January 31, 2011

கையெழுத்திடுங்களேன்

கொண்டவனையும் பெற்றவனையும்
வயிற்றுப்பசிக்காக
நடு சமுத்திரத்திற்குதான் அனுப்பி
வகைதொகையாய் மீன்பிடித்து
கரைக்கு கொண்டு சேர்த்து
கூவி விற்று பிழைப்பு நடத்தி
நம்மை வக்கணையாய் ருசி பார்க்க
வைத்த மீனவமக்களுக்கு
ஏனிந்த கதி?

நடு கடலுக்குபோன மச்சான்
வரும் நேரம் வரவில்லை என்றால்
நீரிலிருந்து எடுத்துப்போட்ட
மீன் போல துடிக்கும் துடிப்பு கண்டு
கடற்கரையும் கலங்கிடுமே

கடல் நாடி பிழைப்பு நடத்தி
கால் வயிறு கஞ்சி குடித்து
கதி இல்லாமால வாழ்ந்து வரும்
மீனவர்களை காப்பற்றுமைய்யா!

நம்முடைய வலுவாலும் பொருளாலும்
கரத்தாலும்,காரியத்தாலும்
அவர்களுக்குஉதவிட முடியாவிடினும்
நம் உணர்வுகளை உணர்த்துவோமே இங்கு



January 26, 2011

இட்லிக்கடை அன்னம்மா




வெளிச்சம் துளியும் தெரியாத அதிகாலைப்பொழுது.தன் வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தடியை சரட் சரட் என்று பெருக்கும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு அலாரம்.சுத்தமாக சுற்றி பெருக்கி சருகுகளை குவித்து தீமூட்டி விட்டு,தண்ணீர் தெளித்து அடுப்பைமூட்ட ஆரம்பித்து விடுவாள் இட்லிகடை ஆயா அன்னம்மா,

அன்னம்மா பாட்டியைத்தெரியாதவர்களே அந்த கிராமத்தில் இருக்க முடியாது.பல்லு எல்லாம் போய் இருந்தாலும் பழமொழிக்கு குறைச்சல் இருக்காது.சொல்லுக்கு சொல் பழமொழியால் மழையே பொழிந்து வெள்ளப்பிராவகத்தையே ஏற்படுத்தி விடுவாள்.கூடவே காரியத்திலும் கண்ணாக இருப்பாள்.பொழுது விடியும் முன்னே ஆவி பறக்கும் இட்லிகளை அம்பாரமாக குவித்து,சூடாக சாம்பாரும்,இரண்டு வித சட்னியும் பொழுது விடிவதற்குள் தயாராகி கல்லா கட்டி விடுவதில் கில்லாடி.

”பாட்டி பத்து இட்லி கொடு”தூக்கு வாளியும் சட்னி சாம்பாருக்கு கிண்ணமும் கொண்டுவந்த அம்பியை நிதானமாக ஏறிட்டவள்.

”முதல்லே துட்டை எடு.போன தபா வாங்கிய 18 இட்லிக்கும் சேர்த்தே குடு.கடன் இல்லா கஞ்சி கால் வயிறு என்று இந்த வயசிலேயும் மாங்கு மாங்குன்னு ஒழச்சிட்டு இருக்கேன்.என் கிட்டேயே கடன் வைத்து என்னிய கடங்காரி ஆக்குறியே”

:செவ்வாய்க்கெழமைக்கு மொத்த பைசாவையும் கொடுத்துடுறேன் ஆத்தா”

கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்ன்னு பாக்கறியா?அத்தெல்லாம் வேலைக்காகாது.கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறதுங்கறது இதான்.கையிலே காசு வாயிலே தோசை.அதான் நம்ம பாலிசி.”கறாராக பேசியவாறு பெரிய அகலமான இட்லித்தட்டில் குழிக்கரண்டியால் இட்லி வார்க்க ஆரம்பித்தாள்.

