February 18, 2013

பாண்டிபஜார்




சென்னையில் வசிப்பவர்கள்,சென்னைக்கு வந்து செல்பவர்களின் காலடி அநேகமாக பாண்டிபஜாரில் பதியாமல் இருக்காது.ஷாப்பிங் செய்வதற்கு சென்னையிலேயே புகழ் பெற்ற ஸ்தலம் இதுவாகத்தான் இருக்கும்.

தந்தை பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் மிகவும் முக்கியமாகத்திகழ்ந்தவர்  தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் பிறந்த சவுந்தரபாண்டியன் ஆவார். 1929 ல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்து வரலாற்றில் இடம் பிடித்தவர்.இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு காலப்போக்கில் சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகி பின்னர் பாண்டி பஜார் ஆனது.இதுவே பாண்டிபாஜாரின் பெயர்க்காரணம். 

புரசைவாக்கம்,வண்ணாரப்பேட்டை என்று ஷாப்பிங் செய்வதற்கான இடங்கள் விரிவடைந்து கொண்டு சென்றாலும் பாண்டி பஜார்தான் முதலிடத்தில் இருக்கும்.

நகரின் மையத்தில் தினமும் லட்சகணக்கான மனிதர்கள் வந்து செல்லும் மிக முக்கியமான வியாபாரஸ்தலமாக இருப்பினும் வீதியெங்கு மரங்கள் வளர்க்கப்பட்டு சாலை முழுதும் பசுமையுடன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு நிழல் தந்து பரவசமூட்டுகின்றது.

அருகே இருக்கும் உஸ்மான் சாலை,ரங்கநாதன் தெருக்களில் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும்.அங்குள்ள கூட்ட நெரிச்சலுக்குஅஞ்சுபவர்கள் தேர்ந்தெடுத்து செல்லும் இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

அம்மா அப்பாவைத்தவிர அனைத்தும் இங்கே கிடைக்கும் என்று சொல்வார்கள்.மிக பிரபலமான வணிகஸ்தலங்கள்,பிராண்டட் ஷாப்கள்.உணவகங்கள் என்று அனைத்தும் இங்கேதான் உண்டு.சென்னையில் உள்ள பிரபல பதிப்பகங்கள் அநேகமாக பாண்டிபஜாரைத்தான் ஆக்ரமித்துக்கொண்டுள்ளன.

சென்னையில் மால்கள் பிரபலமில்லாத காலகட்டத்தில் இங்குதான் செல்லாமால்,மாயாபிளாசா என்ற மால்கள் தொடங்கப்பட்டு,பிரபலமாகி,கால ஓட்டத்தில் பிரபல மால்களின் வருகைக்கு பிற்பாடு இதன் மவுசு குறைந்து போனாலும் இன்னும் பழைய வாடிக்கையாளர்களால் கன ஜோராக இயங்கி வருகின்றன.

பழைய ராஜகுமாரி தியேட்டர் இடிக்கப்பட்டு, விஸ்தாராமான ஏழடுக்கு கட்டிடமாக ரூபினி சில்க்ஸ் இப்பொழுது பிக் பஜாராக பரிமாணித்து விட்டது.

கே.எப்.சி,மேரிபிரவுன்,பெலிட்டா,ஸீ செல்,அஞ்சப்பர்,சரவணபவன்,பஸ்கின் அண்ட் ரபின்ஸ்,ஹாட்சிப்ஸ், என்று பன்னாடுகளில் பவனி வரும் உணவகங்கள் மட்டுமல்ல ,பாலாஜி பவன் கீதாகஃபே,பஞ்சாபிதாபா,பனானா லீப் அடையார் ஆனந்தபவன்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று எண்ணற்ற உணவகங்கள் குவிந்து இருந்தாலும்,ரோட்டோரகடைகளுக்கும் பஞ்சம் இருக்காது.சென்னையில் மிக பிரபலமான சாலையோர உணவகங்கள் இங்குதான் உண்டு.

பெரிய கடைகள் மட்டுமின்றி ரோட்டோர கடைகளுக்கு(பிளாட்பார்ம் கடை)புகழ்பெற்றது இந்த இடம்.இங்கு பிளாட்பார்ம் கடைகள் வைத்திருப்போர் நகரின் மைய இடங்களில் பங்களாவாசிகளாக இருக்கின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.

வெளிநாட்டுப்பொருட்கள் எங்கு வாங்கலாம் என்றால் இங்கே தான் கையைக்காட்டுவார்கள்.ஏ டு இஸட் வெளிநாட்டுப்பொருட்கள் இங்கு கிடைக்கும்.

