February 24, 2011

பெற்ற மனம் பித்து






செல்லம் கொடுத்து குட்டி சுவராக்கிட்டே
சாடிய கணவரிடம் சமாதானம்

இருந்தாலும் உன் பிள்ளைக்கு இத்தனை
கொழுப்பு ஆகாது
குமுறிய நாத்தனாரிடம் கொந்தளிப்பு

இதென்ன பிள்ளையா பிசாசா கத்திய
பக்கத்துவீட்டுப்பாட்டியிடம் தர்க்கம்

பெருக்கித்துடைத்து அப்பாலே போனால்
உடனே பண்றான் குப்பை
அலுத்துக்கொள்ளும் முனியம்மாவிடன் எரிச்சல்

இன்னும் கொஞ்சம் கவனம் எடுக்கணும்
எச்சரிக்கும் வகுப்பாசிரியையிடம் பசப்பல்

பிடித்த உருளை ரோஸ்டும்,வெஜிடபிள் பிரியாணியும்
செய்து கொடுத்து தலை கோதி
பறிமாறும் பொழுது
போம்மா என்று வெறுத்து சொன்னால்
அலுக்காது ஒருபோதும் தாய் மனம்

மாமியாருக்கு தெரியாமல் முந்தானை திறந்து
காசு எடுத்துக்கொடுத்து
பாய் கடையில் பரோட்டா சால்னா
வாங்கிச்சாப்பிடு கண்ணா
வாஞ்சையுடன் வெளிப்படும் தாய்ப்பாசம்

பண்டிகைக்கு கொடுத்த போனஸில்
புத்தாடை மறந்து,கொண்டாட்டம் மறந்து
கூடவே கடனும் வாங்கி
தனயன் கேட்டதற்கு டூவீலர் வாங்கிகொடுத்து்
முகவாயில் கை வைத்து வியந்து
மகிழ்ந்து நின்றாள் அன்னை

கண்ணா பில்லியனில் வைத்து
கோவிலில் இறக்கி விடு
கும்பிட்டு வர்ரேன் என்றவளைப்பார்த்து
ஈவினிங் ஷோவுக்கு லேட்டாகி போச்சு என்று
ஓடியவன் கண்டு
சிரித்து மகிழ்ந்தாள்

இன்று
அம்மா,உன்னாலே எனக்கும் அவளுக்கும்
எப்பொழுதும் சண்டை
அதனால் நீ இனி முதியோர் இல்லத்தில்
சேர்ந்துக்கம்மா
நேர் பார்வை பாராமல் கூறும் மகனிடம்
”உன் சந்தோஷமே எனக்கு போதும் ராசா”
நேர்ப்பார்வையுடன் தன் உடமைகளைத்தூக்குகின்றாள்
பெற்ற தாயவள்
.

February 22, 2011

வார்த்தை ஜாலம்




”அவளா..?ராட்சஷியாச்சே”
“அவள் வாய் இருக்கே.அது பனாமா கால்வாய்”
“யப்போய்..இவ வாய்லேர்ந்து தப்பி வர முடியுமா”

ஒரு சிலர் ஒரு சிலரைப்பற்றி இப்படி விமர்சிப்பதை கேட்டு இருப்போம்.பார்த்தும் இருப்போம்.உண்மையில் அந்த வாய்க்குறியவர்கள் அத்தனை பயங்கரவாதியா என்றால் அதுதான் இல்லை.இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ஜாலம் என்றால் என்னவென்றே தெரியாது.வார்த்தைகளில் வல்லினம் மெல்லினமாக பேசுவது எப்படி என்ற சூட்சுமம் புரியாது.

பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்.

நல்ல வாழ்க்கைக்கும்,அழகிய பண்பிற்கும்,கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்கும்,நெருக்கமான,தொய்வில்லாத நட்புக்களுக்கு,நாம் உத்தியோகம் செல்லும் இடங்களுக்கும் இப்படி எல்லாவித அம்சங்களுக்கும் இந்த ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்கள் அவசியம்தேவை.

வார்த்தைகளில் எப்பொழுதும் அதீத கறாரும் கண்டிப்பும் ,அதிகார தோரணையும்,இடைவிடா ஆளுமை குணமும்,தான் தான் உசத்தி என்ற மனோபாவமும்,அகம்பாவமும்,ஆணவமும் நமது மதிப்பீட்டை பிறர் முன் குறைத்துவிடும்.இப்பதிவின் முதல் மூன்று வரிகளால் விமர்சிக்கப்படுவோம்.

