September 24, 2013

அல்பம்



இது ரொம்ப அல்பதனம்”
“புத்தி ஏன் இப்படி அல்பதனமா போகிறது”
“சரியான அல்பம்”

சிறுமையாக,சின்னத்தனமாக நடப்பவர்களை இவ்வாறு விளிப்பார்கள்.வடிகட்டின கஞ்சதனத்தைக்கூட இவ்வாறு அழைக்கப்படுகிறது.அல்பம் இழிவு, அற்பம்,சிறுமை,சின்னத்தனம்.கஞ்சத்தனம் அனைத்துக்கு இந்த அல்பம் நாமகரணம் சூட்டப்படுகிறது.ஆங்கிலத்தில் அல்பத்திற்ககான சொற்கள் insignificant, trifle, silly எனப்படும்.

சரி எதை எல்லாம் அல்பம் என்று வசைப்பாடுகின்றனர் என்று சிலஅல்பவகைகளை லிஸ்ட் போடுவோம் .

1.நொறுக்ஸை கொறித்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு நட்பு உள்ளே நுழையும் போது நொறுக்ஸ் டப்பாவை மறைத்து வைப்பது.

2.கணவரின் பாக்கெட்டில் இருந்து நூறு இருநூறை எடுத்து விட்டு அதை சொல்லாமல் இருப்பது.

3.டிபன் பாக்சில் லஞ்சை கட்டிக்கொடுத்துவிட்டு பிள்ளையிடம்”டேய்..உனக்காக நிறைய நெய் விட்டு பிரியாணி பண்ணி இருக்கேன்.யாருக்கும் கொடுத்து உன் வயிற்றை காயப்போடாதே,சமர்த்தா நீயே அத்தனையும் சாப்பிட்டுடணும்”பையனுக்கு அட்வைஸ் பண்ணுவது.

4.கெட்டுப்போன உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டாமல் வாசலுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது.

5.காய்ச்சலில் படுத்து மூன்று நாள் லீவு போட்டு விட்டு வரும் வேலைக்காரியிடம் “இந்த மூன்று நாள் சம்பளத்தையும் பிடித்துக்கொண்டுதான் தருவேன்”என்று மல்லுக்கு நிற்பது.

6.வீட்டுக்கு வரும் விருந்தினரை வாயற வாங்க வாங்க என்று அழைத்து விட்டு மனதார “இதுக எதுக்கு வந்து தொலைக்கணும்”என்று நினைப்பது.

7.உறவினர்,நட்பு வீடுகளுக்கு சென்று விட்டு “இவளா..சரியான வடிகட்டின கஞ்சம்.கழுநீர் ரேஞ்சில் ஒரு ஆறிப்போன காபியைத்தர்ரா.தராதரம் தெரியாதவள்”என்று புலம்புவது.

8.மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய மனதில்லாமல் பிறருக்கு மிஸ்டு கால் கொடுப்பது.அல்லது ஒரு ரிங் அடிக்கக்கூட அவகாசம் கொடுக்காது கட் செய்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து இருந்து கால் வரும் வரை காத்திருந்து “காலையில் போன் செய்தேனே.எடுக்கவே இல்லை”என்று புழுகுவது அல்லது கால் செய்து அழைத்துவிட்டு “போனில் பைசா முடியும் தருவாயில் உள்ளது.நீ கால் பண்ணு”என்று உடான்ஸ் விடுவது.

9.வீட்டுக்காரரிடம்”என்னது இந்த சண்டே உங்க பிரண்ட் குருமூர்த்தி வீட்டுக்கு நீங்களும் உங்கள் பிரண்ட்ஸும் டின்னருக்கு போகப்போறீங்களா.பேஷா போய்ட்டு வாங்க.கூடவே நம்ம குட்டி கிரீஷையும் கூட்டிட்டு போய்டுங்க.ஆனால் அதுக்கு அடுத்த வாரம் எல்லாப்படைகளையும் இங்கே அழைசுட்டுப் வந்துடாதீங்க.ஆழாக்கு அரிசி சமைக்கறத்துக்குள் எனக்கு டங்குவார் அறுந்து போறது.அத்தனைக்கும் விருந்து பண்ண நம்மால் முடியாதுப்பா.”