பள்ளிக்கூட சிறுவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என்று டப்பாக்கள் கொண்டு வந்து வாங்கி செல்பவர்கள் தவிர ஓரமாக அமர்ந்து மந்தார இலையில் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு.வாரத்திற்கு இரு முறை பண்ணை வீட்டில் இருந்து பெரிய தூக்குவாளிகளில் 100 இட்லி வரை கேட்டு வரும் பொழுது பாட்டி இன்னும் அதீத சுறுசுறுப்பாகி விடுவாள்.

இவளிடம் இட்லி வாங்கி வயிறு முட்ட தின்று விட்டு போததற்கு ” ஆத்தா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார்தண்ணி ஊத்து”என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு தூரமாக உட்கார்ந்து பீடி பற்ற வைத்துக்கொண்டிந்த பழனியை பார்த்து ”எல பழனிப்பையா,சாம்பார் சட்டி காலியாகுது.இன்னேரம் எம்மருமவ அடுத்த ஈடு சாம்பாரும்,சட்னியும் ரெடி பண்ணி இருப்பாள்.போய் தூக்கி வாயேன்”

”அட..போ ஆயா”சுவாரஸ்யமாக பீடிப்புகையை இழுப்பதிலேயே கருத்தாய் இருந்த பழனியைப்பார்த்து பாட்டிக்கு கோபம் வந்தது.

“நாளைக்கு கேளு ஆயா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்துன்னு.கரண்டியாலே போடுறேன்.சோம்பேறிப்பயபுள்ள.இப்படியே ஒழைக்காம சளைகாமே காலத்தைப்போக்கு.செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?”

”அடியே லலிதாம்பிகே.சாம்பாரு காலி ஆச்சுடி..சீக்கிரம் அடுத்த ஈட்டை கொண்டுவா.தோ..மச்சி வூட்டுலேர்ந்து தூக்கு சட்டி வந்துடும்”
வீட்டினுள் இருந்து மருமகள் வர தாமதமாகியது.


“எல்லா சாமான்களையும் போட்டு பருப்பை வேக வச்சிருக்கேன்.இறுகினால் களி இளகினால் கூழ்ங்கற மாதிரி தண்ணியை ஊற்றி சாம்பாராக்குறதுக்கு இத்தனை அலும்பு பண்ணுறாளே பாதகத்தி.கேட்டால் கைப்புள்ள அழுவுறான்ம்பா.ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டாம்?”

சூடான சாம்பார் சட்டியை துணியால் பிடித்து தூக்க முடியாமல் தூக்கி வந்த மருமகள் லலிதாம்பிகையைப்பார்த்து அக்னிபார்வையை வீசினாள்.

”ஹ்ம்ம்..முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.ஆத்தாவைப்போல மவ.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
வச்சி பேசி உன்னை பெற்றவள் நடித்த நடிப்பில் பாவி நான் மெய்மறந்து போய் ஒன் வூட்டு சம்பந்தம் வேணுமுன்னு சவடால் விட்டு இன்னிக்கு இப்படி கேக்கற கேள்விக்கு பதில் வராத அளவுக்கு அவமானபட்டு கிடக்கேனே?”
சாம்பார் சட்டியை நங் என்று கோபமாக வைத்ததில் சாம்பார்துளிகள் தெறித்து விழுந்தது.

”அடி ஆத்தி..மொகரக்கட்டைக்கு குசும்பைப்பாரு.எம்மேலே உள்ள கோவத்தை சாம்பார்சட்டியிலே காட்டுறே?எய்தவன் இருக்க அம்பை நோவானேன் கதயால்ல இருக்கு.போ போ..கடைசி ஈடு சாம்பாரை ரெடி பண்ணி வெரசா கொண்டா”
அடியில் கொஞ்சமாக இருந்த சாம்பாரை புதிதாக வந்த சாம்பார் சட்டில் ஊற்றிவிட்டு காலி சட்டியை மருமகள் கையில் கொடுத்தாள்.

