August 31, 2010

தீஈஈஈஈ. நகர்


தி நகர் நெரிச்சல் கண்டு மலைப்பாக உள்ளது.போக்குவரத்து நெரிச்சலை குறைப்பதற்கு பாலம் கட்டியும் நெரிச்சல் மேலும்,மேலும் அதிகமாகிப்போனதை தவிர வேறு பலன் இல்லை.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாலத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் தேவைப்படுகின்றது.எறும்பு மொய்த்தாற் போல் ஜனத்திரள்.ரங்கநாதன் தெரு வாசிகள் எப்பொழுதோ வீடுகளை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்தாலும்,பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்போர் நிலை பரிதாபத்துக்குறியது.மேலும் மேலும் புதிது புதிதாக வணிக கடல்கள் உருவாக்குவதை குறித்து யோசித்து செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.

ஒரு வலையுலக நட்பு தன் கணவர் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் இதே பகுதியில் திறந்திருப்பதாக கூறினார்.நீங்கள் அங்கு சென்றால் போன் செய்யுங்கள். ரங்கமணியிடம் கூறி டிஸ்கவுண்ட் தரச்சொல்லுகின்றேன் என்றார்.சரி நட்பின் உணவகத்திற்கு போய்த்தான் பார்க்கலாமே என்று கூட்டத்தில் நீச்சல் அடித்து போய் சேர்ந்தோம் இஃப்தார் நேரத்தில்.உணவகத்தில் அமர்ந்து கொண்டு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.கடைசி வரை ஆன் செய்யவே இல்லை. சாப்பிட்டு விட்டு டிஸ்கவுண்ட் இல்லாமல் பணம் செலுத்திவிட்டு வந்தோம்.விலை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அரேபிய உணவு வகைகள் அற்புதமாக இருந்தது.
ஈத் பர்சேஸுக்காக கடை,கடையாக ஏறி இறங்கும் பொழுது சென்னை ஸில்க்ஸில் ஒரு புடவை கண்களையும்,கருத்தையும் கவர்ந்தது.அலங்காரமான நகைப்பெட்டிக்குள் நகை இருப்பது போல் ஒரு அலங்காரமான பெட்டிக்குள் இருந்த பட்டுப்புடவையின் விலை என்ன தெரியுமா? 2.5லட்ச ரூபாய்.அடுத்த முறை போகும் பொழுது மறக்காமல் கடை நிர்வாகியிடம் அனுமதி பெற்று போட்டோ எடுத்து தனிப்பதிவே போடவேண்டும்.(ரங்கமணிகளே உஷார்.)

சிறிய கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பாடு படு கஷ்டம்தான்.இப்பகுதியில் துணிக்கடை இருப்பது போல் நகைக்கடைகளும் அதிகமே.ஆனால் இப்போதெல்லாம் பெரிய கடைகளில்தான் வியாபாரம் கன ஜோராக நடந்து வருகின்றது.நகைகடை வைத்து வியாபாரம் செய்தவர்களில் பலர் இப்பொழுது கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் கவரிங் பொருட்கள் விற்பனையகமாக மாற்றிக்கொண்டு வருவதைப்பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.
பனகல் பார்க்கை சுற்றி மிகவும் பிரபலமான கடைகள் நிறைந்த பகுதி.மிகவும் பிஸியான பகுதி.இப்பொழுது நல்லி,குமரன் பிரின்ஸ் ஜுவல்லர்ஸ் என்று வரிசைகட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் பரபரப்பான நாகேஸ்வரா சாலையை மீண்டும் ஒன்வே ஆக மாற்றி விட்டாலும்,வாகன போக்கு வரத்து வேண்டுமானால் சற்று சுலபமாக இருந்தாலும் ஜன நடமாட்டம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.நடைபாதை வியாபாரிகளுக்குத்தான் இந்த ஒன்வே சிஸ்டம் வசதியாக போய் விட்டது.

பனகல் பார்க்கை பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு.அதே ஏரியாவில் ஜீவா பார்க்,நடேசன் பார்க் என்று மேலும் இரண்டு பார்க் இருக்கும் பொழுது இதனை பேருந்து நிலையமாக மாற்றி,தி.நகர் பஸ் ஸ்டாண்டை இங்கு மாற்றினால் போக்கு வரத்து நெரிச்சல் மிகவும் குறைந்து மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.அரசாங்கம் செயல் படுத்துமா?

