May 18, 2011

டூர் போலாமாப்பா?



வீடு முழுக்க புளிக்காய்ச்சலின் மணம் ஊரைக்கூட்டியது.அப்பளங்களை பொரித்து பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்த ருக்கு பூசணிக்காய் உண்டியலினுள் கத்தியை விட்டு உள்ளே இருக்கும் காசை எடுத்துக்கொண்டிருந்த மகியிடம்

“ஏண்டி இப்ப சேர்த்து வைத்த காசை எடுக்கறே”என்று அதட்டல் போட்டாள்.

“டூர் போறோமில்லே.கடையில் போய் புதுசா கண்ணாடி வளையல்,ரப்பர் பாண்ட்,ஸ்டிக்கர் பொட்டு,பாசி மணி எல்லாம் வாங்கப்போறேன்”

மாமியார் ரயிலில் வைத்து சாப்பிட மந்தாரை இலைகளை அடுக்கி கட்டிக்கொண்டிருந்தாள்.
”அத்தே..ராமேஸ்வரம் வெயில் ஜாஸ்தியா இருந்தாலும் எதற்கும் போர்வை எடுத்து வச்சிக்குங்க.உங்கள் மருந்து மாத்திரைகளை மறக்காமல் எடுத்து வச்சிக்கோங்க”

“அதெல்லாம் அப்பவே ஆச்சு..எட்டு மணிக்கு டிரெய்ன் என்றான்.இன்னும் சாப்பாட்டுக்கு வரவே இல்லையே பட்டாபி”

“தூரமா சவாரி போய் இருப்பாரோ என்னவோ.இப்பதானே அஞ்சு மணி.வந்துடுவார் அத்தே”மாமியாருக்கு பதில் சொல்லிக்கொண்டே மூட்டை முடிச்சுகளை ரெடிபண்ணிக்கொண்டிருந்தாள் ருக்கு.

வெளியில் இருந்து வேகமாக ஓடி வந்த சிவா கையில் இருந்த டிஜிட்டல் கேமராவை தாயிடம் காட்டி மகிழ்ந்தான்.

”அம்மா..நம்ம ரங்கு இல்லை.நான் ரொம்ப கேட்டுக்கொண்டதால் அவனுடைய அம்மாவிடம் கேட்டு கேமரா தந்திருக்கான்மா.பிலிம் வாங்கிப்போடுற செலவெல்லாம் இல்லை.சார்ஜ் போட்டு எடுத்தால் போதும்.படம் பளிச்சுன்னு வந்துடும்.”

மகனின் கையில் இருந்த கேமராவை வாங்கி ஆராய்ந்து விட்டு திருப்பித்தந்தவள்”பத்திரமா உபயோகிச்சுட்டு பத்திரமா திருப்பி சேர்த்துடு.விலையுயர்ந்த பொருளாஇருக்கும்”

திருமணமான இந்த 17 வருட காலத்தில் இப்பொழுதுதான் முதன் முறையாக வெளியூர் போகின்ற உற்சாகம்.குழந்தைகள் சிவாவும்,மகியும் கற்பனை கோட்டை கட்டி மகிழ்ந்தனர்.

வெளியூருக்கு சுற்றுலா செல்வதில் ஏக சந்தோஷம்.கூடப்படிப்பவர்கள்,அக்கம்பக்க சிநேகிதர்களிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தனர்.வாழ்க்கையில் முதல் முதலாக நெடுந்தூரப்பயணம்.பள்ளியில் எக்ஸ்கர்ஷன் செல்லும் பொழுது கூட பொருளாதாரம் ஈடு கொடுக்காததால் அதனை எல்லாம் தவிர்த்து ஏமாற்றத்தை விழுங்கி வாழப்பழகிய அடித்தட்டு மக்கள்.

