September 17, 2012

கியாஸ் சப்ளையர்களின் தில்லுமுல்லு!

டிஸ்கி:புக் செய்தால் ரூ.400க்குள் வாங்கும் கியாஸ் சிலிண்டரை ரூ.800 கொடுத்து வாங்கிய ஆதங்கத்தில் எழுதபட்ட பதிவிது.

அவ்வப்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு வரும்பொழுதெல்லாம் இல்லதரசிகள் வயிறு எரிகின்றார்களோ இல்லையோ சப்ளையர்கள் வயிறு குளிர்ந்து போகின்றனர்.புக் செய்தால் மாதக்கணக்கில் சப்ளை செய்ய தாமதம் ஏற்படும் பொழுது அதிகம் பணம் கொடுத்து வாங்கியே ஆக வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.

இப்பொழுது அப்படிப்பட்ட தட்டுப்பாடு இல்லாவிட்டாலும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டும்தான் அரசு மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பின் மறுபடி ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.

இப்பொழுதெல்லாம் கைபேசியிலேயே சிலிண்டர் புக் செய்து உடனே புக்கிங் நம்பருடன் நமக்கு மெசேஜ் வந்துவிடும்.கியாஸ் டெலிவரிக்கு முன்னரோ சற்று பின்னரோ சப்ளை செய்துவிட்ட தகவலும் வந்து விடும்.

இப்பொழுது டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்ததே தவிர சிலிண்டர் சப்ளை செய்ய வில்லை.உடனே கால் செண்டருக்கு கம்ப்ளைண்ட் செய்தால் பார்க்கிறோம்,திரும்ப இந்த நம்பருக்கு அழைகிறோம் என்கின்றார்களே தவிர எந்த வித ஆக்‌ஷனும் எடுப்பதாக தெரியவில்லை.கியாஸ் ஏஜன்ஸீஸுக்கு புகார் செய்தால் இல்லையே சப்ளை செய்து விட்டோமே என்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் தட்டுப்பாடு வந்த பொழுது இப்படித்தான்.சப்ளை செய்யப்படாமல் சப்ளை செய்து விட்டதாக மெசேஜ் வந்தது.உடனே ஏஜன்சியை அழைத்து புகார் பண்ணியதில் சப்ளை செய்யும் ஆளை வீட்டுக்கு அனுப்பினர் சப்ளை பண்ணி விட்டேன் என்று அடித்து கூறினார்.ரெஸிப்டில் சிலிண்டரை பெற்றுக்கொண்டதற்கான யாருடைய கையெழுத்தோ போடப்பட்டு இருந்தது.விடாப்பிடியாக மீண்டும் ஏஜென்சியை அணுகி சப்தம் போட்டு மறுநாள் ஒரு சிலிண்டர் சப்ளை செய்தனர்.

பூட்டி இருக்கும் வீடுகளின் கன்ஸ்யூமர் நம்பர்களில் அவர்களே புக் செய்து சிலிண்டரை அதிக விலைக்கு விற்றுக்கொள்கின்றனர்.


சென்னையில் இன்றைய நிலவரப்படி 14.2 எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ. 393.50 ஆகும். சப்ளை செய்பவர்களுக்கு ரவுண்டாக 400 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்வதில்லை.பேசி வைத்துக்கொண்டது போல் மேலும் 10 ரூபாய் கேட்கின்றனர்.ஆக 410 என்பது கொடுக்கபட்டே ஆகவேண்டும்.10 ரூபாய் சில்லரையாக இல்லாவிட்டாலும் வலுகட்டாயமாக 90 ரூபாய்தந்து நூறு ரூபாயை பெற்று சென்றுவிடுகின்றனர்.தெரிந்தவர் ஒருவர் 10 ரூபாய் கொடுக்காமல் இருந்ததற்காக சிலிண்டரினுள் இருக்கும் வாஷரை அகற்றிவிட்டு கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது.


