June 25, 2010

பிய்ந்த பொட்டி பீதாம்பரம்



சிலுசிலுவென்ற வைகாசி மாலை நேரக்காற்று முகத்தைத்தடவ ,எதிரே இருந்த வேப்ப மரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் வாயில் எதனையோ வைத்து விடாப்பிடியாக கடித்துக்கொண்டிருக்க,அதே மரத்தில் அணில் ஒன்று சுறுசுறுப்பாக மேலும்,கீழும் ஏறி தன் அசாத்திய சுறுசுறுப்பை பறைசாற்றிக்கொண்டிருந்தது.தூரத்தே தெரியும் கோவில் கோபுரத்தில் அதற்குள் விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது.எதிர் வீட்டு அம்பிமாமா நந்தியாவட்டை பூக்களை சிறு கூடையில் பறித்திக்கொண்டிருந்தார்.தன் மாலை நேர பூஜைக்காக.ஒரு சிறுவன் சைக்கிள் மணியை டிணிங்..டிணிங் என்று தொடர்படியாக அடித்துக்கொண்டு சென்றது கூட மகேஷுக்கு இனிமையாக இருந்தது.தான் வசிக்கும் நகரத்தில் இப்படி காட்சிகள் காணக்கிடைக்காத காரணத்தினால் அனைத்தையும் ஆர்வமுடன் ரசித்துக்கொண்டிருந்த பொழுது

"தம்பி மகேஷ்.."அப்பாவின் குரல் கேட்டு திரும்பினான்.
"என்னப்பா..மாடியில் இருந்து கீழே ஆளையே காணோம்"

"இல்லேப்பா..பால்கனியில் அமர்ந்து வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.ரம்யமாக பொழுது போச்சு"


கீழே இருந்து பாகீரதியும் வந்து சேர்ந்துகொள்ள பேச்சு களைக்கட்டியது."என்னங்க..கம்பியூட்டர் வந்ததில் இருந்து இந்தபக்கம்,அந்தப்பக்கம் அசையாமல் இருப்பீர்களே.இப்ப அதிசயமாக மகனோட பேச பால்கனிக்கு வந்து விட்டிர்களே"கணவரை வம்புக்கு இழுத்தாள்.

பின்னே என்ன?மகேஷ் கம்பியூட்டர் வாங்கி,நெட் கனெக்ஷன் கொடுத்த இந்த நாண்கு நாளில் மனைவியின் பேச்சை காது கொடுத்துக்கேட்காதவராயிற்றே.


"என்னங்க..நாளைக்கு ஈ பி பில் கட்ற கடைசி தேதி.."

"நம்ம மகேஷுக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும்,முள்ளங்கி சாம்பார்ன்னா மகா இஷ்டம்.அரைகிலோ சேப்பங்கிழங்கும்.சாம்பார்வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுறீங்களா?"

"நம்ம விசாலினி போன் போட்டாள்.என்ன ஆச்சுன்னா.."

ப்படி எதற்குமே பதில் சொல்லாமல் அவரை கம்பியூட்டரே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துஇருக்கும்.பேசி,பேசி அலுத்துப்போகும் பாகீரதி கடைசியில் வெறுத்துப்போய் பையை தூக்கிக்கொண்டு வெளியில் நடையைக்கட்டுவாள்.

சாயங்காலம் ஆச்சுன்னா நாண்கு தெருவையும் வேக நடையில் நடந்து நடைபயிற்சியும்.மார்க்கெட்,ஈபி பில்,போன் பில்,கோவில் ,நண்பர்கள்,உறவினர்கள்,அவ்வப்பொழுது சீட்டுக்கட்டு,என்று சுறுசுறுப்பாக இருந்த அவரது வாழ்க்கை முறை இந்த கம்பியூட்டர் வந்த இந்த நாண்கு நாட்களாக வாழ்கை முறையையே அப்படியே மாற்றிப்போட்டு விட்டது.இதனால் பாகீரதிக்கு மூக்கு முட்ட மனக்குறை.
"அடியே ..பாகீ..ரிடயர்ட் ஆனப்புறம் பொழுதை போக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.ஏதோ என் பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து வந்தான்.அப்பன் கேட்டதுமே ஏன்னு மறு வார்த்தை கேட்காமல் வாங்கிகொடுத்திருக்கான்.நீ குறுக்கே பேசப்படாது."செல்லமாக மனைவியை கடிந்துவிட்டு

"மகேஷ் நல்லதா ஒரு பேரு செலக்ட் பண்ணிக்கொடுப்பா?"

"எதற்கப்பா"

"நான் பிளாக் ஆரம்பிக்கப்போறேன்."

"அட்றா சக்கை..பிசி வாங்கிய நாலே நாளில் பிளாக் எழுதுற அளவுக்கு ஆச்சா?"

