June 12, 2013

அப்பாடக்கர் அய்யாசாமி!





ஒரு சித்திரை வெயில் மண்டையை பிளக்கும் உச்சி நேரத்தில் தனது சொந்த கிராமத்து புழுதிவீதியில் சொட்டை மண்டையில் இருந்து கணுக்கால் வரை வியர்வை வெள்ளத்தில் நனைந்த படி வாக் போய்க்கொண்டிருந்த அய்யாசாமியை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சில வாண்டுகள் ”மாமா மாமா என்று அழைத்த படி தொடர்ந்தனர்.

”என்னங்கடா செல்லங்களா?”இது அய்யாசாமி

கையில் கருப்பாக எதோ வஸ்துவை வைத்துக்கொண்டு  ”இது என்ன தெரியுமா மாமா உங்களுக்கு”என்று கோரஸாக கேட்டனர்.

அந்த வஸ்துவை கையில் வாங்கி அரை நிமிட ஆராய்ச்சிக்குப்பிறகு அது ஏதோ ஒரு கொட்டை என்று புரிந்து கொண்டு முடியே இல்லாத தலையை இன்னொரு அரைநிமிஷம் செலவு செய்து பிராண்டியபடி ”இதுவா கொளந்தேங்களா...இதுக்கு பேரு கோணக்கா மாணக்கா கொட்டையாக்கும்”என்ற படி திருப்பிக்கொடுத்தார்.

அந்த கோணக்கா மாணாக்காவில் திருப்தியுறாத குட்டீஸ் வேறு யார் யாரிடமோ கேட்டு அது எப்பாவோ யாராலோ சாப்பிட்டுவிட்டு தூர எறிந்த பனங்கொட்டை சித்திரை வெயிலில் சிதைந்து சிதிலமாகிப் போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அன்றில் இருந்து கிராமத்து சிறுவர் பட்டாளம் அய்யாசாமியை கோணக்காமாணாக்கா மாமாவாக்கி விட்டனர்.

அதாகப்பட்ட இந்த கோணக்காமாணக்கா பட்டம் ஏதோ சர் பட்டம் கிடைத்த மாதிரி நம்ம அய்யாசாமிக்கு ஒரு பெருமிதம் தரும் பட்டம்.மாங்கு மாங்கு என்று பதினொரு வருசம் ஸ்கூல் படிப்பு படித்து,அப்புறம் பியுசி ஒரு ஒருவருசம், பட்டப்படிப்பு ஒரு மூன்று வருசம் ஆகமொத்தம் பதினைந்து வருடங்கள் மாடாக உழைத்து ஒடாக தேய்ந்து பெற்ற பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சியை இந்த கோணக்கா மாணாக்கா மட்டுமல்ல,பெரிசுகளால் அழைக்கப்படும் அப்பாடக்கர் பட்டத்தையும் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டாரென்றால் அதுதான் அப்பாடக்கர் அய்யாசாமி.

தெருவில் செல்பவர் யாரையோ அழைத்து எதுக்கோ வழிகேட்டால் இவருக்கு மூக்கில் வேர்த்துவிடும்.விடு விடு வென்று அவரிடம் சென்று அவர் கேட்கும் தெருவுக்கு வழியை விளக்கி சின்னதாக டிராயிங்கே போட்டுக்காட்டிவிடுவார்.

“என்னது..பட்டாளம் ராமசாமி வீடுங்களா?நேரே போனீங்கன்னா,பெரிய ஆலமரம் வரும்.அதற்கு தெற்காலே சின்னூண்டா பிள்ளையார் கோவில்...”இப்படி நீட்டி முழங்கி அந்த பட்டாளம் ராமசாமியின் வசிப்பிடத்தை விவரமாக சொல்வதுடன்”ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு வரை இவர் பட்டாளத்தில் இருந்தவராக்கும்.இவரோட தோப்பனார் நஞ்சையில் நூறு ஏக்கராவும்,புஞ்சையில் நூறு ஏக்கராவும் வைத்து விவசாயம் பண்ணிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்..”ராமசாமியின் சரித்திரத்தை புட்டு புட்டு வைக்காவிட்டால் சற்றுமுன் சாப்பிட்ட சாம்பார் சாதமும்,கத்தரிக்காய் பொரியலும் இவருக்கு செரிமானம் ஆகாது.

இப்படி பட்டாளம் ராமசாமியின் வரலாறும்,அச்சுபிச்சு அந்துமணியின் சரிதையும் மட்டும் பேசிக்கொண்டு திரிபவர் இந்த அப்பாடக்கர் அய்யாசாமி என்று நீங்கள் கணித்தால் அது ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு.

“என்னது,குழம்பில் உப்பு ஜாஸ்தியாயிடுச்சா.ரெண்டு துண்டு உருளைக்கிழங்கை வெட்டிப்போடு,உப்பை இந்த உருளைக்கிழங்கு இழுத்துக்கும்”மனைவிக்கு டிப்ஸ் கொடுப்பதிலாகட்டும்,

“என்னது,டாக்டர் ஆபரேஷன் செய்யணும்ங்றார்னா சொல்லுறீங்க .அட..நீங்க வேற அவர் சொல்லுவாராம்,இவர் உடனே ஆபரேஷன் மேசை மேலே போய் நீட்டி நிமிர்ந்து படுத்துக்குவாராம்.அடப்போங்கங்காணும்..முதல்லே போய் டவுனில் இன்னொரு டாக்டரிடம் செகண்ட் ஒப்பீனியன் போங்க..என்னது பெஸ்ட் டாக்டரா?மெட்ராஸ்லே பெஸ்ட் கார்டியாலஜி வடபழனியில் இருக்கற இந்த ஹஸ்பிடலில் இருக்கார்.அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்குங்க.செலவைப்பார்க்காமல் நேரே அங்கே போங்க சொல்லுறேன்.”