“அன்னமாக்கா..சூடா பன்னெண்டு இட்லி குடு”சுருக்குப்பையை திறந்து பணத்த எடுத்துக்கொடுத்த முத்தக்காவிடம்”எலே..சூட்டுக்கு என்ன கொறைச்சல்.தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
ன்னு சொல்லுறமாதிரி துணியில் இருந்து இட்லியை எடுத்துப்போட்டால் பஞ்சா பறந்து போயிடாது இந்த அன்னம்மா கெழவி சுடுற இட்லி.”

“ஏன்கா..இந்த வயசிலேயும் இந்த பாடு படுறே.ஒத்தைப்பிள்ளை.சாயம் பூசுற வேலைக்கு போய் நல்லாத்தானே சம்பாதிக்கறான்.அவன் போடுற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு அக்கடான்னு கிடக்கறதை விட்டுட்டு இந்த பாடுதேவையா?ஒருநாள் என்றில்லாமல் எல்லா நாளும் கருக்கல்ல எழுந்து இட்லிப்பானையோடு மல்லாடுறியே”

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை என்று பெரியவங்க சொன்ன மாதிரி மவராசன் வாழ்ந்த காலம் பொறுப்பா இருந்தான்னா காடு கழனின்னு வாங்கிப்போட்டு இருந்தால் ஏன் இந்தப்பாடு படுறேன்.எல்லாம் என் தலவிதி”

“இருந்தாலும் ஒன்னிய பாக்கறதுக்கு சங்கடமாத்தேன் இருக்கு அன்னக்கா.காலத்துக்கும் அடுப்பில் கிடந்தே வேகுறே.கூடமாட ஒத்தாசைக்கு ஒரு குட்டியை வச்சிகிட்டாலும் ஒனக்கு சொமை குறையும் இல்ல”

“அக்காங்..ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியா.சரி போய் வேலையைப்பாரு.கிட்டவே நின்னுட்டு என் வாயப்புடுங்காதே”

“கெயவி..இந்த வயசுக்கும் ஒனக்கு குசும்பு சாஸ்தி.வாயி நீளம்.”சொல்லியபடி பக்கத்தில் அமர்ந்து மந்தாரை இலை அடுக்கில் இருந்து ஒரு இலையை எடுத்து தானகவே இட்லியை எடுக்க ஆரம்பித்த வேலனை சட்டென கையை தட்டிவிட்டாள்.
”எலே வேலா,தட்டில் இருக்கற இட்லியில் கண்ட பேரும் கை வைக்கபடாது.கேளு எடுத்து தர்ரேன்.முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நொழைக்காதே?”
“ஆமாம்..கெயவி கை சுத்தம்.மத்தவங்களாம் நாத்தம்”நக்கலாக சிரித்தான் வேலன்
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.சிரிடா சிரி.

“அன்னக்கா..நாலு இட்லி குடு.வர வர ஒன் இட்லி கல்லாட்டம் இருக்கு.நல்ல அரிசியா போட்டு இட்லி ஊத்துறது”வாயாடி வாணி வந்து நின்றாள்.

“அட தோடா,என்னது அன்னம்மா இட்லி கல்லு கல்லா இருக்கா?என் இட்லி சாப்பிடுறதுக்காகவே ஆளு அம்புன்னு இருந்தும் பண்ணை வீட்டில் இருந்து வாரத்துக்கு ரெண்டு தபா இட்லி வாங்குறாவ.எல்லோரும் பஞ்சு பஞ்சா இருக்காங்கறாவுக.நீயி கல்லு கல்லா இருக்குதுன்னு சொல்றே.பொறம் போக்கு.ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.போ..போ..போ..ரெண்டு இட்லி பத்து ரூவாக்கு விக்கற ஐயர் கடையிலே வாங்கியே சாப்பிடு.அஞ்சு இட்லி பத்துரூவாக்கு கொடுக்கறேனே.எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்”

“ஐயோ..யக்கா நெசம் எது தமாசு எதுன்னு புரியாமே கோவிச்சுக்கறியே”
“அடிப்போடி..தமாசு பண்ண நீயி எம்மாமன் மவன் பாரு”

மீந்த இட்லி,சாம்பார் சட்னிகளை கிண்ணங்களில் எடுத்து வைத்து விட்டு இன்னிக்கு எத்தனை இட்லி மிச்சம் என்று எண்ணினாள்.