"இது என்னோட ரொம்ப நாள் கனவு.அப்பப்ப பிரவுசிங் செண்டர் போய் மற்றவங்களோட பிளாக் படிச்சதில் இருந்து நாமும் ஒரு பி சி வாங்கி பிளாக் ஆரம்பிக்கணும்ன்னு ஆசை"

"கொட்டுமுரசு..பெயர் நல்லா இருக்காப்பா"

"அட..ரொம்ப சீரியஸான பெயரா இருக்கு மகேஷ்"

"வண்ணத்துப்பூச்சி,வாசமலர்,வாடாமலர்.."

மகேஷ் அடுக்கிக்கொண்டே போனான்

"இல்லேப்பா..உனக்கு பிளாக் உலகம் பற்றித்தெரியலே.இப்படி எல்லாம் பெயர் வச்சால் ஒரு பய வரமாட்டான்..நான் ஒரு பெயர் மனசுலே வச்சி இருக்கேன்"

"ம்ம்"

"பிய்ந்த பொட்டி பீதாம்பரம்"

"ஐயே..என்ன பெயருப்பா இது"

"இப்படி தடாலடியா பெயர் வச்சேன்னா பாரு எண்ணி ஒரே மாசத்திலே ஒருசதத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வந்துடுவாங்க.இதே ரீதியில் பதிவு போட்டேன்னா பின்னூட்டமும் வந்து குமிஞ்சுடும்."

"சபாஷ்.சரிப்பா..ஏதோ செய்யுங்க.நானும் அங்கு போனப்புறம் டைம் கிடைக்கும் பொழுது உங்கள் பிளாக் பார்க்கறேன்.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார்ன்னு சொல்லிக்கலாம்"

"படிக்கமட்டும் செய்யாமல் மறக்காமல் பின்னூட்டமும் போட்டுடு.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார் ன்னு சொல்ல மட்டும் செய்யாமல் எல்லோரிடமும் படிச்சுட்டு அவங்களையும் பின்னூட்டமும்,ஓட்டும் மறக்காமல் போட்டுட சொல்லு"

"அது சரி..அதென்ன பிய்ந்த பொட்டி பீதாம்பரம்?பெயரே என்னவோ போல் இருக்கே"

"பிய்ந்த பொட்டின்னா கிழிந்த பொட்டின்னு அர்த்தம்.கிழிந்து போன பொட்டியில் ஒரு பொருட்களும் தங்காது.எல்லாம் கீழே கொட்டிட்டே இருக்கும்.அது மாதிரி என் மூளையில் உதிக்கும் சமாச்சாரங்கள் எல்லாத்தையும் பிளாக்கில் கொட்டிட்டே இருப்பேன்.எப்படி நாம்ம பெயர் வச்சது?"

"அடேங்கப்பா.அசத்துங்க..அசத்துங்க."


ப்புறமென்ன?ஒரு சுபயோக சுபதினத்தன்று "பிய்ந்த பொட்டி பீதாம்பரம்" உதயமாகி விட்டார்.பெயரைப்போலவே பதிவுகளும் இருந்ததால் ஓட்டுகளுக்கும்,பின்னூட்டங்களுக்கும் குறைவில்லை.பீதாம்பரம் எக்கசக்க குஷியாகிவிட்டர்.சாப்பிடும் நேரம்,தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் கம்பியூட்டர் முன்னால் பழி கிடந்தார்.

"அப்பா..மெயில் செக் பண்ணிக்கறேன்"மகேஷ் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

"தம்பி மகேஷு..நீ டிஜிட்டல் கேமரா வைத்து இருகிறேதானே"

"ஆமாப்பா"

"எனக்கு கொடுத்துட்டு புதுசா ஒண்ணு வாங்கீக்கோயேன்"

"ஏன்ப்பா..பதினைந்து நாள்தானே..எதற்கு எடுத்துட்டு வரன்னு அங்கேயே வைத்துட்டு வந்துட்டேன்ப்பா"

"அச்சச்சோ..பரவா இல்லை.நல்லதா இங்கே ஒண்ணு வாங்கிகொடுத்துடுறியாப்பா"

"எதுக்குப்பா அவசரமா டிஜிட்டல் கேமரா?"

"வேறு ஒண்ணும் இல்லைதம்பி.வெளியிலே போகிறச்சே பிடிச்ச காட்சிகளை போட்டொ எடுத்து பிளாக்கில் போடலாமேன்னுதான்"

விடாப்பிடியாக பேசி,மகனை கையோடு கூட்டி சென்று நல்லதொரு கேமரா வங்கினார்.அத்தோடு மகேஷை சனிபகவான் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.

"தம்பி மகேஷு..ஒரு காரை ஹையருக்கு எடுத்துட்டு அப்படியே முட்டுக்காடு,எம்ஜிஎம்,மகாபலிபுரம் என்று குட்டியா டிரிப் அடிக்கலாமா?"

