May 22, 2012

பிரிவு



கண்ணாடி முன் நின்று
சீவி சிங்காரித்து ஒயிலாக சிரிக்கும் நீ
கண்கொட்டாமல் பார்க்கும் என்னை
செல்லச்சிணுங்கலுடன் மையிட்ட உன்
மான் விழிப்பார்வையில் ஓடுவது
வெட்கமா சிருங்காரமா மோகனமா
மகிழ்வுடன் புரியாமல் நான் தவிப்பேன்

இன்று குளிரூட்டிய கண்ணாடி
நீள்வடிவ பெட்டியினுள்
கண்களை இறுக மூடி
மீளாதுயில் கொண்டு,மீளா துயர் தந்து
அமைதியாக படுத்திருக்கும்
உன் முகத்தை கண் கொட்டாமல்
மனம் முழுக்க பாரமுடன்
நான் பார்க்கும் இவ்வேளை
உன் வதனத்தில் உறைந்திருப்பது
என்னென்று புரியாமல்
அழுகையுடன் தவிக்கின்றேன்.

சிரிக்க சிரிக்க நீ பேசி
என் சிந்தையை கவர்ந்தவளே
இன்று வாய் மூடி மவுனியாக
படுத்திருக்கும் நிலை கண்டு
சித்தம் கலைந்து நிற்கின்றேன்

வகை வகையாக சமையல் செய்து
தளிர் கரத்தால் பரிமாறி
வயிறு நிரம்ப வைத்தவளே
இந்நொடியில் அக்கரங்கள்
செயலிழந்து போனதுவே

வெள்ளிக்கொலுசொலிக்க
ஒய்யாரமாய் நடை நடந்து
ஓவியமாய் வலம் வந்த
உன் கால்விரல்கள் வெண் துணியால்
கட்டப்பட்டு இருக்கும் நிலை
கண்டும் நான் செய்வதறியேன்

இந்நொடியில் குளிர் பெட்டியினுள் நீ
நாளையோ வளியில்லா மண்ணறையில்
குளிரூட்டீய நம் அறையில் இனி
என்னை தனியாக தவிக்க விட்டு
மண்ணறையில் துயில் கொள்ள
பறந்து விட்டாயே என்னவளே

May 19, 2012

முதியவரை தாக்கும் நோய்

அல்ஸீமர்(Alzheimer’s disease)நினைவிழப்பு நோய்,முதியவர்களை தாக்கும் ஒரு கோரமான வியாதி எனலாம்.இந்நோய் எல்லா முதியவர்களையும் தாக்காது.ஞாபக சக்திதிறன் குறைந்த ஏனைய முதியவர்களுக்கு இந்த நோய் தாக்கி உள்ளது என்றும் கூறி விட இயலாது.

டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக இதுவரை ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. எனினும் டிமென்ஷியா உருவாவதற்கான பல காரணிகளில் அல்ஸீமர்(Alzheimer) என்று கூறப்படும் மூளை அழுகல் நோய் முக்கிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.


ஒரு பொருளைக்காட்டி அதன்பெயருக்கு முற்றிலும் மாறாக அந்த பொருளின் பெயரை சொல்லும் பொழுது மற்றவர் நீங்கள் சொல்வது தவறு என்று விளக்கினால் அதனை ஒத்துக்கொள்ளும் முதியவராயின் சரி.அதனை ஒத்துக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக நிற்கும் முதியவர்களை கிட்டத்தட்ட அந்த நோயின் தாக்கம் பீடித்துள்ளது என்பதினை அவரது செய்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.நாளடைவில் இந்நோயாளர் நோயின் தாக்கத்திற்கு படிப்படியாக உள்ளாகுவார்.


நினைவாற்றல் சிந்திக்கும் ஆற்றலையும் ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியில், இந்நோயின் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பிறகு, மூளையின் பிற பகுதிகளுக்குப் பரவுகிறது.

நோயாளியின் உடலில் சக்தி குறைந்து கொண்டே போவது, மறதி, மனநிலையில் தடுமாற்றம், மெதுவான உடல் இயக்கம் ஆகியவை இருக்கும். குழப்பம் அடைதல், மற்றவர்களின் பேச்சு, புரிந்துகொள்ளும் தன்மையும் குறையும்.இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் சில தருணங்களில் வசிப்பிடம் மறந்து போய் தொலைந்து போகவும் வாய்ப்புண்டு.

சிலருக்கு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது என்ன பேசுகிறோம் என்பது மறந்து போய் திணறுவார்கள்.மூளை தன் கட்டுப்பாட்டை இழப்பதால் மனமும் உடலும் சோர்ந்து பதைபதைப்புடன் காணப்படுவார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்னுள்ள சம்பவங்கள் மட்டும் நினைவில் இருக்கும்.சமீபத்திய சம்பவங்கள் மறந்து போய் இருக்கும்.

