July 30, 2010

உப்புமா

தலைப்பைப் பார்த்ததும் "எல்லா பதார்த்தங்களுக்கும் உப்பு சேர்க்கத்தான் செய்வார்கள்.ஆனால் இதுக்கு மட்டும் ஏன் உப்புமா ன்னு நாமகரணம் சூட்டினார்கள்?யார் சூட்டினார்கள்?எப்போ சூட்டினார்கள்?கி மு வில் சூட்டினார்களா?கி பி யில் சூட்டினார்களா?இதனை சூட்டியவர் தீனா ஆனாவா?தீனா ஆவன்னாவா?(அதாகப்பட்டது திருமணம் ஆனவரா?திருமணம் ஆகாதவரா?)எந்த தேசத்தில் இருந்து சூட்டினார்கள்?என்ன காரணத்திற்காக சூட்டினார்கள்?இதனை சூட்டியவர் ஆணா?பெண்ணா?"இப்படி கேள்வி எல்லாம் ஜெய்லானி அண்ணாச்சி போல் கேட்கமாட்டேன்.

"உப்புமாவாஆஆஆஆ"என்று பயத்தில் வாய்பிளக்கும் பார்த்தசாரதிகள்,மஸ்தான்கள்,டேவிட்டுகள் எல்லாம் நம்மிடையே நிறையவே உண்டு."ஏன்?பங்கஜங்கள்,பாத்திமாக்கள்,பிலோமினாக்கள் இல்லையா"என்றெல்லாம் அதிரா போன்றோர் குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கப்படாது.

உப்புமாவைப்பற்றி படங்கள்,சீரியல்களில் கூட மட்டமாக போடுவதைப்பற்றி எனக்கு நிறைய வருத்தம்.ஆஃபீஸுக்கும் சரி,ஸ்கூலுக்கும் சரி ஒரு நாளாவது உப்புமா கிளறி அணுப்பினால் "என்ன வீட்டில் உடம்புக்கு சரியில்லையா"என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விடுவதுதான் அதிகபட்ச துக்கம்.
சந்திரபாபு "கல்யாண சமையல் சாதம்..காய்கறிகளும் பிரமாதம்..அந்த கவுரவபிரசாதம்..அதுவே எனக்குப்போதும்"என்று எத்தனை பட்சணங்களை ரசித்து,ருசித்து பாடினார்.இந்த உப்புமாவை மட்டும் அநியாயத்திற்கு விட்டு விட்டார்.இப்போ இருந்திருந்தாருன்னா நேராவே போய் "ஏஞ்சாமி..உப்புமா மேலே உங்களுக்கு இத்தனை பகை" ன்னு ஆத்திரம் தீர கேட்டு இருப்பேன்.சரி..பெரிய மனுஷர்..விட்டு விடுவோம்.

இந்த படாபட் ஜெயலட்சுமின்னு ஒருத்தர்.ரஜினி படத்தில் ரஜினியைப்பார்த்து "நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா,நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா"ன்னு எத்தனை எத்தனை பதார்த்தங்களை சொல்லி சொல்லி நாக்கில் எச்சில் ஊற ஊற பாடினார்.அவராவது இந்த உப்புமாவைக்கண்டுகிட்டாரா?இல்லையே?