இளம்பெண்களின் கூட்டமே பிளாட்பார்ம் கடைகளில் ஈ மொய்த்தாற்போல் இருக்கும்.மலிவு விலைகளில் ரெடிமேட் ஆடைகள்,உள்ளாடைகள்,பர்னிஷிங்,வீட்டு உபயோகப்பொருட்கள்,பெண்களுக்கான அக்ஸஸரீஸ்,கிளிப்புகள்,நவநாகரீகமான காலணிவகைகள்,கைப்பைகள்,சால்கள்,பொட்டு,வளையல் பிரேஸ்லெட் இப்படி இங்கு இல்லாத பொருட்களே இல்லை.

Marks & Spencer,Lovable,Jockey,Victorias,sonari போன்ற உள் நாட்டு பன்னாட்டு பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அணிவகுத்து  பிரபலமாக இருந்தாலும் பல்லாண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கான உள்ளாடைகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட நாயுடுஹால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் இங்கேதான்.

செயற்கைப்பூக்களை அடுக்கி விற்பனைக்காக வைத்து இருப்பது பார்க்க ரசிக்கும் படி இருக்கும்.இன்னொரு பக்கம் பூ மார்கெட்டே உண்டு.தூரத்தில் சென்றாலே கதம்ப பூக்களின் வாசனை வகை வகையான மாலைகள்,பொக்கேகள்,சரம் சரமான பூங்கொத்துக்கள் என்று நாசியையும் ,கண்களையும்,மனதையும் பரவசப்படுத்தும்.

புதிய புத்தகங்கள் மட்டுமல்ல,பழைய புத்தகங்கள்,சிடிக்கள் விற்பனையும் அமோகமாக இருக்கும்.படம் வெளிவரும் முன்னரே சிடி விற்பனைக்கு வந்துவிடும்.

பர் பொம்மைகளை விற்பனை செய்வோர் சாலை ஒரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களுக்கு பின்னால் பொம்மைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்வது வேடிக்கையாக இருக்கும்.காருக்கு சொந்தக்காரர் வந்துவிட்டால் வியாபாரியின் ஜாகை இன்னொரு காருக்கு மின்னல் வேகத்தில் மாறிவிடும்.

இங்கு நடுநிசிஉணவகங்களும் உண்டு.நடுநிசியில் சென்றாலும் ஐந்தே ரூபாயில் சூடாக சுவையான டீயை அருந்தலாம் இந்த பாண்டிபஜாரில்.அங்கிருக்கும் ஷாஃப்ட்வேர் கம்பெனி,கால்செண்டர்களில் வேலைப்பார்ப்பவர்களின் கூட்டம் நடுநிசிஆனாலும் அந்த சாலையோர டீ விற்பவரை சுற்றி நின்று டீயைகுடித்து ரெஃப்ரெஷ் செய்து கொள்வது வாடிக்கை.

விநாயகசதுர்த்தி வருகின்றதா கலர் கலராக பிள்ளையார் சிலைகள் வீதி முழுக்க நிறைந்து காணப்படும்.நவராத்திரியா மரப்பாச்சி பொம்மைகளும்,மண்பொம்மைகளும் குவிந்து கிடக்கும் விற்பனைக்காக.பொங்கலா கரும்பு கட்டுகளும் வாழைப்பழம்,மஞ்சள்கொத்து என்று பாண்டிபஜாரே கரும்பு தோட்டமாகி விடும்.தீபாவளியா சாதாரணமாக நடைபாதைகளை ஆக்ரமித்து இருக்கும் வளையல் கடையும் துணிக்கடையும்,புத்தகக்கடையும் பட்டாசு விற்பனையகமாக மாறிவிடும்.கிருஸ்துமஸ் காலத்தில் எரியும்பல்புகள் உடன் கூடியகிரிஸ்மஸ் ஸ்டார் விற்பனை கனஜோராக நடப்பது இங்குதான்.கிருஸ்துமஸ் முடிந்த மறுநாளே புத்தாண்டுக்கான வாழ்த்தட்டைகள் விற்கும் கடை முளைத்து விடுவது வாடிக்கை.இப்படி சீஸசனுக்கு ஏற்றவாறு கடைகள் மாற்றம் பெற்று பாண்டி பஜாரை தலை சிறந்த அங்காடித்தெரு என்ற  சிறப்பினை பெற்று விட்டது.


கீழுள்ள படங்கள் கூகிளாரின் உதவிதான்.பாண்டிபஜார் சென்று நாமே புகைப்படம் எடுத்து பிளாகில் எழுத வேண்டும் என்று ஆசைதான்.வழக்கம் போல் சோம்பேறித்தனம்.அதுதான் உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டே பாண்டி பஜாரை போட்டோ பிடித்து பகிர்ந்து விட்டேன்.