"என்னப்பா திடீர்ன்னு"

"வேறு ஒண்றுமில்லை.. போய் பார்த்தாப்போலேயும் இருக்கும்.போட்டோ பிடிச்சு பிளாக்கில் போட்டாப்போலேயும் இருக்கும்"

டுத்து,மறுக்கும் அளவிற்கு மகேஷ் வளர்க்கபடவில்லையாதலால் அப்பாவின் வேண்டுகோளை தட்டாமல் நிறைவேற்றினான்.

"தம்பி மகேஷு..வர்ரியா..ராத்திரிக்கு ஹோட்டலுக்கு போவோம்"
"என்னப்பா ஆச்சரியமாக இருக்கு.ஹோட்டல் சாப்பாடே உங்களுக்கு ஒத்துக்காதே"

"அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்ப்பா...போய் சாப்பிட்டாப்லேயும் இருக்கும்.நம்ம பிளாக்கில் படம் எடுத்து போட்டாப்போலேயும் இருக்கும்..அவனவன்..கையேந்தி பவன் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை போய் டேஸ்ட் பார்த்துட்டு படத்துடன் பிளாக்கில் போட்டு ஹிட்ஸை அள்ளுறான்கள்.நாமும் டிரை பண்ணலாமேன்னுதான்."

கேஷ் கிளம்பும் வரை சின்னதும் பெரியதுமாக அரை டசன் ஹோட்டலுக்கு சென்று மறக்காமல் போட்டொ எடுத்து மறக்காமல் பதிவும் செய்துவிடுவார் பீதாம்பரம்.

"அடி.. பாகீ..இன்னிக்கு மோர்குழம்பு பண்றியா..நான் படமெடுத்து பிளாக்கில் போடணும்"மனைவியையும் விட்டு வைக்கவில்லை.அதை செய்,இதை செய் என்று பாடாய்படுத்தி போட்டோ தவறாமல் எடுத்துவிட்டுத்தான் மறு வேலைப்பார்ப்பர்.


திவுகள் படித்து விட்டு அவரை தட்டியும்,கொட்டியும் வரும் பின்னூட்டங்களை படித்து ரசித்து,சிரித்து சிலாகிப்பதுமில்லாமல்

"அடி..பாகி சித்த வந்து பாரேன்.இந்த பொண்ணு எப்படி பீட் பேக் கொடுத்து இருக்கான்னு..தம்பி மகேஷு..நீ இங்கே வந்து பாரேன்.இந்த பீட்பேகை படிச்சுப்பாரேன்.இதுக்கு நான் எப்படி பதிலடி கொடுக்கறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்"

ன்ன வேலையாக இருந்தாலும் அவர் அழைத்ததும் வந்து கம்பியூட்டர் முன் வந்து ஆஜர் ஆகிவிடவேண்டும்.மனைவி.மகனை மட்டுமல்ல அவரது பிரண்ட்ஸ்,உறவினர்களை வேறு போனில் அழைத்து மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடக்கும்.


"இதோ.. பாருடா கிச்சா..'அட்றா மச்சான்' ன்னு நான் நேற்று போட்ட பதிவைப்பார்த்தியா?"

"அந்த ஹோட்டலை பற்றி நான் எழுதியதைப்பார்த்தியா?இந்நேரம் அவனுக்கும்வியாபாரம் பிச்சுக்கிட்டு போகும்"

"கந்தசாமிதெருவுலே இருக்கிற பூக்கடையை பற்றி எழுதினேன் பாரு..அந்த ஓனர் சாட்சாத் கடவுளையே பார்க்கற மாதிரி என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டான் மனுஷன்."

"மெயின் ரோட்டிலே பள்ளம் நோண்டிப்போட்டு பத்து நாளாகுது.போட்டோவுடன் காட்டமா ஒரு பதிவு போட்டேன் பாரு..மனுஷன்னா இப்படி சமுதாயசிந்தனை அவசியம் இருக்கணும்.இப்படி எத்தனைபேருக்கு இருக்கும்?ஹ்ம்ம்ம்"
பேச்சு இந்த ரீதியில் இருக்கும்.

"ப்பா..மகேஷு...நாளைக்கு கிளம்புறே..எத்தனை மணிக்கு டாக்சிக்கு சொல்லட்டும்?"

"நைட்டு பத்து மணிக்கு சொல்லிடுங்கப்பா"

"மகேஷு..மறந்துடப்போறேன்.அடுத்த டிஸம்பரில் மறுபடி ஊர் வர்ரச்சே நல்லதா ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர்ரியா"

"இப்பதானே பி சி வாங்கித்தந்தேன்"

"வயசான காலத்திலே சேரிலே உக்காந்துட்டே இருக்க முடியலேப்பா..அப்பப்ப ஷோபாவிலே காலை நீட்டிட்டு மடியில் வச்சிட்டு வர்க் பண்ணலாம்..பெட்டில் சாய்ந்து கொண்டு வர்க் பண்ணலாம்,காத்தாட பால்கனி,மொட்டைமாடியில் உக்காந்துட்டு வர்க் பண்ணலாம்."

