1.அந்த நாள் உணவென்றால் கம்பங்கூழ்,கேப்பைக்கூழ்.அதனையும் தாண்டி இட்லி தோசை.இப்பொழுது கூழை காட்டி நம் இளைய தலை முறையினரிடம் கேட்டால் “வாட் திஸ் நான் சென்ஸ்” என்று முகம் சுளிப்பார்கள்.பிஸ்ஸா,பர்கர் என்று அயல் நாடு உள் நாட்டினுள் நுழைந்து அமர்க்களம் பண்ணிக்கொண்டுள்ளது.
2.அந்த நாளில் சிறுமிகள் விளையாடுவது மரப்பாச்சி பொம்மைகளைக்கொண்டும்,துணியினால் செய்யப்பட்ட சீலைப்பொண்ணு என்று செல்லமாக அழைக்கும் பொம்மைகளும்தான்.இப்பொழுதுஆயிரக்கணக்கில் செலவு செய்து தன் பிள்ளைகளுக்கு ஹைடெக்கான பார்பி போன்ற பொம்மை வகைகளை வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கின்றனர் இக்கால பெற்றோர்கள்.
3.அந்நாளில் அழுக்குத்துணிகளை மூட்டையில் கட்டிக்கொண்டு குளக்கரைக்கு கூட்டமாக போய் அரட்டை அடித்த படி துவைப்பார்கள்.அரட்டை அடிக்கும் சுவாரஸ்யத்தில் மூட்டை மூட்டையாக துவைத்தாலும் அலுப்பு தெரியாமல் இருக்குமாம். சில வீடுகளில் கொல்லைப்புறம் கிணற்றடியில் துவைக்கும் கல் கண்டிப்பாக இருக்கும்.நின்று கொண்டே துவைத்து பிழிந்து உலரப்போட்டது போக இன்று வாஷிங் மெஷினில் துணியைப்போட்டு கூடவே சலவைத்தூளும் போட்டு ஸ்விட்சை ஆன் பண்ணி விட்டு குஷாலாக ஹாண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இல்லத்தரசிகள் ஷாப்பிங் போய் விட்டு ஆற அமர வீட்டுக்கு திரும்பி துவைத்த துணிகளை உலரப்போடும் இக்கால இல்லத்தரசிகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தானே?
4.வெட்டி வேர் அல்லது நன்னாரி வேரை நசுக்கி துணியில் பொட்டலமாக கட்டி மண்பானையில் போட்டு காய்ச்சிய நீரை பானையில் நிரப்பி, புதுமணலை குவித்து வைத்து அதன் மீது மண்பானையில் வைத்த நீரை சொம்பில் மொண்டு குடித்தால் ஆஹாஹா..இப்பொழுதுள்ள இளையதலை முறையினர் இதனை ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.தென்மாவட்டங்களில் `தணல் அடுப்பில் நெல் உமியை தூவி கிளம்பும் புகை மீது பானையை கவிழ்த்து வைத்து அதனுள் இருந்து வரும் நறுமணத்துடன் கூடிய நீரை இப்பொழுதும் நினைத்துக்கொண்டாலும் நாவில் நீர் ஊறும்.இப்பொழுதோ டிஸ்பென்சரில் பபுள்டாப் கேனை கவிழ்த்து சில்லென்று செயற்கைகுளிர் நீரை குடிக்கும் நிலைமை.
5.அந்நாளில் வீட்டு வாசலிலேயே மரநிழலில் உரலை வைத்து நெல் குத்துவார்கள்.இரண்டு பெண்கள் மாறி மாறி ஹ்ம்ம்..ஹ்ம்ம் என்ற சப்தத்தை வெளிப்படுத்திய படி நெல் குத்துவதை கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு வியர்த்துப்போகும்.இப்பொழுதோ அரிசி ஆலைகள் பெருகி நெல்மணிகளை படத்தில் பார்த்தால்தான் உண்டு.
7.மரவேலைப்பாடுகள் கொண்ட கலை நயமிக்க ஓட்டைகள் உள்ள பலகை தயாரித்து இதனையும் உத்தரத்தில் கயிற்றினால் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள்.இதில் உள்ள ஓட்டைகளில் மர கரண்டிகள்,மத்து போன்றவற்றை மாட்டி வைக்கலாம்.இப்பொழுதோ குட்டியூண்டு ஸ்டாண்டில் டசன் கணக்கில் ஸ்பூன்களை மாட்டி வைத்து ஒரு ஓரமாக அடக்கமாக அமர்ந்து இருக்கின்றது இந்நாளைய ஸ்பூன்ஸ்டாண்ட்.