சரி இதெல்லாத்தையும் விடுங்க..சமீபத்தில் விக்ரம் மூச்சு விடாமல் ஒன்றரை மைல் நீளத்திற்கு ஒரு பாட்டு பாடினாரே
கூழு வேர்க்கடலை வறுத்தகறி சுண்டகஞ்சி வடுமாங்கா சுட்டவடை நீர்மோரு பேட்ரிதண்ணி இளநீர் எறா தொக்கு உப்புக்கண்டம் பழைய சோறு டிகிரிகாப்பி இஞ்சிமுரப்பா கடலைமுட்டாய் கமர்கட்டு வெள்ளரிக்காய் எலந்தப்பழம் குச்சிஐஸு கோலிசோடா முறுக்கு பஞ்சுமுட்டாய் கரும்புசாறு மொளகாபஜ்ஜி எள்ளுருண்டை பொரிஉருண்டை ஜிகிர்தண்டா ஜீராதண்ணி ஜவ்வுமிட்டாய் கீரைவடை கிர்னிப்பழம் அவிச்சமுட்டை ஹாப்பாயில் பல்லிமிட்டாய் பப்பாளி புகையிலை போதைப்பாக்கு புண்ணாக்கு..இத்தனை ஐட்டங்களையும் அசால்டா சொல்லிட்டு இந்த உப்புமாவை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் விட்டுட்டார் பார்த்தீங்களா?

மேற் சொன்னா மூணு பாட்டையும் நீங்கள் வேணுன்னா கேட்டுட்டு நியாயத்தை சொல்லுங்க.

சந்திரபாபு பாடியது

படாபட் ஜெயலஷ்மி பாடியது

விகரம் பாடியது

அட,ஒரு நல்ல சைவ ஹோட்டலாக பார்த்து வாய்க்கு ருசியா உப்புமா சாப்பிடலாம்.வகைதொகையா வித வித சட்னி,சாம்பார் ,வடைகறி,குருமா,கொத்ஸு,ஊறுகாய் கடைசியா சர்க்கரையில் தோய்த்து வாயாற சாப்பிடலாம்ன்னு போனால் ஒரு முழ சைஸ் மெனு கார்டில் வாயில் நுழையாத பதார்த்தங்கள் பெயரையெல்லாம் போட்டு விட்டு இந்த உப்புமா மட்டும் மிஸ்ஸிங்ன்னா..உச்சகட்ட சோகம் அப்பிக்கொள்ளாமல் என்ன செய்யும்?நீங்களே சொல்லுங்கள்.

மினி டிஃபன் என்று போட்டு குட்டியா ரெண்டு பூரி,இட்லி,வடை,பொங்கல் என்று பறிமாறும் பொழுது ஓரத்தில் ஒருகரண்டி உப்புமாவைக்கிளறிவைத்தால் என்ன?இந்த ஹோட்டல் காரர்கள் குறைந்தா போய் விடுவார்கள்?ஏன் எல்லோரையும் போல் இந்த ஹோட்டல் கார்களுக்கு உப்புமா மீது துவேஷம்?

சரி போனால் போகுது.கேட்டு வாங்கி சாப்பிடுவோம் என்று சர்வரைக்கூப்பிட்டு"ஒரு பிளேட் ரவா உப்புமா?" என்று கேட்டால் சர்வரின் அசடு வழிதலை பார்க்கும்பொழுது பற்றிக்கொண்டு வருகின்றதே.
"மேடம்..சூடா..இடியாப்பம்,சப்பாத்தி,ஆனியன் ரவா.மசால் தோசை,ஊத்தப்பம்,பரோட்டா,சோளா பூரி இருக்கு மேடம்"என்று அவர் லிஸ்ட் படிப்பதில் ஒன்றினை கடனே என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு ஏறும் கடுப்பில் ஒரு ஒற்றைபைசா டிப்ஸ் வைக்காமல் சர்வரை முறைத்துக்கொண்டே ஹோட்டலை விட்டு வெளியேறும் பொழுது உள்ள மன உளைச்சலை என்ன என்பது?