".............நல்லதுப்பா.."மகேஷின்குரலில் சுருதி இறங்கியது

"அப்படியே ஒரு பிரிண்டரும் கொண்டு வந்துட்டால் நல்லது.என் பதிவைபூரா பிரிண்ட் போட்டு பைண்டிங் பண்ணி வச்சிக்கலாம்."

"...."

"என்னப்பா..சப்தத்தைக்காணோம்?"

"ஆகட்டும்ப்பா"


டாக்சி ஏர்போர்ட் நோக்கி போய்க்கொண்டிருந்தது.
"தம்பி மகேஷு..டிஸம்பரில் வர்ரச்சே பிரியாவையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு வருவே இல்லியா"

"ம்ம்ம்"

"சின்னவன் நல்லா வளர்ந்து இருக்கானா?"

"ம்ம்"

"படிப்பெல்லாம் எப்படிப்போகுது"

"நல்லாப்போகுதுப்பா"

"ஹ்ம்ம்...எத்தனை காலத்துக்குத்தான் குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டிட்டு இருக்கறது.நானும் நாலு இடத்தை பார்க்கணும்.போறச்சே அந்த சந்தோஷத்தோட நிம்மதியா போய் சேரணும்"

"என்னப்பா..என்ன ஆச்சு..திடீருன்னு இப்படி பேசறீங்க?"

"நானும் யு எஸ் வந்து சுற்றிப்பார்க்கணும்ன்னு ஆசை வந்துடுச்சுப்பா.அங்கே கூட்டிப்போக ஏற்பாடு பண்றியாப்பா?"

ஆவல் மிளிரகேட்டவரை ஆயாசத்தோடு பார்த்தான்.

"ஏம்ப்பா..அதையும் உங்கள் பிளாக்கில் எழுதனும்னா.."தீனமாக ஒலித்தது மகேஷின் குரல்.







June 14, 2010

கில்லாடி,செமகில்லாடி

தமாஷாக கேட்ட கேள்விகளுக்கு ஆர்வமுடன் பங்கெடுத்தும்,பின்னூட்டம் இட்ட அன்புள்ளங்கள்

அதிரா
எல்கே
spicy
கும்மி

அனைவருக்கும் நன்றி.
கேள்விகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்.

பதில்கள் இதோ:
பதில் நம்பர் ஒன்று:சூட்கேஸை அதற்குறிய சாவியால திறந்து உள்ளே பூசணிக்காயை வைக்கவேண்டும்.

பதில் நம்பர் இரண்டு: பூசணிக்காயை வைத்தது போல் சூட்கேஸைத்திறந்து வைக்கக்கூடாது.சூட்கேஸைத்திறந்து உள்ளே இருக்கும் பூசணிக்காயை எடுத்துவிட்டு அதற்க்கப்புறமாக பறங்கிக்காயை வைக்க வேண்டும்.

பதில் நம்பர் மூன்று:வேறு யாரு?கண்காட்சிக்குப்போகாத காய் பறங்கிக்காய்தான்.அதுதான் பத்திரமாக சூட்கேஸுக்குள் இருக்கின்றதே.எப்படிப்போக முடியும்.?

பதில் நம்பர் நான்கு:தக்காளிகள் எல்லாம் கண்காட்சிக்கு போய் விட்டனவே?செடியில் எப்படி இருக்கும்.ஸோ..அந்தம்மா சுலபமாக மோதிரத்தை எடுத்து வந்துவிட்டார்.சரியான பதில்களி கீழ்கண்டவர்கள் கொடுத்துள்ளார்கள.

vanathy has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
ஸாதிகா அக்கா, சூட்கேஸை திறந்து பூசனிக்காயை வைக்கோணும்.
பூசனிக்காயை எடுத்து விட்டு பரங்கி காயை வைக்கோணும்
பரங்கி காய் போக வில்லை. அது தான் சூட்கேஸில் இருக்கே.
கேள்வி நம்பர் 4 க்கு பதில் தெரியாது.

அனு has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
ஹிஹி.. நானும் ட்ரை பண்றேன்..
1. முழு பூசனிக்காயையும் கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்..
2. பூசனிக்காயை வெளியில எடுத்து வச்சிட்டு பரங்கிக்காய கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்.. (பத்மினிக்கு பூசனிக்காய் தானே வேணும் [அ] பத்மினி தான் போயாச்சே [அ] இந்த கேள்வியில பத்மினி வரவேயில்லயே)
3. பரங்கிக்காய் மட்டும் போயிருக்காது.. அதைத் தான் சூட்கேஸுக்குள்ள அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோமே...ஹிஹி
4. அந்த அம்மாவுக்கு பிரச்சனையே இல்ல.. தக்காளிகளை எல்லாம் தான் கண்காட்சிக்கு அனுப்பி வச்சாச்சே.... ஸோ, செடிகளுக்கு நடுவே போய் ஈசியா எடுத்திருவாங்க..
என்னங்க.. என் விடைகள் கரெக்ட்டா?? ஒரே டென்ஷனா இருக்கு.. அந்த வைர நெக்லஸ் வேற என் கண்ணை விட்டு போக மாட்டேன்னுது..