தி.நகர் போத்தீஸில் நோன்பு திறக்கும் சமயம் நோன்பாளிகள் எல்லாரும் வந்து நோன்பு திறந்து செல்லும்படி அனவுன்ஸ் செய்கின்றார்கள்.இஃப்தாருக்கென்று தனி இடம் ஒதுக்கி நோன்பாளிகளை நோன்பு திறக்கும் வசதியை ஏற்படுத்தி தருகின்றனர்.மாற்று மதத்தவரின் சேவை நெகிழவைக்கின்றது.

ஜி.என் செட்டி ரோடில் இருக்கும் விருதுநகர் ஹோட்டலில் சஹர் நேரத்தில் நோன்பாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.பேச்சிலர்களும்,வசதியற்ற நோன்பாளிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கின்றது.அவ்வுணவகத்தின் நிறுவனர்களுக்கு வல்ல அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக.


இதே வீதியில் உள்ள ஒரு சிறிய செருப்புக்கடையில் வீட்டிற்குள் உபயோகப்படுத்தும் ஹெல்த் பிளஸ் செருப்பு 140 ரூபாய்க்கு வாங்கினேன்.அதே செருப்பை என் பக்கத்து வீட்டுத்தோழி பெரிய கடையில் 90 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்.ஒரு செருப்பிலேயே 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்தால் இது போல் சிறிய கடைகளில் கூட்டம் எப்படி களை கட்டும்?ஒரு நாளில் 50000 ரூபாய்க்கு வியாபாரம் செய்து அடையும் லாபத்தை விட,5000 ரூபாய்க்கு மட்டும் வியாபாரம் செய்து லாபம் பெற்று விடுகின்றனர்.செம வியாபாரிகள்தான்.
பர்ஸை பறி கொடுத்து விட்டு பரிதவிக்கும் மக்கள் ஒருபக்கம்.என்னதான் உயரமான மேடை போட்டு,கண்கொத்திப்பாம்பாக போலீஸார் கண்காணிப்பு நடத்தினாலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.இத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்தும் மகிழ்ச்சியுடன் தி.நகர் ஷாப்பிங் செய்யும் மக்கள் இந்த தி. நகர் மோகத்தை என்று விடுவார்கள்?தி.நகர் வாழ் மக்களுக்கு என்று மோட்சம் கிடைக்கும்?என் வலையுலக நட்பு தி.நகர் வாடிக்கயாளர் கூட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது"யானைக்கும் அடி சறுக்கும்"என்று சிரித்தார்.

August 29, 2010

காணவில்லை.





பதிவுலகில் முன்னர் தொடர்ந்து பதிவிட்டு வந்த பதிவுலக நட்புக்களில் சிலர் இப்பொழுது பதிவிடுவதில்லை.என் ஞாபத்தில் வந்தவர்களை வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றேன்.

தோழி செந்தமிழ்செல்வி.மலர்வனம் என்ற தலைப்பில் தனது டைரியையே மற்றவர்களுக்கு சமையலறையில் உதவிட பதிவிட்டவர்.தனிப்பட்ட முறையில் இவருடனான தொடர்பு இருந்தும் செல்போனில் இரு முறை தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை.

ஷஃபிக்ஸ் என்ற தலைப்பில் பதிவர்களுக்கு எல்லாம் பாங்குற பின்னூட்டி,உற்சாகப்படுத்தி,தான் மட்டும் மிக குறைந்த அளவே பதிவிட்டு வந்த பதிவுலகத்தூண் ஷபி

பிரியாணி என்ற சுவாரஸ்யமான தலைப்பை வைத்து பிரியாணியை கண்களிலே காட்டாமல் மற்ற ஆக்கப்பூரவாமான கட்டுரைகள் தந்து தன் பிளாக்கை கலகலப்பாகிக்கொண்டிருந்தவர்

கருவாச்சி என்ற பெயரில் சுவாரஸ்யமாக பதிவுகளிட்டு வந்த சகோதரர் காஜா ஷரிப்.