10.மற்றவர்களுக்கு வரும் மெயில்,கடிதம் ,போன்றவற்றை பார்ப்பது.

11.”யாரு..மாலதியா..எப்படிப்பா இருக்கே.என்னது..வீட்டுக்கு வர்ரயா..பிள்ளக்களையும் அழைச்சுட்டு வர்ரியா.வேண்டாம் வேண்டாம்...நானும் பக்கத்துவீட்டு அம்மாவும் ஷாப்பிங் போகணும்ன்னு ஏற்கனவே பிளான் போட்டாச்சு.எதுக்கு நீ கஷ்டப்படணும்.அடுத்த வாரம் நானே வர்ரேன் சரியா”என்று போனில் சொல்வது.

12.”காய்க்காரம்மா..ரெகுலராக உன் கிட்டேதான் காய் வாங்கறேன்.என்ன விலை விற்றாலும் இந்த கருவேப்பிலையும் கொத்துமல்லியும் கொசுறா கொடுத்துத்தான் ஆகணும்.இதுகளை நான் பைசா தந்து வாங்கவே மாட்டேன்.ஆமா சொல்லிட்டேன்.”

இப்படி சின்னத்தனமான காரியங்கள் அல்பத்தனம் என்று கூறப்பட்டால் குட்டியூண்டு சந்தோஷம்,கப்பில் இருந்து ஒரு விள்ளல் ஐஸ் க்ரீமை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டால் சிலீரென்று தோன்றும் ஒரு இதமான உணர்வைப்போல் குட்டியூண்டான சந்தோஷத்தை அல்ப சந்தோஷம் என்கிறோம்.அல்ப சந்தோஷங்களை கொஞ்சம் அலசலாமா?

1.அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கும் போது கூடவே ஃபிரீயாக ஒரு கண்டய்னரை கடைக்காரர் தூக்கித்தரும் போது.

2.தோசை மாவு தீர்ந்து போச்சு.கோதுமை மாவு டப்பாவை கழுகி காயவைத்து ஆச்சு இரண்டுநாள்.வீட்டில் ரவை,நூடுல்ஸ் கூட இல்லையே .இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணலாம். என்று மூளையை கசக்கிக்கொண்டிருக்கும் போது வாக்கிங் போய் திரும்பிய கணவரது கையில் தெரு முனை மெஸ்ஸில் இருந்து  வாங்கி வரும் டிபன் பார்சலை பார்க்கும் பொழுது.

3.முன் பதிவு செய்த பொழுது அப்பர் பெர்த் கிடைத்து பயணம் செய்யும் பொழுது லோவர் பர்த் பயணி தனது சீட்டை தாரளாமாக நீங்க இங்கே இருங்கள் “என்று தாரள மனதுடன் தரும் போது.

4.ஏழு வயது மகனுக்கு டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதனை செய்பவர் வரும் பொழுது ”ஆறு வயதுதான்  சார்” என்று கூறி டிக்கெட் பரிசோதனை செய்பவரும் சரி என்று போய்விடும் போது.

5.ஆஃபீஸில் இன்னிக்கு பவுண்டர்டே செலிப்ரேஷன் பண்ணினார்கள்.எல்லாம் ஸ்டாஃபுக்கும் கிஃப்ட் கொடுத்தாங்க என்று கணவர் குட்டியாக கிஃப்ட் பார்சல் ஒன்றை நீட்டும் போழுது.

6.”என்னது இந்த முறை அபிலாஷை ரேஸ் பண்ணிட்டியா?வெரிகுட் “என்று குட்டி மகனிடம் சொல்லும் பொழுது.

7.நுங்கம் பாக்கம் டு எக்மோர் சென்ற  தடவை 100 ரூபாய் சார்ஜ் பண்ணிய ஆட்டோ இந்த முறை 80 ரூபாயை சார்ஜாக கேட்டபோது.

