January 23, 2014

வீடு வாடகைக்கு....



வீட்டு உரிமயாளர்கள் என்பது இங்கு சென்னையைப்பொருத்தவரை வாடகைதாரர்களுக்கு ஹிட்லர்கள் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில பல வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது.

வீட்டு வாடகைக்கு என்று போனால் எங்கே வேலை பார்க்கறீங்க?வயசானவர்கள் இருக்காங்களா?சின்ன குழந்தைகள் இருக்கா?எத்தனை பேர் இருக்கீங்க?கவுச்சி சாப்பிடுவீர்களா?அடிக்கடி சொந்தக்காரங்க வந்து தங்குவார்களா?ராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களா?அம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதா?வாடகைக்கு ரசீது கேட்பீர்களா?உங்கள் பொருட்கள் எல்லாம் ஒரு டெம்போவில் அடங்கி விடுமா? மலை அளவு பொறுமை சாலிகளையே புரட்டிப்போடும் அளவுக்கு தேவை அற்ற எரிச்சலூட்டும் கேள்விகளை எல்லாம் சமாளித்து எதிர் பாராத அளவு வாடகையையும்,அட்வான்சையும் கேட்டு வாய் பிளந்து வேறு வழி இல்லாமல் கெஞ்சி கூத்தாடி குறைத்து வாடகைக்கு குடி வந்தால் அதற்கப்புறமாவது நிம்மதி இருக்குமா?

“யாரைக்கேட்டுட்டு டிரில் போடுறீங்க..முதல்லே அதை நிறுத்துங்க..”

“கவுச்சி சாப்பிடுவீங்கன்னு சொன்னீங்கதான்.நானும் ஒத்துக்கொண்டேன்தான்.அதுக்காக நாள் கிழமை கூட பார்க்காமல் சமைக்கிறதா?”

“உங்க சொந்தக்காரங்க வந்து ரெண்டு நாளைக்கும் மேலாகுது இன்னும் போகலியா?ரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதே?”

“என்னது... டமால்ன்னு சப்தம்? எவர்சில்வர் பாத்திரம் கீழே விழுந்து விட்டதா?மண்டைக்குள் வந்து எதோ விழுந்த மாதிரி ..இனியாவது ஜாக்கிரதையாக இருங்க”

“பாப்பா நொய் நொய்ன்னு அழுதுட்டே இருந்ததே.ராத்திரி பூரா தூக்கமே இல்லை.கொஞ்சம் அழாமல் பார்த்துக்கக்கூடாது”

இப்படி எக்குதப்பான கேள்விகளை எல்லம் சகித்து,பொறுமையாக பதில் சொல்லியாக வேண்டும் என்பது வாடகை தாரர்களின் தலைவிதி.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்படும் தரகர்கள் எக்கசக்க வாடகையை உயர்த்தி விடுகின்றனர்.சென்ற வருடம் ஒரு குடித்தனக்காரரை வாடகைக்கு அமர்த்தித்தந்த தரகர் மறு வருடம் வீட்டு உரிமையாளரிடம் சென்று அவர்களை காலி செய்யுங்கள்.நான் அதைவிட அதிக வாடகையில் இன்னொருவரை அழைத்து வருகிறேன் என்று கமிஷனுக்கு ஆசைப்பட,வாடகை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய முனைகிறார்..இனி என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சாமான் சட்டிகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்துக்கு மாறும் அவலத்துக்கு உள்ளாகின்றனர்.

20 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்கும் வாடகைதாரகள் படும் அவலத்தை விட குறைந்த அளவு வாடகையில் பட்ஜெட் வீடுகளில் இருப்பவர்கள் படும் அவலம் இன்னும் அதிகமே.

வீட்டு வாடகை 4000 என்று எடுத்துக்கொண்டால் மின்சாரக்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.முறைவாசல்,தண்ணீர்,கோலப்பொடி,துடைப்பம்,பினாயில்,பிளீச்சிங் பவுடர் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு போட்டு காசு பறிக்கின்றனர்.

இரவு பத்து மணி ஆகிவிட்டால் வீட்டு உரிமையாளர்களால் கேட் பூட்டப்பட்டு விடுகிறது.அதன் பிறகு வருபவர்கள் கெஞ்சி,கூத்தாடி வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டுதான் உள்ளே அனுமதிக்கப்படுன்றனர்.

பல இடங்களில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்தும் வாடகையாளர்களின் கார்களை காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . கார் விட தனியாக வாடகை கேட்கின்றனர்.அல்லது குடித்தனம் இல்லாத ஒருவரின் காரை உள்ளே விட அனுமதித்து அதற்கு தனி வாடகை பெற்று வருகின்றனர்.

காசோலையை வாடகைக்கு வாங்கிக்கொள்ளாதவர்களும்,வாடகைக்கு ரசீது கேட்டால் கூட 1000 தந்தால் ரசீது தருவேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.

மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக காணப்பட்டாலும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடும் பெரிய மனதுக்கார வீட்டு உரிமையாளர்கள் எண்ணிலடாங்காது.

தேவைக்கு ஆணி அடித்தால் ஆப்பு வைக்கும் உரிமையாளர்,பக்கத்திலேயே வீட்டு உரிமையாளர் குடி இருந்து விட்டால் பல்லை காட்டியே பல் சுளுக்கிக்கொள்ளும் வாடகை தாரர், உரிமையாளர்களின் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து அடங்கிப்போகும் வாடகையாளர்களின் குழந்தைகள்,அவ்வப்பொழுது உரிமையாளர்கள் ஏவும் வேலைகளையும் செய்வது.குழந்தைகளைப்பார்த்து ”டிவி வால்யூமை கம்மி பண்ணுடா.வீட்டு ஓனர் சப்தம் போடப்போகிறார்” என்று குழந்தைகளை அதட்டுவது இதெல்லாம் சகஜமாக நிகழும் நிகழ்வுகள்.

காலி செய்யும் பொழுது அட்வான்சை முழுதாக கொடுப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது.வீட்டை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து விட்டு ஒவ்வொரு குறைகளையும் கண்டு பிடித்து அதற்கெல்லாம் பணத்தைப்பிடித்துக்கொண்டு ஒரு சிறிய தொகையை தருவார்கள்.

இன்னும் சிலர் நாங்கள் தரும் பொழுது பெயிண்ட் அடித்து தந்தோம் அதே போல் திருப்பித்தரவேண்டும் என்ற் அடாவடி செய்பவர்களும் உண்டு.

அவை அனைத்திலும் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் ஆனதும் பலர் பெண்ணுக்கு கல்யாணம் மகனுக்கு கல்யாணம் தம்பி குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று கூசாமல் பொய் சொல்லி காலி செய்து அதிக வாடகைக்கு வேறொரு குடும்பத்தினரை அமர்த்துவது.

வாடகைதாரர்கள் வாழ்வில்  இத்தனை கஷ்டங்களும் வருடத்திற்கு ஒரு முறை நடக்குமென்றால்..யோசித்துப்பாருங்கள்...!

அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா?

இதனை இன்னுமொரு  ஒரு பதிவினில் அலசுவோம்.



January 16, 2014

இமாவின் ஃபீஜோவா ரெலிஷ்



சென்னை இண்டர்நேஷனல்  ஏர்போர்டில் டிராலியைத்தள்ளிக்கொண்டே வந்த இமா - க்றிஸ்  தம்பதிகள் நான் ”ஹலோ இமா”என்று சப்தமாக அழைத்ததை சற்றும் எதிர் பார்க்கவில்லை.எங்கேயோ பார்த்துக்கொண்டு,யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தவர்கள் அங்கே என்னைப்பார்த்ததில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி.தான் ஊர் வரப்போவதைப்பற்றி எனக்கு அறிவிக்காமலேயே நான் ஏர்போர்ட் சென்று அழைக்க வந்திருக்கும் பொழுது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லைதானே?

இமாவின் உறவினர்கள் இவ்வாண்டு விடுமுறைக்காக இமா தம்பதிகளை கனடா அழைத்தும்,கனடா செல்லாமல் இந்தியா வந்தது நட்புக்களைக்கண்டு மகிழ்வதற்காக மட்டுமே என்ற காரணத்துக்காகத்தான்  என்பதைப்பார்க்கும் பொழுது நட்புக்கு எத்தனை முக்கியத்துவம் தருகின்றார் என்பதை அறிய முடிகிறது.

பக்கத்து நாட்டில்(கொழும்பு) இருந்து கொண்டே அருகே இருக்கும் இந்தியாவுக்கு வராமல்,மிக தூர தேசத்துக்கு (நியுஸிலாந்த்)சென்று குடி அமர்ந்த பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக இந்தியா  வந்து சென்றார்.இந்திய நட்புக்களின் அன்பும்,நேசமும் மிக சீக்கிரமாக இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.இந்தியாவில் தான் பெற்ற இனிமையான அனுபவங்கள்,சந்தோஷமான தருணங்கள் தாம் இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.

பொதுவாக சமையல் குறிப்புக்கள் கொடுக்கும் நட்புக்களுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் என்று விளையாட்டாக பின்னூட்டம் கொடுப்பார்கள்.அப்படியே நானும் அவரது ஃபீஜோவா ரோல் அப்  சமையல் குறிப்புக்கு //ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:) //இப்படி விளையாட்டாக பின்னூட்டினேன்.இதனை என்றோ மறந்தும் விட்டேன்.

ஆனால் இமா ஃபீஜோவா தயாரிப்பான ஃபீஜோவா ரெலிஷ் பாட்டில் ஒன்றினை என்னிடம் கொடுத்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அவரது மென் சிரிப்பில்தான் எனக்கு மெள்ளமாக புரிந்தது.

ஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.