
”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”
சதீஷ் எரிந்து விழுந்தான்.
அவசர அவசரமாக காபி டபராவுடன் அடுக்களைக்குள் இருந்து வெளிபட்டாள்.’ஆஃபீஸில் இருந்து வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தால் காஃபி எப்படி ரெடியாகி இருக்கும்’மீராவுக்கு கேட்கத்தோன்றினாலும் சதீஷின் முகம் காட்டும் கோபத்தைக்கண்டு வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டாள்.
ஆஃபீஸில் உள்ள பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வந்து கோபத்தின் உச்சத்தில் கணவர் இருப்பது புரிந்தது.
“என்னை என்ன சர்க்கரை வியாதிக்காரன் என்றா நினைச்சே”கோபம் தலைக்கேற காபி டம்ளரை தூக்கி அடித்தவனை விக்கித்துபோய் பார்த்தாள் மீரா.அவசரத்தில்,கணவன் காபி கேட்டு பட படத்ததில் பதறிப்போய் காபிக்கு சர்க்கரையே போட மறந்து விட்டாள்.சதீஷோ சகிப்புத்தன்மையின்றி,பொறுமை இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றான்.கணவன் மனைவி உறவுகளுக்குள் இப்பாற் பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள்தான் பெரிய பிளவுக்கு வித்திடுகின்றது.
அலுவலகத்தில் பிரச்சினை,நண்பர்களால் தொந்தரவு,உறவுகளுக்குள் விரிசல்,கடன் தொல்லை,பணம் பற்றாக்குறை,தன் மீது கூறப்படும் புகார்கள்,உடல் நலத்தில் பிரச்சினை,பெற்ற பிள்ளைகளால் கவலை,சந்தேகம்,கவுரவத்துக்கு குந்தகம்,இப்படி மனம்,உடல்,பணம்,சூழல் சார்ந்த குழப்பங்கள்,பிரச்சினைகள் மனிதனை அண்டும் பொழுது மனித மனம் பாரம் மிகுந்து அதனால் சிந்திக்கும் தன்மையும்அற்றும்,உச்சகட்ட கோபமும்,மன அழுத்தமும் ஏற்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்தாமல்,கட்டுப்படுத்த தெரியாமல்,கட்டுப்படுத்த விரும்பாமல் வெறுப்புகளை உறவுகளிடம்,நட்புக்களிடம் உமிழும் பொழுதுதான் பிரச்சினைகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றான் மனிதன்.
நட்புகுள்ளும்,உறவுக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,சகிப்புத்தன்மை இன்றி இருந்தால் நாளடைவில் அது பெரும் விரிசல் ஏற்பட்டு பெரும் விபரீதத்தில் வந்து முடியும் வாய்ப்பே அதிகம்.
இதனால் மன அமைதி கெட்டு,நிம்மதி இழந்து நட்புக்களை,உறவுகளை இழந்து மனிதன் தனிமரமாகி விடும் வாய்ப்பும் அமைந்து விடும்.
தேவையற்ற சந்தேகங்கள்.கேள்விகள்,குற்றம் சுமத்துதல்.ஒருவரை மற்றவர் தூற்றுதல் போன்ற காரணிகளால் மனிதமனம் கருத்துவேறுபாடுகளுக்குட்படுகின்றது.கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது.மன அழுத்தத்தினாலேயே பெரும் பிரச்சினைகள்,குடும்ப விரிசல்கள்,விபரீதங்கள் போன்ற விரும்பத்தகா சூழ்நிலைகள் வாழ்க்கையில் ஏற்பட்டு வாழ்க்கையை சின்னாப்பின்னப்படுத்தி விடுகின்றது.
“நீங்கள் முன்னே போல் இல்லை”என்று பாசத்துடன் உங்கள் முன் விரல் நீட்டி கேட்கும் பொழுது,
“முன்பு போல் இப்ப அடிக்கடி வர்ரதே இல்லை”உரிமையுடன் உங்களிடம் கேள்வி கேட்க்கப்படும் பொழுதும்,
”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”என்று பாசத்துடன் உங்களிடம் வினா எழுப்பப்படும் பொழுதும்,
“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்
“என்ன ஜி டாக்கில் எப்பவும் ஆஃப் லைனில் காட்டுறீங்க”என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொழுதும்
விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.
விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,விரிசல் இல்லா உறவுகளும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை.
| Tweet |