8.ஜஸ்ட் இப்ப தான் நாம் செல்லும் வழித்தட பஸ் போனது.இனி பத்து நிமிடம்  கழித்துதான் அடுத்த  பஸ் வரும் என்று நினைத்து காத்திருக்கும் மறு நிமிடமே செல்லப்பொகும் வழித்தட பஸ் வந்துவிடும் பொழுது.

9.நகைக்கடை,துணிக்கடையில் இலவசமாக கொடுக்கும் பை காலண்டர் இன்னும் தரமானதாகவும் பெரியதாகவும் இருந்துவிட்டால்.

10.மேட்சிங் பிளவுஸ்பிட் வாங்கும் பொழுது “இது கடைசி பீஸ்.மீட்டருக்கு பத்து ரூபாய் குறைத்து பில் போடுறேன்”என்று கடைக்காரர் கூறும் பொழுது.

11.என்னது நான் ஒரு ஜாம் பாட்டில்தானே வாங்கினேன்.எதற்கு ரெண்டு ஜாம் பாட்டில் என்று பில்லை ஆராய முற்படும்பொழுது கடைக்காரர் “இன்னொன்றுக்கு பில் போடலே..ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் “என்று கடைக்காரர் கூறும் வார்த்தைகளில்.

12.”கல்யாணிம்மா..இன்னிக்கு சண்டே தானே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.லேட்டாகவே நான் காஃபி சாப்பிடுக்கறேன்”என்ற கணவரின் இன்சொல்லில்.

13.பால்காரர் போட்டு விட்டு சென்ற பால்கவரைகாணோமே என்று லேட்டாக எழுந்து விட்டு வாசலில் தொங்கும் பையில் பால் கவரை காணாது விழித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர் பிளாட் அம்மணி”நீங்க பால் எடுக்க லேட் ஆயிடுச்சு.கெட்டு போய்டுமேன்னு நான் தான் எங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து இருந்தேன்:என்று பால் கவரை நீட்டும் பொழுது.

14.என்னது உங்கள் வீட்டுக்கு ஈ பி பில் இந்த மாசம் 2100 தானா?எங்கள் வீட்டுக்கு 2500 வந்துவிட்டதே”பக்கத்து பிளாட் மாமி புலம்பும் பொழுது.

15.”அக்கா.பக்கத்து வீட்டில் முருங்கை மரம் ஒடிந்து விழுந்து விட்டது.ஆளாளுக்கு பறித்துக்கொண்டு போனார்கள்.உங்களுக்குத்தான் முருங்கைக்கீரைன்னா பிடிக்குமே.கொளுந்து கீரையா பறிச்சிட்டு வந்தேன்”வேலைக்காரப்பெண்மணி கீரையை கொடுக்கும் போழுது.

16.விளையாடும் பொழுது குழந்தை தட்டிவிட்டு சென்ற கண்ணாடிப்பொருள் அதிர்ஷடவசமாக உடையாமல் தப்பும் தருணத்தில்...

17.பீரோவை சுத்தம் செய்யும் பொழுது பீரோவில் விரித்து இருக்கும் பேப்பருக்கு அடியில் எப்போதோ வைத்த நூறு ரூபாய்த்தாள் கிடைக்கும் பொழுது..

இதற்கு மேல் லிஸ்ட் போட்டால் யாரவது கொம்பை தூக்கிகொண்டு வந்து விடுவார்களோ என்று எனக்குள் அல்பத்தனமாக பயம் வந்து விட்டது.அதனால் இத்தோடு முடிச்சுக்கறேன்.உங்களுக்கு உதித்த அல்பங்களையும்,அல்பசந்தோஷங்களையும் பின்னூட்டத்தில் நீங்களும்கொஞ்சம் அலசி துவைத்து காயப்போடுங்களேன்.





September 20, 2013

சரவணபவன்


வெங்கட் நாராயணா சாலை பக்கம் சென்ற பொழுது சரவணபவன் வாசலில் குலைவாழைகள் தலை சாய்த்து,தோரணங்கள் காற்றில் ஆட  அந்த பக்கம் செல்பவர்களை எல்லாம் வாங்க  வாங்க என்று அழைத்துக்கொண்டிருந்தன.உட்பகுதியில் போர்வீலர்களும்,வெளிப்பகுதியில் டூவிலர்களும் ஏதோ விழாவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. சரவணபவனில்  மூன்று நாட்களுக்கு புரட்டாசி மாதம் தலைவாழை இலைவிருந்து அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.சாதரணமாக சரவணபவன் கிளைகளில் அன் லிமிடெட் மீல்ஸ் விற்கும் விலைக்கே அன்று தடபுடல் விருந்து.