ஹர்ஷினியின் அம்மா ஹர்ஷினிக்காக என்ற தலைப்பில் தன் மகளைப்பற்றி சுவாரஸ்யாமாக எழுதி வந்ததுடன்,கதம்பம் என்ற பெயரில் தனது சமையல்,கைவினைப்பொருட்களை பகிர்ந்து வந்த சகோதரி

அம்முவின் சமையல் என்ற தலைப்பில் தனது சமையல் குறிப்புகளுடன் செய்த சமையலை எழிலுற அலங்கரித்து கண்களை கட்டிப்போட்ட அம்மு மது

பித்தனின் வாக்கு என்ற பெயரிட்டு பதிவர்களை கற்பனை செய்து நாடகமே போட்டு அசத்திய சுதாகர் சார்

வெல்கம் டு சுஸ்ரீ கிரியேஷன் என்று அனைவரையும் வரவேற்று தன் சமையல் திறனைகாட்டி வந்த சுஸ்ரீ

விமர்சனம் என்ற தலைப்பிட்டு கட்டுரைகளோடு,கவிதைகளையும் அள்ளித்தெளித்த மலர்

என் ஐ ஆர் இதயத்தை கடைசியாக கவிதையில் வடித்து விட்டு ஊருக்கு போய் வருகின்றேன் என்று புறப்பட்டுப்போன சகோதரர் மனவிலாசம் நவாஸுதீன்

அதே கண்கள் என்ற தலைப்பில் சென்னைதமிழிலில் டெக்னிக்கல் விஷயங்களை பாங்குற பகிர்ந்த டவுசர் பாண்டி அண்ணாத்தே,இவர் இருப்பிடம் மரியாத்தா கோவிலாண்டே இருக்கின்றது என்று குறிப்பிட்டதால் மாரியாத்தா கோவில் பக்கமாக வழி நடக்கும் போழுது அந்த கண்கள் தென்படவே இல்லையே

சகபதிவர்களுக்கு ஓட்டும்,பின்னூட்டங்களும் சளைக்காமல் போட்டு வந்து பதிவுகளை மட்டும் மிகக்குறைந்த அளவில் போட்டு வந்த அண்ணாமலையான்

மற்றும் இப்பட்டியலில் இடம் பெறாத காணாமல் போன சக பதிவர்களும் தொடர்ந்து வந்து பதிவுலகை தங்கள் பதிவுகளால் கலக்கி சுவாரஸ்யம் கூட்ட அன்புடன் மற்ற பதிவுலக நட்புக்களின் சார்பில் அன்போடு அழைக்கின்றேன்.

August 22, 2010

கொத்தவரங்கா போல உடம்பு...

"தொம்..தொம்..தொம்.."
மாடியில் இருந்து தொடர்ந்து வந்த சப்தத்தினால் தூக்கத்தை தொடர முடியாமல் போர்வையை உதறினான் மணி.
"மீனு..மீனு.."குரலுக்கு பதில் வராததால் எரிச்சலுடன் ஹாலுக்கு வந்தான்.நிசப்தமாக இருந்த ஹாலை ஒட்டி இருந்த அடுக்களைக்குள் நுழைந்து பார்த்தால் இந்நேரம் களைகட்டிக்கொண்டிருக்கும் அடுக்களை அன்று களை இழந்து போய் இருந்தது.
"மீனு..ஏய்..மீனு..எங்கே போனாள் இவள்.சே.. மனுஷனால் ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை"சப்தம் வந்த மாடியை நோக்கிச்சென்றால் அங்கு மணியின் பத்தினி வேர்க்க விறுவிறுக்க ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தாள்.

"மீனு ..என்ன ஆச்சு..?காலங்காத்தாலே ஸ்கிப்பிங்..?"
"முப்பத்தி அஞ்சு..வெயிட் ரெட்யூஸ்தான்.. முப்பத்தாறு.."
"அதுக்கு..இப்படி காலையிலேயேவா..?காபி கிடையாதா?
"முப்பத்தேழு...இப்ப என்ன அவசரம் காஃபிக்கு..முப்பதெட்டு..கொஞ்சம் பொறுங்கோ..முப்பத்தொன்பது.."