மூளை மீதான இந்நோயின் தாக்குதல், உயிருக்கு உலை வைக்கக்கூடியது.எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை, இந்நோய் நீடிக்கிறது. சிலர், வெகு விரைவில் மரணம் அடைவதுண்டு, சிலர் 20 ஆண்டு வரை உயிர் வாழ்வார்கள்.

நோயின் உச்சத்தில் இயற்கை உபாதைகளை கட்டுபடுத்த இயலாமலும்,உணவை விழுங்க இயலாமலும்,சரியான உணவு இல்லாமையால் அதனால் உடல் தெம்பு இல்லாமல் இறுதில் மரணத்தை தொடுகின்றார்கள்.

2020- ஆம்ஆண்டில் இந்தியாவில் மட்டுமே இந்நோயால் 37 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்துகிறது.
ஒவ்வொரு செப்டெம்பர் 21 ஆம் தேதி உலக அல்ஸீமர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை (pittsburgh university) சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் (Neurology researcher) கிர்க் எரிக்சன் தன் ஆய்வில் வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்ஸீமர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.

1.முதுமையில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி,நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

2. சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, டிமென்ஷியா பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாக அறிவித்துள்ளது.

3.வயதாகி விட்டால், இருட்டை தவிர்த்து, வெளிச்சம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும் வகையில் நடக்க வேண்டும்.இந்த முறையை பின் பற்றினால் வயதான காலத்தில் வரும் டிமென்ஷியா பாதிப்பு குறையும் வாய்ப்பு உண்டு என்று
நிபுணர்கள் கூறுகின்றனர்.

4.அநேக முதியவர்கள் இப்பொழுது தனிமை வாழ்க்கை வாழ்கின்றனர்.வீட்டிலேயே வசித்தாலும் தனி அறையில் தனிமைப்படுத்தபடுகின்றனர்.இந்நிலை மாறி இளையவர்கள் அனுசரணையாகவும்,அன்பாகவும் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்ற தைரியத்தை எப்பொழுதும் ஊட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

5.இந்நோய்க்கும் அலுமினியத்திற்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அலுமினியப் பாத்திரத்தை தொடர்ந்து உபயோகப் படுத்தியதால்தான் இந்நோய் வந்தது என்பதை உறுதியாக கூற முடியாவிட்டாலும் அலுமினிய பாத்திரங்களின் உபயோகத்தினை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளப்படவேண்டும்.

6.அதீத சிந்தனையும் இநோய்க்கு காரணம் என்கின்றனர்.பிரபல எழுத்தாளர் நாவலாசிரியை கோமகளின் இந்நோய்க்கு காரணி அவர் அதிகம் அதிகமாக சிந்தித்ததுதான் என்கின்றார்கள்.

அமெரிக்கா முன்னாள் அதிபர் ரெனால்டு ரீகன்,குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி,பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக்,பிரித்தானிய முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காமன்வெல்த் ஊழல் வழக்கு சுரேஷ் கல்மாடி,எழுத்தாளர் கோமகள் போன்றோர் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலியோ,அம்மை போன்ற நோய்கள் விரட்டப்பட்டது போல் இந்நோயும் உலகில் இருந்து விரட்டப்பட்டு அல்ஸீமர் இல்லாத உலகமாக திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும்.







May 12, 2012

தாவரவாழ்க்கை


வயதோ எழுபதுகளில்..தோற்றமோ ஐம்பதுகளை நினைவுபடுத்தும்.நாற்பதை தொடும் முன்னரே நரையோடும் சிகைக்காரர்கள் இருக்கும் பொழுது என்பதை தொடப்போகும் இவருக்கு பூதக்கண்ணாடிவைத்துத்தான் நரையைதேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.

முதுமைக்குறிய இரத்த அழுத்தம்,சர்க்கரை,பார்வைக்குறைபாடு,இதயநோய்,இத்யாதிகள் எதுவுமே இல்லை.

ஆனால்...

வயதீகத்தினால் ஏற்படும் நினைவுதிறன் இழப்பு நோயால் அவரும் அவரைச்சார்ந்தவர்களும் ஒவ்வோரு நாளையும் ஒவ்வொரு வருடங்களாக கழித்துக்கொண்டுள்ளனர்.இத்தனை ஆரோக்கியமாகவும் தோற்றத்தில் இளமையாகவும் இந்த வயதிலும் இருக்கும் ஒருவருக்கு இப்படி ஒரு பெருங்குறை.