விருந்து சாப்பிட்டு வெகு நாளாகிறதே.பணம் கொடுத்தாவது விருந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தோம்.வாகனநெரிச்சல்களை பார்க்கும் போது கூட்டம் கும்மி அடிக்குமே.சரி பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மூன்று மாடிகள் கொண்ட உணவகத்துக்குள் நுழையும் போதே வாசலில் உள்ள காவலாளி இரண்டாவது தளம் போங்க என்று கூறினார்.

அடடா..முதல் தளம் முழுக்க நிரம்பி விட்டது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி லிப்டினுள் நுழைந்தோம்.மாடியில் இருந்த கூட்டத்தைப்பார்த்து ஓரமாக இருந்த ஷோபாவில் அமர்ந்த மறு நொடியே உள்ளே வருமாறு  அழைத்து விட்டனர்.மிகுதியான குளிர்ச்சியும் அழகான டெகரெஷனும்,பளிரென்ற விளக்கு அலங்காரமுமாக .சுத்தமும் கண்களை கவர்ந்தது.அதைவிட உபசரிப்பு வழக்கதைவிட அதிகம் தூக்கல்.தலை வாழை இலை விருந்து என்று தலைப்பிட்டதாலோ என்னவோ உணவக நிர்வாகம் கஸ்டமர்களை ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி விட்டதோ என்னவோ?உண்மையில் விருந்து உபசாரம்தான்.



திக்காக சுவையாக ஜில்லென்று கிர்ணிப்பழ ஜூஸ் குடிக்க இதமாக இருந்தது.கூடவே டிரை ஜாமூன்.அதன் பின் மேஜைக்கு வந்த ஐட்டங்களை பார்க்கும் போது
120 ரூபாய்க்கு காய்கறி விற்கிற விலையில் இத்தனை ஐட்டங்களா என்று ஆச்சரியமாக இருந்தது.வெள்ளை நிற பவுலில் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவில் பளீரென்ற சாதம்.”இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை பளிச் என்று சாதம் வருது .?” என்று பக்கத்தில் இருந்த நட்பிடம் கேட்டபொழுது “சுண்ணாம்பை கலப்பார்கள் போலும் ”என்றாள்.இதனை செவி மடுத்த சர்வர் ”இல்லேம்மா இது நயம் பச்சரிசி”சாப்பாட்டோடு சேர்த்து இலவச இணைப்பாக பல்பு கொடுத்தார்.
கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது.லிஸ்டில் இருந்ததைவிட இன்னும் அதிகளவில் ஐட்டங்கள் இருந்தன.
கிர்ணிப்பழஜூஸ்
டிரைஜாமூன்
சேமியா பால்பாயசம்
சாதம்
புதினா சாதம்
பருப்புவடை
பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி
கேரட் கோஸ் சாலட்
பீன்ஸ்காரக்கறி
கத்தரி கொண்டைக்கடலை கூட்டு
முருங்கைக்காய் சாம்பார்
பருப்பு
நெய்
தக்காளி ரசம்
கருணைகிழங்கு வற்றக்குழம்பு
தயிர்
மோர்
பருப்புத்துவையல்
வடகம் 
அப்பளம் 
நெல்லிக்காய் ஊறுகாய்
மோர்மிளகாய்
வாழைப்பழம்
பீடா
சிக்கூ ஐஸ் க்ரீம்


மல்லிகைப்பூ சாதத்தின் மீது கட்டிப்பருப்பு.

கட்டிப்பருப்பின் மீது மணக்க மணக்க உருக்கு நெய்.