ரயிலில் பிரயாணப்படும் பொழும்பொழுது விழுப்புரம் ஜங்ஷன் வந்து விட்டால் உப்புமா பொட்டலம் விற்பனைக்கு வரும்.சூடான,சுவையான உப்புமாவுக்கு பெயர் பெற்றது விழுப்புரம் ஜங்ஷன்.விழுப்புரம் எப்போ வரும்,எப்போ வரும் என்று ஸ்டேஷன்களை எண்ணிக்கொண்டு வருகையில் அந்த உப்புமா ஸ்டேஷன் வந்துவிடும்.தூரத்தே உப்புமா பார்சல் காரர் நின்றிருப்பார்.நான் இருக்கும் கோச் அருகே வருவதற்குள் வண்டிக்கு பச்சைக்கொடி காட்டி விடும் பொழுது வென்னீரில் வெந்த உப்புமாவாகி விடுவேன்

எனக்கு உப்புமா என்றால் கொள்ளைப்பிரியம்.சின்ன வயதில் இருந்தே உப்புமாவைப்பாய்ந்து பாய்ந்து சாப்பிடுவேன்.தக்காளி,பொட்டுக்கடலை,மல்லி,புதினா,வெங்காயம்,இஞ்சி,தேங்காய் சட்னி வகைகள்,தொக்கு,சாம்பார்,குருமா,கொத்ஸு,கோசுமல்லி,வத்தக்குழம்பு,நேற்றுவைத்த கறிக்குழம்பு,முந்தாநாள் வைத்த மீன் குழம்பு,அதுக்கும் முந்தின நாள் வைத்த கருவாட்டுக்குழம்பு,வடைகறி,மாசி,சர்க்கரை,ஜாம்,சாஸ்,ஊறுகாய் எதனுடனும் பொருந்துக்கூடிய உணவு என்றால் இந்த உப்புமா ஒன்று மட்டும்தான் என்பது காலரை தூக்கி விட்டுக்கொண்டு சொல்லக்கூடியக்கூடிய சமாச்சாரம்.

இந்த உப்புமா இருக்கே..நறநறவென்ற பாம்பே ரவையில் நெய் விட்டுக்கிளறி,ஆங்காங்கே கடுகும் உளுத்தம்பருப்பும்,கடலைப்பருப்பும் மும்மூர்த்திகளாக கண்களை சிமிட்ட,தாளித்த சிகப்பு மிளகாய் லேசா எட்டிப்பார்க்க,கருவேப்பிலை கருத்தைக்கவர வெண்ணைக்கட்டி கணக்காபளீர்ன்ன உப்புமாவை தட்டில் போட்டு அதன் மீது சாம்பாரை கரண்டியில்லாமல் அப்படியே கவிழ்த்து ஓவர் ஃப்ளோ ஆகாமல் சாப்பிடும் பொழுது ஆஹாஹா ..இதற்கெல்லாம் ஒரு ரசனை வேண்டுமுங்கோ..அதாங்க..சாப்பாட்டு ரசனை..சாப்பிடுற ரசனை.

தெரிந்தவர்கள் கல்யாணத்திற்கு கூப்பிடுறாங்க.கைகொள்ளாமல் பரிசுப்பொருளுடன் போய் மணமக்களை வாயாற வாழ்த்தி மணமக்கள் கையில் பரிசுப்பொருளை கொடுத்துவிட்டுவிட்டு,கொடுத்தற்கு அத்தாட்சியாக வீடியோவிலும் சிரித்து விட்டு நேரே பந்திக்கு போனால் வகை,வகையாக கலர் கலராக பதார்த்தங்களை பறிமாறும் பொழுது கூடவே ஒரு கரண்டி உப்புமாவையும் பறிமாறினால் சொத்தில் பாதி கரைந்து விடுமா என்ன?இப்படி (மனசுக்குள்ளேயேதான்)கேட்கத்தோணுமா?தோணாதா?நீங்களே சொல்லுங்க?

சரிதான்,ரொம்ப நாள் கழித்து ஸ்நேகிதியாளை பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா போனால் பாம்பே ரவாவில் நெய் சொட்ட சொட்ட ஃபுரூட்கேசரியும்,முந்திரியும்,கிஸ்மிசும் பளிச் என்று சிரிக்க பிடித்த ரவாலாடும்.குடிக்கறதுக்கு ரவா ஃபிர்னியும் தந்தாளே ஒழிய தம்மாதூண்டு கிண்ணத்தில் சூடா ஒரு கரண்டி உப்புமாவைக்கிளறி வைப்போமுன்னு தோன்ற மாட்டேன்கிறதே.