கும்மி has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
1. சூட்கேசைத் 'திறந்து' பூசணிக்காயை வைக்கவேண்டும். வைத்தபின்பு சூட்கேசைத் திருப்பி வைத்து பூசணியை மறைத்து விட வேண்டும்
2. பூசணிக்காயை 'வெளியே எடுத்துவிட்டு' பரங்கிக்காயை வைக்க வேண்டும்.
3. பரங்கிக்காய் போகவில்லை. அதுதான் சூட்கேசுக்குள் இருக்கிறதே
கடைசி கேள்விக்கும் அறிவு பூர்வமான பதில் கெடையாது என்று தெரிகின்றது.

கலாநேசன்
1) சூட்கேஸ் சின்ன சைஸ் தான். ஆனா பூசணிக்காயை விட பெரியது.

2 ) பூசணிக்காயை வெளியே எடுத்துட்டு பறங்கிக்காயை உள்ளே வைக்கலாம்.

3 )பறங்கிக்காய். (அத தான் சூட்கேஸ் உள்ள வச்சிட்டிங்களே )

4 )அந்த அம்மாவும் நெருக்கமாக பயிரிடப்பட்ட தக்காளி செடிக்கிடையே சென்று ஒரு தக்காளிக்கு கூட பழுதில்லாமல் தனது மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஏன்னா வெறும் செடி மட்டும் தான் இருந்தது. எல்லா பழங்களும் கண்காட்சிக்கு போயிடுச்சு.

நான் அதி புத்திசாலின்னு சொன்ன நீங்களும் தான்.

இல்லேன்னு சொன்னா..............

அமைதிச்சாரல்
முதலில் சூட்கேஸை திறந்து அதுல இருக்கிறதையெல்லாம் வெளிய எடுத்து வெச்சுட்டு பூசணிக்காயை வைக்கணும்.
ரெண்டாவது பூசணிக்காயை வெளிய எடுத்துட்டு பறங்கிக்காயை வைக்கணும்.
கண்காட்சிக்கு போகாத காய் பறங்கிக்காய்.. ஏன்னா, அது சூட்கேசுக்குள்ள இல்ல இருக்கு.
தக்காளிக்கு சேதம் வராது. ஏன்னா.. அதெல்லாம் கண்காட்சிக்கு போயிடுச்சு.
எப்பூடீ... பரிசை சட்னு அனுப்பி வையுங்க.

Adimai-Pandian
Hi,
1. Suitcase thiradu poosanikai vaikkanum.
2. Suitcase la irundu Poosanikai veliaya eduthutu parangikai ulla vaikkanum....
3. Parangikai dan pogala... becoz adan suitcase ulla matikiche!!!
4. adana pala peru sollitangale... pinna namba edukku repeat pannitu..... Thanks!!!!

அக்பர்
நண்பர் டாக்டர் சேக்தாவூதுவிற்கு கூகிள் சரியாக வேலை செய்யவில்லையாம். விடையை போனில் சொன்னார். அது இங்கு.
1. பூசணிக்காய் பத்தைகளை சூட்கேசுக்குள் அடுக்கிவைக்க வேண்டும்.
2. பூசணிக்காயை எடுத்து விட்டு பரங்கிக்காய் பத்தைகளை வைக்க வேண்டும்.
3. பரங்கிக்காய் மட்டும் போக முடியாது. ஏன்னா அதுதான் சூட்கேசுக்குள்ளே இருக்கே.
4. தக்காளிதான் சந்தைக்கு போக தயாரா இருக்கே. தக்காளி செடியினூடே சென்றால் பறித்து வைக்கப்பட்ட தக்காளிகளுக்கு எந்த பாதிப்பும் வராது.

இவர்களில் யார் கில்லாடி?யாரெல்லாம் செமகில்லாடி என்று நீங்களே பதிலின் எண்ணிக்கைப்பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்.அனைவருக்கும் நன்றி.

கேள்விகளைக்காண இங்கு கிளிக் செய்யவும்




June 13, 2010

நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?

பூசணிக்காய் படத்தை திருஷ்டிப்பரிகாரம் போல் பெரீசா போட்டு விட்டு நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியான்னு கேள்வி கேட்கறாளே என்று அவசரப்பட்டு வார்த்தையை விட்டுறாதீங்க.பொறுமை..பொறுமை..பொறுமை கடலிலும் பெரிது.இப்பொழுது உங்களுக்கு ஜஸ்ட் ஒரு நாலே நாலு கேள்வி கொடுக்கப்போகிறேன்.பதிலுக்காக நீங்கள் நூற்களை நோக்கி போக வேண்டாம்,என் சைக்ளோபீடியாவை புரட்ட வேண்டாம்,நெட்டில் துளாவ வேண்டாம்.யாரைப்பார்த்தும் காப்பி அடிக்க வேண்டாம்.ஸிம்பில் பதில்.இரண்டுக்கு மேல் சரியான பதில் சொல்லிவிட்டால் நீங்கள் கில்லாடி.மூன்றுக்கும் மேற்பட்ட சரியான பதில்களை சொல்லி விட்டால் நீங்கள் செம கில்லாடி.