”என்னக்கா இட்லியை எண்ணுறே”

“எல்லாத்திலேயும் கணக்கு வேணாம்.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டினு சொல்லி சொல்லி சோறு போட்டவளாச்சே என் ஆத்தா”

பேச்சு பேச்சாகவே இருக்க அடுப்பு சாம்பலை எடுத்து அத்தனை பாத்திரங்களையும் சடுதியில் கழுவி கவிழ்த்தினாள்.
சுருக்குப்பையை அவிழ்த்து பிடி சீவல் பாக்கை கடைவாய் ஓரத்தில் அதக்கிக்கொண்டு எழுந்து நெட்டி முறித்தாள்.

“யக்கா.இன்னிக்கு மத்தியானத்திற்கு மேலே கரண்டு இருக்காதாம்.நாளைக்கு காலம்பரத்தான் கரண்டு வுடுவாகளாம்.இட்லி மாவு எப்படி அரைப்பே?இட்லி யாபாரம் நாளைக்கு உண்டா?”

“நல்லா இருக்கே கதை.மழ,புசல் எது அடிச்சாலும் வேப்பமரத்திடியில் வச்சி இட்லி சுடாங்காட்டியும் என்வூட்டுலே வச்சாவது சுட்டு விக்கிறவ நானு.ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?இருக்கவே இருக்கு ஆட்டுரலும் குழவியும்”

நெட்டி முறித்தவளை ஆச்சரியமாக பார்த்து வியந்தாள் வாணி.
“அக்கா..ஒரு சட்டிக்கு நாப்பதெட்டு இட்லின்ன கணக்குலே ஏழெட்டு ஈடு இட்லி ஊற்றி விக்கறே.நாலு காசு சேர்த்து வச்சி இருப்பியே”

“அடிப்போடி..அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லைன்ற கதையால்ல இருக்கு எங்கதி.சரி சரி..என் வாயைக்கிண்டி புடுங்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கிடாதே”பாத்திரங்களை அடுக்கி நங்கென்று இடுப்பிலும்,தலையிலும் லாவகமாக வைத்துக்கொண்டு,கல்லாப்பெட்டியை கவனமாக கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினாள் இட்லிக்கடை அன்னம்மா.




