October 17, 2010

இனிய இல்லம் - 2

இனிய இல்லம் இரண்டாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் பாகத்தினையும் இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?

வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.

ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.

படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்
கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
அடுத்து ஒரு இடுகையை வீட்டின் இன்னும் பிற இடங்களைப்பார்ர்ப்போம்.

படங்கள்:கூகுள்



October 11, 2010

ஆற்றல் யாருக்கு அதிகம்?

ஆற்றல் யாருக்கு அதிகம்?

எங்கள் வீட்டு வட்டமேஜை மாநாட்டில் (அதாங்க..டைனிங் டேபிள்) அமர்ந்து சாப்பிட்டோமா எழுந்தோமா என்றிராமல் (ஒரு வேளைஅன்றைய மெனு "உப்புமா"ன்னா இந்த பதிவே ஜனித்து இருக்காதாயிருக்கும்)வாய் லொடலொடத்ததில் "விஷ்க்.."என்று ஒரு வினா என் வாயில் இருந்து புறப்பட்டதுதான் மேலிருக்கும் தலைப்பு.

இப்படி மொட்டையா சொன்னா எப்பூடீ? எனக்கேட்கப்படாது.மேலே படியுங்கோ.

ஆற்றல் யாருக்கு அதிகம் ஆணுக்கா?பெண்ணுக்கா?

பலத்த யோசனைக்குப்பிறகு"வேறு என்னத்தை சொல்ல?பெண்களுக்குத்தான்"2010 இன் மகா சரண்டர்.இது யாரா இருக்கும்?சாட்சாத் என் ரங்ஸ்தான்.(அப்புறமா வழியில் போகிற ஓணானை எதுக்கு மடியில் கட்டிக்கிட என்ற டயலாக் அடித்தது எல்லாம் வேறு விஷயம்.)
சரி இது எவ்வளவுதூரம் உண்மை என்று விஞ்ஞானப்பூர்வமாகவும்,அனுபவப்பூரவமாகவும் அறிந்ததை அலசுவோமா?
அதுக்கு முன்னாடி இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!

1.உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது.இது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும்.இதற்கு பெரும் பங்கு வகிப்பது தங்கமணிகள்தான்.

2.அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விஸ்தலங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.

3.ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான்எல்லாவற்றிலும் அதாவது குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.(எத்தனையோ வீடுகளில் "என் பிள்ளை பேசவே மாட்டேன்கிறான்" என்று ஒரு தாய் விசனப்படும் பொழுது "ஆண் பிள்ளை லேட்டாகத்தான் பேசும்" என்று சொல்லுவது வாடிக்கை.

4.ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.

5.மற்றவர்கள் அறியக்கூடாது என்று குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல்,மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்று உச்சஸ்தாயியில் பேசுவதில் இவர்களுக்கு நிகரில்லை.

6.மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

7.செவிப்புலனிலும் செம்மையானவர்கள்.என்னதான் ரங்ஸ் எரிச்சல் தாங்காமல் லோ பிட்ச்சில் முணுமுணுத்தாலும் கரெக்டாக பாயிண்ட் அறிந்து பிலு பிலு வென்று பிடித்துக்கொள்வதில் கில்லாடிகள்.

8.பார்வைத்திறனைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும்.கூடவே வரும் ரங்ஸிடம் சொன்னால் கூட "எங்கே..எங்கே.."என்று கண்களாலே தேடுவாரே ஒழிய ரங்கஸால் அந்த தெரிந்த தலையை கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாது.

10.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவர்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை.போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

11.வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை இவர்களைத்தவிர வேறு யாருக்குண்டு?

12.எதைச்சொன்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக்கற கற்பூரப்புத்தி இவர்களுக்கே உண்டு என்பது கண்கூடான உண்மை.