நமது வாழ்க்கைத்துணையாகட்டும்,மற்றநட்புக்கள், உறவுகளாகட்டும்,வீதியில்செல்லும் காய்காரி முதல் வீட்டில் வேலை பார்க்கும் முனியம்மா வரை இந்த மிளகாயில் காரம் தடவும் வேலை பலிக்காது.

“டேய் இருபத்திநாலு மணிநேரமும் கம்பியூட்டரில் இருந்து தொலைக்கறதே உனக்கு பொழைப்பா போச்சு.கொஞ்ச,ம் கூட பொறுப்பு கிடையாது.இப்படியே போனால் மாடுதான் மேய்க்கனும்.மரியாதையா போய் படிடா”பெற்ற பிள்ளையிடம் காட்டுக்கத்தலாக கத்தினால் அந்தப்பிள்ளை சந்தோஷமாக போய் படிப்பானா?மாட்டான்.உங்களுக்கு பயந்து படித்தாலும் மனபூர்வமாக படித்து ,மண்டையினுள்ளே ஏற்றிக்கொள்ளுவானா?மாட்டான்.
இதுவே ஜீராவில் குலோப்ஜாமூனை ஊற வைத்தாற்போல் பேசுங்கள்.

“ராஜா...இன்னும் எக்‌ஸாமுக்கு பத்தேநாள் தான் இருக்குப்பா!போய் படிடா செல்லம்.”இந்த ஒரு வார்த்தை போதுமே.சடாரென்று சட் டவுன் செய்து விட்டு படிக்கும் மேசையை நோக்கி செல்வதற்கு.

“ஏங்க..உங்களுக்கு என்று சுய புத்தியே இல்லையா?சம்பளக்கவரை கையிலே வாங்கியதும் கடன் கேட்டானாம்,இவரும் தூக்கி தானம் வார்த்துட்டு வந்துட்டாராம்.ஒவ்வொருத்தனின் சாமர்த்தியத்தை பாருங்க.அவனவன் எப்படி உஷாரா இருக்கான்னு.தெளிவா இருக்கான்னு.அதான் அப்படியே இளிச்சவாயன்னு நெற்றியில் ஒட்டி இருக்கே.இதுக்கெல்லாமா யுனிவர்சிடியில் போய் படிக்க முடியும்?”
இப்படி பேச்சு சென்றால் அங்கே எப்படி அமைதி இருக்கும்?பிரச்சினைகளுக்கு சுழி போட்டது போல் ஆகி விடாதா?இவள் என்ன சொல்லுவது?நான் என்ன கேட்பது?என்ற கோப அகங்காரத்துக்கு வித்திட்டு விடாதா?
இதுவே கொஞ்சம் டயலாக் மாற்றி,குரல் உச்சஸ்தாயியில் இருந்து அடிகுரலுக்கு போய் அரவணைப்பு பேச்சால் நீங்கள் அணுகினால் உங்களவர் இனி கடன் கொடுப்பாரா?சம்பளக்கவர் கைக்கு வந்ததுமே உங்கள் அன்பு முகம் அல்லவா கண் முன் தெரியும்.

லேட்டாக வரும் வேலைக்காரியிடம்”இதே உனக்கு பிழைப்பா போச்சு.சம்பளம் மட்டும் வக்கணையா வாங்குறே.இஷ்டம் இருந்தால் டயத்துக்கு வா.இல்லேன்னா ஓடியே போய்டு” இப்படி ஆணவத்தை வெளிப்படுத்துவதைவிட “அட தாயம்மா,ஏன் லேட்டு ?நீ வந்துட்டு போய் விட்டால் சீக்கிரமா மார்க்கெட் போகலாம்ன்னு இருந்தேனே.சரி பரவா இல்லை.நாளைக்காவது டயத்துக்கு வா”இப்படி இருந்தால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.