 வடை,மோர்மிளகாய் வடகம் ஊறுகாய் துகையல் வகையறாக்கள்



கடைசியாக பழம் பீடா ஐஸ்கிரீம்



லிஸ்டை பாருங்கள்.இன்னும் இரண்டு நாளைக்கு இந்த ஆஃபர் உள்ளது

உடன் வந்த வாண்டு எனக்கு மீல்ஸ் வேண்டாம் டிபன் தான் வேண்டும் என்றது ஒரு பனீர் தோசை ஆர்டர் செய்தோம்.இரண்டுவித சட்னிசாம்பாருடன் இருந்த பனீர் தோசையின் விலை 140 அடேங்கப்பா சொல்லவைத்தது.

சரி கடைசியாக ஒரு டம்ளர் டிகிரி காஃபி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காஃபியை சுவைத்து பில்லை பார்த்தால் லைட்டாக மயக்கமே வந்து விட்டது..100 ml காஃபி ஒவ்வொன்றும் தலா 40 ரூபாய்..chennai guys...போய் 120 ரூபாய் கட்டி டோக்கன் வாங்கி சமர்த்தாக  மீல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வாங்க.காஃபிக்கு ஆசைப்பட்டுடாதீங்க.டிப்ஸ் மற்றும் வேலட் பார்க்கிங்  தனி.இன்னும் சிம்பிளாக 95 ரூபாயில் இதே தலை வாழை விருந்து சிக்கனமாக சாப்பிடவேண்டுமென்றால் குளிரூட்டப்படாத கிளைகளுக்கு போகலாம்.



September 14, 2013

தும்பி



அந்த நாளில் மழைகாலம் வந்துவிட்டாலே முட்டைக்காளான்,பொன்னிக்குருவி,வண்ணத்துப்பூச்சி,தும்பி என்று கூத்தடித்த காலம் நினைவுக்கு வருகிறது.மழைகாலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே தும்பிகள் பறந்து விளையாடுவது மிகவும் ரசனைக்குறியது.

செடிகொடிகள்.மதிற்சுவர்கள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தும்பியை பிடித்து விளையாடி,இம்சை படுத்தி ரசிப்பது சிறார்களுக்கு வேடிக்கையான வாடிக்கை.தும்பிகளில் பல அளவுகள் பல ரகங்கள் உள்ளன.உலகில் 6000 வகை தும்பிகள் உள்ளனவாம்.முட்டைகண்களுடன்,பலவண்ணங்களை பிரதிபலிக்கும் பெரிய தும்பிகள்,மிகவும் மெலிதாக இருக்கும் ஊசித்தும்பிகள்...இதில் ஊருக்கு இளைத்தவன் இந்த ஊசித்தும்பிகள்தான்.உண்மையில் ஊசித்தும்பிகள் ஐயோ பாவம் போல் இருக்கும்.மிக சுலபமாக பிடித்து விடமுடியும்.முட்டைக்கண்களுடன் கூடிய பெரிய தும்பியை சாமான்யமாக பிடிக்க இயலாது.

தும்பிகளின் வாலில் நூலால் கட்டி அதனை பறக்கவிட்டு மகிழ்ந்து கூக்குரல் இட்டு கும்மாளம் போடுவது அந்நாளைய சிறார்களுக்கு வாடிக்கை.

தும்பி ஒரு பூச்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான உயிரினம். தட்டாரப்பூச்சி.தட்டான்,ஊசித்தட்டான்,,தும்பி இப்படி பல நாமகரணங்களால் அழைக்கின்றனர்.ஆங்கிலத்தில் Dragonfly எனப்படும்.மிகச்சிறிய ஜந்துவாயினும் இதன் பார்வைத்திறன் அளப்பறியது.வெகுதூரத்தில் இருக்கும் எதனையும் மிகவும் இலகுவாகவும் கூர்மையாகவும் இனம் கண்டுக்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது.

சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் தி்றன் கொண்ட தும்பிகள் உணவுத்தேடலின் போது  அதன் வேகம் அபாரமாக அதிகரிக்கின்றது.இந்த தும்பியை சில நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் உட்கொள்ளுகிறனர்.