சரி ரெடி ஸ்டார்ட்..கேள்வியை ஆரம்பிக்கலாமா?

கேள்வி நம்பர் ஒன்:
ஒரு சின்ன சைஸ் சூட்கேஸ் (நல்லா நோட் பண்ணிக்குங்க சின்ன சைஸ்)உள்ளது(அட வி ஐ பியா?சபாரியா என்றெல்லாம் கேட்கப்படாது)கூடவே ஒரு பெரிய பூசணிக்காய் .பூசணிக்காயில் ஒரு பத்தையை பக்கத்து வீட்டு பத்மினி கேட்கும் முன்னர் அந்த சூட்கேஸுக்குள் முழு பூசணிக்காயையும் எப்படி மறைத்து வைப்பது?(பூசணிக்காய் திருஷ்டி சுற்றிப்போடவா என்றெல்லாம் கேள்விகள் வரப்படாது)



கேள்வி நம்பர் டூ:
செவசெவன்னு குண்டு பறங்கிக்காய்( பருப்பு போட்டு கூட்டு வைக்கவா என்றெல்லாம் கேட்டு டென்ஷன் பண்ணாதீர்கள்.அதெல்லாம் நம்ம ஆல் இன் ஆல் கிட்டே கேட்க வேண்டிய கேள்வி.)அந்த பறங்கிக்காயையும் இந்த சூட்கேஸுக்குள் எப்படி வைப்பது?


கேள்வி நம்பர் த்ரீ:
தலை நகரிலே பெரிய அளவில் காய்கண்காட்சி நடைபெறப்போகின்றது.கண்டிப்பாக எல்லா காய்கறிகளும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்று ஆணை வருகின்றது.உத்தரவுக்கிணங்க எல்லா காய்கறிகளும் மாநாட்டிற்கு போய் விட்டன.ஆனால் ஒரே ஒரு காய் மட்டும் போகவே இல்லை.அது எந்த காய்?(காய்கறிகள் எல்லாம் கண்காட்சி முடிந்ததும் நேரே என் பக்கம் அதிரா வீட்டிற்கு போய் விடும்.அவர் இஷ்டம் போல் கார்விங் பண்ணி நமக்கெல்லாம் காட்சிக்கு வைத்து விடுவார்.
கேள்வி நம்பர் ஃபோர்:
ஒரு பெரிய சதுரத்தில் இடை விடாமல் தக்காளி பயிர் செய்யப்பட்டு இருந்தது.தள தள வென்ற தக்காளிகள் பழுத்து சந்தைக்கு போக தயாராக இருந்தன.அந்த தக்காளி செடியினூடே விலை உயர்ந்த மோதிரத்தை ஒரு குழந்தை தூக்கி எறிந்து விட்டது.அந்த மோதிரத்தை குழந்தையின் தாய் எடுக்க முற்படுகையில் தக்காளியை பயிறிட்டவர் "ஒரு தக்காளிக்கு கூட சேதமில்லாமல் எடுத்து வரவேண்டும்" என்று கண்டிஷன் போட்டு விட்டார்.அந்த அம்மாவும் நெருக்கமாக பயிரிடப்பட்ட தக்காளி செடிக்கிடையே சென்று ஒரு தக்காளிக்கு கூட பழுதில்லாமல் தனது மோதிரத்தை எடுத்து வந்து விட்டார்.அது எப்படி.விடை தெரியாதவர்கள் ங்கொய்யாலே...தக்காளி..வெண்ணெய்..புண்ணாக்கு என்றெல்லாம் சாப்பிடும் பொருளால் வையாமல் கொஞ்சம் யோசித்து பதிலை சொன்னால் "கில்லாடி" "செம கில்லாடி"பட்டங்கள் வழங்கப்படும்.

அத்துடன்
கில்லாடி பட்டம் பெற்றவருக்கு லக்ஷரி ரிஸ்ட் வாட்சும்

செம கில்லாடி பட்டம் பெற்றவர்களுக்கு வைர நெக்லேஸும் பரிசாக வழங்கப்படும்.






































அப்படீன்னு சொல்ல மாட்டேனே!

டிஸ்கி:பதிலுக்காக தயவு செய்து,அன்புகூர்ந்து,பொறுமையுடன் அடுத்த பதிவுவரை காத்திருப்பீர்களென நம்புகிறேன்.

பதில்களைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்.


