு தோற்றம்
 வெள்ளை மற்றும் ரோஸ் வண்ணத்தில் போகன் வில்லா.
 சேரும் குப்பைகளை சேகரிக்க முயல் குட்டி.மக்கும் குப்பைகளை சேமிக்க மண்ணால் ஆன அலங்காரக்கூஜா.இது ஆங்காங்கே உள்ளது.
 தவளை இருக்கு.ஆனால் தவளை சப்தத்தைத்தான் காணோம்.
இது ஒரு வித்தியாசமான அலங்காரம்.
 இன்னொரு மூலையின் அலங்காரத்தோற்றம்.
இந்த வித்தியாசமான பூஜாடி இவர் வெளிநாட்டுக்கு சென்ற போது வாங்கி வந்தவை.
 மண்ணால் ஆனால் மோடா.கடல் காற்றை சுகமாக அனுபவித்து உட்கார்ந்து தோட்டத்தை ரசிக்க ஆங்காங்கே இப்படி மண்ணால் ஆன மோடா அமைக்கப்பட்டுள்ளது.
 மண்ணால் ஆன குட்டி மீன் தொட்டி.

இவ்வளவு இருந்தும் சிப்பியும்,முத்தும் இல்லாமலா?

July 14, 2013

அது இதுதான்

நான் சுவாரஸ்யமாக அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தேன்.எங்கள் வீட்டு குட்டி ஆமிர் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தார்.கையில் நீளமாக பிலிம் ரோல்,ரிப்பன் போன்ற வஸ்து.எங்காவது இருந்து எடுத்து வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து நாளிதழில் மும்முரமாகிவிட்டேன்.

அந்த வஸ்துவை வாயில் வைத்ததும்  “தம்பி வாயில் எல்லாம் வைக்கக்கூடாது”என்று சப்தமாக சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.அதனை கடித்து மெல்லவே ஆரம்பித்துவிட்டதும் பதறிப்போய் பிடிக்க ஓடினால் என் கையில் மாட்டவே இல்லை.டேபிளை சுற்றி ஓடவும்,மாடிப்படி வழியே ஓடவும்..நானும் விடவில்லை.பின்னாலேயே மூச்சிரைக்க ஓடினேன்.வாயெல்லாம் சிரிப்பாக அந்த பிலிம் ரோலை சுவைத்துக்கொண்டே என் கையில் மாட்டாமல் ஆட்டம் காண்பித்து எனக்கு வெறுப்பு ஏற்றியதுதான் மிச்சம்.

எதிரே வந்த என்பையன் என்னம்மா சின்னப்பிள்ளை போல் இவனுடன் ஓடிப்பிடித்து விளையாடுறீங்க”என்று கேட்டார்.

”இவன் பிலிம் ரோலை சாப்பிடுகிறான்ப்பா ”

”பிலிம் ரோலா”பதறிய படி ஆமிரை தாவிப்பிடித்து  கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்கு..

“ஐய்யையோ..அவனவன் செங்கலை சாப்பிடுகிறனர்,பல்பை சாப்பிடுகிறானர்,பேப்பரை சாப்பிடுகிறானர் என்று தொலைக்காட்சியிலும்,நாளிதழ்களில் அறிந்து இருக்கிறோமே.அந்த ரேஞ்சில் இவர் பிலிம் ரோலை சாப்பிடுகிறாரா என்று ஒரு நொடி யோசித்து அதிர்ந்து விட்டேன்.”

கையில் இருந்ததை வலுக்கட்டாயமாக வாங்கி பார்த்தது விட்டு”மா..நாளைக்கு நியூஸ் பேப்பரில் பிலிம் ரோலை உணவாக சாப்பிடும் ஆறுவயது சிறுவன் என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வரும்,சன் நியூஸுக்கு பேட்டி கொடுக்க ரெடியாக இருங்க”என்று கூறி சிரித்தார் என் மகன்.

அன்றைக்கு செம்ம்ம்ம்மையாக பல்பு வாங்கி விட்டேன்.சும்மா இல்லை.தவுசண்ட்வாட்ஸ் பல்பு.அது வேறு ஒன்றும் இல்லை.சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மிட்டாய்.சிறுவர்களுக்கு மட்டுமல்ல.எனக்கும்தான் மிகவும் பிடித்த ஜெல்லி மிட்டாய்.

அப்பப்பா..இந்த மிட்டாய் கம்பெனி ஆட்கள் எப்படி எல்லாம் யோசிக்கங்கப்பா!!

இதனை,தங்கை வானதியும்,தோழி இமாவும் கண்டு பிடித்து விட்டனர்.இது வானதி ஊரில் விற்கும் கேண்டி என்பதால் வான்ஸ் மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டார்.அவர் போட்ட பின்னூட்டத்தை கை தவறி பப்லிஷ் செய்து விட்டேன்.அறிந்த மறு நிமிடமே டெலிட்டும் செய்து விட்டேன்.ஆனால் மயிரிழைக்கேப்பில் இமா அதனை பார்த்து விட்டார்.அன்றிலிருந்து இமா தோழி எப்ப விடை சொல்லப்போறீங்க”என்று கேட்டு கேட்டு இதோ விடையும் சொல்ல வைத்துவிட்டார்.

நோன்புநேரம்,தவிர என் கேமராவுக்குள் ஆமிரை சிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது:)






July 6, 2013

கண்டுபிடியுங்கள்...



கண்டுபிடியுங்கள்...

ஹி..ஹி..வேறு ஒன்றுமில்லேங்க,பிளாக் எழுதி

நாளாச்சு.மக்கள்ஸ் நம்மை மறந்து விடுவார்களோ

என்று அவசரகதியில் இந்த பகிர்வு.

படத்தில் இருப்பது என்ன?கண்டு பிடித்து

 சொல்லுங்களேன்.முதலில் சொல்பவருக்கு

 முதலாம் பரிசு,இரண்டாவது கண்டு பிடித்து

சொல்பவருக்கு இரண்டாம் பரிசு என்றெல்லாம்

 சொல்லி உங்களை எல்லாம் இம்சை படுத்த 

மாட்டேன்...

எங்கே கண்டுபிடியுங்கள்....

சரியான விடை படங்களுடன் அடுத்த பதிவில்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா..எப்படிஎல்லாம் 

பதிவை தேத்துறாங்க என்ற முனங்கல்ஸ் 

கேட்கத்தான் செய்கிறது...:)