சதா சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக்கொண்டும்,ஈஸி சேரில் சாய்ந்தபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் மாமனாரிடம்”நீங்க ’சும்மா’தானே இருக்கீங்க.சின்னவனுக்கு ஹோம் வர்க் சொல்லிக்கொடுங்களேன்”என்று சொன்னால் அந்த் ’சும்மா’ சும்மா இருக்குமா என்ன?இதனையே வார்த்தையில் சற்று தேன் ,பால் தடவி ”மாமா,நீங்க ஹோம் வர்க் சொல்லிக்கொடுத்தால் சின்னவன் கப்புன்னு பிடித்துக்கறான்.அதென்னமோ தெரியலே தாத்தா சொல்லிக்கொடுத்தாருன்னா இவன் சமர்த்தா படிச்சுக்கறான்.கொஞ்சம் படித்துக்கொடுக்கறீங்களா மாமா.நான் அயர்ன் பண்ணிட்டு இருக்கேன்”இப்படி சொல்லிப்பாருங்கள் ரிஸல்ட் எப்படி இருக்கின்றது என்று.

“அத்தே,நான் என் ஸ்நேகிதி சுபா வீட்டிற்கு போறேன்.சமைத்து வைத்து விடுங்கள்”என்று உத்தரவு போட்டால் அத்தையின் முகத்தில் கடுகை தாளித்து விடலாம்.இதுவே”அத்தை,நான் சுபா வீட்டிற்கு போறேன்.ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுறா.சாம்பாருக்கு பருப்பை வேக வைத்து இருக்கேன்.தாளித்துக்கொட்டி ஒரு பொரியல் பண்ணிடுங்கள்.நீங்கள் வச்ச முருங்கைக்காய் சாம்பார்ன்னா நம்ம சுஜிகுட்டி கூட நாலு கவளம் சாப்பிடுவாள்.பண்ணிடுறிங்களா அத்தை.இல்லை பண்ணி வச்சிட்டே போகட்டுமா?கூட பதினைந்து நிமிஷம் தான் லேட் ஆகும்”இப்படி ரசகுலா வார்த்தைகளில் சொல்லிப்பாருங்கள்.

“நீ போய் வாம்மா.கூடவே புதினா தொகையலும் அரைத்து,பச்சடி பண்ணி,நாலு அப்பளத்தை பொரித்து வச்சிடுறேன்.”என்று நீங்கள் வரும்பொழுது ஒரு விருந்தே காத்திருக்கும்.

ஊருக்கு போகும்பொழுது”சிலிண்டர் வர்ர நாள் வந்தால் வாங்கி வச்சிடுங்க.பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜ்ஜில் வாங்கி வச்சிடுங்க.கொரியர் வந்தால் கையெழுத்து போட்டு வாங்கி வச்சிடுங்க”இப்படி வரிசையாக கட்டளை போட்டு விட்டு எதிர் வீட்டுக்கார அம்மணியின் முகத்தைப்பாருங்கள்.எள்ளும்,கொள்ளும் வெடிக்கும்.’இவள் என்ன உத்தரவுக்கு மேல் உத்தரவா போடுறாள்.நான் என்ன இவளோட சேவகியா?”என்று முகம் சொல்லாமல் சொல்லும்.

“மாலா,தங்கைக்கு குழந்தை பிறந்து இருக்கு. ஊருக்கு போய் பார்த்து விட்டு வரப்போகிறோம்.தொந்தரவுக்கு மன்னிக்கனும்.பாலை வாங்கி பிரிட்ஜ்ஜில் வச்சிடுறீங்களா?ஒண்ணும் பிரச்சினை இல்லையே..”இப்படி வார்த்தைகளை ஜவ்வு மிட்டாயாக இழுத்து சொல்லிப்பாருங்கள் அவர்களே ”யோசிக்காமல் போய்ட்டு வா.கொரியர்,கேஸ் எது வந்தாலும் வாங்கி வைக்கிறேன்.”என்று அவரே வலிய சொல்லி உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவார்.

இவ்வாறாக வாய் வார்த்தைகள்ஆயிரத்தெட்டு மந்திர ஜாலம் புரியும்.சும்மா வார்த்தைகள் தானே என்று மிளகாய்பஜ்ஜியாக வார்த்தைகளை கொட்டி அவஸ்த்தைபடாமல் எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்.நம்மை பற்றிய உயர்வான எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படுவதற்கு இனிய சொற்கள் அதி முக்கியம்.ஆகையினால் எந்த மிஸ்ஸும்,மிஸஸும்,மற்றும் மிஸ்டர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் சுவாரஸ்யமிக்கதாகவும்,இனிமையான உறவுகள் சூழப்பெற்றதாகவும் அமைந்து சூழலை எப்பொழுது இனிமையாக ,வாழ்க்கைபயணத்தில் கசப்புகள் மறைந்து இனிப்பு நிறைந்ததாக அமையும்.