தொடர்ந்து அவளுடன் பேச பொறுமை இல்லாமல் திரும்பினான்.
எழுந்ததும் காபி கப்புடன் நிற்பவள் இன்று எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு காபிகலந்து தந்தவளை அமைதியாக பார்த்தான்.
"இன்னிக்கு என்ன டிபன்?"
"ஓட்ஸ்.."
"ஓட்ஸா..இதென்ன புது பழக்கம்..?"
"ம்மா..நான் வன்மையாக இதை கண்டிக்கறேன்"கையில் பிரஸ்ஸுடன் வந்த அனு கர்ஜித்தாள்.
"நீ மெலிய வேண்டும் என்பதற்காக ஓட்ஸும் கூழுமா போட்டு எங்களை கடுப்பேற்றாதே..மரியாதையா இன்னிக்கு வழக்கம் போல் டிபன் பண்ணு..மதியம் மட்டன் பிரியாணியும்,சிக்கன் பிரையும் பண்ணு"
"அனு..அனு..ப்ளீஸ்..டாக்டர் கண்டிப்பா நான் வெயிட்டை ரெட்யூஸ் செய்யனும்ன்னு சொல்லி இருக்கார்.வைராக்கியமாக இருக்கேண்டி..கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்க ப்ளீஸ்"
"கண்டிப்பா என்னால் பொறுத்துக்க முடியாது..இன்னிக்கு நான் சொன்னதை செய்றே"
காலையில் டிபனாக மொறு மொறுப்பான பூரியும்,உருளைமசாலாவும் செய்து கணவனுக்கும்,மகளுக்கும் பறிமாறிவிட்டு ஓட்ஸை நீரில் காய்ச்சி சாப்பிட்டவளை மணியும்,அனுவும் பரிதாபமாக பார்த்தனர்.

மதியம் வழக்கம் போல் மட்டன் பிரியாணியும் சிக்கன் ஃபிரையும் ரைத்தாவும் செய்து மகளுக்கு கணவருக்கும் பறிமாரிவிட்டு இரண்டு சப்பாத்திகளை ரைத்தாவில் தோய்த்து விழி பிதுங்க சாப்பிட்டவளை மணியும் அனுவும் பரிதாபமாக பார்த்தனர்.

சாயங்காலம் ஏதாவது ஒரு மாலுக்கு போய் வரலாம் என்று மகள் அழைத்ததை நிராகரித்துவிட்டு "இதில் மட்டும் என்னை கம்பெல் பண்ணக்கூடாது"என்று விட்டு ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு வாக்கிங் கிளம்பி விட்டாள்.

"ம்மா..எயிட்டி கேஜி அக்பர் கோட்டையா இருக்கற நீ பிஃப்டி கேஜி தாஜ்மகாலா போறியா?"மகளின் கிண்டலையும் பொருட்படுத்தாமல்,

"மீனு..ரொம்ப மெனக்கெடாதே..ஒரே நாளில் இவ்வளவு சிரத்தை எடுத்தால் டயர்ட் ஆயிடுவே"கணவரின் கரிசனத்தையும் அலட்சியபடுத்தி விட்டு எடை குறைப்பில் தீவிரமானாள்.

"என்னங்க ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே காதிகிராப்டில் ஒரு கிலோ தேன் வாங்கிட்டு வாங்க.அங்கேதான் சுத்தமான தேன் கிடைக்கும்"
"ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு வாக் போவது சிரமமாக உள்ளதுங்க.பேட்டாவில் கேன்வாஸ்ஷூ வாங்கிட்டு வர்ரீங்களா?"
"மார்க்கெட்டில் வாழைத்தண்டும் ,அருகம்புல்லும் கிடைத்தால் வாங்கிட்டு வாங்க..கிடைக்கலேன்னா அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய்ட்டீங்கன்னா கண்டிப்பா கிடைக்கும்.இதுகளில் ஜூஸ் பண்ணி சாப்பிட்டால் வெய்ட் கட கடன்னு குறையுமாம்"
"டிஜிட்டல் வெய்யிங் மிஷின் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுங்க.அது ரொம்ப அவசியம்"

பக்கத்து தெருவில் இருக்கும் ஜிம்மில் சேர்ந்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று கணவரிடம் இருந்து முள்ளங்கிபத்தையாக பத்தாயிரத்தை வாங்கிகொண்டு போய் ஜிம்மில் கட்டி நாண்கு நாள் தொடர்ந்தார்ப்போல் போய் வந்தவள் நாண்காம் நாள் ஆரம்பித்து விட்டாள்.