13.அதிக தோழமை உணர்வு இவர்களுக்கு மட்டுமே உரித்தானது.சட்டென பழகி விடுதல் கைவந்த கலை.கணவரின் தோழர்களின் மனைவிகளை ஸ்நேகிதமாக்கிக்கொண்டு இருக்கும் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றும்,மனைவிகளின் தோழிமார்களின் கணவர்களை ஸ்நேகிதமாக்கிக்கொண்டிருக்கும் ஆண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப்போட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.

14.பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

15.பிறந்தகத்து உறவினர்களையும்,புக்ககத்து உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.

16.கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள் என்பதும் உண்மை.

17.ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல்,புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

18.செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

19.பதின்ம வயதில் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும்,அதனை செயல் முறைப்படுத்துவதிலும் பிரயத்தனப்படுவதில் இவர்கள்தான் முன்னனி யில் நிற்கின்றனர்.பெண்கள்,ஆண்களுக்கான ஜிம்களும் பியூட்டிபார்களிலும் சர்வே எடுத்தால் நிச்சயம் உண்மை புரியும்.அவ்வளவு ஏன்? எத்தனை வீடுகளில் காய்வகையாறாக்களை கட் செய்து முகம் முழுக்க அப்பிகொண்டும்,மூல்தானிமட்டியை பூசிக்கொண்டு முகத்தை காயவைத்துக்கொண்டும் பெண்கள் வலம் வருவதைப்பார்த்தாலே புரியும்.

20.இப்படியாக இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளுவார்கள்தானே?

இதே நேரம்"மங்கையாராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற மொழியையும் நினைவு கூர்கின்றேன்.

டிஸ்கி:இதனை 2011 பெண்கள் தினமான மார்ச் ஏழு அன்று பதிவிடலாம் என நினைத்து பெண்களுக்கே உரித்தான அவசர குணத்தினால் இன்றே பப்லிஷ் செய்து விட்டேன்.




October 4, 2010

இனிய இல்லம்

ஒரு பாடல் வரிகள் உண்டு."சொர்க்கம் என்பது நமக்கு,சுத்தம் உள்ள வீடுதான்;சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்"எத்தனை அழகிய வரிகள்.சிலர் வீடுகளுக்குள் நுழைந்தால் அவர்கள் தரும் காப்பி கோப்பையை தொடவே அருவெறுப்பாக இருக்கும்.சுத்தம் அந்தளவு இருக்கும்.இதற்கு எதிர் மாறாக வேறு சில வீடுகளுக்குள் நுழைந்தால் மனதே ரம்யமாகி விடும்.பளபளக்கும் சுத்தத்தைப்பார்க்கும் பொழுது நாம் இவற்றை எவை எல்லாம் ஃபாலோ செய்து நம் வீட்டு சுத்தத்தினை இன்னும் மேம் படுத்திக்கொள்ளலாம் என்று மனம் அசை போடும்.

சிலருக்கு வீட்டினை தூய்மைப்படுத்துவது தூங்குவது,சாப்பிடுவது போல் அன்றாட வேலையாக,ஏன் மூச்சு விடுவது போல்.இதற்கு எதிர்மாறாக மற்ற சிலருக்கோ "ப்ச்ச்.."என்ற அலட்சிய மனோபாவம்.