January 19, 2011

”மை”யல் நூறுவிதம்

உண்மை பேசு

நன்மை செய்

உயிர்மை தேவை

தீமை அகற்று

பொய்மை மற

தூய்மை பேணு

வாய்மை வேண்டும்

வல்லமை வேண்டு

பொறுமை அவசியம்

சிறுமை கொள்ளேல்

பெருமை தவிர்

கண்மை அழகு

வெண்மை தூய்மை

தாய்மை தவம்

உரிமை விடேல்

கடமை தவிரேல்

இல்லாமை வெளிக்காட்டேல்

முடியாமை என்றில்லை

செய்யாமை நன்றன்று

உடமை பேணேல்

திறமை வெளிக்கொணர்

ஆளுமை அவசியம்

வெறுமை போக்கு

திறமை வளர்

தனிமை கொடுமை

மடமை அகற்று

பதுமை அழகு

மறுமை நம்பிக்கை

அருமை எனக்கூறு

கொடுமை செய்யாதே

பசுமை அவசியம்

அண்மை தேவல்

புதுமை நாகரீகம்

இனிமை சந்தோஷம்

சுமை கடன் பெற்றால்

இமை கண்களால்

அமை நற்பண்புகளை

விருப்பமின்மை ஜெயமின்மை

ஆமை போல் இராதே

மை என்பது நிறம்

ஊமை ஊனமில்லை

எருமை ஒரு பொருமை

கருமை சிகைக்கழகு

வெண்மை மனதிற்கழகு

கடுமை காட்டேல்

வலிமை கொள்

பிரம்மை வேண்டாம்

கோதுமை ஒரு தானியம்

தீண்டாமை ஒரு தொற்று நோய்

கேளாமை அழகன்று

வேளாண்மை அவசியமிங்கு

உரிமை விட்டுகொடேல்

தலைமைக்குப்போராடு

சமை சுவையாக

பன்மைக்கு பொருள் பல

ஒருமைக்கு பொருள் ஒன்று

எளிமையாக வாழ்

பலமை உடலுக்கு அவசியம்

வெண்மை என்பது தும்பை

தாய்மை என்பது பாசம்

அம்மை என்பது நோய்

அடிமை என்பதை அகற்று

செம்மை ஆக வாழ்

பொம்மை சிறார்க்கு விருப்பம்

ஆற்றாமை என்பது ஆதங்கம்

அருகாமை என்பது நெருக்கம்

பாராமை என்பது விரோதம்

கூறாமை என்பது மவுனம்

தெரியாமை என்பது மதியீனம்

அறியாமை என்பது பலகீனம்

முடியாமை என்பது முயற்சி இன்மை

ஒவ்வாமை என்பது அலர்ஜி

அஞ்சாமை என்பது தன்னம்பிக்கை

இறையாண்மை என்பது தெய்வீகம்

பெண்மை என்பது பெருமிதம்

டிஸ்கி:
மேலே காணும் படத்திற்கும்,பதிவுக்கும் சம்பந்தமில்லை.
விடுபட்ட ”மை”க்களை விரும்பியவர்கள் பின்னூட்டலாம்.

உற்சாகமாக நான் மறந்ததை,அறியாததை எடுத்து கொடுத்த சகோதரர்களுக்கு நன்றி.

ஆண்மை பலம்

மென்மை சுகம்

நாட்டாமை தீர்வு(அட..நம்ம ஐயூப்)

முதுமை இயற்கை

கல்லாமை நன்றன்று

குளத்தாமை ஆமையில் இன்னொரு வகை

வறுமை துன்பம்

போற்றாமை ????

புலமை அறிவு

வளமை செழிப்பு

கொல்லாமை காந்தீயம்


பாராமை விரோதம்

பழமை கழி

இம்மை உலகம்

திண்மை உறுதி

மென்மை கொள்


மேலும் சொற்கள் அளித்து உற்சாகம் ஊட்டிய




அனைவருக்கும் என் அன்பு நன்றி






January 15, 2011

பொங்கல் நினைவலைகள்

இளம் பிராயத்தில் பொங்கல் அன்று என் தந்தையார் குடும்பத்திலுள்ள சிறார் பாட்டாளங்கள் புடை சூழ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு அழைத்து செல்வார்கள்.ஜீப்பில் அமர்ந்தபடி பாட்டும் கூத்துமாக அமர்களபட்டு குதூகலமாக பயணம் அமையும்.

பசேலென்ற அறுவடைக்கு தயாராக தலையை சாய்த்துக்கொண்டு வரவேற்கும் நெற்பயிர்கள்,ஆங்காங்கே ஒற்றைக்காலில் எங்கள் வருகைக்காக தவம் இருப்பது போல் நிற்கும் கொக்கு கூட்டம்,குறுக்கிலும் நெடுகிலும் ஓடும் கோழிகளும் சேவல்களும் பந்து போல் இருக்கும் எண்ணற்ற கோழிக்குஞ்சுகளும்,வயலின் மறு பக்கம் பாகல்,நுனியில் கல்கட்டிய புடலை,அவரை இன்னும் பிற வஸ்துக்கள் கொடிகளில் காய்த்து குழுங்கும். செடிகளில் பச்சை மிளகாய்,கத்தரி,தக்காளி வகைகள் பளீரென சிரிக்கும்.
ஓரமாக நிற்கும் சிறிய ஓட்டு வீட்டில் அடுக்கி வைத்த நெல் மூட்டைகளின் முடை நாற்றத்துடன் கம்பீரமாக நிற்கும் நெற்குதிர்.அதன் பிரமாண்டத்தை தொட்டு தொட்டு பார்த்து மகிழ்வோம்