June 11, 2010

அஞ்சறைப்பெட்டி - 2

சென்னையின் கிளைமேட்டே குளு குளு என ஆகிப்போய் விட்டது.கொளுத்தும் கத்திரிவெயிலால் அவதிப்பட்டுவந்த சென்னை வாழ் மக்களுக்கு இந்த பூமழைத்தூவும் தென் மேற்கு பருவமழையின் வரவு ஆனந்தமாக உள்ளது.ரம்யமான சூழ்நிலை மனதிற்கு உற்சாகமாக உள்ளது.அழகான மழை சீஸன் ஆரம்பமாகி விட்டாலும் மழையைக்கண்டதும் மனித மனம் மகிழ்வது போல் இந்த கொசுக்களும் மகிழ்வுடன் படை எடுக்க ஆரம்பித்து விடுமே என்பதை நினைத்தால் மனம் கிலி கொள்கின்றது.சென்ற வருடம் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் சென்னை நகரில் ஆங்காங்கு தண்ணீர் லாரிகளின் தலை காணப்பட்டது.இந்த வருடன் அவ்விதம் இருக்காது என்று நம்புவோம்.


சென்ற வாரம் அமிஞ்சிகரைக்கு ஒரு கடைக்கு சென்று இருந்தேன். கைபேசியில் ஒருவர் பேசும் பேச்சு செவியில் விழும் பொழுது ஏதோ மேடை பேச்சைக்கேட்பது போல் இருந்தது.இத்தனை நாவன்மைக்குறியவர் யாராக இருக்கும் என நிமிர்ந்து பார்த்தால் அன்னாள் பெரியார்தாசனும்,இன்னாள் அப்துல்லாவும் தன் மனைவியாருடன் நின்றிருந்தார்.மீடியாக்களிலும்,வலையுலகிலும் பரபரப்பாக பேசபட்டவர்.நீண்ட நேரம் எங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்."அப்போதய பெரியார் தாசனுக்கும்,இப்போதைய அப்துல்லாவிற்கு என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் குடும்ப ரீதியாக" என்று அவரது மனைவியிடம் கேட்ட பொழுது "செயின் ஸ்மோக்கரான இவர் நான் ஸ்மோக்கர் ஆகி விட்டார்" என்று சிரித்தார்.பெரியார் தாசனிடம் இதே கேள்வியைக்கேட்ட பொழுது அவர் தன் மனைவி வாசுகி அம்மையாரை சுட்டிக்காட்டி"இவர் என்னை ஏற்றுக்கொண்டார்"என்று பெரும் சிரிப்புடன் சொன்னார்.சுவாரஸ்யமாக பல நிமிடங்கள் அந்த ஆதர்ஷ தம்பதிகளுடன் செலவிட்டது மனதிற்கு மகிழ்வாக இருந்தது.
சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.கரங்களில் பைலுடன் கலெக்டர் கனவுகளுடன் மாணவமாணவிகள் அணிவகுத்து செல்வதைப்பார்க்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அரிய சேவையை செய்து வரும் சைதை துரைசாமி அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குறியவர்.வளர்க அவர் நற்தொண்டு.

சிங்காரச்சென்னை சிங்காரச்சென்னை என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் வல்லவர்கள் மாநகரப்பேருந்தை பார்த்து இருக்கமாட்டார்கள்.பேருந்தின் வெளிப்புறத்தில் ஒரு இஞ்சுக்கு தூசி.போதாதற்கு அஷ்டகோணல் உருவத்துடன் சர்ரென எதிரே வருபவர்களுக்கு எமனாக சீறிப்பாய்கின்றது.ஒரு இஞ்ச் படிந்திருக்கும் தூசி ஒன்றரை இஞ்ச் ஆகி சிங்காரச்சென்னையை மேலும் மேலும் அசிங்கார சென்னையாக மாற்றி வருவதற்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை டிராஃபிக்கை நினைத்தால் வெளியில் கிளம்பவே எரிச்சலாக உள்ளது.அதிலும் சிக்னல் விளக்கு இல்லாத இடங்களில் கேட்கவே வேண்டாம்.டிராஃபிக்கை கட்டுப்படுத்தும் போலீஸ் வீட்டுக்கவலையோ என்னவோ ஒரு புறத்தை மறந்தே விடுகின்றார்.கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரத்தையும் பார்ப்பதே இல்லை.அந்த புறகணிக்கபட்ட பக்கத்து வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டு நின்று கொண்டிருக்கும் டிராஃபிக் போலீஸுக்கு ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது.இப்படி மாதிரி ஒரு டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு எரிச்சல் முகத்தோடு இருந்த பொழுது அருகில் அமர்ந்திருந்த என் மகன் பேப்பரில் ராக்கெட் செய்ய ஆரம்பித்தார்.நான் வரும் எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு "ஏன் இப்ப பேப்பர் ராக்கெட்" என்று கேட்ட பொழுது "ரோட்டிலேயே நின்று கொண்டே தூங்கிக்கொண்டிருக்கும் அந்த போலீஸ் காரரை தட்டி எழுப்பத்தான்" என்கின்றார்.

