April 22, 2011

இனிமை நிறைந்த உலகம் இருக்கு!




நமது கடந்த காலத்தினை சற்று நினைவு கூர்வோம்.இதில் நாம் இழந்த இனிமைகள் எத்தனை?சந்தோஷக்கேடு எவ்வளவு?கஷ்டங்கள் எவ்வளவு?மனசஞ்சலம் எத்தனை?வேதனை எத்தனை?அதன் காரணிகளை சற்று யோசியுங்கள்.அநேகம் நாமாகவே இருப்போம்.அதேபோல் நமது செய்கையினால் பிற மனங்களை எவ்வளவு நோகடித்து இருக்கின்றோம்.பிறரது சின்ன சின்ன சந்தோஷங்களை சிதறடித்திருக்கின்றோம்.ரசனைகளை கொத்தி இருக்கின்றோம் என்று சற்று நேரம் ஆராயுங்கள் அமைதியாக.உண்மை புரிந்து நாணம் கொள்ளத்தோன்றும்.இப்படி எல்லாம் நடந்து சந்தோஷ தருணங்களை அநியாயமாக இழந்து விட்டோமே என்று மனம் உருகிவிடும்.

நம் வாழ்வில் நடந்த பற்பல நிகழ்வுகளை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.கணவர் டூரில் இருந்து வரும் பொழுது வாங்கி வந்த காட்டன் சேலையினை பார்த்து விட்டு உதடு பிதுக்கி “உங்கள் செலக்‌ஷனோ செலக்‌ஷன்..ஏங்க மனுஷனுக்கு கொஞ்சமாவது ரசனை வேண்டாம்?”இப்படி வாய்களில் இருந்து வந்து விழும் வார்த்தைகளில் கணவரின் சிறிய எதிர்பார்ப்பு அப்படியே கசங்கிப்போய் இருக்கும்.

குடும்பத்துடன் ஒரு பிக்னிக் செல்கின்றோம்.மனதில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினையால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டால் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் தொலைந்து விடும்.வீட்டில் ஒரு விஷேஷ காரியம் நடக்கும் பொழுது ஒருவர் மட்டும் கோபத்தில் முறுக்கிகொண்டிருந்தால் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய்இருக்கும்.

மாமியார் ஆசை ஆசையாக கேட்ட கைகுத்தல் அரிசி சாப்பாட்டை ஒரு நாளாவது செய்து கொடுத்து இருகின்றோமா?வெளியில் போய் வரும் பொழுது குழந்தைகளுக்கு திண்பண்டங்களும்,பொம்மைகளும் வாங்கி வரும் பொழுது மாமியாருக்கென அவருக்கு பிடித்த லாலாகடை காராசேவ்வை பொட்டலம் கட்டி வாங்கி வந்து இருப்போமா?இப்பொழுது வாங்கிக்கொடுக்க மனம் பூரா ஆசை இருந்தாலும் இப்பொழுது வாங்கி சாப்பிட அவர் உயிரோடு இல்லையே?என்பதினை நினைத்துப்பார்த்தால் உங்கள் கண்களில் கண்ணீர் மளுக் என்று வரும்.வாழ்வில் வரும் நிகழ்வுகள் எது ஒன்றும் திரும்பி வரப்போவதில்லை.அந்த நிகழ்வுகளை நம் மகிழ்சிக்குறியதாகவும்,பிறரை மகிழ்சிக்குட்படுத்துவதாகவும் அமைத்தால் வாழ் நாள் பூராவும் அந்நிகழ்வுகள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்து நிற்கும்.