எங்கள் வரவுக்காக காத்திருந்த கிராமத்து ஆட்கள் விறகடுப்பில் புதுப்பானை வைத்து வெல்லப்பாகு மண மணக்க பொங்கல் செய்து பொங்கி வரும் வேளையில் “பொங்கலோ பொங்கல்”என்று கோரஸாக கூறுவார்கள்.

சூடான பொங்கலை பனைஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் வைத்து அனைவருக்கும் பறிமாறுவார்கள்.கூடவே ஊரில் இருந்து கொண்டு சென்ற பட்சணக்களுடன் பொங்கலை புசித்து விட்டு வாய்க்கால் வரப்புகளில் சிலு சிலுவென்று அடிக்கும் காற்று,சுரீர் என்று சுடும் வெயிலில் ஆசை தீர விளையாடி விட்டு ,பை நிறைய காய்கள் பறித்து நிரப்பிக்கொண்டு ஊர் திரும்புவோம்.


காலையில் கொண்டாட விருக்கும் பொங்கலுக்காக எதிர்வீட்டில் போட்ட கோலம்.

சென்னையில் பொங்கல்

எந்த பண்டிகைக்கும் இல்லாத அளவு பாலங்கள்,அரசு கட்டிடங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் போன்றவற்றில் வண்ண விளக்குகள் அலங்காரம் கண்ணை பறிக்கும்.அண்ணா மேம்பாலம் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை இரு புறமும் செய்த வண்ண விளக்கு அலங்காரம் மவுண்ட் ரோடையே ஜக ஜோதியாக்கிக்கொண்டிருகின்றது.

சக்கரைப்பொங்கல் என்றே ஒரு ரெஸ்டாரெண்ட் உள்ளது.

பொங்கல் அன்று சரவணபவன் கிளைகளில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு கப் நெய்பொங்கல் வழங்குகின்றனர்.

தி நகர் போத்தீஸில் பொங்கல் அன்று வழக்கத்தை விட ஸ்பெஷல் ஆக டிஸ்போசபிள் கப்புகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் வழங்குவார்கள்.

இதே கடையில் ஒவ்வொரு பொங்கலுக்கும் பொங்கல் பண்டிகையை நினைவூட்டும் விதமாக முகப்பிலும்,கடைக்குள்ளும் அலங்காரம் செய்து இருப்பதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.இப்பொழுதெல்லாம் மற்ற நிறுவனங்களும் இதனை பின் பற்றி அலங்கரித்து வருகின்றனர்.

கிராண்ட் ஸ்வீட்டில் தினமும் தொன்னைகளில் வழங்கும் லெமன் சாதம்,வெண்பொங்கல்,தேங்காய் சாதம்,கேசரி போன்றவை தருவது பிரசித்தம்.பொங்கல் அன்று கமகம வென்ற பொங்கலை பறிமாற கூட்டம் கும்மி அடிக்கும்.




நாளை பொங்கல் கொண்டாடவிருக்கும் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.





January 10, 2011

பி.பி.ஸ்ரீனிவாஸ்



நான் சென்னைக்கு வந்த புதிதில் அந்த பழைய பங்களாவை அடிக்கடி கடந்து செல்லும் வாய்ப்பு இருக்கும்.தற்செயலாக ஒரு முறை திரும்பி பார்த்த பொழுது ஒருவர் வெராண்டாவில் ஈசி சேரில் சாய்ந்தவாறு இருந்தவரைக்கண்டதும் என் நடை பிரேக் போட்டு விட்டது.”எங்கோ இவரைப்பார்த்து இருக்கிறோமே”என்ற யோசித்ததும் பளிச் என்று ஞாபகம் வந்து விட்டது.ஆம்.பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் தான் அவர் என்பது.