8.தானியங்களை தோலெடுக்க கல்லால் ஆன எந்திரம் அதன் கைப்பிடி மரத்தில் இருக்கும்.எந்திரத்தின் உச்சியில் உள்ள பள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களை போட்டு மரக்கைபிடியை பிடித்துக்கொண்டு சுற்றும் பொழுது தானியங்களின் தோல் அகலும்.திரித்த தானியங்களை முறத்தால் புடைத்து பயறு வேறு தோல் வேறு என்று பிரிப்பார்கள்.இன்றோ தோலெடுத்து பள பளக்க பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து வரும் பொழுது திரிகை காணாமல் போவது நியாயம்தானே?
9.மண்பானையில் தயிரை வைத்து மத்தால் கடைந்தால் வெண்ணெய் வரும்.
மண்பாணையை இரண்டு பாதங்களுக்கும் இடையில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் திரட்டுவார்கள்.மரத்தினால் செய்யப்பட்ட வித விதமான மத்துகள் பார்க்க கலை நயத்துடன் இருக்கும்.இப்பொழுதோ பித்தானை அழுத்தினால் சடுதியில் மோரும் வெண்ணையும் பிரிந்து வேலையை சுலபமாக்கி விட்டது.
10.மாலை வேளை வேலைகள் ஓய்ந்து அக்கடா என்று ஓய்வு எடுக்க முடியாமல் ஊற வைத்த உளுந்தையும் அரிசியையும் கை கையாக நீர் தெளித்து அரைத்து எடுத்தால்த்தான் மறுநாள் காலை டிபன் செய்ய முடியும்.இடது கையால் குழவியை ஆட்டிகொண்டே வலதுகையால் லாவகமாக அரிசியைத்தள்ளிக்கொண்டே அரைக்கும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இப்பொழுதோ அடுப்பில் குக்கர் இருக்க,தவாவில் சப்பாத்தி சுட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் ஓடும் கிரைண்டரை கவனித்தால் போதும்.மறுநாள் சுடச்சுட மல்லிகை இட்லி கெட்டி சட்னியுடன் பேஷாக சாப்பிடலாம்.
11.செய்த பதார்த்தங்கள் சூடாகவும்,மொறுமொறுப்பு குறையாமலும் இருக்க பனை ஓலைகளால் ஆன பெட்டிகளை தயாரித்து உணவுப்பொருட்களை வைத்திருப்பார்கள்.வெள்ளை நிற பனை ஓலையில் கலர் கலராக வண்ணம் தோய்த்து அழகுற டிஸைன் போட்டு இருப்பார்கள்.இன்னும் கொஞ்சம் ரிச் ஆக வேண்டுமென்றால் ஜரிகைகளால் பொட்டு போல் செய்து பதித்து இருப்பது கண்களைக்கவரும்.ஹாட்பாக்ஸ் தோன்றியதும் பனைஓலைப்பெட்டிகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.பெட்டி முடைபவர்களும் காணாமல் போய் விட்டனர்.
12.வீடென்றால் ஒரு கொல்லைப்புரம் இருக்கும்.கொல்லைப்புறம் இருந்தால் அங்கு பாய்லர் அடுப்பு இருக்கும்.அதிகாலையிலேயே தண்ணீர் கொதிக்க வைத்து நீரை விளாவி வைத்து வீட்டினர் குளிக்க வெந்நீர் தயாரிப்பதுதான் இல்லத்தரசிகளின் முதல் வேலை.இப்பொழுதோ கொட்டாவி விட்டு கொண்டே ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்து விட்டு மேலும் பத்து நிமிடம் இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் உள்ளதே...!
13.தாத்தா,தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் மனிதர்கள் நடக்கும் பொழுது சரட்சரட் என்று சப்தம் ஒலிக்கும்.நல்ல பர்மா தேக்கினால் செருப்பு வடிவில் செய்யப்பட்ட மிதியடியில் நடுவே வசதிக்கேற்ப செம்பு பித்தளை,வெள்ளி பிடிகளால் அலங்காரம் செய்து இருக்கும்.வெள்ளிப்பிடி போட்ட மிதியடி அணிந்தவர்கள் மேல்மட்டத்தினர் என்று கொள்ளலாம்.அந்த செருப்பை இப்பொழுது அணிந்து கொண்டு நடப்பதென்றால் அது சர்க்கஸ் வித்தையாகிவிடும்.