பிளாக் எழுதற தங்கமணிகள் வீட்டில் கண்டிப்பாக அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி துளி ஊறுகாயை தட்டின் ஓரத்தில் வைத்து ரங்கமணிகளுக்கு அவசர,அவசரமாக நாஷ்டா கொடுத்து விட்டு தொடர்ந்து தங்களது பிளாக் பணியை செவ்வன நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

அதே போல் பிளாக் எழுதற ரங்கமணிகளைப்பார்த்து பிளாக் படிக்காத தங்கமணிகள்"எங்கள் கஷ்டம் உங்களுக்கெல்லாம் எங்கே புரியப்போறது.ஒரு நாள் சமைக்க தில் இருக்கா?"என்று கேட்டு உசுப்பேத்தி,நம்ம பிளாக் ரங்கமணிகளும் மீசையை முறுக்கிக்கொண்டு அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி,ஓரத்தில் தாராளமாக சாஸை விட்டு,ஸ்டைலாக ஒரு ஸ்பூனையும் சைடில் வைத்து தங்கமணிகள் முன் பவ்யமாக நீட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

வெளிநாட்டு வாழ் இந்தியபிரமச்சாரிகள் வெளியில் நிதம் பிரட் சாப்பிட்டு போரடித்து இனி சுடசுட உப்புமா கிளறி சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக ஆஃபீஸ் செல்வார்கள் என்று நம்புகின்றேன்.

இனி எல்லார் வீட்டிலும் உப்புமா கொண்டாட்டம்தானா?உப்புமான்னா இனிமேல் இந்த எல்லாப்புகழும் இறைவனுக்கே வலைப்பூ கண்டிப்பா உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து விடும் இல்லையா?

டிஸ்கி:"அட..சொந்த அனுபவமா?அப்ப வீட்டைய்யாவுக்கு தினம் தினம் உப்புமா அபிஷேகம் தானா"என்று ஸ்டார்ஜன் ஷேக் போன்றோர் கேட்டுடக்கூடாதுன்னு இந்த அவசர டிஸ்கி.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட்.

எங்கே செல்லும் இந்தப்பாதை??



பள்ளியின் கழிவறையில் பள்ளி மாணவியின் பிரசவம்,கள்ளக்காதலனின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் காதலனின் மகனையே கதறகதற கொன்ற கொடூரம்..அன்றாடம் நாம் அறியும் செய்திகளில் இவை லேட்டஸ்ட்.

கடந்த வாரம் ஒரு மாலுக்கு சென்று இருந்த பொழுது அங்கு காட்சி அளித்த இளசுகளின் தோற்றம்,நடை.உடை பாவனை,அலட்சியபோக்கு,பொது இடம் என்ற இங்கிதமின்றி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் அவர்களது நடவடிக்கை எப்படியும் வாழலாம் இதுதான் நாகரீகம் என்று நினைத்து வாழும் தான் தோன்றித்தனம்..இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அந்த இளசுகளின் மீது வெறுப்பு ஒரு பக்கம் வந்தாலும்,கலாச்சாரசீரழிவுக்கு பச்சைக்கொடிகாட்டிவிட்டு இறுமாந்து போய் இருக்கும் அந்த இளசுகளைப் பெற்றவர்களை,முகம் தெரியாத அந்த மனிதர்கள் மீது கோபம்தான் வருகின்றது.

எத்தனையோ விஷயங்களில் வாழ்க்கையில் முன்னேறி விட்டோம்,விரல் நுனியில் உலகையே கொண்டுவந்துவிட்டோம் என்று பெருமிதப்படும் இவர்கள் கலாச்சாரா சீரழிவை நினைத்துப்பார்க்க வேண்டாமா?