அவரது பாட்டிற்கு நான் ரசிகை.அவரது காலத்தால் அழியாத பாடல்களை வானொலியிலும்,தொலைக்காட்சியிலும்,யூ டியூபிலும் நிறையவே கேட்டு ரசித்து இருக்கின்றேன்.சினிமா பார்ப்பதில் துளியும் ஆர்வமில்லாவிட்டாலும் பாடல்களை,அதிலும் பழைய பாடல்களைக்கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.என் ஆர்வம் அறிந்த சில நட்புக்கள் சிடிக்களில் பழைய பாடல்களை பதிவிட்டு தந்து என்னை மகிழ்ச்சி படுத்துவார்கள்.அதிலும் பி பி எஸ் பாடல்கள் என்றால் ,நான் பிறப்பதற்கு முன் வெளிவந்த திரைப்படப்பாடல்கள் கூட என்னை ஈர்த்துவிடும்.

பி.பி எஸ்ஸை நேரில் பார்த்ததும் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது.அன்றிலிருந்து அந்த வீட்டினை கடக்கும் பொழுதெல்லாம் ஏறிடத்தவறுவதில்லை.

முதுமையான வயதிலும் சுறுசுறுப்பாக தனியாக ஆட்டோவில்,காரில் செல்லுவதையும்,அதே தலைப்பாகை மிடுக்கு குறையாமல் வயொதீகத்தில் ஒரு கம்பீரமுமாக ,எப்பொழுதும் இசையைப்பற்றிய சிந்தனையுடன் வளைய வருபவரைக்கண்டால் அனைவருக்கும் வியப்பு ஏற்படும்தான்.

சமீபத்தில் தற்செயலாக எங்கள் இல்லம் வந்த அவரது மனைவியும்,தம்பி மனைவியும் கண்டதில் எனக்கு ஏக மகிழ்ச்சி.பிளாக் எழுத ஆரம்பித்த புதிது.உடனே பிளாக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் “மாமி,மாமாவின் பாடலுக்கு நான் ரசிகை”என்றவளைப்பார்த்து மிகவும் பூரித்துப்போனார்.

“நேரில் பார்க்கணும்”என்ற என் எண்ணத்தை வெளியிட்ட பொழுது”அவசியம் வாங்கோ.எப்ப வர்ரேள்..?”என்று ஆவலுடன் வினவினார்.ஆனால் இன்று வரை என் எண்ணம் நிறைவேறாமலே இருக்கின்றது.அவரைப்பற்றி என் இடுகையில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காலங்களில் அவள் வசந்தம்,ரோஜா மலரே ராஜகுமாரி,நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று பலபல அழகிய தேன் சொட்டும் பாடல்களைப்பாடி பிரபலமான பி பி எஸ் முழுப்பெயர் Prativadi Bhayankara Sreenivas.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இப்பொழுது 80 வயது.இன்னும் இசையில் முழு ஈடுபாடுடன்,இசைக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டவர்.

1952ம் வருடம் முதன்முதலாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்தி படத்தில் தன் முதல் பாடலை பாட துவங்கினார்.பாவமன்னிப்பு படத்தில் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.


தன்னுடைய இனிய குரல் வளத்தால் கேட்போரை கட்டிபோட்டு விடும் அவரது பாடல்களில் சிலவற்றை நீங்களும் ரசித்து மகிழுங்களேன்.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15.

16.

17.

18.

19.

20.
ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து

21.
அழகிய மிதிலை நகரினிலே

22.
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்

23.
கண்ணிரெண்டும் மின்ன மின்ன காலிரெண்டும் பின்ன பின்ன
24.
தாமரைக்கன்னங்கள் தேன்மலர்க்கிண்ணங்கள்

25.
வளர்ந்த கலை மறந்து விட்டாய் கேளடா கண்ணா
26.
நாளால் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
27.
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி
28.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

29.
ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான்

30.
சின்ன சின்னப்பூவே சிரித்தாடும் பூவே
31.
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
32.
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
33.
எந்த ஊர் என்பவளே


37.