February 15, 2011

அஞ்சறைப்பெட்டி - 5

வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் பொழுது அனைவர் முன்னிலையிலும் பணத்தை வாங்கி எண்ண வேண்டியுள்ளது.இது திருடர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?
நாண்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள மீன்பாடி வண்டிகளில் பத்து அடிக்கு மேலாக உள்ள கம்பிகள்,பைப்புகளை எப்படிப்பட்ட நெரிச்சலான போக்கு வரத்திலும் அனாசயாமாக கொண்டு செல்கின்றனர்.விளைவு பின்னால் வரும் வண்டிகளில் வருபவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது.நேற்று நடந்த இப்படிப்பட்ட விபத்தில் எங்கள் வீட்டிற்கு வரும் பிளம்பருக்கு கண்களில் செமத்தியான காயம் ஏற்பட்டு உள்ளது.போக்கு வரத்து போலீஸாரும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்பொழுதெல்லாம் ஹாஸ்பிடல் என்று போனால் அரை நாள் முழுதாக செலவாகி விடுகின்றது.அங்கு காத்திருப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டோ,அல்லது ஒலி வராமல் ஓடிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சியின் ஒளிக்காட்சிகளையோ அசுவாரஸ்யமாக பார்த்துகொண்டு இருக்க வேண்டியுள்ளது.சமீபத்தில் சென்ற ஒரு மருத்துவ மனையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.நமக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு பொழுதை இனிமையாக ஓட்ட ஏதுவாக இருந்தது.இதனை அனைத்து இடவசதியுள்ள பிற மருத்துவ மனைகள் பின்பற்றலாமே.

இப்பொழுதெல்லாம் சில முக்கிய பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பள்ளி விட்ட பிறகு போலீஸார் ரோந்து சுற்றுகின்றனர்.ஆங்காங்கு கும்பலாக நிற்கும் மாணவர்களை விரட்டிவிடுகின்றனர்.போலீஸார் தலை தெரிந்ததுமே கும்பலாக நிற்கும் மாணவ கூட்டம் சிட்டாக பறந்து விடுகின்றனர்.மாணவர்களை ஸ்நேகம் பிடிக்கும் முயற்சிக்கும் சமூக விரோதக்கூட்டத்தினரில் இருந்து பாதுகாப்பு கிடைகின்றது.வாழ்க சிட்டி போலீஸாரின் சேவை.

தங்கத்தின் விலை இப்பொழுது ஏறுமுகமாவே உள்ளது.சற்று விலை குறைந்தாலும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக உள்ளது.எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்கடையில் கூட்டத்திற்கு குறைவு இல்லை.பல கடைகளில் 1முதல் 5 சதவிகிதம் மட்டுமே சேதாரம் செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றனர்.இது அவர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகின்றது.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பீகாரில் பெரிய மூட்டையுடன் பதுங்கி பதுங்கி நடந்து சென்ற இருவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் முட்டை நிரம்ப இறந்த காகங்களை வைத்து இருந்தனராம்.விசாரித்ததில் ரோட்டோர பாஸ்ட்ஃபுட் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கின்றனர்.இன்னொரு அதிர்ச்சி கரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு காகங்களையும் எப்படி பிடித்தார்கள் என்று விசாரித்த பொழுது வெட்டவெளியில் உணவில் விஷம் கலந்து காகங்களை வேட்டை ஆடி விற்கின்றனராம்.விஷம் உண்டு இறந்த பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் கதி.இறைவா!