June 7, 2010

அமீரகம் அன்றும் இன்றும் (பாகம்-2)

தொலைநோக்குப்பார்வை என்பது இதுதானோ?
பெண்மனி தொட்டிலில் குழந்தையை தூங்கச்செய்துவிட்டு சமையலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்.
விருந்து தயார்.அருந்துவதற்கு யாரை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றார்?
பயணத்தில் கூடாரம் கட்டி வெளிச்சம்தரும் ஹரிக்கோன் விளக்குகளை சுத்தம்செய்து வெளிச்சத்திற்கு வழிவகுத்துக்கொண்டு இருக்கின்றார்.
ஈச்சமரத்துக்கிடையே அழகிய கொம்புமான் தனிமையில் இனிமை காண்கின்றது.
கட்டுமரங்களுக்கிடையே மீன் மாட்டாதா என்று ஒற்றைக்காலில் தவம் நிற்கும் கொக்கு.
அந்தக்கால அம்மணி பார்க்கும் வேலைகளைப்பாருங்கள்.இந்தக்கால அம்மணிகள் மிஷினை வைத்து வேலை வாங்கிக்கொண்டே மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
உலோகத்தயாரிப்பில் சின்சியராக ஈடுபட்டு இன்று உலகப்பார்வையின் உச்சியில் நிற்கும் இக்கால அரேபியர்களின் பாட்டன்,முப்பாட்டனார்கள்.உழைப்பின் உச்சகட்டம்.

அன்று கற்களையும்,மணல்களையும் சுமந்து இன்று கரன்ஸிகளை சுமக்கும் புருஷர்கள்
கடின உழைப்பிற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
முதியவரைக்கூட உழைப்பின் ஆர்வம் விட்டுவைக்கவில்லை.
மீன் தோல்களை உலரவிட்டு பதப்படுப்படும் காட்சி.
கற்றுக்கொடுக்கும் அரபி
கற்றுக்கொள்ளும் அரபிகள்
பெட்ரோலிய தொழில் ஆரம்பித்து விரிவடைந்து கொண்டிருப்பதை சித்தரிக்கும் சிலைஜொலி ஜொலிக்கும் இன்னாள் அமீரகம்.

பாகம் ஒன்றினை இங்கு சென்று பாருங்கள்.

June 6, 2010

அமீரகம் அன்றும் இன்றும் (பாகம்-1)

அபுதாபி கலீஃபா பார்க்கில் ஒரு அழகிய அருங்காட்சியகம் உள்ளது.அமீரகம் தோன்றியது முதல் இன்றுள்ள அமீரகம் வரை அழகிய சிற்பங்களாக நமக்கு வரலாற்றை எடுத்தியம்புகின்றது.மிகவும் நுணுக்கமாகவும்,அழகாகவும் செதுக்கப்பட்டுள்ள இவை கண்களையும்,கருத்தையும் கவர்கின்றது.நம்மவர்கள் தொட்டுப்பார்த்தும்,தட்டிப்பார்த்தும் சேதம் விளைவித்து விடுவார்கள் என்பதற்காகாவோ என்னவோ கேபிள் காரில் பார்வையாளர்களை அழைத்துச்செல்கின்றனர்.அதிலிருந்தபடி நான் மிகவும் ரசித்து கிளிக்கிய படங்கள்.கிளிக் செய்த எல்லாபடங்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற ஆவலில் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக தரப்போகின்றேன்.ஆரம்பத்தில் அமீரக அரபிகளுக்கு மீன் பிடித்தொழில் தான் பிரதானமாக இருந்து வந்தது.பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்திருப்பதை என்ன அழகாக வடிவமைத்து இருக்கின்றார்கள் என்று பாருங்கள்.
பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கற்கால அரபி.
மீனவர் குடில்

ஒரு மான் குட்டி சிதறிய பானகத்தை தன் தாகம் தீர்க்க சாப்பிடும் காட்சி
மீன் பிடிக்கும் உபகரணங்களுடன் ஒரு அரபி தன் குடிசைக்கு வெளியே இருக்கும் காட்சி
தூண்டிலில் மாட்டிய மீன்கள்.
வழிப்போக்கரான அரபி ஓய்வெடுக்கும் காட்சி.
ஹரிக்கோன் விளக்கு வெளிச்சத்தில் சாப்பாடு தயார் ஆகின்றது.
பயணித்து வந்த ஒட்டகங்கள்.

பொதி சுமந்து பயணித்த ஒட்டகங்கள் ,எஜமானர்களையும்,பொதிகளையும் இறக்கிவைத்து விட்டு ஓய்வெடுக்கின்றதோ?
பாலை மணலில் பாலைவனக் கப்பல்கள் பவனி வருகின்றன.

பாகம் இரண்டினைக்கான இங்கு கிளிக் செய்யுங்கள்