கியாஸ் சப்ளையர்கள் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் புக் செய்த சிலிண்டர்களை விநியோகிக்காமல் தகிடுதத்தம் செய்வது அவ்வப்பொழுது நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இதை தடுக்க சுலபமான வழி வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் அளவில் சின்ன புத்தகத்தினை தந்து சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது தேதியுடன் சப்ளை செய்பவரின் கைஎழுத்தை வாங்கிக்கொண்டால் தவறுகள் நிகழும் பொழுது ஆதாரத்துடன் நிரூபிக்க வசதியாக இருக்கும்.தவறுகளும் நிகழவும் வாய்ப்பு இருக்காது.சில விநியோகஸ்தர்கள் சொந்த செலவில் ஸ்டிக்கர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விடுகின்றனர்.சப்ளை செய்த பின்னர் ஸ்டிக்கரில் ஒன்றை எடுத்து பில்லில் ஒட்டி சப்ளையர்களிடம் கொடுத்து விடவேண்டும்.ஸ்டிக்கர் இல்லாமல் சப்ளை செய்யப்படமாட்டாது.இந்த முறையும் தவறுகள் நிகழ்வதில் இருந்து தவிர்க்கலாம்.இதனை எரிவாயு நிறுவனத்தினர் ஒரு உத்தரவாகவே போடலாம்.

இனி அரசு உத்தரவு படி ஆறு சிலிண்டர்களுக்குப் பிறகு ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ. 770 வரை கொடுக்க வேண்டும். அதாவது ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 384 வரை செலவாகும்.ஆகையினால் இனி மேற்கண்ட திட்டங்களை கண்டிப்பாக அமல் படுத்தினால் தான் குற்றங்கள் நிகழ்வது குறையும்.இல்லத்தரசிகளுக்கும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.சப்ளையர்கள் குறுக்கு வழியில் குபேரர்கள் ஆவதையும் தடுக்கலாம்.




September 10, 2012

இல்லாள்களுக்கு இனி மாத சம்பளம்





பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கோமாளித்தனமான மசோதாவை புதிதாக உருவாக்கி வருகின்றதாம்.வீட்டில் சும்மா இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சம்பளத்தொகையை கொடுக்கவேண்டுமாம்.இந்த மசோதா விரைவில் அமைச்சரையில் சமர்ப்பிக்கபட உள்ளது.என்ன கொடுமையடா இது?

கணவர்கள் தங்கள் மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கை துவங்கி தங்கள் சம்பளத்தில் இருந்து 10 முதல் 20 சதவீதத்தை அதில் மாதாமாதம் செலுத்த வேண்டும்.ஏன் துணி துவைக்க இவ்வளவு,சமைக்க இவ்வளவு,பெருக்க இவ்வளவு,பாத்திரம் கழுவ இவ்வளவு,முதியோர்களை கவனித்துக்கொள்ள இவ்வளவு ,குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு ,குழந்தைகளை கவனித்துக்கொள்ள இவ்வளவு என்று தனித்தனியாக நிர்ணயிக்க வேண்டியதுதானே?பெண்களுக்கும் இந்தியப்பண்பாட்டுக்கும் தலைகுனிவைத்தரக்கூடிய இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை எண்ணி நகைப்பதா?அழுவதா?

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திரத் ”இந்த ஆலோசனையை தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முன் வைத்துள்ளன.வீட்டில் பெண்கள் செய்யக்கூடிய வேலையும் பொருளாதார செயல்பாடுதான்.ஆனால் கணக்கில் அடங்குவதில்லை.ஒரு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க கட்டணம் கொடுக்க வேண்டும்,சமையல் செய்ய வெளியில் இருந்து ஆள் வைத்தால் அதற்கு மாத சம்பளம் தரவேண்டும்.எனவே பெண்களுக்கு கணவன் மார்கள் சம்பளம் தந்தால் அது சமூகத்தில் அவர்களுக்கும் அதிகார அடையாளம் கிடைக்கசெய்வதாகும் என்று கூறி இருக்கின்றார்.என்ன அபத்தமான வாதமிது?பெண்களுக்கு அடையாளமே தெரியாமல் போகக்கூடிய திட்டமல்லவா இது.


இந்த புதிய மசோதா பெண்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகையை அரசு நிர்ணயிக்கும். வரைவு மசோதா தயாரானதும், அதை இன்னும் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அரசுதரப்பில் கூறப்படுகிறது.

கணவன் மனைவி உறவென்பது புனிதமானது.அதற்கு சம்பளம் என்று வரையறுத்து இந்தியபண்பாட்டுக்கே பங்கம் விளைவிக்கக்கூடிய இத்திட்டம் கண்டிப்பாக வரவேற்கக்கூடியதில்லை.அலுவலகங்களில் வேலை செய்யாமல் இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு மதிப்பில்லை என்று யார் சொன்னது?கணவனின் முழு வருமானத்தையும் தனக்குக்கீழ் கொண்டு வந்து வரவு செலவுகளை திறம்பட் நிர்வாகம் செய்து,சேமித்து குடும்பவண்டியை திறம்பட ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள்..

வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்.மாத சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருக்கிறேன் என்று பெண்கள் அங்கலாய்ப்பது வேதனையுடன் அல்ல .வேடிகையுடன்தான்.

திருமண உறவென்பது மனதிற்கு சந்தோஷம்,எழுச்சி,உற்சாகம்,மகிழ்ச்சி,நிம்மதி,உத்வேகம்,தன்னம்பிக்கை தரகூடிய புனிதமான உறவு என்பதை அனைவரும் அறிவோம்.உணர்வோம். கணவன் மனைவி ஒற்றுமையாக ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அழகிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி காட்டுவதிலே வெற்றி அடங்கி உள்ளது.கணவர் சம்பாதிக்கும் அல்லது இருவரும் சேர்ந்து சம்பாதிக்கும் வரவை கட்டுக்கோப்பாக நிர்வாகம் செய்து மகிழ்ச்சியான இல்லறத்தை உருவாக்கி அதன் மூலம் நல் மகவை ஈன்று வாழ்தல் மனிதர்களுக்கு கிடைக்கும் பேறு.இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இம்மசோதா உருவாக்குவது மிகவும் அபத்தமானது.

தந்தையிடம் சம்பளம் பெறும் தாயைப்பார்க்கும் தனயன் எதிர்காலத்தில் ஒவ்வொன்றுக்கும் தன் பெற்றொர்களிடம் இருந்து பணத்தை எதிர்பார்ப்பான்.கடைக்குபோய் உப்பு வாங்கி வா என்று ஏவினால் உப்பு பத்து ரூபாய் அதனை வாங்கி வர பத்து ரூபாய் என்றாகிவிடும்.இந்த ரீதியில் போனால் வாழ்க்கையின் கட்டுக்கோப்பின் அடித்தளத்தையே ஆட்டம் கொள்ளசெய்துவிடும்.


இப்படியெல்லாம் கோமாளித்தனமான திட்டங்களை அறிவிப்பதை,பரிசீலனை செய்வதை,அமல் படுத்துவதை விட்டு விட்டு
உருப்படியான செயல் திட்டங்களுக்கு உரம் போடும் எழுச்சிதான் ஒவ்வொரு இந்திய இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்புமாகும்.

டிஸ்கி:இந்த பதிவை போட்ட பின்னர் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் இது குறித்து கேட்டேன்.ஏனென்றால் தோழி ஆசியா கூறிய அத்தனை சோகத்தையும் தாங்கிகொண்டு இருக்கும் அடித்தட்டு இல்லத்தரசி அவள்.அவளின் கருத்து

”ஐயே..நூத்துலே இருபது ரூவாயை சம்பளமா தந்துட்டு முடிஞ்சது கதைன்னு அப்பாலே போய்ட்டா..அப்பறம் எங்க வயித்திலே ஈரத்துணியத்தான் கட்டிட்டு அலையணும்”


September 3, 2012

இனிப்பு பிரியர் சீனிவாசன்

சீனிவாசன் என்று இவரது அப்பா எந்த நேரம் பெயர் வைத்தாரோ?இனிப்பின் மீது நம்ம சீனிவாசனுக்கு அத்தனை ஈர்ப்பு.சிறியவயதில் தன் தந்தையின் மிட்டாய்க்கடைக்கு சென்றாரே ஆனால் சுமார் ஒரு கிலோ இனிப்புகளை கபளீகரம் செய்து விட்டுத்தான் வெளியில் வருவார்.

வீட்டில் அம்மாவிடம் வந்து அப்பா இப்படி கத்துவார்.”இந்த ரீதியில் போனால் ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி உன் பிள்ளைக்கு சர்க்கரை வியாதி வந்துடும்டி”

“அட நீங்க வேற..உங்க வாயிலேர்ந்து நல்லதா நாலு வார்த்தை வராதா?இப்ப கல்லை தின்னாக்கூட செரிக்கிற வயசுங்க..சும்மா விடுங்கங்க..”அம்மா பரிந்து கொண்டுவருவாள்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என்று வகை வகையாக இருந்தாலும் ஒரு கிண்ணம் நிறைய தேனை வைத்துக்கொண்டு தொட்டு சாப்பிடத்தான் பிடிக்கும்.