”ராமேஸ்வரத்தில் பெரிசா பாலம் இருக்காமே.டிரைனில் மட்டுமில்லை பஸ்ஸிலும் அந்த பாலத்தில் போகணும்மா.”
“ம்ம்..போகலாம்”
“நந்தா படம்,அண்ணாமலை நாடகத்திலே வர்ர தனுஸ் கோடியையும் பார்த்துடணும்.நிறைய போட்டோ எல்லாம் எடுத்து என் பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் காட்டணும்”
“ம்ம்..அப்பா எல்லாத்துக்கும் கூட்டிட்டு போவார்”
“அம்மா,டிரைனில் ராமேஸ்வரம் போய்ட்டு அப்படியே மதுரை போவோமில்ல?”
“ஆமா”
“ஏன் மதுரைக்கு டிக்கட் எடுக்கலே”
“மதுரைக்கு பஸ்ஸிலேயே போய்டலாம்”
“அங்கே சித்திரை பொருட்காட்சி நடக்குதாம்.கோவிலுக்கு போய்ட்டு அங்கேயும் போகணும்மா”
“அப்படியே அதிசயம் போகணும்மா”

வலமும்,இடமும் இருவரும் இருந்து கொண்டு தாயிடம் கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டு வரும் பதிலில் திருப்திபட்டுக்கொண்டிருந்தனர் மகியும்,சிவாவும்.

”ஏடீ ருக்கு..என்னமோ போ.கடைசி காலத்திலேயாவது பிள்ளையாண்டான் கூட்டிட்டு போக சம்மத்தித்தானே,கடைவரை காசி ராமேஸ்வரம் பார்க்காமலே போய் சேர்ந்துடுவேனோன்னு இருந்தது.பகவான் பாக்கியத்தை தந்துட்டான்”

“உங்களை ராமேஸ்வரம் கூட்டிட்டு போகணும் என்பதற்காகத்தானே அத்தே பிள்ளைகள் ஆசைப்பட்ட கொடைக்காணலுக்கு போகாமல் ராமேஸ்வரம் போறோம்”

மணி ஆறாகி விட்டது.இன்னும் பட்டாபியைக்காணோம்.பிள்ளைகள் இருவரும் அப்பாவின் வரவுக்காக வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்தனர்.
ருக்குவுக்கு மனதில் லேசாக கவலைப்படர ஆரம்பித்தது.
“என்னதிது ..இவ்வளவு நேரமாகியும் வரலே.எட்டு மணி டிரெய்னுக்கு ஆறரை மணிக்கே கிளம்பினால் தான் எக்மோர் ஸ்டேஷன் போய் சேர முடியும் என்று சொன்னாரே?”

இப்பொழுது மாமியார் மருமகளுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னார்.
“வந்துடுவாண்டி..தூரமா சவாரி ஏற்றிட்டு போய் இருப்பான்.அவன் கூட்டாளி கிச்சா கிட்டே வண்டியை கொடுத்துட்டு வர்ரேன்னு சொன்னானே.அங்கே போய்ட்டு வரவேணாமா?”

“இல்லே அத்தே.கிச்சா அண்ணனை கூட்டிக்கொண்டுதான் வருவார்.அவர்தான் நம்மை எக்மோர் ஸ்டேஷனில் கொண்டு வந்து விடப்போறார்.”

“பதறாதே வந்துடுவான்”

ட்டாபி மனசு பூராவும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது,இன்று எதிர்பார்க்காத அளவுக்கு கலெக்‌ஷன்.கடனாக கேட்டு இருந்த பணத்துக்கு மேலேயே கூட்டாளிகள் இவன் குடும்ப டூர் செல்வதற்கு உதவினார்கள்.
நம்மை திருமணம் செய்து ருக்கு என்ன சந்தோஷத்தைக்கண்டாள்.பிள்ளைகள்தான் ஆசையா ஒரு இடத்திற்கு போய் பார்த்து இருப்பார்களா?இப்பொழுது அதை எல்லாம் நிறைவேற்றப்போகும் உற்சாகத்துடன் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்த்து.

’டூரில் அம்மாவுக்கு நல்லதா பருத்திப்புடவை எடுத்துக்கொடுக்கணும்.ருக்குவுக்கு பூனம் சேலை அவளுக்கு பிடிச்ச சிகப்பு கலரில் எடுத்துத்தரணும்.பசங்க கையில் பணத்தைக்கொடுத்து இஷடப்பட்டதை வாங்கிக்க சொல்லணும்’ஏதேதோ எண்ணங்கள் அலைகளாக மனதில் ஓட அந்த கடையைப்பார்த்தும் சட்டென்று பிரேக் போட்டான்.
கிரில் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு குடிகமகன்கள் டாஷ்மாக் கடையில் நின்று கையை சரக்குக்காக நீட்டியபடி நின்று இருந்தனர்.

