August 30, 2013

ஆட்டோவும் பரோட்டாவும்.

மேகத்துகள்களுக்கிடையே ஆங்காங்கே கீற்றாக ஊடுறுவும் கதிரவகீற்றுக்களின் இதமான கதகதப்பு.காலை நேரத்திலும் இதம் தரும் சில்லென்ற உணர்வு.ஆராவாரம் அதிகம் இல்லாத கோழிக்கோடு சாலையில் நான் சென்ற ஆம்னி பஸ்ஸை ஓரம் கட்டி விட்டு “இதுதான் லாஸ்ட்.எல்லோரும் இறக்கிக்குங்க” என்று தமிழும் மலையாளமும் கலந்து ஓட்டுனர் கூறவும் பஸ்ஸில் சொற்பமாக இருந்த ஒரு சிலருடன் 'பஸ்ஸில் இப்படி லோல் படும் நிலைமை ஆகிவிட்டதே. டிரைனுக்கு டிக்கெட் கிடைத்து இருந்தால் இத்தனை அவஸ்தை வேண்டியதில்லையே”என்று பயணம் முழுக்க புலம்பி 14 மணி நேரப்பயணத்தையும் வெற்றி கரமாக முடித்த அலுப்பில் நாங்களும்  பஸ்ஸை விட்டு இறங்கினோம்.

பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த போதே  தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ எங்களை நோக்கி வந்தது.”ஐ ஜி ரோட் காலிகட் டவர் போகணும்”இது நான்.

“பிஃப்டீன் ருபீஸ்”

’பிஃப்டியா பரவாஇல்லையே.மூட்டை முடிச்சை எல்லாம் பார்த்து ஊருக்கு புதுசு என்று அதிகம் கேட்காமல் நியாமாக கேட்கிறாரே இந்த ஆட்டோ மேன்”என்று நினைத்தேன்.இருந்தாலும் மெட்றாஸ் புத்தி .வழக்கமாக சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும் அந்த ஆட்டோ மேன் பலமாக சிரிக்கிறார்.”தாரளமாக கொடுங்க.வாங்கிக்கறேன்”

அருகில் இருந்த என் மகன் பற்களை கடித்த சப்தம் அந்த ஏரியாவிலே இடி  விழுந்த சப்தத்திற்கு ஈடாகி இருக்கும்.

“ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ..அவர் பிஃப்டீன்ன்ன்ன்ன் ருபீஸ் கேட்கிறார்”அடிக்குரலில் இப்படி சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் சீட்டில் பயணித்தது ,ஓயாமல் பஸ் டிரைவர் ஹார்ன் அடித்த விளைவோ என்னவோ என் காது அடைத்து விட்டது போலும்.ஒரு வழியாக பிரமிப்பு மாறாமலே மூட்டை முடிச்சுகளுடன் ஆட்டோவில் ஏறினோம்.

இந்த ஆட்டோவில் மட்டுமல்ல அங்கு ஓடிக்கொண்டு இருக்கும் எல்லா ஆட்டோக்களும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது.ஆட்டோவில் பயணர் இருக்கைக்கும்,ஓட்டுனர் இருக்கைக்கும் இடையில் ஸ்டீலால் அலங்கரித்து அழகு படுத்தியதுமில்லாமல் முகப்பில்,சீலிங்கில் ,பக்கவாட்டில் என்று எல்லா இடங்களிலும் அலங்கரித்து இருக்கின்றனர்.சீலிங்கில் பொருத்தபட்டு இருக்கும் அலங்கார விளக்கு உயரமான ஆட்கள் அமர்ந்தால் தலையை பதம் பார்க்கும்.உள் அலங்காரத்தின் காரணத்தால் சென்னையைப்போல் மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் பயணிப்பது மிகுந்த சிரமம்.

சென்னையில் ஆட்டோக்கள் பெரிய ஹோட்டலினுள் அனுமதிக்கபடுவதில்லை.அந்த பந்தா ஏதும் இல்லாமல் ஹோட்டலுக்குள்ளேயே சென்று நிறுத்தி பெட்டிகளை ரிஸப்ஷன் கவுண்டர் அருகே வைத்து வைத்து விட்டு பதினைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு சென்ற ஆட்டோ டிரைவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.வெறும் பதினைந்தே ரூபாய்க்கு எத்தனை உழைப்பு!

சென்னையில் ரெண்டே கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்தாலும் 100 ரூபாயை கூசாமல் வாங்கிசெல்லும்,மெட்றாஸ் பாஷையால் பயணிகளை அர்ச்சிக்கும் ஆட்டோமேன்களுக்கு இடையே இப்படியும் ஒரு ஆட்டோ மேன்.இந்த ஆட்டோ மேன் மட்டுமல்ல நான் அங்கிருந்த நான்கு நாட்களும் பயணித்த ஆட்டோக்கள் அனைத்துமே இந்த ரீதியில்தான் இருந்தது.தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 25 - 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக  இருந்த என் ஐ டி கேம்பஸுக்கு சென்று காத்திருந்து திரும்ப,வழியில் ஆங்காங்கே நிறுத்தி குட்டி குட்டி ஷாப்பிங் செய்து வர மொத்தமாக 500 ரூபாய்தான் இண்டிகோ காரின் வாடகை எனக்கு ஆச்சரியமூட்டியது.


ஹோட்டலில் உள்ள சாதம் பிரியாணி அனைத்திலும் அரிசி மெகா சைஸில் இருந்ததில் சாப்பிட பிடிக்காமல் பக்கத்தில் இருந்த மால்களுக்கு சென்று சிக்கனும் பர்கருமாக பொழுது கழிந்தது.சில உணவகத்தினுள் நுழைந்து  பிடிக்காமல் திரும்பியதும் உண்டு.தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு ஹோட்டல் மனதிற்கு பிடித்தமாதிரி இருந்தது.உள்ளே நுழைந்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேர் தட்டுகளிலும் பரோட்டாதான்.ஒரு க்ரூப் சைட் டிஷ் இல்லாமல் வெறும் பரோட்டாவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.இங்கு பரோட்டா மட்டும்தான் கிடைக்குமாக இருக்கும் என்று நினைத்து மெனுகார்டு வாங்கி பார்த்தால் ஏகப்பட்ட மெனுக்கள் இருந்தன.

சரி நாமும் பரோட்டாவே ஆர்டர் பண்ணலாம் என்று ஆர்டர் செய்தோம். இலைக்கு வந்த பரோட்டா அப்படியே பரவசப்படுத்தி விட்டது.அத்தனை சாஃப்ட்.லேயர் லேயாராக சுவையாக சூடாக..ஆஹா இதுதான் மலபார் பரோட்டாவா!வெறும் ஏழே ரூபாயில் மெகா சைஸ் பரோட்டா.பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.ஊருக்கு திரும்பும் போது கூடவே பெரிய பரோட்டா பார்சல் கூடவே வந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?