"அப்பப்பா.. இந்த மெட்ரோ வாட்டர் காரனும் ஈபிகாரனும் பள்ளம் நோண்டி போட்டு தெருவை தெருவாகவா வைத்திருக்காங்க.."
அலுத்துக்கொண்டவளை மேலும் கீழும் பார்த்தான் மணி.

பள்ளத்தில் விழுந்து கிழுந்து ஏடாகூடமாகிவிடப்போகுதுன்னு பயமா இருக்குங்க"
இப்படி ஆரம்பித்து எதை இவள் ஏடாகூடமாக கேட்டு வைக்கப்போகின்றாளோ என்ற கிலியுடன் மனைவியை ஏறிட்டான்.
"ஒரு டிரட் மில் ஒன்று வாங்கிடலாம்..நீங்க கூட காலையில் ஒரு அரைமணி நேரம் யூஸ் பண்ணினால் பிரிஸ்கா இருக்கும்"
"போச்சுடா"
"இதற்கெல்லாம் கஞ்சத்தனம் கூடாது.இது ஹெல்த் விஷயம்..நாளைக்கு ஒண்ணுன்னா டாக்டர் கிட்டே ஆயிரக்கணக்கில் கொட்டிகொடுக்கறதுக்கு இது எவ்வளவு நல்லது"
மறு நாள் டிரட்மில் வந்து இறங்கிய பிறகுதான் நிம்மதியானாள்.

டிரஸ்ஸிங் கண்ணாடி முன் நின்று தன்னை நிலைக்கண்ணாடியில் சுற்றும் முற்றும் பார்த்தவள்"என்னங்க..என்னங்க.."என்று அலறிய அலறலில் வாசித்துக்கொண்டிருந்த நியூஸ் பேப்பர் எகிற ஓடி வந்தவனிடம்"ஏங்க நான் மெலிந்தாற்போல் இருக்கென் இல்லே.."என்று அப்பாவியாக கேட்டவளைப்பார்க்க மணிக்கு கோபமும் சிரிப்பும் அடக்கமாட்டாமல் வந்தது.

பக்கத்து வீட்டு பதமா,எதிர்வீட்டு இந்திரா,மூன்றாம் தெரு ருக்மணி,பால்ய ஸ்நேகிதி பவித்ரா இப்படி யார் யார் என்ன சொன்னார்களோ அத்தனையும் தவறாது கடைபிடித்தாள்.
"உடம்பை குறைக்கறேன்னு கண்டதையும் சாப்பிட்டு கஷ்டப்படாதே"கணவரின் எச்சரித்தலையும் அலட்சியம் செய்தாள்.
"அப்பா..இன்னும் ஒரு நாலு நாளைக்கு கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..அம்மா..உங்க வழிக்கு வந்துடுவா.இப்ப நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் காதில் ஏறாது"சிரித்துக்கொண்டே சொன்ன மகளை பற்கள் நறநறக்க பார்த்தாள்.

ஒருவாரம் தொடர்ந்த வைராக்கியம் சற்று தளர்ந்தது உடம்பில் ஏற்பட்ட களைப்பினால்.தினம் காஃபிக்கு பதில் கொதிநீரில் கலந்த தேனை சாப்பிட்டு வறண்டிருந்த நாக்கு கெட்டி டிகாஷனுடன் டிகிரி காப்பி கேட்டது.
அரை டம்ளரில் என்ன ஆகிவிடபோகிறது என்று முழு டம்ளராகவே கூட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்தாள்.ஒருவாரம் காபி குடிக்காத வாய்க்கு அமிர்தமாக இருந்தது.

கணவரும்,மகளும் ஆஃபீஸ் சென்ற நேரம் மொறுகலாக நாண்கு தோசை வார்த்து பசும்நெய்யில் பொடி கலந்து அரக்க பறக்க சாப்பிட்டாள்.