February 10, 2011

அட்மிஷன் அட்டூழியங்கள்




மூன்றரை வயது பேரனை ஸ்கூலில் சேர்ப்பதற்காக டிஸம்பரில் இருந்தே அலைச்சல் ஆரம்பமாகி விட்டது.அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க க்யூவில் காத்திருந்து எங்கள் முறை வந்த பொழுது டேபிளின் முன் அமர்ந்திருந்த பெண் “பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்”என்றார்.மெலிதான அதிர்ச்சியுடன் ஹேண்ட் பேகில் இருந்து எடுத்துக்கொடுத்த பொழுது அடுத்த அதிர்ச்சி.”திங்கள் கிழமைக்குள் சப் மிட் பண்ணிட வேண்டும்.சப்மிஷன் பீஸ் 1500.நாட் ரீஃபண்டபிள்”

எதுவுமே பேசாமல் வெளியில் வந்து விட்டேன்.”இது பரவா இல்லை.கே கே நகரில் உள்ள ஒரு ஸ்கூலில் அப்ளிகேஷன் ஃபார்ம் 1000 ரூபாய்.அப்ளிகேஷன் சப்மிஷனுக்கு 3000 ரூபாய் வாங்குகின்றனர்”என்னருகில் அமர்ந்திருந்த பெண் கூறிக்கொண்டிருந்தார்.

தனியார் பள்ளி நிறுவனங்களில் கட்டணம் அதிகம் என்று கூக்குரல் இடும் பொழுது கூட “கட்டணம் அதிகம் இருந்தால் தரமும் அதிகமாகும்”என்று சொன்னவள்தான் நான்.

எனக்கு தெரிந்த ஆசிரியை நண்பி ஒருவர் ”ஒரு செக்‌ஷனில் 30 பிள்ளைகளுக்குள் வைத்து சொல்லிக்கொடுத்தால் எங்களாலும் சுலபமாக சமாளிக்க முடியும்.ஒவ்வொரு பிள்ளைகளிடமும் தனி கவனம் செலுத்த முடியும்.அதே போல் அதிகம் சம்பளம் கொடுத்தால்தான் நல்ல அனுபவம் உள்ள ஆசிரியர் வைத்துக்கொள்ள முடியும்.இதனால் அதிகம்கட்டணம் என்பது இன்றியமையாதது.இப்பொழுது கட்டணக்குறைப்பினால் ஒரு செக்‌ஷனில் 50 - 60 பிள்ளைகளை வைத்து சொல்லிக்கொடுக்கும் நிலை.போன வருடம் டிகிரி முடித்தவர்களை இந்த வருடம் ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டிய நிலை.இந்த ரீதியில் சென்றால் எப்படி..?”என்று புலம்பித்தள்ளினார்.அவரது புலம்பலில் நியாயம் புரிந்தது.இதனை மற்ற பெற்றோர்களிடம் ஒரு முறை எடுத்து சொன்னபொழுது வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு.

ஆனால் இந்த ஆண்டு எல் கே ஜியில் சேர்ப்பதற்கு நடக்கும் அட்டூழியங்களைத்தான் சகிக்க முடியாமல் இந்த பகிர்வு.
நான் ஏறி இறங்கிய பல பள்ளிகளில் அதனை பள்ளிகளாகவே நினைக்கத்தோன்றாத அளவிற்கு பக்கா வியாபாரஸ்தலமாகவே அதன் நடவடிக்கைகள் இருந்தது.

இன்னொரு ஸ்கூல்.குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.அவர்களுக்கு மட்டுமே அப்ளிகேஷன் விநியோகம் நடக்கின்றது.நாம் போய் கேட்டால் அடுத்த வாரம் அதற்கு அடுத்த வாரம் என்று தவணை சொல்லுகின்றனர்.அப்ளிகேஷன் வழங்குவதிலேயே இத்தனை பாராபட்சம் என்ரால் குழந்தைகளுக்கிடையே எப்படியெல்லாம் காட்டுவார்கள்?

இன்னொரு பிரபலமான ஸ்கூல்.1000 ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்கி அதனை நிரப்புவதற்கு எத்தனிக்கும் பொழுது பிரஷர் உச்சபட்சத்தில் எகிறியது.கார் இருக்கா?வீடு சொந்த வீடா?வாடகை வீடா?சொந்த வீடு என்றால் தனிவீடா?பிளாட்டா?இப்படி கேணத்தனமான கேள்விகள்.

120 - 150 மாணவர்கள் மட்டுமே எல் கேஜியில் படிக்கும் வசதி உள்ள பள்ளியில் ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன் விநியோகம் செய்து செமத்தியாக பணம் பார்த்து விடுகின்றனர்.