’கோவிலுக்கு போகிறோம்.இன்னும் நாலு நாளைக்கு இதன் பக்கமே நெருங்க முடியாது.ஆசை தீர ஒரு ஃபுல்லை போட்டால் என்ன?இன்னும் நேரம் இருக்கிறதுதானே’ மனம் எழுப்பிய வினாவுக்கு உடல் ஒத்துழைக்க ஆட்டோவை பிரேக்கிட்டான்.

பணத்தை நீட்டி ”அண்ணே,ஒரு ஃபுல்லு”

கையில் பளபளத்த பாட்டிலை ஆசை ஆசையாக வருடிகொடுத்து ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆசைதீர குடித்து முடித்தான்.

“ஹப்பா.."
கண்கள் செருகினாலும் உஷாராகிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

‘இன்னேரம் பசங்க ரெடியாகி இருப்பாங்க.ருக்கு மூட்டை முடிச்செல்லாம் கட்டி ரெடியாகி இருப்பாள்.புரசைவாக்கத்தில் இருக்கின்ற கிச்சாவைப்போய் அழைத்துகொண்டு அரைமணி நேரத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம்.அப்புறம் திரும்பி குடுமப்த்தை அழைத்துக்கொண்டு எக்மோர் வரணும்”வேகமாக ஆக்சிலேட்டரை அழுத்தினான். எக்மோர் பூந்தமல்லி ஹை ரோடில் வண்டி ஜிவ்வென்று சென்று கொண்டிருந்தது.

கிரீச்..
பெருத்த சப்தத்துடன் அந்த ஆட்டோ சுழன்றடித்து கவிழ்ந்தது.பின்னால் வந்த வாகனங்கள் சடன் பிரேக் போட்டதால் நிலை குலைந்து நின்றன.எங்கிருந்தோ ஒரு போலிஸ்காரர் விசில் அடித்த படி கூட்டத்தை விலக்கி விட்டார்.
“த்சோ..அடி பலமாக இருக்குமோ”
“சப்தம் மூச்சைக்காணோம்”
“ஹ்ம்ம்..யாரு பெற்ற பிள்ளையோ”
“சீக்கிரம் ஆம்புலன்ஸுக்கு சொல்லுங்கப்பா”
“நல்ல வேளை ஆட்டோவில் சவாரி ஏற்றிட்டு வரலே”

பாங்க்க்க்க்க்..
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சைரன் ஒலித்த படி தனது அன்றைய பயணத்தை எக்மோர் ஸ்டேஷனை விட்டு பயணித்துக்கொண்டிருந்தது.

36 comments:

vanathy said...

அக்கா, என்ன ஒரே சோகமா முடிச்சுட்டீங்க???? சூப்பர் கதை.

Unknown said...

குடி குடுமபத்தை கொடுக்கும்...

Unknown said...

சந்தோஷமாக ஆரம்பம் ஆன கதை கடைசியில் கண்களங்க வைக்கிறது.. சிறுகதை அருமை.. அக்கா

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப மனசை கஷ்டப்படுத்திடுச்சி கதை.

Menaga Sathia said...

இவ்வளவு சோகமா முடித்துட்டீங்களே அக்கா..மனம் கனத்துவிட்டது!!

athira said...

ஸாதிகா அக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), முதல்ல நீங்க எங்க போயிருந்தீங்க?....

கதை படிச்சிட்டு பதில் போடுறேன்... இப்பத்தான் பார்த்தேன்.

athira said...

என்ன ஸாதிகா அக்கா, கதையை இப்பூடி முடிச்சிட்டீங்க:((. எவ்வளவு ஆசையாக 17 வருடத்துக்கப்புறம் சுற்றுலா என ஆயத்தமானார்கள்...

அதுசரி மந்தாரை இலை என்றால் என்ன? அது வெற்றிலைபோல சாப்பிடுவதோ?

எனக்கு வெற்றிலை பாக்குப் போடப்பிடிக்கும்....


அப்பா ஏசுவார், அவருக்குத் தெரியாமல் சாப்பிடுவேன்.
ஆனா, கணவர் எங்கு கண்டாலும் எனக்குப் பிடிக்குமென வாங்கிவந்து தருவார்... ஏனெண்டால் இங்கு எல்லா நேரமும் வாங்க முடியாது.

கீதமஞ்சரி said...