இது உடனே நடந்த அதிசயமல்ல.சுமார் ஆறேழு வருடங்களுக்கு முன் பார்த்த பொழுது சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லவும்,ஆப்பிளைக்காட்டி முருங்கைக்காய் என்றும்,புத்தகத்தைப்பார்த்து டெலிபோன் என்று அதனை காதில் வைத்து பேசிக்கொண்டிருந்தவர்,நாளடைவில் நினைவு இழப்பு அதிகமாவதைக் கண்கூடாக கண்டு அரண்டு போனது அவரது குடும்பம்.

இறந்து போன உறவினரின் சடலத்தைப்பார்த்து ”ஏன் இவர் இவ்வளவு நேரம் தூங்கிகொண்டே இருக்கிறார்”என்று கேட்பதுமட்டுமல்லாமல்,அத்தனைக்கூட்டத்தின் மத்தியிலும் இறந்தவரின் முகத்துணியை நீக்கி “எழுந்திரும்மா.எவ்வளவு நேரம் தூங்குவே”என்று கன்னத்தை தட்டி எழுப்பிய அவலத்தை கண்ட பொழுது நெஞ்சம் பதறிப்போய் விட்டது.

இதுவே நாளடைவில்,பெற்ற பிள்ளைகளைத்தெரியாமல்,நேரம் தெரியாமல்,பசிப்பதை சொல்லத்தெரியாமல்,இயற்கைகடன்களை கழிப்பது பற்றி தெரியாமல்,இவ்வளவு ஏன் மொழி தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு உயிர் மட்டும் இருக்கும் பொம்மையாய்,படிப்படியாக,தன்னையும் சுற்றத்தையும் மறந்து தாவரவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த ஜீவன்கள் படும் பாட்டினை கண்ணுற்றால் கல்லும் கரைந்து விடும்.

நான் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் வயது முதிர்ந்தவர்களை கண்டிப்பாகத்தேடி போய்ப்பார்ப்பேன்.சென்ற முறை சென்று இருந்த பொழுது ஒரு நண்பியின் தாயாருக்கும் இதே குறைபாடு.விசாரித்ததில் நிறைய பேருக்கு இப்படி உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

இந்த நினைவு இழப்பு நோயை மருத்துவ உலகம் டிமென்ஷியா (Dementia) என்று அழைக்கின்றது.
வயதானவர்களில் இந்த நினைவு இழப்பு நோய் தாக்கப்பட்டவர்கள் உலகில் முப்பது சதவிகிதத்தினர் இருக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நோய் ஏற்படுவதற்கான நிஜக்காரணிகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.அதேபோல் இந்நோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய மருந்தும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இது ஒரே நாளிலோ.அல்லது சில நாட்களிலோ உண்டாகும் நோயல்ல. மாதக்கணக்கில் வருடக்கணக்கில் முதியவர்களிடம் இருந்து மறதி மூலம் வெளிப்படும் பெரும் குறைபாடாகும்.

முதுமையில் கொடுமையான நோயான டிமென்ஷியாவை உணர்வுப்பூர்வமாக அலசினோம்.அடுத்த ஒரு இடுகையில் விஞ்ஞானப்பூர்வமாக அலசுவோம்.

என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக!

May 7, 2012

அஞ்சறைப்பெட்டி - 8

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் செவன் ஒண்டர்ஸ் என்று உலக அதிசயங்கள் ஏழினையும் செயற்கையாக உருவாக்கி சீனப்பெருஞ்சுவரையும் உருவாக்கி சீனப்பெருஞ்சுவரில் ஏறி எல்லா அதிசயங்களையும் கண்டு களிக்கும் படி உருவாக்கி சென்ற வாரம் திறப்புவிழாவும் நிகழ்த்தி நாளிதழ்களில் விளம்பரமும் செய்து இருந்தனர்.

அத்தனையும் நேரில் போய் பார்த்தால் லட்சங்கள் பல செலவாகும்.அது நடக்கக்கூடிய காரியமில்லை என்று ஒரு பெரிய பட்டாளத்துடன் ஏழு அதிசயங்கள் பார்க்க கிளம்பினோம்.கடற்கரை சாலையில் நுழைந்து சற்று தூரம் போனாலே பிரமாண்டமாக தாஜ்மகால் தூரத்தே தெரிந்து சென்னையில்தான் இருக்கிறோமா என்ற உணர்வினை ஏற்படுத்தியது.