ஒருவர் நம்மை கோபப்படுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் இருந்து நம்மை கோபப்படுத்தினால் திருப்பி அதனையே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழித்து விட்டு அன்று முழுக்க மனதில் குறு குறுப்புடன் உழன்று,நம் குடும்பத்தினரையும் நம் செய்கையால் உம்மணாமூஞ்சிகளாக்காமல் நமக்கு கோபமூட்டியவர் மீது உள்ள பலிவாங்கும் படலத்தை தவிர்த்து “பாவம் .என்ன கஷ்டமோ?வார்த்தைகளால் கொட்டி விட்டாள்.அவள் புத்தி அவ்வளவுதான்.போனால் போகின்றது”என்று விட்டுக்கொடுத்தோமானால் கிடைப்பது மன நிறைவு.உங்கள் அமைதி பார்த்து கோபப்பட்டவர் உங்களிடம் மன்னிப்பையும் கேட்டு உங்களை சந்தோஷப்படுத்துவார்.

வாழ்க்கை என்பதை நிறைவாக,சந்தோஷமாக,மகிழ்வாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது அனைத்து மனிதர்களின் ஆசை.அதனை இனிமையான தருணங்களாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.குடும்பத்தில் ஒரு பிரச்சினை தோன்றி விட்டால் நல்ல முறையில் பேசி தீர்த்து சிக்கல்களை களைந்து,விட்டுக்கொடுத்து சுமுகமாக்க முன் வரவேண்டுமே தவிர கொடூர வார்த்தைகள் பகிர்தல்,மனக்‌கஷ்டங்கள்,தான் என்ற ஈகோ அனைத்தையும் விட்டொழித்து இனிமையை தக்க வைத்துக்கொள்வதுதான் சிறப்பு.இதை விடுத்து விட்டுக்கொடுக்காமையும்,பிடிவாதமும்,அகம்பாவமும் கஷ்டங்களையும்,நஷ்டங்களையும் பின் விளைவாகத்தரும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.இனி வரும் நாளெல்லாம் நாமும் இனிமையாக இருந்து,நம்மை சுற்றி இருப்பவர்களையும் இனிமை நிறைந்தவர்களாக மாற்றி வாழ்வின் நலவுகளை நம் செயல்களால் இனியவைகளாக அமைத்துக்கொள்வோம்.

April 18, 2011

லைஃப் டைம் ஹேப்பி டூர்



லைஃப் டைம் ஹேப்பி டூர்

டூரை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.ஒன்று செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்.மற்றொன்று பேக்கேஜ் டூர்.

செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்:

1.நீங்களாகவே திட்டமிட்டு டூர் செல்வதென்றால் பக்காவாக திட்டமிட்டு ஒவ்வொரு சிறு திட்டங்களையும் டைரி ஒன்றில் குறிப்பெழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
2.செலவுக்கான தொகையை அனைத்தும் பணமாக வைத்திராமல்,குடும்ப உறுப்பினரகள் அனைவரது டெபிட்,கிரடிட் கார்டுகளை அவ்வப்பொழுது உபயோகித்துக்கொள்ளுங்கள்.

3.குழந்தைகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் தங்கி இருக்கும் ஹோட்டல் முகவரி.போன் நம்பர்,கைபேசி நம்பர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4.மலிவாக கிடைக்கின்றதே என்று கண்ட உணவகங்களில் சாப்பிட்டு வயிற்றை அப்செட் செய்து கொள்ளாதீர்கள்.

5.குறிப்பிட்ட இடத்துக்கு தங்கி இருக்கும் இடத்தில் இருந்து செல்வதென்றால் அந்த இடத்தைப்பற்றி முன்னரே அறிந்து கொள்வதோடு தங்கி இருக்கும் இடத்திற்கும் ,செல்லக்கூடிய ஸ்பாட்டுக்குமான தூரம்,ஆட்டோ டாக்ஸி கட்டணம் ஆகியவற்றை கேட்டு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

6.செல்லும் இடத்தில் தரமான உணவு எங்கு கிடைக்கும் என்று தங்கி இருக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டாலும் உதவுவார்கள்.

7.செலவுகளை சிக்கனம் செய்ய ஒரு வேளைக்கு டிப் டீ,ஒட்ஸ்,கப் ஓ நூடுல்ஸ்,பிரட் பட்டர் ஜாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய அமவுண்ட் மிச்சமாகும்.தயாரிப்பதும் சுலபம்.