நீங்கள் நுழையும் வீடுகள்,உங்கள் தெரிந்த,நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளை சற்று நேரம் மனக்கண்ணில் அலசுங்கள்.அசுத்தனமான இல்லங்களுக்கு சொந்தக்கார்களின் இல்லங்கள் அதகளமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டில் எப்பொழுதும் இரைச்சலும்,கூச்சலும்,கணவன் மனைவி சச்சரவும்,ஒழுங்கில்லாத குழந்தைகளும்,பண்பில்லாத பழக்கவழக்கங்களும்,இன்னும் சொல்லப்போனால் ஒரு சுபிட்சமில்லாத வாழ்க்கை சூழ்நிலை இருக்கும்.ஆள் இல்லாத அறைகளில் விளக்குகளும்,மின்விசிறிகளும் சர்வசாதராணமாக ஓடிக்கொண்டிருக்கும்.எந்த வித ஒழுங்கும்,கட்டுபாடுகளும் இருக்காது.வேலை பார்ப்பவர்களால் அடிக்கடி சின்ன,பெரிய திருட்டுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.எல்லா செயல்களிலும்,நடவடிக்கைகளிலும் அலட்சிய மனப்போங்கு,ஸ்திரமாக முடிவெடுக்காத்தெரியாத தயக்கம்,இன்னும் எவ்வளவோ ரசிக்கதகாத அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தூய்மையான இல்லங்களுக்கு சொந்தக்கார குடும்பங்களை இப்பொழுது மனக்கண்ணில் அலசுங்கள்.கண்டிப்பாக சுபிட்சம் நிறைந்த,நிறைவான குடும்பமாக,தெளிவான சிந்தனை உள்ளவர்களாக,அமைதி நிறைந்த குடும்பமாக முதல் குடும்பத்திற்கு நேர் எதிர் அம்சங்கள் நிறைந்த அழகிய குடும்பமாக ,மற்றவர்களுக்கு முன்மாதிரியான குடும்பமாக திகழும்.

சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன்.வீட்டு சூழ்நிலையைப்பார்த்து விட்டு எனக்கு தலையே சுற்றி விட்டது,போர்க்களம் போல் வீடு காட்சி அளித்தது.சுத்தம் செய்யாத டம்ளர்கள்,ஈரடவல்கள்,சோபா மீது ஒரு செல்ஃப் முழுக்க அடுக்கி வைக்கும் அளவு பொருட்கள்,தரையில் அப்படி அப்படியே கிடக்கும் துணிகள்,கலைந்து போன பேப்பர் கற்றைகள்,ஒட்டடை தொங்கும் சுவர்கள்,பிசுபிசுப்பான தரைகள்..அடுக்கிக்கொண்டே போகலாம்.இப்படியான பரமரிப்பு இல்லாத இல்லங்களைக்காணும் பொழுது அறுவெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

இதற்கு நேர் எதிராக இன்னொருவர் இருக்கின்றார்.நம் வீட்டிற்குள் வந்தாலே செருப்பை வாசலுக்கு எதிரே கழற்றி வைக்காமல் ஒரு ஒரமாக கழற்றி வைப்பார்.அந்த ஒரு ஜோடி செருப்பு கூட கழற்றி வைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

உள்ளே நுழையும் பொழுதே கால் மிதி சற்று கோணல் ஆக இருந்தால் தன் கால்களால் சரி செய்து விட்டுத்தான் உள்ளேயே நுழைவார்.ஷோபாவில் உட்காரும் நேர்த்தி,காப்பிக்கோப்பையை காலி செய்துவிட்டு அதன் கைப்பிடி இருக்கும் பகுதியைக்கூட ஒரு நேர்த்தியுடன் திரும்ப வைக்கும் பொழுது பிரமித்துப்போய் இருக்கின்றேன்.இப்படிப்பட்டவர் தனது இல்லத்தை எப்படி வைத்து இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்படிப்பட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கும்.

நம்முடைய பொருட்கள்,உடமை,வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள்,பாக்கியங்கள்.அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி,ஏனோதனோ என்றிராமல்,ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.மனமும் நிறைந்ததாகிவிடும்.மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம் பால் உள்ள மரியாதை அதிகரிக்கும்.

சிறிய வீடோ,பெரிய வீடோ,பழைய வீடோ ,புது வீடோ வீடு,சொந்தவீடோ,வாடகை வீடோ நம்முடையது,நாம் ஜீவிப்பது..அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகும் வைத்திருப்பது நமது கடமை.ஆணும் சரி,பெண்ணும் சரி இருவரும் சேர்ந்தே இதில் ஈடுபாடு காட்டினால் பிற்காலத்தில் குழந்தைகளும் அதனைப்பின் பற்றுவார்கள்.

அடுத்த இடுகையில் வீட்டு பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் எனபதைப்பற்றி அலசுவோம்.