ஒரு பெரிய தொகை கொடுத்து பல பள்ளிகளில் அப்ளிகேஷன் வாங்கியாயிற்று.இனி நேர்காணல்.காத்திருக்கும் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை டென்ஷனுடன் இது என்ன கலர்டா செல்லம்?இது என்ன ஃபுரூட்ஸ் “என்று கேள்வி கேட்டு கடைசி நிமிஷத்திலும் தயார் செய்த வண்ணமாக இருந்து, நேர்காணல் நடக்கும் அறைக்கு சென்றால் பிள்ளைகளுக்கு சொல்லித்தந்தவை அனைத்தும் வீண் என்பது போல் பெற்றோர்களிடம் தான் கேள்விகளை கேட்கின்றனர்.டொனேஷன் தொகையை சொன்னதும் பல பெற்றோர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை.அவ்வளவு பெரிய தொகையை டொனேஷனாக மறு நாளே கட்டிவிடவேண்டும் என்று கறார் ஆக கூறுகின்றனர்.குறிப்பிட்ட நாள் தவறி மறுநாள் பணத்தை கட்டச்சென்றால் “நேற்றோடு அட்மிஷன் முடிந்து விட்டது”என்று கூறுகின்றனர்.பிடிவாதமாக நின்றால் மேலும் 25 ஆயிரம் தந்தால்தான் அட்மிஷன் பண்ணுவோம் என்று பேரம் பேசி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.

இந்த அட்மிஷன் அட்டூழியங்களால் இளம் பெற்றோர்கள் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகிப்போவதுதான் உண்மை.இப்பொழுது பலரும் பேசிக்கொள்வது இதுதான் “பேசாமல் ஒரு ஸ்கூலை ஆரம்பித்தால் ரொம்ப சுலபமாக அம்பாணி ஸ்டேடஸுக்கு போய் விடலாம்”


February 6, 2011

ஈ சி ஆரில் ஒரு இனிய உலா

கரடு முரடான சென்னை சாலைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான வாகனங்கள் வேகத்துடன் வழுக்கிக்கொண்டு பயணிக்கும் கிழக்கு கடற்கரைச்சாலையில் வீக்கெண்டுகளில் உறவுகளுடனும்,நட்புக்களுடனும் சேர்ந்து வேகமான டிரைவிங்கில் பயணிக்கும் பொழுது உள்ள உற்சாகம் எண்ணிலடங்காது.

அதிலும் வரிசையாக இருக்கும் பொழுதுபோக்கிடங்கள்,தீம்பார்க்குகள் எண்ணிலடங்காது.அனைத்தையும் காணவேண்டுமென்றாலும் வருடம் முழுதும் வரும் வீக்கெண்டுகள் தேவைப்படும்.சென்னை வாசிகளை ரெஃப்ரெஷ் செய்துகொள்ளக்கூடிய இடம் ஈ சி ஆர் என்பது உண்மை.
முட்டுக்காடு படகுத்துறையில் படகில் ஏறுவதற்கு வசதியாக மரத்தில் ஆன பாலம்.

ஏரிக்கு மத்தியில் செல்லும் பாலம்.
படகுச்சவாரியை அமர்ந்த படி ரசிப்பத்தற்கு வசதியாக நிழற்குடையுடன் கூடிய பெஞ்சுகள்.

முட்டுக்காடு படகு சவாரிக்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகா முற்றிலும் புதுமை வடிவத்துடன் படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஓய்வு இடத்தில் அமர்ந்த வண்ணம் உணவு அருந்திக்கொண்டே படகு சவாரி காட்சியை கண்டுகளிக்கலாம்.சற்று ஓய்வு எடுக்கலாம்.அலுவலகம், பயணிகள் ஓய்வகம், உணவகம் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. மூங்கில் படகு குழாமிற்கு வருகை தரும் படகு சவாரியாளர்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் பயணிக்கும் அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நபர்கள் அமர்ந்து செல்லகூடிய படகு முதல் பத்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய படகுகள் வரை உள்ளது.நமது வசதியைப்போல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.ஐந்து பேர் பயணிக்கும் மோட்டார் படகு 350 ரூபாயும்,10 பேர்கள் பயணிக்கக்கூடிய படகுக்கு 620 கட்டணம் வசூலிகின்றனர்.ஏரியை 20 நிமிடங்கள் வரை சுற்றிக்காட்டுகின்றனர்.ஐந்தே அடி ஆழமுள்ள அந்த அழகிய ஏரியில் 20 நிமிடங்கள் மோட்டார் படகில் சுற்றி வந்தால் படகை விட்டு இறங்கவே மனம் இராது.சுள்ளென்ற வெயிலுடன்,ஜில்லென்ற காற்றும்,உடலில் தெரிக்கும் நீர்த்திவலைகளும் மனதை பரவசப்படுத்தும்.