இடியாப்பத்துக்கு நெய் மணக்க மணக்க வக்கணையாக குருமா செய்து இருந்தாலும் சர்க்கரை இல்லாமல் இடியாப்பம் இறங்காது.

விஷேஷங்களில் குலோப்ஜாமூன் செய்தால் மிஞ்சும் சர்க்கரைப்பாகு சீனிவாசன் வீட்டில் மிஞ்சியதாக சரித்திரமே இல்லை.குலோப்ஜாமூன்கள் வேண்டுமானால் பாத்திரத்துக்கடியில் கண்களை கொட்ட கொட்ட விழித்துகொண்டு ஒன்றிரண்டு இருக்குமே ஒழிய துளி பாகு இருக்காது.

அவரது இந்த இனிப்பு மோகத்திற்கு பொருத்தமாக மனைவியின் பெயர் அமைந்தது கூட ஆச்சரியம்தான்.

ஆமாம் இல்லக்கிழத்தியின் பெயர் இனிப்பு சொட்ட சொட்டத்தான் இருக்கும் .

தாலி கட்டிய நிமிடம் முதல் பேரன் பேத்தி எடுத்த இந்த நாள் வரை சீனிவாசனின் இனிப்புமோகம் தேன்மொழிக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம்.இன்னொரு காமெடி என்னவென்றால் கல்யாணம் ஆன இரவு அழகான மூங்கில் கூடையில் ஆப்பிள் மாம்பழம் மலைப்பழம் என்று அடுக்கி வைத்து இருந்தார்களே தவிர இனிப்பு வகைகளை கண்களிலே காணோம்.

மனைவியிடன் பேசிய முதல் வார்த்தையே இதுதான்.”தேனு,பழமெல்லாம் அட்டகாசமாக அடுக்கி வைத்திருக்கீங்க.இனிப்பெல்லாம் வைக்க மாட்டீர்களா?”

தேன் மொழி வெட்கச்சிரிப்புடன்”நீங்களே ஸ்வீட் கடைக்காரர்.திருநெல்வேலிக்கே அல்வாவா”இவ்வாறாக சீனிவாசனின் திருமதி முதல் நாளன்றே அல்வா கொடுத்து விட்டது குறித்து மனசு முழுக்க சீனி வாசனுக்கு இன்று வரை குறையாக உள்ளது.அவ்வப்பொழுது மனைவியும் கணவனும் பரம்பரையைப்பற்றி பேசும் பொழுது ‘சாந்தி முகூர்த்ததுக்கு இனிப்பு வைக்காமல் சிக்கனம் பிடித்த பரம்பரையாச்சே உன்னுது”என்று ஆரம்பித்தாரானால்

“ஆமாமாம்..எல்லாவற்றுக்கு சேர்த்து வைத்து தீபாவளிச்சீராக ஐநூறு அதிரசம் ஐநூறு லட்டு ஐநூறு லாடு என்று வண்டி வண்டியாக வாங்கி என் அப்பாவை மொட்டை அடிக்கலியா?”

“அடியேய்.. லட்டு சைசையும் லாடு சைசயும் இப்ப நான் சொன்னால் மூஞ்சை எங்கே கொண்டு வச்சிப்பே...ஒரு லாடு பிடிக்கிற மாவை வைத்து நாலு லாடு செய்து சீர் செய்த மகா பரம்பரை ஆச்சே..இருந்தாலும் சிக்கனத்தில் உங்க குடும்பத்தை அடிச்சுக்க முடியாதுடி”

சீனிவாசனின் நக்கல் பேச்சுக்கும் நையாண்டி பேச்சுக்கும் சளைக்காமல் ஈடு கொடுத்து பதிலடி கொடுப்பது போலவே அவரது இனிப்பின் மேலுள்ள பற்றை புரிந்துகொண்டு இனிப்பு இனிப்பாக வக்கணையாக சமைத்துபோட்டும் கணவரை திருப்தி படுத்தி நல்ல இல்லத்தரசியாக விளங்கினாள்.