இளசுகளின் இந்த முற்போக்குத்தனம் சமுதாயத்தில் முளைவிட்டிருக்கும் நச்சுக்காளான்,வாழ்க்கையையே நொடியில் புரட்டிப்போட்டு விடும் ஒரு பயங்கரவாதம் என்று புரிந்தும் அதனை களைய மனதில்லாமல் நாகரீகம் என்ற போர்வையில் வாழும் அநாகரீக வாதிகளை என்னென்பது?

காசுக்காக ஆட்டம் போடும் திரைஉலகத்தினரைப்பார்த்து நிஜ வாழ்க்கையில் அதே நடை,உடை பாவனைகளை பின்பற்றி கலாசாராத்தை சீரழித்து வருவதோடு,தங்களையும் சீரழித்து தங்களையே அதலபாதாளத்திற்கு தள்ளி விடுகின்றனர்.

"இதோ இந்த மினி ஸ்கர்ட்டை எடுத்துக்கொள்"
"ஏற்கனவே தலைக்கு போட்டு இருக்கும் கலர் கொஞ்சம் டல்..இந்த முறை இன்னும் டார்க்கா வாங்கலாமா"
"உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷன்டேஷன் வாங்கலாம்?"
இப்படி கேள்விகளை ஒருதாயே கேட்கும் அளவிற்கு நாகரீகம் முற்றி விட்டது.

"கண்ணதாசன் காரைக்குடி..பேரைச்சொல்லி ஊத்திக்குடி"இப்படி நாண்கு வயது மகன் பாடி ஆடுவதை ரசித்து சிலாகிக்கும் அப்பா அம்மாக்கள் இருக்கும் வரை பள்ளிக்கழிவறையில் பிரசவங்களும்,கள்ளக்காதலால் கொலைகளும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கும்.

இறைவன் மேலுள்ள நாட்டம்,குடும்பத்தினர் மேலுள்ள நாட்டம் குறைந்து,மறைந்து போவதால் தான் இத்தகைய சீரழிவுக்கான காரணம்.
இறைவன் மேலுள்ள நாட்டமும்,அச்சமும் தவறு செய்யக்கூடிய தருணங்களைக்குறைக்கின்றன.குடும்பத்திலே ஒருவருக்கொருவரான ஆழமான பாசம் இக்காலத்தில் தகர்க்கப்பட்டு வருகின்றது.

சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவைகளை,கண்டிக்கப்படவேண்டிய காரியங்களை இக்கால பெற்றோர்கள் செய்யத்தவறி விடுகின்றனர்.

வெட்க உணர்வு இல்லாமல் போவதற்கு ஆண்,பெண் பாகுபாடின்றி வரைமுறையற்று பழகுதல்,எதிர்பாலினரில் எவ்வளவு நண்பர்களோ அவ்வளவு பெருமைக்குரிய விஷயம் என்று தங்களையே சிறுமைப்படுத்திக்கொண்டு வாழ்வது,எப்படியும் வாழலாம்,மனம் போல் வாழலாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

பிள்ளைகளைப்பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லை.பெற்றோர்களைப்பற்றிய பெருமிதம் பிள்ளைகளுக்கு இல்லை."என் பிள்ளை எஞ்சினியர் ஆகவேண்டும்,மருத்துவர் ஆக வேண்டும்,கலெக்டராக வேண்டும்,மேற்படிப்புக்கு யூ கே அனுப்ப வேண்டும்,அண்ணா யுனிவர்ஸிடி கவுன்ஸிலிங் வரை வெயிட் பண்ண முடியாதுன்னு பணத்தை பணம் என்று பார்க்காமல் நம்பர் ஒன் காலேஜில் எழு லட்சம் கட்டி சீட் வாங்கி விட்டேன்"இப்படி எண்ணங்கள் தான் இன்றைய பெற்றோருக்கு மிகுதியாக உள்ளதே ஒழிய நம் பிள்ளையை நல்ல பிரஜை ஆக்க வேண்டும்,நேரிய வாழ்வியலை பின்பற்ற வேண்டும்,இறை வழி நடக்கவேண்டும்,கலாசார சீரழிவுக்கு அடிபணிந்து விடலாகாது போன்ற உயரிய சிந்தனைகள் ,மேன்மையான போக்கும் இன்றைய பெற்றோரிடம் இல்லை.