அருகில் போய்ப்பார்த்தால் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அப்பொழுதுதான் உருவாகிக்கொண்டிருந்தது.டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விற்பனை மந்தமாக நடந்து கொண்டிருந்தது. இவ்வளவுதூரம் வந்தாச்சே என்று பலர் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.சம்மர் ஹாலிடே முடியும் தருவாய் வரப்போகின்றதே என்று அரையும் குறையுமாக திறப்புவிழா நடத்தி விட்டனர்.பணத்தைக்கட்டி முழுமை இல்லாமல் பார்ப்பதை விட பணிகள் நிறைவடைந்ததும் முழுமையாக கண்டு களிக்கலாம் என்று முன் ஜாக்கிரதையாக திரும்பி விட்டோம்.


**********

சென்னை மக்களை அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது.104டிகிரி வெப்பத்தில் மக்கள் அவனுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.கடற்கரை சாலை,சிறுவர் பூங்கா இருக்கும் சாலை மற்றும் முக்கிய பூங்காக்கள் இருக்கும் சாலை அனைத்தும் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கின்றது.

இது போதாது என்று மெட்ரோ டிரெயின் பணிகள் நடப்பதால் சென்னை ஸ்பென்சரில் இருந்து சைதாப்பேட்டை வரை வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும்.வாகனஓட்டிகள்,குறிப்பாக இரு சக்கரவாகன ஓட்டிகள் நிலை பரிதாபம்தான்.இதை எல்லாம் பார்க்கும் பொழுது மெட்ரோ டிரெய்ன் பணிகள் முடியும் வரை மவுண்ட் ரோடையே உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் என்று எரிச்சல் வருகிறது.நடகின்றகாரியமா?

**********

இந்த கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிந்தோட டிராஃபிக் போலீஸார் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வாகன ஓட்டிகளை பிடித்து பைன் போட்டு வசூல் செய்வது ஜரூராக நடந்து கொண்டுள்ளது.சென்ற வாரம் ஓ எம் ஆர் சாலையில் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டிருந்த காரணத்தினால் இது நோ பார்க்கிங் என்று பைனை போட்டு விட்டனர்.வாகன ஓட்டிகள் பெட்ரோலை நிரப்புவாங்களோ இல்லையோ பர்ஸை நிரப்பிக்கொண்டுதான் செல்லவேண்டும் போலும்.தமிழக அரசுக்கு இந்த சாலை வசூல் அமோக வருமானத்தை உண்டுபண்ணி விடும்.

**********

ஒரு பிரபல வி ஐ பி நீர் மோர்பந்தல் திறப்புவிழாவை பத்திரிகைளில் கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தனர்.வீதியெங்கும் போஸ்டர் வேறு.தினமும் நீர் மோர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வேறு .அந்த வழியாக பல முறை சென்று வருகின்றேன்.ஒரு நாள் கூட நீர் மோர் பானையை கண்ணால் பார்க்கவில்லை.பெரிதாக ஷாமியானா பந்தல், அம்மா படம் ஐயா படம் என்ற அமர்களத்திற்கு இடையில் ஒரு மேசை மீது தண்ணீர் கேனுடன் கேனுக்கு மேல் கிரீடமாக ஒரு கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் தவிர வெறொன்றும் அறியேன் பராபரமே.

**********


இரண்டு கிலோவுக்கும் அதிக எடையில் உள்ள பாறை,கொடுவா,வாவல் வஞ்சிரம் போன்ற அதிக விலையுள்ள மீன்களை மார்கெட்டில் வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஒருவித கெமிக்கல் கலந்த மண்எண்ணை வாடை சாப்பிட விடாமல் தடுக்கிறது.சட்டியுடன் அப்படியே குப்பைக்கு போய் போய் விடும்.தவறுதலாக மண் எண்ணெய் கேன் மீன் மீது கவிழ்ந்து விட்டது போலும் என்று நினைத்து விட்டேன்.சில நாள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பெரிய வகை மீன்கள் வாங்கி சமைக்கும் பொழுது அதே வாசனை மூக்கை சுளிக்க வைத்தது.சமைத்த பின்னர்தான் வாசனையே தெரிகின்றது.பிறகு விசாரிக்கையில் மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை.

**********

சென்னைக்கு புலம் பெயர்ந்த வெளியூர் வாசிகள் பவர்கட்டுக்கு பயந்தே கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பயந்து சென்னையிலேயே அடைக்கலமாகி விட்டனர் உதாரணத்திற்கு நான்.இப்பொழுது காற்றாலை மூலம் மின்சார சப்ளை அதிகரித்ததும் பவர்கட் குறைந்து இப்பொழுது மின்சார சப்ளை சீராக நடைபெற்று வருகின்றது என்பதை அறிந்து அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி விட்டனர்.

**********