வீட்டிலுள்ளவர்களுக்கு காபியில் சர்க்கரை அதிகம் பிடிக்காது. இவருக்கோ கூட இரண்டு ஸ்பூன் சர்க்கரையைகலக்கி நுரை ததும்ப ஆவி பறக்க காஃபியை கையில் தரும்பொழுது சீனி வாசன் பூர்வஜன்ம சங்கல்பம் அடைந்து இருப்பார்.பால்பாயஸம் கிளறினால் எல்லோருக்கு கிண்ணங்களில் எடுத்து வைத்துக்கொண்டு இறுதியாக நாலுஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி கணவருக்கு ஒரு பெரிய கோப்பை நிறைய பரிமாறும் பொழுது வாய் மட்டுமல்ல மனமெல்லாம் அமிர்தமாக இனிக்கும் சீனிவாசனுக்கு.

விஷேஷங்களுக்கு செல்லும் பொழுது பக்கத்து இலையில் அமர்ந்து இருக்கும் தேன்மொழி தனக்கு வைத்த மைசூர் பாகையும் ஜாங்கிரியையும் கணவரது இலையில் வைக்க தவறுவதில்லை.பாயசம் நிரம்பிய கப்,ஐஸ் கிரீம் இப்படி ஒவ்வொன்றும் சீனிவாசனின் இலைக்கு ஆட்டோமேடிக்காக சென்றடைந்து விடும்.மனைவியின் செய்கையில் நெகிழ்ந்து போய் “தேனு,எல்லா இனிப்பையும் என் இலைக்கே தள்ளிடுறே.நீயும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்க மாட்டே”
“பரவா இல்லைங்க”தேன்மொழி பிசிபேளா பாத்தில் மும்மரமாகி இருப்பாள்.

“அக்கா...அத்திம்பேருக்கு இனிப்பு ஆசை இருந்தாலும் இத்தனை ஆகாது..உன் பெரிய பையனுக்கு பெயர் சூட்டு விழாவில் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்து வைத்தோமில்லையா.பெயர் வைத்து விட்டு ஐயர் தேன் கிண்ணத்தை கீழே வைக்கப்போகும் பொழுது கபால் என்று கிண்ணத்தை அத்திம்பேர் வாங்கி தேனை பூரா கபளீகரம் செய்துட்டார்.ஐயர் அத்திம்பேரை பார்த்த பார்வை இருக்கே..ஹாஹ்ஹா..”இது நடந்து வருடங்கள் பல ஆனாலும் சொல்லிக்காட்டி இன்றைக்கும் சிரிப்பான் தேன்மொழியின் தம்பி.

“அக்கா..அத்திம்பேருக்கு ரசம் சாம்பார் செய்யும் பொழுது உப்புக்கு பதிலா சர்க்கரையை போட்டு கொடுத்தால் கூட பேஷா சாப்பிடுவாறாக்கும்”இது தேன் மொழியின் சின்னத்தம்பி

அப்பேற்பட்ட இனிப்புத்தென்றல்,இனிப்பரசர்.இனிப்புசக்கரவர்த்தி சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் வந்து இருப்பது சோகத்திலும் சோகம்.

”ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி சக்கரை வியாதி வந்துடும் இவனுக்கு “சீனிவாசனின் தந்தையின் கூற்றை பொய்யாகி,பேரன் பேத்திகளெல்லாம் எடுத்த பின்னர்தான் சர்க்கரை வியாதி ஆரம்பித்திருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷம்.

பரிசோதனை செய்ய மட்டேன் என்றவரை தர தரவென்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து சென்று சோதனை செய்து பார்த்ததில் இரத்தத்தில் முன்னூறுக்கும் மேல் இருப்பதாக பரிசோதனையின் முடிவு சொல்லிய பொழுது இவருக்கு தலையில் இடிவிழாத குறைதான்.

“ரிசல்ட் தப்பா வந்திருக்கும்.எங்க பரம்பரையில் யாருக்குமே இந்த வியாதி கிடையாது.அப்ப எனக்கு எப்படி வரும்?”ஒத்துக்கொள்ளாமல் அழிசாட்டியம் பண்ணியது தனிக்கதை.

மறுநாள் சர்க்கரை இல்லாத காஃபியை கையில் கொடுத்த பொழுது கண்ணீர்விட்டு அழாத குறைதான்.