“என்ன இந்த லீவுக்கு உங்க பையன் இருக்கற துபாய்க்கு போறீங்களா?ஆகட்டும்..எமிரேட்ஸ் அது இதுன்னு டிக்கெட் போட்டு தண்டமா செலவு பண்ணாதீங்க.பேசாமல் ஏர் அரேபியாவில் புக் பண்ணுங்க.சீப்பா முடியும்.மிச்சம் பிடிக்கிற பைசாவில் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்தால் சந்தோஷப்படுவாங்க.”

“என்னது..மூன்றாவதும் பொண்ணா பொறந்துடுச்சுன்னு இந்த பாலுபயல் முகத்தை தூக்கி வச்சிட்டு பொண்டாட்டி பிள்ளையை போய் பார்க்காமலேயே இருந்துட்டானா?அட பன்னாடைபயலே.படிச்ச மூதிதானே நீயி.அவனவன் ராப்பகலா அன்னம்தண்ணி தூக்கம் இல்லாமல் ஆராய்ச்சி செய்து ஆண் பெண் குழந்தைகள் உருவாகக்காரணம் ஆணுடைய ஜீனில்தான் உள்ளது என்று சொல்லுறாங்க.இவன் முகத்தை தூக்கி வச்சிட்டு திரியறானா?செருப்பாலே அடிக்கணும்.அவன் வீட்டுக்காரியை முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க சொல்லு”இந்த ரீதியில் இவர் பேச்சு இருக்கும்.

அசந்து மறந்து அந்த பாலுவை பார்க்க நேரிட்டாரானால் அவ்வளவுதான் X ஜீனுடன் XX ஜீன் சேர்ந்தால் பெண்குழந்தையாகவும்,X ஜீனுடன் XY ஜீன் சேர்ந்தால் ஆண் குழந்தையாகவும் பிறக்கிறது.இதற்கு காரணகர்த்தா ஆண்தான் என்ற தத்துவத்தை விலாவாரியாக ஒன்னரை மணி நேரம் லெகசர் அடித்தாரானால் அந்த பாலு தலையை பிய்த்துக்கொண்டு  மனைவியையும் குழந்தையையும் பார்க்க நேரே ஹாஸ்பிடலில் போய் நிற்பான்.

தலையில் பதநீர் பானையுடன் பதநீர் விற்கும் பெண்மணிடம் பைசாவை கொடுத்தோமா பதநீரை குடித்து விட்டு நடையை கட்டினோமா என்றிராமல் ,அக்கம் பக்கம் நின்று பதநீர் குடிப்பவர்களிடம் கால்லிட்டர் பதநீரில் உள்ள சத்துக்களை பட்டியலிட்டு,மலசிக்கலை நீக்கும்,இதயத்தை வலுப்படுத்தும்,எழும்புகளை எழுச்சியூட்டும்,தாதுபலத்தை அதிகரிக்கும் என்று அவர் டயலாக் விட்டால் அதில் கொஞ்சம் கேட்டுக்கொள்ளத்தக்க அட்வைஸ் இருக்கும் என்பதையும் மறுப்பதுக்கில்லை.

கோகுல் சாண்டல் பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு ஹைதரலியின் சித்தப்பாகாலத்து கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு கக்கத்தில் மான்மார்க் குடையுடன்  டவுன் பஸ்ஸை பிடிக்க கிளம்பிரானால் அது தாசில்தாரையோ,எம் எல் ஏவையோ,கலெக்டரையோபார்க்கத்தானாக இருக்கும்.”சத்துணவு கூட்டத்தில் ஏகப்பட்ட தில்லு முல்லு நடக்குது.நானும் எத்தனையோ போராடிப்பார்த்துவிட்டேன்.முடியலே கலெக்டரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.கரெக்டா 10.30க்கு கலெக்டர் ஆஃபீஸில் இருக்கணும்.அதுதான் கிளம்பிட்டேன்”முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ஓடும் பஸ்ஸில் தாவி எறுவார்தான்.ஆனால் அவர் கலெக்டரைப்பார்த்தாரா இல்லையா என்பது அந்த மேலே இருப்பவனுக்குத்தான் வெளிச்சம்.

அன்று ஒரு சுபயோகசுப தினத்தில் சின்ன சூட்கேஸுடன் சென்னைக்கு போகும் ரயிலைப்பிடிக்க நின்று கொண்டிருந்தவரை பக்கத்தில் நின்றவர்”என்ன அய்யாசாமியண்ணே.வெளியூருக்கு கிளம்பிட்டீங்களா?என்று கேட்டார்.

“ஆமாங்க.சென்னைக்குத்தான்.வேறு ஒன்றும் இல்லை.இந்த ரூபாய்க்கு ஒரு இட்லி அம்மா கடை சென்னையில் சக்கை போடு போடுதே.அதே அம்மாகடையை நம்மூருக்கும் கொண்டுவந்தே ஆகணும் என்பதற்காக நம்ம ஊரு எம் எல் ஏ மூலமாக அம்மாவை சந்தித்து பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.அதான் கிளம்பிட்டேன்.ஹி..ஹி..”