அயல் தேசத்து உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிபணிந்து விட்டதைப்போல்,அந்நிய கலாசாராத்திற்கும் அடி பணிந்து வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவதுதான் பரிதாபம்.

நன்நடத்தை,விடா முயற்சி,விசாலமான அறிவு,தானே நல்ல முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்துடன் நோக்கவைக்கும் உயர்வு இவைகள் எல்லாம் ஒருங்கே பெற்று விஞ்ஞானத்தை நன் முறையில் பயன் படுத்தி வாழ்வில் சிகரங்களைத்தொடக்கூடிய நாளைய இளவரசர்கள்,இளவரசிகள் தறிகெட்டுப்போய் வாழ்க்கையை தவற விடுகின்றனர்.

சுகாதாரமாக வாழ நினைக்கிறோம்,சுற்றுப்புற தூய்மைகளை கவனிக்கின்றோம்.பொது இடத்தில் அமர்ந்தால் கூட ஆடை வீணாகி விடுமோ என்று ஆள்காட்டி விரலால் கோடிழுத்துப்பார்த்து விட்டு அமர முனைகின்றோம்.நம்முடல் அழுக்கேற்படாமல் சுத்தமாக வைத்திருக்க முனைகின்றோம்.ஆனால் நாம் அறியாமலே நம் சந்ததிகள் மனம் அழுக்கடைந்து,காலப்போக்கில் காட்டாற்று வெள்ளமாக எல்லை மீறிப்போகும் அவலத்திற்கு துணை நிற்கலாமா?

நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,நாட்டையும்,வீட்டையும் சீரழிக்க முனையும் பிள்ளைகளின் பெற்றோரே சிந்தியுங்கள்

July 9, 2010

பெற்றோர்களே உஷார்

நான் வசிக்கும் பகுதி மிகவும் அமைதியாக இருக்கும்.இங்கு குடியிருப்பவர்களின் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் தெருவில் ஓடுவது குறைவுதான்.திடீரென்று சில நாட்களாக பெருத்த சப்தத்துடன் சர் சர்ரென வரிசையாக பைக்களின் சப்தமும்,கூடவே கூச்சலும் வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

என்ன வென்று போய் பார்த்தால் 14 இல் இருந்து 17 வயதுக்குட்பட்ட கல்லூரி வாழ்க்கையில் நுழையாத பள்ளி மாணவர்கள் பைக்கில் பறந்து கொண்டு இருக்கின்றார்கள்.பைக்கின் வேகத்துக்கு அது ஒரு புறம் சாய்ந்து கொண்டு ஓடுவதைப்பார்க்கும் பொழுது பயமாக இருக்கும்.அதுவும் சாதாரண சன்னி,ஸ்கூட்டி போன்றவை இல்லாமல் 50 cc பைக்குகள் தான் இவர்கள் உபயோகிக்கக்கூடியவை.

தெருவில் நடந்து செல்பவர்கள் கூட இந்த பைக் ஓட்டிகளுக்கு பயப்படவேண்டிஉள்ளது. ஒரு அவென்யூவிலேயே பிளாட்பாரம் மீது ஏறி நடக்க வேண்டிய கட்டாயம்.மாலை வேலைகளில் வாக்கிங் செல்பவர்கள்,குழந்தைகளை பிரேமில் வைத்து தள்ளிக்கொண்டுப்போகும் தாய்மார்கள்,வயது முதிர்ந்தவர்கள் தன் வயது நண்பிகளுடன் உரையாடிக்கொண்டே மெது நடை நடத்தல் இந்த வழக்கம் எல்லாம் இந்த பைக் ஓட்டிகளால் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டன என்றே சொல்லலாம்.