அம்மணி துணி வகைகளை எத்தனை ஆர்வத்துடனும்,கவனத்துடனும் பார்வையிலேயே ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார் பாருங்கள்.


 ஏஸி தேவை இல்லை,கரண்ட் தேவை இல்லை,வாடகை தேவை இல்லை,டாக்ஸ் கட்டத்தேவை இல்லை இந்த பர் பொம்மைகள் விற்பவருக்கு.

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது 
குளு குளு தென்றல் காற்றும் வீசுது 




என்னப்பா இது தலை இல்லாத பொம்மைகள் மீது கலர் கலராக சுடிதார்கள் அணிவித்து கண்காட்சி நடத்துறாங்க.


செருப்புகளின் அணிவகுப்பு.மகாராஜா மகாராணி இளவரசன் இளவரசி மன்னாதி மன்னன் என்று பெரிய பெரிய ஷோ ரூம்கள் குளிரூட்டப்பட்டு கண்ணை கட்டினாலும் இப்படி பிளாட் பார கடைகளில் ஒன்றுக்கு நான்காக வாங்கி விதம் விதமாக செருப்பு அணிந்து மகிழ்வது என்றால் இப்போதைய யூத்துகளுக்கு கொண்டாட்டம்.பெற்றவர்களுக்கு திண்டாட்டம்.கடைக்கரார்களுக்கோ பந்தாட்டம்.

மலர் மாலைத்தோரணங்கள் கண்களையும் நாசியையும் கவர்ந்து பரவசப்படுத்துகிறன.

மஞ்சல்,குங்குமம்,கயிறு விபூதி என்று அநேகப்பொருட்களும் விற்பனை செய்யும் இடம்.

விதவிதமான பொம்மைகள்,சிலைகள்,சாவிகொத்துக்கள் என்று விற்பனை செய்யும் ஆல் இன் ஆல் அட்டகாசக்கடை.


31 comments:

Unknown said...

அங்கிருக்கும் பொழுது ஷாப்பிங் அனுபவமே தனி தான்.. உங்கள் பதிவு மீண்டும் பாண்டி பஜார் வலம் வருவது போல் இருக்கு.. படங்களை உங்கள் கேமராவில் க்ளீக் பண்ணியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்...

Menaga Sathia said...

பாண்டி பஜார்க்கு இதுவரை சென்றதில்லை.உங்கலுடன் சேர்ந்து சுற்றியது போல் இருக்கு..

'பசி'பரமசிவம் said...

எத்தனையோ முறை சென்னை வந்தவன் நான். பாண்டிபஜார் பற்றி இத்தனை விவரங்கள் இந்தப் பதிவைப் படிக்கும்வரை தெரியாது.

மிகவும் நன்றி.

Asiya Omar said...

ஆஹா! அசத்தலான பகிர்வு.இனி சென்னை வந்தால் பாண்டிபஜார் பக்கமும் வந்து பார்க்க வேண்டும்.முழுத்தகவல்கள் பகிர்வுக்கு நன்றி தோழி.இப்படியே சென்னையை முழுவதும் சுற்றி காட்டி விடுங்கள்.

மாதேவி said...

எனது இந்திய சுற்றுலாக்களில் போன இடம்.

மீண்டும் கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.

ADHI VENKAT said...

கேள்விப்பட்டுள்ள இடம். ஆனால் இதுவரை சென்றதில்லை. தங்கள் பதிவு மூலம் தகவல்களும் நிறைய கிடைத்திருக்கிறது. அடுத்த முறை செல்ல வேண்டியது தான்...:)

ஸாதிகா said...

உங்கள் கேமராவில் க்ளீக் பண்ணியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்//உண்மைதான் பாயிஜா.கேமரா எடுத்து சென்று புகைபடமெடுக்க சோம்பல்.அடுத்த ஊர் சுற்றலில் அவசியம் என் கேமரா பேசும்.நன்ரி பாயிஜா.

ஸாதிகா said...

உங்கலுடன் சேர்ந்து சுற்றியது போல் இருக்கு..//மகிழ்ச்சி மேனகா கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இந்தப்பதிவுமூலம் பாண்டிபஜாரைப்பற்றித்தெரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி பசி பரமசிவம்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஷாப்பிங் ஏரியா பாண்டி பஜார்! முன்பெல்லாம் சென்றதுண்டு! இப்போது வேலை நெருக்கடியில் செல்வதில்லை! அருமையான பகிர்வு!

ஸாதிகா said...

இப்படியே சென்னையை முழுவதும் சுற்றி காட்டி விடுங்கள்..//அப்படியே சென்னை முழுவதையும் சுற்றிக்காட்டினால் நீங்கள் என் பதிவுகளிலேயே சென்னையை பார்த்து விட்டு அப்புறம் இந்தப்பக்கமே நீங்கள் வரமாட்டீர்களே ஆசியா?