38.

39.

40.

41.

42.

43.

44.

45.

46.







January 3, 2011

பொங்கலோ பொங்கல்!

இலவசம் போட்டே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற உண்மையை நன்றாக புரிந்து கொண்ட ராஜதந்திரி ,இலவச வள்ளல் நமது மாண்பு மிகு முதல்வரின் புது பொங்கல் இலவச பொருட்கள் விநியோகம் ஆரம்பமாகி விட்டது.இலவசமாக கொடுத்தால் என்றால் நம்மவர்கள் பினாயலைக்கூட குடிக்கத்தயாராக இருப்பார்களே!நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இலவசபொங்கல் பொருட்கள் வாங்கிட்டோம்ல.வெளிநாட்டு வாழ் பதிவுலக உடன் பிறப்புகள் செவிகளில் புகை வரவேண்டி இந்த படத்தினை சேர்த்து பதிவிடுகின்றேன்.

பொங்கல் வைக்கத்தேவையான பச்சரிசி,சிறுபருப்பு,வெல்லம்,முந்திரி,திராட்சை,ஏலம் வகையாறாக்கள் அடங்கிய பொங்கல் பையை வழங்கிய முதல்வர் ஆற்றிய உரையில்
”இந்த அரசு இலவசங்கள் கொடுப்பதை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். தமிழகத்தில் ஏழைகள் உள்ளவரை, நடமாடும் வரை, திமுக ஆட்சியில் இருக்கும் வரை இலவச திட்டங்கள் தொடரும்.” என்று கூறி இருக்கின்றார்.இதே ரீதியில் சென்றால் 3010 ஆண்டில் ஏழைகள் இன்னும் அதிகமாகத்தான் போவார்கள்,உழைப்பு என்பது பின்தங்கிக்கொண்டேதான் போகும்.அப்துல் கலாம் கூறியபடி இந்தியா வல்லரசாகும் வாய்ப்பு கூட வராது.அப்படீனு நான் சொல்லவில்லேங்க.உரையைக்கேட்ட சில உடன் பிறப்புகள் கூறி என் காதில் விழுந்தவை.


சரி,இலவசபொருட்கள்தான் வாங்க முடியாதவர்களுக்கு ,இலவசபொருட்களில் வைத்த இனிப்புப்பொங்கலை பறிமாறுகின்றேன்.வயிறார சாப்பிட்டு விட்டு அவசியம் ஓட்டு போட்டு விடுங்கள்.அட...வர்ர எலக்‌ஷனில் இல்லை.கீழே இருக்கும் தமிழிஷ் ஓட்டுப்பட்டையில்.

தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.அடுத்த வருஷம் இலவசபொருட்கள் கொடுக்கும் பொழுது கூடவே முப்பது வகை பொங்கல் செய்வது எப்படி என்று கலர்,கலர் படங்களுடன் ஒரு இலவச இணைப்பையும் சேர்த்துக்கொடுத்தால் பொங்கல் செய்யத்தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

”ஓசியில் பொருட்கள் வாங்கி,பொங்கல் செஞ்சி தின்னு புட்டு அக்காவுக்கு கொழுப்பைப்பாரேன்” என்று ஹுசைனம்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ப்பது கேட்கிறதுதான்.

”தோழி,இலவச பொங்கல் பொருட்கள் மட்டும்தான் வாங்கினீர்களா?இலவச சேலை எல்லாம் வாங்கலியா”என்று ஆசியா கேட்பது புரிகின்றது.”தோழி ஏதோ பொங்கல் பொருட்கள் வாங்கியாச்சு.இலவச சேலை வாங்கற அளவுக்கு நமக்கு தெறமை கிடையாது”