அத்தனை ஆசைகளையும் ஒரு அல்ப ஆசை எமனாக மாறி அழித்துவிட்டதே. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள். இங்கே ஒரு குடிகாரனே போய்விட்டானே குடும்பத்தை நட்டாற்றில் தவிக்கவிட்டு. கதைக்கருவும் அதை எழுதியவிதமும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லாருக்கு. தினமலர் வாரமலர் இதழுக்கு இதை அனுப்பலாம். வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>
வீடு முழுக்க புளிக்காய்ச்சலின் மணம் ஊரைக்கூட்டியது.

ஓப்பனிங்க் லைன்லயே சிக்சர்

Mahi said...

/அதுசரி மந்தாரை இலை என்றால் என்ன?/அதிரா,மந்தாரை இலை வாழை இலை போல,சாப்பாடு பரிமாறி சாப்பிடும் இலை. வாழையிலை அளவுக்கு மென்மையா இருக்காது,நல்லா திக்கா இருக்கும்.காயவைத்த இலை,பச்சை இலை ரெண்டுமே பயன்படுத்தலாம். அது வெற்றிலை இல்ல! :)

ஸாதிகாக்கா,இன்னிக்கு காலைல எழுந்ததும் ஆர்வமா உங்க ப்ளாக்ல புதுபோஸ்ட்டை படிக்க வந்தேன்.சோகமா முடிச்சுப்போட்டீங்க..ஹும்!!

உச்சந்தலைல நச்சுன்னு குட்டின மாதிரி மெஸேஜ்!

இமா க்றிஸ் said...

//உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//
ஒரு பொன்னான கதை எழுதி இருக்கிறீர்கள் ஸாதிகா.
ஆனால் முடிவுதான் மனதைப் பிசைகிறது, பாவம். ;(

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ மஹி நன்றி. தாமரை இலை சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவதெனத் தெரியும், இது பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஸாதிக்காக்கா...

அருமையான கதை,பட் நல்லா முடிஞ்சிருந்தா,இன்னும் நல்லா இருந்திருக்கும்...ஆனால்,இது மாதிரி போகும் நல்ல நிஜக்குடும்ப கதைகளை மாற்றி எழுதுவது,இது போன்ற குடிமகன்கள் தான்...கதைதான் என்றாலும் இயலபான வார்த்தை பயன்பாட்டால்,அனைவரது உணர்வுகளையும் உணரும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள்..

கதைக்கு பின்னும்,அந்த மனைவி பிள்ளைகளின் மனம் எப்படி இருந்திருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

@சிநேகிதி:
//குடி குடுமபத்தை கொடுக்கும்...//
இது என்ன கொடுமை???

வார்த்தைப் பிழை என நம்புவோம்...

அன்புடன்
ரஜின்

Vijiskitchencreations said...

நீண்ட நாட்கள் கழித்து வந்து ஒரு சிறுகதையை படிக்கலாம் என்றால் கடைச்யில் சோகமாக முடித்துட்டிங்க.

அஸ்மா said...

'குடி குடியைக் கெடுக்கும்'ங்கிறதை அழகா சொல்லிட்டீங்க ஸாதிகா அக்கா. இதுபோல் எத்தனை உண்மை சம்பவங்கள் நடந்திருக்கும்! அரசாங்கம் இதற்கு முழுவதுமாக தடை விதித்து, கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலே தவிர குடிமகன்களைத் திருத்த முடியாது :(

ஸாதிகா said...

ஆமாம் வானதி சோக முடிவுதான்.குடி குடியைக்கெடுக்கும் என்பதைனை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.நன்றி.

ஸாதிகா said...

படித்த அநேகர் இதனைத்தான் சொல்லுகின்றார்கள் பாயிஜா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//கஷ்டப்படுத்திடுச்சி கதை.// ரொம்ப சாரி அக்பர்.இனி இப்படி டிராஜடி முடிவுகளாக இல்லாமல் பார்த்துக்கொள்கின்றேன்.

ஸாதிகா said...