8.உறவினர் வீடுகளில் தங்குவதென்றால் அவர்களுக்கு துளியும் சிரமம் தராமல் கவனத்துடன் செயல்படுங்கள்.அவர்கள் வீட்டில் இருந்து சோப்,பேஸ்ட்,ஷாம்பூ,சீப்பு,எண்ணெய்,டவல் என்று எதிர்பர்க்காமல் அனைத்தையும் நீங்களே எடுத்து சென்றுவிடுங்கள்.

9.ஊரில் இருந்து எடுத்து வந்தேன் என்று ஒரு கிலோ ஸ்வீட் பாக்கெட்டும்,அரைகிலோ மிக்சர் பாக்கெட்டையும் கொடுத்து கடமை முடிந்தது என்றிராமல் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பால் பாக்கெட்டுகள்,பிரட் பாக்கெட்டுகள்,பட்டர்,நெய்,காய்கறிகள்,அசைவ உணவுவகைகள் சாப்பிடுபவர்கள் என்றால் சிக்கன்.மட்டன்.முட்டைகள் போன்றவற்றை வாங்கி வந்து கொடுத்தால் தயக்கத்துடன்,லஜ்ஜையுடன் அவர்கள் பெற்றுக்கொண்டாலும்,கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.

10.இறுதியாக உறவினரிடம் அதிக எதிர்பார்பின்றி,கிடைக்கும் உபசரணைகளில் முழு திருப்தியுற்று, குறைகளை களைத்தெரிந்து விட்டு இன்பமுடன் பிரியாவிடை பெறுங்கள்.அந்த அனுபவம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும்.

பேக்கேஜ் டூர்:

1.குழுக்களோடு சேர்ந்து செல்லும் டூரில் சகிப்புத்தன்மையும்,பொறுமை உணர்வும்,விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமிருந்தால் அந்த டூர் இன்பகரமாக அமையும்.

2.ஓய்வென்பது சொற்ப கால அவகாசத்தில்த்தான் குழு சுற்றுலாவில் கிடைப்பதால் ரெஃப்ரஷ் செய்து கொள்ள ஜுஸ்,க்ளுகோஸ் போன்றவற்றை கையோடு எடுத்து செல்லுங்கள்.வலி நிவாரண மருந்துகள்,தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.

3.மற்ற பயணிகளுடன் உங்களை கம்பேர் பண்ணாமல் இருந்தாலே டூர் சுகமாக அமையும்.

4.வாகனங்களில் செல்லும் பொழுது வசதியான இருக்கை,ஜன்னலோர இருக்கை,என்று அடம் பிடிக்காதீர்கள்.அதே போல் தங்கி இருக்கும் அறை ரோட்டை பார்த்தாற்போல் வேண்டும்,ரூம் சர்வீஸ் சரி இல்லை,சாப்பாடு சூடு இல்லை என்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போங்கள்.

5.சுற்றிப்பார்க்கும் பொழுது கூட வந்த பயணிகளை விட்டும் தனித்து சென்று விடாதீர்கள்.சக பயணிகளுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அவர்களுடனான கைபேசி நம்பரை வாங்கி சேமித்துக்கொள்ளுங்கள்.அவசரத்திற்கு உதவலாம்.

6.இப்பொழுது டிஜிட்டல் கேமரா இல்லாத வீடுகளே இல்லை எனலாம்..இயன்றவரை ,புகைபடங்களும்,வீடியோவும் எடுக்க கூச்சப்படாதீர்கள்.டூர் முடிந்து போனாலும் காலாகாலத்திற்கும் வைத்து பார்த்து மகிழலாம்.படங்களை வெறும் பென்டிரைவிலும்,பி சியிலும்,சிடிக்களிலும் சேமித்து வைப்பதை விட பிரிண்டுகள் போட்டு ஆல்பமாக வைத்துக்கொள்ளலாம்.