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி மாதேவி.

ஸாதிகா said...

அடுத்த முறை செல்ல வேண்டியது தான்...:)//சென்று பாருங்கள் ஆதி.அப்படியே நீங்களும் இவ்விடத்தைப்பற்றி ஒரு பதிவை மறக்காமல் எழுதிவிடுங்கள்.:)

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி எஸ்.சுரேஷ்.

கார்த்திக் சரவணன் said...

அங்கிருக்கும் வாகன நெரிசலுக்கு பயந்தே தி நகர் செல்லும் பழக்கத்தைக் கைவிட்டாயிற்று....

RajalakshmiParamasivam said...

பாண்டி பஜாரை கண் முன்னே விரிய வைத்தது உங்கள் பதிவு.

அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.

Anonymous said...

பல முறை சென்ற இடம் என்றாலும்
உங்கள் பதிவு படிக்க படிக்க சுவராஸ்யம்.

ராமலக்ஷ்மி said...

பாண்டி பஜார் சென்றதில்லை. நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பகிர்வை வைத்துப் பார்க்கும் போது பெங்களூர் கமர்ஷியல் தெருவோடு நிறைய ஒத்துப் போகிறது. குறிப்பாக /
கால ஓட்டத்தில் பிரபல மால்களின் வருகைக்கு பிற்பாடு இதன் மவுசு குறைந்து போனாலும் இன்னும் பழைய வாடிக்கையாளர்களால் கன ஜோராக இயங்கி வருகின்றன./ இந்த விஷயம்.

Angel said...

என்னதான் நெரிசலும் கூட்டமும் ஆக இருந்தாலும் பாண்டி பஜார் .....!!!!.
நான் அதிகம் விரும்புவது சாலையோர கடைகளைதான் ...ஊர் நினைவு வந்திடுச்சி இப்ப:))

திண்டுக்கல் தனபாலன் said...

கூட்டத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் சந்தோசம் தான்...

கோமதி அரசு said...

பாண்டிபஜார் பார்த்தது இல்லை. சென்னை வரும் போது உறவினர் வீடு கோவில் என்று வேகமாய் ஊருக்கு வந்து விடுவோம்.
உங்கள் பதிவை படித்தவுடன் நின்று நிதானமாய் பாண்டி பஜாரை சுற்றிப்பார்க்க ஆவல் ஸாதிகா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாண்டி பஜார் பற்றிய படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாண்டி பஜார் பற்றிய படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

சமீரா said...


பாண்டி பஜார் பெயர்காரணம் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.. இந்த பாண்டி பஜாரில் ஒரே ஒரு கஷ்டம்: அது பார்கிங்...
மற்றபடி அம்மா அப்பா தவிர எல்லாமே கிடைக்கிற ஒரே இடம் இது!

ஸ்ரீராம். said...

ம்..... பாண்டி பஜாரில் நான் என்னென்ன வாங்க வந்திருக்கிறேன்... நரசுஸ் காபிப் பொடி, கீதா கபேயில் இட்லி சாப்பிட, கிருஷ்ணா ஸ்வீட்ஸ்... அவ்வளவுதான். மற்றபடி தாண்டிக் கொண்டு போவதுதான் அதிகம்!

அருணா செல்வம் said...

பாண்டி பஜார் என்று கேள்விப்பட்டதுண்டு.
போனதில்லை.

அதை பதிவின் மூலம் அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.
மிக்க நன்றி.

Mahi said...

Nice outing Akka! Thanks for the post! :)

karunakaran said...

vanakkam, non 20 years a t.nagarla than velai seiren, irundalum enakku theriyatha evlo visayangalai viriva ezuthuirukinga. vazthukkal.

Jaleela Kamal said...

நான் சென்னையில் இருந்தவரை , இரண்டு முன்று முறை தான் போயிருப்பேன்.

நாங்க இருக்கும் பைகிரப்ட்ஸ் ரோட் பக்கமே எல்லாம் இருபப்தால் எப்ப்வாவது தான் போவது,
அடுத்தமுறை சென்னை வந்தால் உஙக்ளை கூப்பிட்டு கொண்டு ஒரு ரவுண்ட் அடிக்கனும்...

வருவீங்களா ஸாதிகா அக்கா

பூ விழி said...

நானும் பாண்டி பஜார் சுற்றி இருக்கிறேன் உங்கள் பதிவில் மூலம் பஜார் போனது போல் உள்ளது

துளசி கோபால் said...

ஆஹா...... அருமை!

எப்படி இந்த பொக்கிஷத்தைத் தவறவிட்டேன்:(

சுட்டிக்கு நன்றி ஸாதிகா.
அசத்திட்டீங்கப்பா!!!