மதியத்தூக்கத்தை தியாகம் செய்து விட்டு டிரட்மில்லில் வேர்க்க வேர்க்க வாக் சென்றவள் அன்று காலில் பெயின் பாமை தடவிக்கொண்டு கணவர் ஆஃபீஸில் இருந்து வந்து காலிங்பெல் அடிக்கும் வரை தூங்கினாள்.

"தூங்கினியா"நமுட்டு சிரிப்போடு கேட்ட கணவரிடம்
"சரியான கால் வலிங்க"
"என்ன டிரட் மில் மேலே பூனை தூங்குது?"
கணவரின் அடுத்த நக்கலை தாக்கு பிடிக்க திராணி இல்லாமல் அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள்.

இரவு டைனிங் டேபிளில் மூவரும் அமர்ந்திருந்த பொழுது வழக்கத்துக்கு மாறாக அம்மாவின் தட்டில் வறட்டு சப்பாத்திக்கு பதிலாக எண்ணெய் மினுமினுக்க பரோட்டாவும்,வெண்னை மணமணக்க குருமாவும் தட்டு நிறைய இருப்பதைப்பார்த்து."ஐயோ..அம்மா உன் சப்பாத்தி எங்கே..?"கூவிய மகளை எரிக்கும் பார்வையினால் அடக்கி விட்டு "ஒரு வாரமா நான் பட்ட அவஸ்தை உனக்குக்கெங்கே தெரிய போகுது..பேசாமல் உன் பிளேட்டில் போட்டதை சாப்பிடு"கர்ஜித்தாள்.

அப்பாவும் பொண்ணும் நமுட்டு சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பரோட்டவை விண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

August 18, 2010

வலி


கருவறையில் நிறைந்திருக்கும்

சுமை குறைய

கலங்கி தவித்து அழுது அலறி

கத்தி கதறி மயங்கி துவண்டு

வயிற்றில் சுமந்ததற்காக

உடம்பின் அத்தனை அணுக்களிலும்

வலி சுமந்து

ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்

அத்தனை வேதனைகளையும்

ஒரு சேர அனுபவித்து

உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்

சில கணம் இழந்து

உயிர் போய் உயிர் வந்து

நாடி நரம்பு நெக்குருகி

குருதி எல்லாம் கொதித்துப்போய்

கண்கள் இரண்டும் கழன்று போய்

கருவிழிகள் நிலைத்துப்போய்

மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்

புனர் ஜென்மம் எடுத்தது போல்

புதிய உயிரை பிரசவித்தேன்

வருவோர்க்கெல்லாம் உவகையுடன்

அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி

இன்முகத்துடன் கூறி மகிழ்கின்றாள்

என் அன்னை "இது சுகபிரசவம்"என்று.