7.சுற்றுலா நிர்வாகத்தினரே சாப்பாடு தருவதானாலும்,நொறுக்குத்தீனிகளை கையுடன் எடுத்துச்செல்வதின் மூலம் குழந்தைகளின் பிடுங்கள்களில் இருந்து தப்பிக்கலாம்.கையுடன் எப்பொழுது தண்ணீர் பாட்டில்கள் இருக்கட்டும்.

8.பெரிய பாலித்தீன் பேக்குகள் எடுத்துச்சென்று அழுக்குத்துணிகளை அதில் போட்டு வைத்து டூரை முடித்துக்கொண்டு திரும்பும் பொழுது அந்த பைகளுடன் சூட்கேஸ்களில் திணித்துக்கொண்டு ஊர் திரும்பலாம்.

9.கோபத்தில் சப்தமிட்டு பேசுவது,மனைவியிடமோ அல்லது கணவரிடமோ குழந்தைகளிடமோ கோபம் வந்தால் அதை நாண்கு பேர்களுக்கு முன்பு வெளிப்படுதுவது,குடும்ப விஷயங்களை,குறைநிறைகளை சக பயணிகளின் முன்பு அலசுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.ஏனெனில் உங்களின் பால் சகபயணிகள் வைத்திருக்கும் மதிப்பும் அன்பும் தடாலென்று சரிந்து போகலாம்.

10.குழந்தைகளை அழவைத்து பார்த்துக்கொண்டிராதீர்கள்.சட் என்று அழுகையை அடக்கி சமாதானப்படுத்துங்கள்.அது சக பயணிகளுக்கு இம்சையாக இருக்கும்.

என்ன டூர் கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?ஹாப்பி ஜர்ணி!

April 16, 2011

செயற்கைத்தோட்டம்





இம்மாத இவள் புதியவள் இதழில் எனது “இயற்கையாய் ஒரு செயற்கைத்தோட்டம்”என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.படத்தினை ஜூம் செய்து பார்க்கவும். இவள் புதியவள் இதழ் நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

பச்சை பசேலென்ற புல் தரை,கை தேர்ந்த தோட்டக்காரரால் அமைக்கப்பட்டது போன்றஅழகாக அமைத்த வேலி,பசுமை கொஞ்சும் செடிகொடிகள்,வெள்ளை,சிகப்பு,மஞ்சள்,பிங்க் வர்ண ரோஜாப்பூக்கள் பூத்துக்குலுங்கும் ரோஜாசெடி வகைகள்,மெலிதாய் சிரிக்கும் செம்பருத்திப்பூக்கள்,உயர்ந்து நிற்கும் பாம் செடிகள்,கண்ணைக்கவரும் மேப்பல்ஸ் இலைகள்,நாவூரவைக்கும் ஆஸ்த்ரேலியன் திராட்சைக் குலைகள் வகை வகையான கருத்தை கவரும் வண்ணம் குரோட்டன்ஸ் வகைகள்,ஆங்காங்கே துக்கணாங்குருவிக்கூட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்கணாங்குருவிகள்,மலர்களை முகர்ந்த படி படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்,மேலே தொங்கும் ஹரிக்கோன் விளக்கு இத்யாதி..இத்யாதி..

தோட்டத்தினுள் நுழையும் பொழுதே நிஜத்தோட்டத்தினுள் நுழைந்துவிட்டோம் என்ற பரவசத்தை ஏற்படுத்தும் உயிரோட்டம் அந்த செயற்கைத்தோட்டத்தில் நிரம்பி வழிகின்றது என்பது நான் அங்கு கண்ட நிஜம்.

சென்னை எக்மோரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெஹருன்னிஷா சலீம் கான் ரசனையுடன் தனது மொட்டைமாடியில் இந்த அழகிய தோட்டத்தினை உருவாக்கி உள்ளார்.இதற்காக இவர் கரன்ஸிகள் மட்டுமின்றி,தனது நேரத்தையும்,ரசனையையும்,கற்பனை வளத்தையும் நிறையவே செலவு செய்து இருக்கின்றார்.