“அடியே தேனு..அரை ஸ்பூன் போடுடி.தொண்டைக்குள் ஒரு மிடறு கூட இறங்க மாடேன்கிறது”பரிதாபமாக விழித்த புருஷனை மிரட்டாத குறையாக”உஷ்..மூச்..நாளைக்கு பையனிடம் சொல்லி சுகர் பிரி டேப்ளட் வாங்கித்தர்ரேன்.மற்ற படி சர்க்கரைங்கற பெயரைகூட உச்சரிக்கபடாது ஆமா சொல்லிட்டேன்.”

“இனி எவனாவது உன் பெயர் என்னன்னா சீனியை விட்டுட்டு வாசன்னு சொல்லிக்கறேன் போதுமா”கடுப்பானார் சீனிவாசன்.

கணவரின் உடல் நலன் கருதி சர்க்கரையை கண்ணில் கூட காட்டாமல் கட்டுப்பாடாக வைத்திருந்தும் என்ன செய்ய?கில்லாடி சீனிவாசன் பெண்டாட்டி இந்தப்பக்கம் போன சமயம் அடுக்களைக்குள் புகுந்து ரெண்டு ஸ்பூன் சீனியை வாயில் போட்டு அதக்கிக்கொண்டு பெரிய சாதனை செய்தது போல் பெருமூச்சு விட்டுக்கொள்வார்.

வெளியில் போன சமயம் பார்த்து டப்பாக்களை உருட்டி இனிப்பு பண்டங்களை கண்டால் விடுவதில்லை.

குளிர்சாதனப்பெட்டியை குடைந்து பேரக்குட்டிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் இனிப்புப்பண்டங்களை பதம் பார்த்து திருப்தி பட்டுகொள்ளுவார்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்குமுக்கு திக்குதாளம் என்பது கணக்காக ஒரு நாள் கையும் களவுமாக மனைவியிடன் மாட்டிக்கொண்டார் சீனிவாசன்.

துணி அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டினுள் தலை வைத்து படுக்காத குறையாக இருக்கும் கணவரின் நிலை கண்டு”என்னங்க..அப்படி என்னதான் இருக்கு அந்த அலமாரியில்?அலமாரியை குத்தகைக்கு எடுத்த மாதிரி அங்கேயே பலியா கிடக்கறீங்க?”தேனுவின் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்காததால் தடாலடியாக அலமாரி முன் வந்து பரிசோதனை செய்ததில் அல்வா பொட்டலமும்,பூந்தி பொட்டலமும் தேன்மொழியைப்பார்த்து சிரிப்பாய் சிரித்தது

அவ்வளவுதான் தேனுவாகிய தேன்மொழி பெருங்குரல் எடுத்து அழவே ஆரம்பித்து விட்டாள்.பதினைந்து சவரனுக்கு குறையாமல் கழுத்தில் கிடந்த தாலி சரட்டை கையில் எடுத்து”என்னங்க..என் ஆயுசு முச்சூடும் இந்த தாலி என் கழுத்தில் தொங்கணும்ங்க.அதுக்கு பங்கம் வச்சிடாதீங்க”

என்ன செண்டிமெண்டால் அடித்தும் என்ன செய்ய?பங்கம் வந்தாலும் பரவா இல்லை என்பது போல் மதியநேரம் தேன்மொழி தூங்கும் சமயம் மணி அடித்துக்கொண்டு வரும் சோன் பப்டி காரனிடம் பேப்பர் நிறைய சோன் பப்டி வாங்கி வாசலில் வைத்தே சாப்பிட்டு விட்டு வாயைத்துடைத்துக்கொண்டு வந்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

“என்னதிது..ரிட்டயர்மெண்ட் ஆகிட்டாலும் ஏதோ ஆஃபீஸ் போறது கணக்கா நீங்கள்தான் மழ மழன்னு ஷேவ் செய்துடுவீங்களே புதுசா என்ன தாடி முளைச்சிருக்கு..?முகவாயில் ஒட்டிக்கொண்டிருந்த சோன் பப்டியை கையால் தட்டிவிட்ட தேனு அதிர்ச்சிக்குள்ளானாள்.

“அடப்பாவி மனுஷா..என் தாலிக்கு பங்கம் வர்ரதுக்கு கங்கணம் கட்டுறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா..”

இப்போதெல்லாம் இரும்பு பெட்டியின் சாவியுடன்,குளிர்சாதனப்பெட்டியின் சாவியும்,அடுக்களை பூட்டின் சாவியும் பவ்யமாக தேன்மொழியின் இடுப்பில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.