அங்கே இருக்கும் சுத்தமான உணவகத்தில் அருமையான உணவுவகைகள்.விலையைப்பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரியும்.இனி ஈ சி ஆர் போனால் போட்டிங் செல்லாதவர்கள் கூட வயிற்றை நிரப்பிக்கொள்ள உணவகத்திற்கு தாராளமாக செல்லலாம்.

சவுக்குக்காடு.தூரமாக இருந்து பார்க்கும் பொழுது அழகாக தெரிவது உள்ளே செல்ல செல்ல முகம் சுளிக்க வைக்கின்றது.நெருக்கமான சவுக்கை மரங்கள் அடர்ந்து நிற்க அழகிய நிழலைத்தருகின்றது.பார்க்கவே அழகாக உள்ளது.

ஆனால் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தை உணவுக்கழிகளைக்கொட்டி அசிங்கம் செய்து இருக்கின்றனர்.ஏராளமான உணவுக்கழிவுகள் ,அதனை சுற்றி வரும் பிராணிகள்,யூஸ் அண்ட் த்ரோ தட்டுக்கள் டம்ளர்கள் என்று குப்பை அதிகளவு பார்ப்பவர்களை எரிச்சலூட்டுகின்றது.போதாதற்கு காட்டினுள் மாணவர்கள் கைகளில் சிப்ஸ் பாக்கெட்டுகளும்,மறைவாக பாட்டில்களும் வைத்துக்கொண்டு உள்ளே செல்வது பரிதாபமாக உள்ளது.வனத்துறையினர் கவனம் எடுத்தால் இந்த அழகிய இடம் அழகாக பராமரிக்கப்பட்டு அழகானதோர் பிக்னிக் ஸ்பாட்டாக மாறிவிடும்.
அழகான கடற்கரைக்கிராமம் கோவளம்.புகழ்பெற்ற தர்காவும் ஒரு சர்ச்சும் உள்ளது.அழகிய கடற்கரையில் மீன் வியாபாரிகள் மீன் கழிவுகளைக்கொட்டி அசிங்கம் செய்வதுதான் சகிக்க முடியவில்லை.அலையில் துள்ளி விளையாடும் ஏராளமான மீன்களைப்பார்க்கும் பொழுது இந்த பகுதியில் மீன் உற்பத்தி அமோகம் என்ற உண்மை புரிகின்றது.இருப்பினும் சென்னையில் மார்கெட்டில் கிடைக்கும் விலைக்கு நிகராக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.






சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் புரதான சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.ஊரும் கடற்கரையும் அசுத்தமாக இருந்தாலும் சிற்பக்கோவில் மிக அழகான முறையில் படு சுத்தமாக பராமரித்து வருகின்றனர்.நுண்ணிய வேலைப்பாடுகளுடம் கூடிய சிற்பங்களைப்பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது.மேலும் தகவல்கள் அறிய இங்கேசொடுக்குங்கள்.

சிதைந்து சிதிலமாகிப்போன பூங்காவைப்பார்க்கும் பொழுது இங்கு வரும் வெளிநாட்டினர் நம் நாட்டினைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று வருந்தத்தோன்றுகின்றது.

கலைப்பொருட்களும்,கைவினைப்பொருட்களும் போட்டிப்போட்டுக்கொண்டு விற்பனை செய்கின்றனர்.மணி,முத்து,சங்கு,சிப்பிகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள்,வீட்டலங்காரப்பொருட்கள்,கைவினைப்பொருட்கள் விறபனைக்கு மலைபோல் குவிந்துள்ளது.நாம் 60 ரூபாய்க்கு வாங்கும் ஒரு மணிமாலையை வெளிநாட்டினருக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.