உச்சகட்டம் என்னவென்றால் வண்டி நிறைய பழங்களுடன் ஒரு பழவண்டிக்காரரின் வண்டியில் மோதி, பழம் அனைத்தும் தெருவில் ஆறாக ஓடிய காட்சியும் நடந்து இருக்கின்றது.

விசாரித்தில் அறிந்த விஷயங்கள் கண்டு அதிர்ந்து போனேன்.குறிப்பிட்ட அவென்யு உள்ளே குறிப்பிட்ட ரவுண்ட் சுற்றி சீக்கிரம் வந்து சேர்ந்தால் அதற்கு பணம் பரிசாக கிடைக்கிறது.

அதே போல் சற்று தூரம் சென்றாலே வந்து விடுகின்ற மவுண்ட் ரோடில் செமையான டிராஃபிக்கில் வேகமாக பைக்கை செலுத்தி யார் ஜெயிக்கின்றாரோ அவருக்கு பணம் பரிசு.

ஏழெட்டு மாணவர்கள் சேர்ந்து கொண்டு தலைக்கு ஒரு தொகையை போட்டு,அந்த ஏழெட்டு பேரும் அண்ணாசாலை டிராஃபிக்கில் வேகமாக,வாகன இடுக்குகளில் புகுந்து,நுழைந்து யார் முதலில் குறிப்பிட்ட இடம் வந்து சேருகின்றார்களோ அவர் ஜெயித்ததாக அறிவித்து மொத்த பணத்தையும் அள்ளிச்செல்லுகின்றனர்.

பெற்றோரே உஷாராக இருங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு இரு சக்கரவாகனம் நாம்தான் வாங்கிக்கொடுக்க வில்லையே என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்.இந்த விபரீதவிளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் சொந்த வாகனத்தில்தான் பந்தயத்தை வைத்துக்கொள்ளுவார்கள் என்பது கிடையாது.

பதினெட்டு வயதானால்தான் இந்திய வாகன சட்டப்படி லைசென்ஸ் பெறலாம்.ஆனால் 13,14 வயதிலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்று போலீஸ் கண்களில் மாட்டினால் நூறோ,இருநூறோ கொடுத்து விட்டு தப்பித்து சென்று விடுகின்றனர்.இந்தபோக்கு மாறி,சிறுவர்கள் பைக் ஓட்டி பிடிபட்டால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிவித்து நடவடிக்கையை கடுமைப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.கண்டிப்பாக லைசென்ஸ் பெற்று இருக்கமாட்டார்கள்.ஆனால் எத்தனை பள்ளிக்கூடங்களில் எட்டு,ஒன்பது படிக்கும்மாணவர்களே இருசக்கரவாகனத்தில் வந்து செல்கின்றனர்.படிப்புடன் பண்பையும்,நலவற்றையும் பயிற்றுவிக்க கடமைப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் கண்டு கொள்கின்றனாரா?இல்லையே.வண்டியை பள்ளி வளாகத்தினுள் விடுவதற்காக அதற்கொரு கட்டணத்தை தீட்டி, லாபம் கண்டு தவறுகளைத்தட்டிக்கேட்காமல் அல்லவா இருகின்றனர்.

நம் பிள்ளைக்குத்தான் பைக் நன்றாக ஓட்ட வருகின்றதே என்று பிள்ளைப்பாசத்தில் பிள்ளைகளுக்கு இருசக்கரவாகனம் வாங்கிக்கொடுக்கும் பாசமிகு பெற்றோரே சிந்தியுங்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை?????