தோட்டத்தொழிலாளிகள் பனை மட்டையை செருப்பு வடிவில் கத்தரித்து பனை நாரினால் செருப்பின் வாரை செய்து அணிந்து இருப்பார்கள்.கண்ணாடி பெட்டியினுள் கண்களை கவர உட்கார்ந்திருக்கும் அலங்கார செருப்பு வகைகளை வாங்கி அணியும் நமக்கு பலங்கால செருப்புகள் வியப்பை தரும்.
14.விருந்தினர்கள் வந்து விட்டால் அழகாக சுருட்டி மூலையில் நிறக வைத்திருக்கும் பாயை உதறிப்போட்டு ,விரித்து விருந்தினர்களை அமரச்செய்வார்கள்.வண்ணம் தீட்டி டிஸைன் செய்யப்பட்ட கோரைப்பாய்கள்.ஓலைப்பாய்கள் என்று விதம் விதமாக வலம் வந்த காலம் போய் ,உட்கார்ந்ததும் மனுஷனை உள்வாங்கிக்கொள்ளும் ஷோபாக்களை வரவேற்பு அறைகளை அலங்கரிக்கும் காலம் காலத்தின் வண்ணக்கோலம்தானே?
15.நாண்கு ஐந்து மனிதர்கள் கூட தாராளமாக உள்ளே அமரும் விசாலமான பெட்டகங்களில் இருந்து சிறிய சைஸ் பெட்டகங்கள் வரை அந்த காலத்தில் பிரசித்தம்.பெரிய பெட்டகங்களின்சாவியே அரை அடி நீளம் இருக்கும்.
கனமான அந்த பெட்டகத்தை கில்லாடி திருடர்கள் கூட எளிதில் திறக்க இயலாதவாறு உறுதித்தன்மையுடன் இருக்கும்.இதில்தான் ஆடை,அணிகலன்கள்,விலை உயர்ந்த பொருட்களை வைத்து பாதுகாத்தனர் நம் முன்னோர்கள்.இன்றோ பில்ட் இன் கப்போர்டுகள் வலம் வந்து எளிதாக்கி விட்டன.
16.மூன்று கற்களை முக்கோண வடிவில் வைத்து அதன் மீது பானை வைத்து சுள்ளிகளை வைத்து எரித்து சமைத்தார்கள்.பிறகு மண் அடுப்பை புதைத்து விறகால் சமைத்தார்கள்.காலத்தின் பரிமாணம் இன்று வழவழப்பான கிரானைட் மேடையில் ஹாப்ஸ் பொறுத்தி இது அடுக்களைதானா என்று வியக்கும் அளவிற்கு மாற்றங்கள் புகுந்து விட்டன.
17.முன்பெல்லாம் மதிய உணவு உண்ட பின் சிறு தூக்கத்திற்கு பிறகு முதல் வேலையாக வீட்டில் இருக்கும்கெரஸின் விளக்குகளை சுத்தப்படுத்தி திரியை நெம்பி விட்டு,கெரஸின் நிரப்பி தயாராக வைத்திருப்பார்கள்.இருட்ட ஆரம்பித்ததும்,விளக்குகளை எல்லாம் நெருப்பிட்டு எரியச் செய்து வீட்டு திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு அறையாக வைத்து வெளிச்சத்தை உண்டாக்குவார்கள்.இந்த வெளிச்சத்தில்த்தான் படிப்பு,சமையல் எல்லாம்.இப்பொழுதோ ஸ்விட்ச் போர்டுக்கு போய் ஸ்விட்சை ஆன் செய்யக்கூட பொழுதில்லாமல் இருந்த இடத்தில் உட்கார்ந்த படி ரிமோட் மூலம் விளக்குகளை ஆன் செய்து இருப்பிடத்தை ஜகஜோதியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றோம்.
18.பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகள் விதிக்கு வீதி கிடைக்கும்.வியர்க்கும் பொழுது முகத்திற்கு எதிரே விசிறியை வைத்து வீசி காற்று வாங்கிக்கொள்வார்கள்.கணவர் தூங்கும்வரை வீசி விட வேண்டியது எழுதப்படாத சட்டம்.அதே போல் குழந்தைகளை தூங்க வைக்க அக்கால இல்லத்தரசிகள் கை வலி எடுக்கும் வரை விசிறிக்கொண்டே இருப்பார்களாம்.இப்பொழுதோ பொத்தானை தட்டினால் ஏஸியின் ஜில்லிப்பு அறை முழுக்க பரவி பரவசப்படுத்துகின்றதே.
Tweet |