மழை வருவதற்கு முன்னர் தும்பிகள நிறைய பறக்ககண்டால் மழைவருவதற்காண அறிகுறி என்றும் கிராமத்து வாழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அழகழகு வண்ணங்களில் பட்டுப்போன்ற உடல் அமைப்புக்கொண்ட சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் மயக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அடுத்ததாக மனம் கவரும் ஒரு அபூர்வ உயிரினம் இந்த தும்பிகள்

மதிற்சுவரிலும் செடிகொடிகளிலும் பதுங்கி நிற்கும் தும்பிகளின் பின்னாலேயே போய் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் இறுக்கமாக இணைத்துக்கொண்டு பம்மி பம்மி அருகில் போய் 


காத்தட்டான் 
தும்பித்தட்டான் 
தம்பி வர்ரான் 
நின்னுக்கோ

 என்று பாடியபடி தும்பி பிடித்து மகிழும் சிறுவர்கள் இதனையே தன் விளையாட்டு சகா தும்பியை பிடிக்கப்போகும் சமயத்தில் 


காத்தட்டான் 
கள்ளத்தட்டான் 
கள்ளன் வர்ரான் 
ஓடிப்போ 

என்று ராகம் போட்டு பாடி கூக்குரல் இடுவார்கள்.அக்காலத்தில் தும்பி பிடித்து விளையாடி மகிழ்ந்த அழகிய சுகமான அனுபவத்தை இக்கால சிறார்கள் இழந்து விட்டார்கள் என்பது நிஜம்.

September 10, 2013

முதல் பதிவின் சந்தோஷம்


எல்லோரும் எழுதி ஓய்ந்த ஒரு தலைப்பை இப்போதுதான் கையில் எடுக்கிறேன்.முதல் காரணம் மற்றும் ஒரே காரணம் ஞாபகமறதிதான்.

பின்னூட்டபுயல்,அன்பின் தோழி மஞ்சுபாஷினி மற்றும் கவிதாயினி வேதா இலங்காதிலகம் இருவரின் அழைப்புக்கும் என் அன்பின் நன்றிகள்.

தங்கை ஜலீலா சாட் பண்ணும் நேரமெல்லாம் தன் பிளாக்கை பற்றித்தான் பேசுவார்.தன் பிளாக் லின்க் தந்து பார்க்கச்செய்தார்.எப்படி பின்னூட்டுவது மற்ற வலைப்பூக்களை எப்படி பார்ப்பது என்பதை சொல்லித்தந்த உடனே நானும் என் மகன் உதவியுடன் ஒரு பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வைப்புகழ்ந்து தலைப்பு வைத்ததும் முதலில் என் மனதில் தோன்றியது என் பெற்றோர்தான்.உடனே இரண்டு அழகிய அர்த்த முள்ள திருகுர்ஆன் வசனத்தை பதிவாக இட்டு மகிழ்ந்தேன்.

இந்த குர்ஆனில் வரும் குறிப்பிட்ட வசனத்தை எழுத இன்னும் ஒரு காரணம்.அன்றைய தினசரி ஒன்றில் ஒரு மகன் தன் தாயாரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள விரும்பாமல் மெரீனா பீச்சில் விட்டு விட்டு ஓடி விட்ட செய்தி என் மனதினை மிகவும் பாதித்தது.எவ்வளவு கோர மனதுள்ள மகன் அவன் என்று அந்த முகம் தெரியாத மனிதனை நினைத்து வெறுப்பாக இருந்தது.எனவேதான் அந்த அழகிய அர்த்தமுள்ள இரு இறைவேத வசனங்களையும் பதிவிட்டு மகிழ்ந்தேன்.

டைப் செய்து பதிவை பப்லிஷ் செய்த உடனே  வாசித்து மகிழ்ந்த என் மகனே முதல் பின்னூட்டம் போட்டு அவரே அதை பப்லிஷ் செய்த அந்த தருணத்தின் சந்தோஷம் இன்னும் என் உள்ளம் முழுக்க நிரம்பி வழிகிறது.

இந்த தொடர் பதிவினை எழுத நான் அழைக்கும் இருவர்
தோழி ஆசியா 
தங்கை மேனகா