நீங்கள் எல்லாம் இப்படி பின்னூட்டம் கொடுத்ததும் எனக்கும் மிகவும் கஷ்டமாகி விட்டது மேனகா.இது எத்தனையோ பேர் வாழ்வில் நடை பெற்று வருகின்றது என்னவோ உண்மைதான்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), முதல்ல நீங்க எங்க போயிருந்தீங்க?....
// எங்கள் குடும்பத்தில் ஒரு சோகச்சம்பவம் நடந்தேறி விட்டது அதிரா.அதுதான் இத்தனை நாள் விடுப்பு.(ஊருக்கு போய் விட்டேன்)பதிவு போட்டு நெடுநாட்களாகி விட்டதே என்று சேவ் பண்ணி வைத்து இருந்த கதையை பப்லிஷ் செய்தேன்.

ஸாதிகா said...

//அதுசரி மந்தாரை இலை என்றால் என்ன?// பின்னாலேயே பதில் வந்துவிட்டது.வெற்றிலையைப்போல் சாப்பிடுவதில்லை.சப்பாட்டை வைத்து சாப்பிட்டு விட்டு அப்படியே பத்திரமாக தூர எறிந்து விடவேண்டும்.நன்றி அதிரா.

ஸாதிகா said...

மிக்க நன்ரி கீதா முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

ஸாதிகா said...

மிக்க நன்ரி சி பி செந்தில்குமார்.பிலாக்கில் போடுவதற்கு முன் அனுப்பி இருக்கலாம்தான்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//உச்சந்தலைல நச்சுன்னு குட்டின மாதிரி மெஸேஜ்!// கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா.அடுத்த கதை அவசியம் மனம் இன்புறும் வகையில் எழுதுகின்றேன்.

ஸாதிகா said...

//நல்லா முடிஞ்சிருந்தா,இன்னும் நல்லா இருந்திருக்கும்.// எல்லாப்பின்னூட்டங்களையும் பார்த்து விட்டு நானும் அதனைத்தான் நினைத்தேன்.நன்றி தம்பி ரஜின்.

ஸாதிகா said...

//நீண்ட நாட்கள் கழித்து வந்து ஒரு சிறுகதையை படிக்கலாம் என்றால் கடைச்யில் சோகமாக முடித்துட்டிங்க.// அனைவருக்கும் முடிவு ஏமாற்றத்தைதந்தது என்பதில் இப்ப எனக்கு வருத்தமாக உள்ளது விஜி.உங்களுக்கு மெயில் போட நேரம் இல்லாமல் இருக்கின்றேன்.விரைவில் போடுகின்றேன்.

ஸாதிகா said...

//அரசாங்கம் இதற்கு முழுவதுமாக தடை விதித்து, கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலே தவிர குடிமகன்களைத் திருத்த முடியாது // உண்மைதான் அஸ்மா.மதுவிலக்கு வந்தால் சமூகம் எப்படி இருக்கும்!!கருத்துக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

முடிவு மனதை கனமாக்கினாலும் கதையும் நடையும் நன்றாயிருக்கிறது ஸாதிகா!

GEETHA ACHAL said...

படித்த அன்றே பதில் போட வேண்டும் என்று நினைத்தேன்...

என்ன ஒரு கொடுமை..இப்படி தான் சிறிய ஆபத்தான ஆசையில் பெரிய இழப்பினை சந்திக்க வேண்டிவரும்..

அழகாக எழுதி இருக்கின்றிங்க...கடைசி முடிவு உண்மையில் நிறைய இடங்கில் நடந்தாலும் படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது...

Thenammai Lakshmanan said...

குடி குடியைக் கெடுக்கும்னு சரியா வலியோட சொல்லி இருக்கீங்க ஸாதிகா..

Jaleela Kamal said...

கதையோட்டம் நல்ல இருக்கு ஸாதிகா அக்கா
கொஞ்சம் ஜாலியாக ஆரம்பித்து சோகமாக முடித்தது,சில இடத்தில் நடக்கும் நடப்பு தானே.

Jaleela Kamal said...

புளிக்காய்ச்சல் வாசனை இங்கு என் மூக்க துளைத்து விட்டது.,
அப்பளம் ம்ம் எடுத்துசாப்பிட்டு கொண்டேன்

மாதேவி said...

கதை நன்றாக இருக்கிறது ஸாதிகா.

முடிவு மனத்தை நெகிழச்செய்கிறது.

ஹுஸைனம்மா said...

அடிமட்ட மக்கள் மட்டுமா? இந்தப் பதிவுலகிலேயே, குடிப்பதைப் பெருமையாகப் பறைசாற்றிக் கொள்வோர் எத்தனை பேர்?