"எப்படி இந்த செயற்கைத்தோட்டம் அமைக்கும் எண்ணம் வந்தது?இயற்கையாக தோட்டம் அமைத்தால் செலவும்,பராமரிப்பு சிரமுமும் குறைவுதானே?"எனக்கேட்ட பொழுது சிரித்த வண்ணம்"இயற்கை தோட்டம் அமைக்கும் எண்ணம் இருந்தாலும் அடிக்கடி ஊருக்கு சென்று விடுவதால் பராமரிப்பில் சிக்கல் ஆகி விடுகின்றது.ஆகவே என் தோட்டக் கனவை இந்த செயற்கைத்தோட்டம் பூர்த்தி செய்து வைக்கின்றது"என்றார்.

தோட்டம் அமைக்க தேவையான மரங்கள்,இலைகள்,கொடிகள் புற்தரை அனைத்தும் சைனா,சிங்கப்பூர்,கொழும்பு மற்றும் சென்னையில் உள்ள பாரீஸ்கார்னரில் இருந்து கொள்முதல் செய்து தோட்டத்தினை அமைத்து இருக்கின்றார்.

வாரம் ஒரு முறை ஒரு பகல் தினத்தை முழுக்க தோட்டத்தை சுத்தம் செய்வதிலும்,ஸ்ப்ரேயர்,ஹோஸ் பைப் மூலம் தண்ணீர் அடித்து,துணிகள் கொண்டு துடைத்து உதிர்ந்த இலைகளை சரி செய்து மிக கவனத்துடன் பராமரித்து வருகின்றார்.

பக்கவாட்டில் மூங்கிலிலான வேலியைப்போல் சுவரில் டைல்ஸ் பதித்து இருப்பது தோட்டத்திற்கே மகுடம் வைத்தது போன்ற தோற்றத்தைதருகின்றது.ஆங்காங்கே போகஸ் விளக்குகள் அமைத்து இருப்பது இரவு நேரத்திலும் தோட்டத்தினை பளீரிட செய்கின்றது.வண்ண வண்ண கலர்கள் மாறி மாறிக்காட்டும் வகையிலும் விளக்குகள் அமைத்து அழகு தோட்டத்தினை கலர்ஃபுல் ஆக வைத்து இருப்பது ஹை லைட்.

தூக்கணாங்குருவிகளும்,வண்ணத்துப்பூச்சிகளும் குழந்தைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தி விடும்.சிறிய டீபாயை சுற்றி சேர்கள் போட்டு அமர்ந்து கையில் சூடான தேநீர் கோப்பைகளுடன் இந்த கார்டனில் உட்கார்ந்து அளவாளாவினால் அந்த தருணத்தை மறக்கவே முடியாது.

மேலதிக படங்கள் கீழே.














April 14, 2011

எனது முதல் கட்டுரை






நான் சிறுமியாக இருந்தபொழுது பத்திரிகைகள் படிக்க மட்டுமின்றி பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் நாட்டம் அதிகம் இருந்து வந்தது.பற்பல பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுத ஆரம்பித்து நாளடைவில் குறிப்புகள் கொடுக்கவும் ஆரம்பித்தேன்.நான் அனுப்பும் குறிப்புகள் வெளியான உற்சாகத்தில் என் பதின்ம வயதில் நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.

வரதட்சணை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையைத்தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு தலைப்பிலும் என் கட்டுரைகள் ஜமாஅத்துல் உலமா மாத இதழில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.என் எழுத்தார்வத்திற்கு வித்திட்டு உரம் போட்டு வளர்த்தவர்கள் மறைந்த பெரியவர்,ஜமாஅத்துல் உலமா மாத இதழ் ஆசிரியரும் மர்ஹூம் அல்லாமா அபுல்ஹசன் ஷாதலி சாஹிப் அவர்களை இன்னேரம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றேன். பல வருடங்களுக்கு முன் வெளியான என் முதல் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கட்டுரையைப்படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.