July 3, 2010

விருதுகளும்,தொடர் பதிவும்.

சகோதரர் ஜெய்லானி கொடுத்த தங்க மகன் விருது.
நன்றி ஜெய்லானி.


சகோதரர் அஹ்மது இர்ஷாத் கொடுத்த விருது.
நன்றி இர்ஷாத்.

சகோதரர் சீமான்கனி அழைத்த தொடர்பதிவு.

முதலில் பாசத்திற்குரிய ஸாதிகா அக்கா மனிதர்கள் எல்லோரும் கடலுக்குள்ள வசித்தால் எப்படி இருக்கும்னு எழுத போறாங்க.தலைப்புதண்ணீர் தேசம்.

தண்ணீர் தேசம்.


1.ஏஸி,லைட்,ஃபேன் தேவை இல்லை.எலெக்ட்ரிக் பில் மிச்சம்.

2.எங்கும் கால் வலிக்க நடந்து போகத்தேவை இல்லை.நீந்தியே ஜாலியாக போய் விடலாம்.

3.வாகனமும் தேவை இல்லை.பெட்ரோல் செலவும் மிச்சம்.

4.பெரிய சுறா,டால்பின் போன்றவைகளின் நட்பு கிடைக்குமல்லாமல் கடல் கன்னியையும் பிரண்ட் பிடித்துக்கொள்ளலாம்.

5.சிறிய அறைகளுடன் ஒண்டு குடித்தனத்தில் வாழும் அவலமின்றி விஸ்தீர்னமாக,சுகாதராமாக வாழலாம்.


6வெளியில் நடக்கும் அரசியல் கூத்துகளை பார்க்க முடியாது.

7கலைஞர் ஐயா அறிவித்த இலவச பொருட்களை அனுபவிக்க முடியாது.

8முக்கியமா கம்பியூட்டர் பக்கமே வரமுடியாமல் பிளாக் எழுத முடியாது.

9மற்றவங்க பிளாக் படிச்சு பின்னூட்டம் போட முடியாது.

10பிளாக் உலகில் நடக்கும் சண்டைகள்,சச்சரவுகள்,ஒருத்தொருக்கொருத்தர் சகதி வாரி தூற்றிக்கொள்ளும் காணக்கிடைக்காத காட்சிகளை காண முடியாது.

11சீமான் கனி எழுதி வரும் தொடர் கவிதையின் இறுதிபாகத்தை படிக்கமுடியாமல் போய் விடும்.

தம்பி சீமான்கனி அநியாயத்திற்கு மாட்டி விட்டு விட்டார்.இதற்கு மேல் என்னால் மொக்கைபோட முடியவில்லை.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.
விருது கொடுத்தவர்களுக்கும்,தொடர் அழைப்பு அழைத்தவருக்கும் எதோ என்னால் ஆன சின்ன விருந்து.நானே..நானே செய்த பேக்ட் பிரட் புட்டிங்..விருது,அழைப்பும் விடுத்த சீமான்கள் சாப்பிடுங்கள்.பயப்படாமல் சாப்பிடுங்க.டேஸ்டா இருக்கும்.என்ன வெறும் ஸ்வீட் மட்டும்தானா என்று குரல் எழுப்புவோர் கீழே பாருங்கள்.
மிக்ஸட் கபாப்.இது நான் சமைக்கலீங்க.ஆயிரம்தான் மலையாளி உணவகங்கள் மற்ற உணவகங்களில் சாப்பிட்டாலும் இந்த அரபி கடையில் கிடைக்கும் மிக்ஸட் கபாபுக்கு அடிக்காது.ஒரு கிலோ எடை உள்ள ஒரு பிளேட் நூற்றிப்பத்து கத்தார் ரியால்தான்.

கத்தார் - தோஹாவில் உள்ள அல் ஷமி ரெஸ்டாரெண்ட் மிக்ஸட் கபாப் பிரசித்தம்.சான்ஸ் கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க.