August 4, 2010

பதிவுலகில் ஸாதிகா


சகோதரர் சீமான்கனி அவர்கள் அழைத்த தொடர் பதிவு.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸாதிகா என் அம்மா அப்பா ஆசை ஆசையாக வைத்த அருந்தவப்பெயர். அடுத்து வருவது என் குடும்பப்பெயர்.இறுதியில் வருவது என் இறுதிகாலம் வரை மட்டுமல்லாமல் அதற்கப்புறமும் எனக்கே என்னவராக என்றென்றும் இருக்கவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்யும் என் பெட்டர் ஹாஃபின் பெயர்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இதிலென்ன சந்தேகம்.ஸாதிகாவேதான்.ஆனாக்க ஏன் புனைப்பெயரில் வந்து இருக்கக்கூடாது என்று இப்ப ஃபீல் பண்ணுவதுதாங்க உண்மை.(இன்னும் சுதந்திரமாக எழுதலாமே)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி இல்லேங்க.கையடி என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.ஏன்னா கையாலேதானே டைப் பண்றோம்.பொதுவாக எழுதுவதில் ஆர்வம் உள்ள எனக்கு பிளாக் உலகம் என்று இருப்பது பார்த்ததுமே முன்னே பின்னே யோசிக்காமல் வசமா மாட்டிக்கொண்டேன்.பிளாக்ன்னா என்ன என்று சரியாக கூட புரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டதுதான் என் பிளாக்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் அடைந்து விட்டதா?இல்லேங்க!என்னுடைய டார்கெட் 1000 ஃபாலோவர்ஸ்.ஒரு இடுகைக்கு குறைந்தது ஒரு சதத்திற்கும் மேல் பின்னூட்டம்.அதற்குத்தான் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.இன்னும் பெரிசா ஒன்றும் செயல் படுத்தலேங்க.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய பகிர்ந்து கொண்டதுண்டு.விளைவுகள் இனிமையான பின்னூட்டங்கள் தவிர வேறொன்றும் இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் ஆரம்பித்தேன்.இப்பொழுது வேறெதிலும் பொழுதை செலுத்த மனமில்லாமல் இருப்பதுதான் என்னுடைய நிலை.இதில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால்..ஐயோ வேண்டவே வேண்டாம்.எனக்கும் பிள்ளைகுட்டிங்க இருக்கு.அதுகளை நன்றாக படிக்க வைத்து அவங்க நல்ல படி சம்பாதித்து உயர்வடைந்தால் போதும்.முக்கியமான விஷயம்.வலைப்பூவால் இனிய நட்புகள்,உடன் பிறவா பிறப்புகளின் அன்பை நிறைய சம்பாதித்து இருக்கின்றேன்.சம்பாதித்துக்கொண்டிருக்கின்றேன்.அது போதும் எனக்கு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மொத்தம் இரண்டு இது அனைவரும் அறிந்தது.அறியாதது ஒன்று.ஆனால் பதிவிடுவதில்லை.வேறொரு பெயரில் உள்ளது.(கண்டு பிடித்து சொன்னால் 10 பித்தளைக்காசுகள் பரிசாக வேண்டுமானல் வழங்குகின்றேன்.)நான் பதிவெழுதுவதைப்பார்த்து என் மகன்களுக்கும் ஆர்வமாகி அவர்களும் பிளாக் ஆரம்பித்து விட்டார்கள்.இது பெரியவரது பிளாக்.இது சிறியவரது பிளாக்.நான் தான் நன்றாக படிக்கின்ற வேலையை பாருங்கள் என்று பிளாக்குக்கு தடா போட்டு விட்டேன்.இருந்தாலும் நான் அசந்த சமயம் பெரியவர் பதிவிட்டு விடுவார்.(அவர் எழுதிய கதைகள் கத்தை கத்தையாக கப்போர்ட் லாஃப்டில் தூங்குகின்றது.)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இது இரண்டும் வந்ததில்லை.சிலரது இடுகைகளைப்பார்க்கும் பொழுது வருத்தம் ஏற்படும்.அவர்களது வலைப்பூ பக்கம் நான் எட்டிப்பார்ப்பதுடன் சரி.பின்னூட்டம் இடமாட்டேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதல் பிளாக் ஆரம்பித்து என் மகனிடம் காட்டினேன்.அவரது பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.அது எனக்கு கிடைத்த நோபல் பரிசு.இந்த நிமிடம் வரை தினம் ஒரு முறையாவது என் பிளாக் பற்றி விசாரிக்கமட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பிளாக் பற்றியும் விசாரித்துக்கொள்வார்.


Blogger hamid kaashif said...

Mummy, I salute your wonderful work.
I thank God for you giving birth to me.
You're great.

--
Hamid காஷிப்

இதுதான் எனக்கு முதன் முதல் வந்த பின்னூட்டம்.எனக்கு கிடைத்த நோபல் பரிசு.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப்பற்றி சொல்றதுக்கு பெரிசா ஒன்றுமே இல்லையே!

அனைவரது வலைப்பூவிலும் இந்த தொடர் அழைப்பு ஏனைய வலைப்பூதாரர்களால் அழைப்பிடப்பட்டுள்ளதால் நான யாரை அழைக்கட்டும்???






தங்கை மேனகா எனக்கு இந்த விருதினை மட்டுமல்லாமல் மேலும் ஆறு விருதுகளை அள்ளித்தந்து இருக்கின்றார்.விருதுகளை கை கொள்ளாமல் பெற்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் மேனகாவுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இது தங்கை பாயிஷா தந்த விருது.இவ்வளவு நாட்களாக லாக்கரில் பத்திரமாக பூட்டி பாதுகாத்து விட்டு இப்பொழுது உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.நன்றி பாயிஷா.